Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தோல்வியடையப்போகும் நொண்டிக் குதிரையில் பணத்தை கட்ட விக்னேஸ்வரன் என்ன விபரம் தெரியாத முட்டாளா?

Featured Replies

தோல்வியடையப்போகும் நொண்டிக் குதிரையில் பணத்தை கட்ட விக்னேஸ்வரன் என்ன விபரம் தெரியாத முட்டாளா?
[ ஞாயிற்றுக்கிழமை, 26 யூலை 2015, 09:10.58 AM GMT ]
vigneswaran_vadamaradchi_001.jpg
வடமாகாண சபை தேர்தல் அறிவிக்கப்பட்டபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாரை முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கப் போகிறது என்ற சர்ச்சை நிலவிய போது, கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தன்னிச்சையாக ஒரு முடிவை எடுத்தார்.

ஓய்வுபெற்ற நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களையே முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்க வேண்டும் என சம்பந்தன் கூறிய போது ஆரம்பத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகித்த கட்சிகள் எதிர்ப்பை தெரிவித்தன.

மாவை சேனாதிராசாவையே முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்க வேண்டும் என தமிழரசுக்கட்சி, ரெலோ, ஈ,பி.ஆர்.எல்.எவ், ஆகிய கட்சிகள் கோரின.

புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களும் குறிப்பாக விடுதலைப்புலி ஆதரவாளர்கள் சம்பந்தனின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

விக்னேஸ்வரன் தென்னிலங்கை பேரினவாதிகளின் விசுவாசி என்றும் தமிழர் தாயகத்தின் உண்மைநிலையை உணர்வை புரிந்து கொள்ளாத சிங்கள அரசியல்வாதியான வாசுதேவ நாணயக்காரவின் சம்பந்தி என்றும் விமர்சனம் செய்தன.

ஆனால் சம்பந்தன் தனது முடிவில் உறுதியாக இருந்ததன் விளைவாக ஓய்வுபெற்ற நீதியரசர் விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கப்பட்டு யாழ். மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 33ஆயிரம் விருப்புவாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.

முதலமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்யும் விடயத்திலும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் சர்ச்சைகள் எழுந்தன.

அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராசபக்ச முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்வது என விக்னேஸ்வரன் முடிவெடுத்த போது சிவாஜிலிங்கம் உட்பட சில மாகாணசபை உறுப்பினர்களும் அதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

அலரிமாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு வைபத்தில் சம்பந்தனையும் சுமந்திரனையும் தவிர ஏனைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் அதில் கலந்து கொள்ளவில்லை, புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப்புலி ஆதரவாளர்களும் அவர்களின் ஊடகங்களும் விக்னேஸ்வரன் ஒரு துரோகி என வர்ணித்தன.

சம்பந்தன், சுமந்திரன், விக்னேஸ்வரன் ஆகியோர் சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நடந்து கொள்கின்றனர் என்ற விமர்சனங்களும் குற்றச்சாட்டுக்களும் புலம்பெயர் தமிழர்கள் சிலரால் முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில் தான் வடமாகாணசபையில் இவ்வருடம் பெப்ரவரி 10ஆம் திகதி இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் இதனை ஒத்த தீர்மானம் ஒன்றை சபையில் முன்வைத்த போதும் போதிய ஆதரங்கள் முழுமை இன்றி வைக்கப்பட்டதாலும் உரிய காலத்தில் அதனை நானே முன்வைப்பேன் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் உறுதியளித்ததற்கு அமைவாக அத்தீர்மானத்தை அவர் முன்வைத்திருந்தார்.

தமிழர் தாயகத்தினில் நடந்தது இனஅழிப்பே! சர்வதேச நீதி விசாரணை எக்காரணம் கொண்டும் தடைப்பட்டு போக அனுமதிக்க முடியாது.

இன்றைய சூழ்நிலையில் இராணுவ முகாம்கள் அப்புறப்படுத்தப்படாவிடில், ஜெனீவாத் தீர்மானம் உரிய காலத்தில் உண்மையை உரைக்காவிடில் எமது தமிழ் மக்களின் பாடு எவ்வாறு அமையப் போகின்றது என்பதைக் கட்டியம் கூறும் கருத்து மிகுந்த ஆவணமாகவே இந்தப் பிரேரணையை இந்த மதிப்பு சால் சபை முன்னே பிரேரிக்கின்றேன்.

