Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தூர நோக்கற்ற இடமாற்றங்களால் சீரழியப் போகும்; வட மாகாணப் பாடசாலைகள்

Featured Replies

வட மாகாணத்திலுள்ள பல பாடசாலைகளின் அதிபர்களை இடமாற்றம் செய்வதற்கு அவசரமாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன. ஆண்டின் நடுப்பகுதியில் க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் நெருங்கிவரும் நிலையில் ஏன் இந்த இடமாற்றங்கள்  அவசரமாகச் செய்யப்படுகின்றன? பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் வட மாகாண முதலமைச்சர் நாட்டிலில்லாத சமயத்தில் பாரிய அளவிலான, பாடசாலைகளை நிலைகுலைய வைக்கக்கூடிய இடமாற்றங்கள்  செய்யப்படுவதற்கு நோக்கங்கள் எதுவும் உள்ளதா? என்ற வினாக்கள் பாடசாலைகளின் நலன்விரும்பிகளால் முன்வைக்கப்படுகின்றன. வட மாகாணக் கல்வியமைச்சு வட மாகாணப் பாடசாலைகளில் உண்மையான அக்கறையோடுதான் செயற்படுகின்றதா? அல்லது வேறு ஏதாவது நோக்கங்களோடு செயற்படுகின்றதா? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கியை  சிதறடிக்க முயற்சியா என மக்கள் சந்தேகம் கொள்கிறார்கள்.

தற்போதைய வட மாகாணக் கல்வியமைச்சில் புதிதாக நியமிக்கப்பட்ட செயலாளர் கல்வி தொடர்பான தூரதிருஷ்டியற்ற முடிவுகளை எடுக்கின்றாரா?.அல்லது மாகாணக் கல்வி அமைச்சர் எடுக்கின்றாரா என பாடசாலை மட்டத்தில் பல்வேறு கேள்விகள் எழுகின்றன.  அதிபர்களை இடமாற்றம் செய்யும் நடவடிக்கைகள் வட மாகாண சபையின் கல்வியமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது வழமையானதும் சுற்று நிருபத்திற்குட்பட்டதும் எனக் கூறப்பட்டாலும் இடமாற்றம் செய்யும் முறைமையும் கவனிக்கப்படும் விடயங்களுமே கவலையளிக்கின்றன.   மாகாணக் கல்வியமைச்சின் இத்தகைய தூர நோக்கற்ற செயற்பாடுகள் பாரம்பரியமிக்க பாடசாலைகளினதும் குறுகிய காலத்தில் வேகமான வளர்ச்சியைப் பதிவு செய்த பாடசாலைகளினதும் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கிச் சீரழித்து விடுமோ என்ற அச்சம் பாடசாலைச் சமூகங்களையும் நலன் விரும்பிகளையும் கவலை கொள்ள வைக்கின்றது.

பாடசாலைகளுக்குரிய தலைமைத்துவத்தை வழங்கி ஆசிரியர்களையும் மாணவர்களையும் சரியாக வழிநடத்தி பாடசாலைகளை முன்னேற்றகரமான பாதையில் வளர்த்துச் செல்வதில் அதிபர்களுக்கிருக்கும் பெரும் பங்கு மறுக்க முடியாதது. கடந்த காலங்களில் பல அதிபர்கள் தமது தனிமனித ஆளுமைத் திறனால் பாடசாலைகளை அதிசயிக்கத்தக்க வகையில் முன்னேற்றிக் காட்டியிருக்கின்றார்கள். மாறாக வேறு பல அதிபர்கள் தமது ஆளுமை குறைவினால் பாடசாலைகளின் வீழ்ச்சிக்கும் வழிகோலியிருக்கிறார்கள். இவை நாம் கண்ட நிதர்சனங்கள், அதிபர்களது கொள்கைகள், எதிர்பார்ப்புகள், மனப்பாங்கு, செயல்திறன், நல்லொழுக்கம் போன்றனவே பாடசாலைகளின் செயற்பாடுகளை, செல் நெறிகளை தீர்மானிக்கின்றன.

எனவே பாடசாலையொன்றிற்கு அதிபர் ஒருவர் நியமனம் செய்யப்படுகின்ற போது மேற்கண்ட விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டுமென்பதை எவரும் மறுக்க மாட்டார்கள். பாடசாலைகள் எல்லாம் ஒரே மாதிரியானவையாக இருந்து விடுவதில்லை. வெறுமனே தரம் 3, தரம் 2, தரம் 1சி, தரம் ஏபி என்ற தரப்படுத்தல்களைத் தாண்டி தனித்துவப் பாரம்பரியங்களாலும் மாணவர்கள், பெற்றோர்கள் சமூகத்தினது தனித்துவ இயல்புகளினாலும் பாடசாலைகள் வேறுபட்ட இயல்புகளைப் பிரதிபலிக்கின்றன. எனவே பாடசாலைகளுக்கு அதிபர்கள் நியமிக்கப்படும் போது பாடசாலைகளில் இயல்புகளும் பின்புலமும் நிச்சயம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகின்றன. எனினும் வட மாகாண கல்வியமைச்சு மேற்கொள்ள முனைகின்ற அதிபர் இடமாற்றங்களில் அதிபர்களது ஆளுமை பற்றியோ பாடசாலைகளின் பின்புலங்கள் பற்றியோ கவனத்தில் எடுக்கப்படுவதாகத் தெரியவில்லை.

வெறுமனே "காகிதங்களை' நம்பி அதாவது பாடசாலைகளின் கொள்கை ரீதியான தரப்படுத்தல்களையும் (தரம் 3 பாடசாலை என்றவாறான) அதிபர்களின் நியம அடிப்படையிலான தரங்களையும் (தரம் 3 அதிபர் என்றவாறான..... ) வைத்துக் கொண்டே இவ்விட மாற்றங்கள் செய்யப்படுவதாகத் தெரிகின்றது. அத்தோடு குறித்த பாடசாலையொன்றில் ஒரு அதிபர் நீண்டகாலம் கடமையாற்றியமையும் இடமாற்றத்திற்கான காரணமாகிவிடுகின்றது. சொகுசான அறைகளில் இருந்து கொண்டு யதார்த்தம் புரியாது செயற்பட முனையும் அதிபர்களிலும் ஆசிரியர்களிலும் குறை காண்பதே தமது தொழிலெனக் கருதும் அதிகார முனைப்புடைய அதிகாரிகளின் தூரதிருஷ்டியற்ற செயற்பாடுகள் ஏற்படுத்தப் போகும் பின்விளைவுகளைப் பற்றிச் சிந்திக்க அவர்கள் தயாராக இல்லை என்பதே மிகவும் வேதனையானது.

வலிகாமம் மேற்குப் பிரதேசத்தில் இருக்கும் 1AB Super பாடசாலையொன்றிக்கு கடந்த காலத்தில் அதிபர் வெற்றிடம் வந்தபோது கல்வித் திணைக்களத்தால் அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டார். அதிபராக முன்னனுபவமற்ற மேற்படி நபரால் பாடசாலையைச் சரியாக நிர்வகிக்க முடியாத நிலையில் பாடசாலையில் அக முரண்பாடுகள் வளர்ந்த நிலையில் பாடசாலைச் சமூகத்தின் எதிர்ப்பினால் கல்வித் திணைக்களம் முறைப்படி விண்ணப்பங்களைக் கோரி நேர்முகப் பரீட்சை நடத்தி குறித்த பாடசாலையில் ஆசிரியராகக் கடமையாற்றி போட்டிப் பரீட்சையின் மூலம் தரம் 2 அதிபராகத் தெரிவு செய்யப்பட்ட ஒருவரை அதிபராக நியமித்தது. இளமைத் துடிப்பும் ஆளுமைத் திறனும் உள்ள மேற்படி அதிபர் பாடசாலையை ஒழுக்க ரீதியாகவும் கல்வி பெறுபேற்று ரீதியாகவும் இணைப்பாடச் செயற்பாடுகளின் அடிப்படையிலும் பௌதிக வள ரீதியாகவும் முன்னேற்றங்கள் பலவற்றைப் பதிவு செய்து பாடசாலையை 1AB Super தர பாடசாலையாக்கினார்.

அதேவேளை அதிபர் பணிக்கு மேலதிகமாக பாடசாலையின் உயர்தர மாணவர்களுக்கு கற்பித்தல் பணியையும் மேற்கொண்டு வருகின்றார். தற்போது 1அஆ பாடசாலைக்கு தரம் 2 அதிபர் பதவியிலிருப்பது பொருத்தமற்றது எனக் கூறி இடமாற்றம் வழங்க அதிகாரிகள் முயற்சிக்கின்றார்கள். சிறப்பாகச் செயற்படுகின்ற அதிபரை இடமாற்றம் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன? எனக் கேள்வியெழுப்பும் குறித்த பாடசாலையின் பெற்றோர்கள் தரம் 1 அதிபருக்கான நியமனக் கடிதத்தை வைத்திருக்கும் ஆளுமையற்ற ஒரு அதிபரைத் தமது பாடசாலைக்கு நியமித்து தமது பாடசாலையை அதிகாரிகள் சீரழிக்க முனைவதாகக் குற்றம் சாட்டுகின்றார்கள்.

குறித்த பிரதேசத்திலுள்ள பிறிதொரு 1 அஆ பாடசாலைக்கு தரம் 1 அதிபர் என்ற தகுதியைக் கருதி நியமிக்கப்பட்ட அதிபரால் அந்தப் பாடசாலை வீழ்ச்சிப் பாதையில் செல்வதனையும் சுட்டிக் காட்டுகின்றார்கள்.  வலிகாமம் கல்வி வலயத்திற்கு உட்பட்ட பிறிதொரு தரம் 1சி  பாடசாலையில் தரம் 2 அதிபர் ஒருவர் கடமையில் இருக்கிறார். தரம் 2 அதிபர் தரம் 1சி பாடசாலையில் இருப்பது பொருத்தமற்றது என்றும் ஒரே பாடசாலையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக கடமையாற்றிவிட்டார் என்றும் காரணங்களைக் காட்டி மேற்படி அதிபரை இடமாற்றம் செய்யவிருக்கிறது மாகாணக் கல்வியமைச்சு. இதில் முரண் என்ன வெனில் மேற்படி அதிபர் பிறிதொரு 1சி பாடசாலைக்கே புதிதாக நியமிக்கப்படவுள்ள அதிபரும் தரம் 2 ஐச் சேர்ந்தவரே என்பதுவுமேயாகும். குறித்த காலப் பகுதிக்கு அதிகமாக ஒரே பாடசாலையில் மேற்படி அதிபர் கடமையாற்றியது தான் இடமாற்றத்திற்கான காரணமெனின், மேற்படி பாடசாலைச் சமூகத்தின் ஆதங்கத்தையும் கவனத்தில் எடுத்தேயாக வேண்டும். பாடசாலைச் சமூகம் மேற்படி அதிபரை விரும்புகிறது.

முரண்பாடுகளற்ற விதத்தில் பாடசாலையைச் சமூகத்தோடு இணைத்து வளர்த்தெடுத்தவர் அதிபர் என்கிறார்கள் பெற்றோர்கள். ஊழலற்ற விதத்தில் பாடசாலையை முன்னேற்றப் பாதையில் வழி நடத்திய அதிபரை இடமாற்றஞ் செய்ய வேண்டியதில்லை என அவர்கள்  கருதுகிறார்கள். அவ்வாறு இடமாற்றஞ் செய்தாலும் அவரைப் போலவே பாடசாலையை முன்னேற்றப் பாதையில் வழிநடத்தக்கூடிய ஆளுமை மிக்க அதிபர் ஒருவரே தமது பாடசாலைக்கு நியமிக்கப்பட வேண்டும் என்பது அவர்களின் ஆதங்கம். புதிதாக நியமிக்கப்படவுள்ளதாகக் கூறப்படும் அதிபரில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லையெனத் தெரிகின்றது. அதிபர் இடமாற்றங்கள் அல்லது நியமனங்கள் செய்யப்படும் போது பாடசாலை அபிவிருத்திச் சங்கம் முதலியவற்றின் அபிப்பிராயங்களைக் கருத்திலெடுப்பதும் அவசியமானதே.  வட மாகாணக் கல்வியமைச்சின் இடமாற்றத்தால் அல்லல்படும் பாடசாலைகளுக்கான வகை மாதிரியே மேலே சுட்டிக்காட்டப்பட்டன.

இதேபோல பல பாடசாலைகள் பல்வேறுபட்ட பிரச்சினைகளையும் ஆதங்கங்களையும் வெளிப்படுத்துகின்றன. கடந்த ஆண்டு க.பொ.த. (உ/த) பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் வட மாகாணம் 9ஆவது இடத்திலுள்ளதாக கவலை கொள்ளும் இன்றைய நிலையில் அதற்கான காரணங்கள் பலவற்றுள் பிரதானமானது கடந்த ஆண்டு வட மாகாண சபை மேற்கொண்ட பாரிய அளவிலான ஆசிரியர் இடமாற்றங்களும் அதனால் பாடசாலைகள் நிலைகுலைந்து போனமையுமே எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் அரசியல் நோக்கோடு பாரிய அதிபர் இடமாற்றங்களைச் செய்து பாடசாலைகளை தடுமாற்றத்திற்குள்ளாக்கி கல்வி நிலையில் பின்னடைவையேற்படுத்த கல்வியமைச்சு முனைப்பாகவுள்ளமை ஏனென்றே புரியவில்லை. வருட நடுப்பகுதியில் க.பொ.த. (உ/த) பரீட்சை நெருங்குகின்ற வேளையில் பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் இவ்வாறான இடமாற்றங்களை செயற்படுத்த வட மாகாண சபை தீவிரமாக முனைவதன் மர்மம் விளங்கவில்லை. வட மாகாணப் பாடசாலைகளில் குறிப்பாக யாழ். மாவட்டப் பாடசாலைகளின் இயல்பான இயக்கத்தை சீர்குலைக்கக் கூடியதும் வட மாகாண கல்வி நிலையைப் பலவீனப்படுத்தக்கூடியதுமான இத்தகைய நிதானத்தையும் பொருத்தமான அணுகுமுறைகளையும் வட மாகாணக் கல்வியமைச்சு கடைப்பிடிக்குமா? இல்லையெனில் எதிர்காலத்தில் பாடசாலைகளைச் சீர்குலைத்த பாரிய பழிக்கு முகங்கொடுக்க கல்வியமைச்சின் செயலாளரும் ஏனைய அதிகாரிகளும் தயாரா?

http://www.thinakkural.lk/article.php?article/dgxmjvrgmr7179e0e2b58d6414962htmbsfb37a2527329a5ce093d80bi0jg#sthash.oQ9F04AQ.dpu

  • தொடங்கியவர்

அதிபர்கள் இடமாற்றத்தால் மாணவர்கள் பாதிப்பு

பரீட்சைகள் நெருங்கி வரும் வேளையில் அதிபர்கள் இடமாற்றம் செய்யப்படுவது மாணவர்களை உளவியல் ரீதியாக பாதிப்புக்குள்ளாக்கி அவர்களை அமைதியான மனநிலையில் தேர்வுக்கு தோற்ற முடியாத நிலை ஏற்படும் என கிளிநொச்சி மாவட்ட கல்வி அபிவிருத்திக் குழு இன்று ஞாயிற்றுக்கிழமை (05) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி ஒரு சில பாடசாலைகளில் திடீரென மேற்கொள்ளப்பட்ட அதிபர்கள் இடமாற்றம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை செயலாளரால் கிளிநொச்சி மாவட்டத்தின் சில 1ஏ.பி, 1சி தர பாடசாலை அதிபர்கள்; இடமாற்றம் செய்யப்பட்டனர்.

தேர்வுகள் நெருங்கிவரும் சமயத்தில் இவ் இடமாற்றங்கள் செய்யப்பட்டமையால் பெற்றோர் விசனமும், கவலையும் அடைந்துள்ளனர். மாணவர்கள் அமைதியான மனநிலையில் தேர்வுக்கு தோற்றமுடியாத நிலை தோன்றியுள்ளது.

மேலும், 1 ஏ.பி, 1சி தர பாடசாலைகளுக்கு அதிபர் சேவைத் தரம் 'ஐ' ஐச் சேர்ந்த அதிபர்கள் நியமிக்கப்படுவதாயின் அனைத்து 1ஏ.பி, 1சி பாடசாலைகளுக்கும் சமநேரத்தில் அதிபர்களின் இடமாற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

கிளிநொச்சி மகா வித்தியாலய அதிபர் திரு.அ.பங்கயற்செல்வனுக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டமையால் மாணவரிடையே அமைதியின்மை ஏற்பட்டதுடன், மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் சீர்குலைந்துள்ளன. அதிபர் திரு.அ.பங்கயற்செல்வன் இப்பாடசாலைக்கு வழங்கிய அர்ப்பணிப்பான சேவை கணக்கிடப்படாமல் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பாரதி வித்தியாலய சமூகத்தால் விரும்பப்பட்ட அதிபர் திரு.பெ.கணேசன் இடமாற்றம் செய்யப்பட்டமையால் சமூக ரீதியான பாகுபாடு காட்டப்படுவதான உணர்வு பெற்றோரிடையே மேலோங்கியுள்ளது.

அதேசமயம், அதிபர் சேவைத் தரம் 'ஐ' ஐச் சேர்ந்த சில அதிபர்களுக்கு பொருத்தமான பாடசாலை வழங்கப்படாது புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். எனவே, கிளிநொச்சி மாவட்டத்தின் கல்விச் செயற்பாடுகள் சீர்குலையாத வகையில் பொருத்தமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கு பொருத்தமான அதிபர் நியமிக்கப்பட்டு கற்றல், கற்பித்தல் செயற்பாடு சுமூகமாக நடைபெற வழிசெய்தல், புனித திரேசா பெண்கள் கல்லூரியின் முதல்வராக இருந்த திருமதி. ஜெயந்தி தனபாலசிங்கத்தை வலயக் கல்வி அலுவலகத்தில் பொருத்தமான பதவியில் அமர்த்துதல். அ.பங்கயற்செல்வன், திரு.பெ.கணேசன் ஆகிய அதிபர்களின் சேவையை மதித்து பொருத்தமான பாடசாலைகளில் அதிபராக இடமாற்றம் செய்தல், நியமனம் வழங்கப்படாத மாவட்டத்தில் உள்ள அதிபர் தரம் 'ஐ' ஐச் சேர்ந்த அதிபர்களை பொருத்தமான பாடசாலைகளில் நியமித்தல், ஆகியவற்றைச் செய்வதன் மூலம் கிளிநொச்சி மாவட்டத்தின் கல்விச் செயற்பாடுகள், சீர்குலைந்துள்ள கற்றல், கற்பித்தல் செயற்பாட்டை சிறப்பாக மேற்கொள்ள முடியும் என கருதுகின்றோம் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு கிளிநொச்சி மாவட்ட கல்வி அபிவிருத்திக்குழு  வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் கிளிநொச்சி வலயக் கல்விப்பணிப்பாளர் கிளிநொச்சி அதிபர்கள் சங்கம் ஆகியோருக்கும் கடிதம் அனுப்பியுள்ளனர்.

http://www.tamilmirror.lk/149728#sthash.XLsWISyj.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.