இதை இன்று இங்கு உங்கள் முன்னிலையில் பிரேரித்து அது ஏற்கப்படாது விட்டால் நாங்கள் இராணுவ கெடுபிடிகளுக்கு எமது வாழ்நாளெல்லாம் முகம் கொடுக்க நேரிடும். நடந்தது பிழையென்ற மனப்பக்குவத்தை எமது சகோதர சிங்கள அரசியல் வாதிகளின் மனதில் விதைக்கவே இதைக் கொண்டுவந்துள்ளேன் என அப்பிரேரணையை முன்வைத்து உரையாற்றிய முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார்.

சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு நடப்பவர் என புலம்பெயர் விடுதலைப்புலி ஆதரவாளர்களால் குற்றம் சாட்டப்பட்ட விக்னேஸ்வரன் இப்பிரேரணை வடமாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட பின்னர் நாயகனாக உயர்த்தப்பட்டார்.

அதன் பின்னர் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆற்றிய உரைகளும் தமிழ் தேசியக்கூட்டமைப்பில் உள்ள சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரின் போக்குகளிலிருந்து மாறுபட்ட போக்கில் காணப்பட்டன.

புலம்பெயர் தமிழர்களின் ஆதர்சநாயகனாக விக்னேஸ்வரன் உயர்த்தப்பட்டார். தாயகம் தேசியம் சுயநிர்ணயஉரிமை பற்றி அழுத்தமாக விக்னேஸ்வரன் பேச ஆரம்பித்தார்.

ஒரு நாடு இரு தேசம் என்ற கொள்கையை ஏற்றுக்கொண்டவராக விக்னேஸ்வரன் காணப்படுகிறார், அவர் தமது கட்சியில் இணைந்து கொள்ள வேண்டும், அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு விக்னேஸ்வரன் தலைமை தாங்கினால் அதில் தாம் இணைந்து கொள்ள தயாராக இருக்கிறோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமாரும் ஒரு சந்தர்ப்பத்தில் அறிவித்திருந்தார்.

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இணைத்து கொள்வதற்கு அல்லது தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவு வழங்குவதாக விக்னேஸ்வரன் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்பதற்கான அழுத்தங்கள், முயற்சிகள் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள விடுதலைப்புலி ஆதரவாளர்களால் குறிப்பாக லண்டனில் உள்ளவர்களால் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அமெரிக்காவுக்கும் லண்டனுக்கும் விஜயம் செய்வதை தமக்கு சாதாகமாக பயன்படுத்தி கொள்ளவும் லண்டனில் உள்ள தமிழ் அமைப்புக்களும் ஆதரவாளர்கள் சிலரும் முயற்சிகளை மேற்கொண்டன.

அமெரிக்காவில் இரு வாரகாலம் தங்கியிருந்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அமெரிக்க தமிழ்ச் சங்க பேரவையின் வருடாந்த மாநாட்டில் பிரதம விருந்தினராக பங்கு கொண்டதுடன் அமெரிக்காவின் முக்கிய அதிகாரிகளையும் சந்தித்தார்.

வொஷிங்டனில் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா பிஸ்வால் உட்பட அமெரிக்க உயரதிகாரிகளை அவர் சந்தித்தார்.

அவர் அங்குள்ள தமிழ் அமைப்புக்களை சந்தித்த போது அங்குள்ள சில தமிழ் அமைப்புக்களால் விக்னேஸ்வரனுக்கு சில அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

நடைபெறும் பொதுத்தேர்தலில் வடக்கு கிழக்கில் குறிப்பாக யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஆதரிப்பதாக வெளிப்படையாக அறிக்கை விட வேண்டும் என்றும் அவர்களுக்காக தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அமெரிக்க விஜயத்தை முடித்துக்கொண்ட வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் லண்டன் விஜயம் செய்தார். லண்டனில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் உட்பட பிரித்தானிய உயரதிகாரிகளையும் வடமாகாண முதலமைச்சர் சந்தித்து பேசினார்.

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் லண்டன் வருவதை அறிந்து கொண்ட தமிழ் அமைப்புக்கள் சில அவரை சந்திக்க முயற்சித்தன.

ஆனால் அதற்கு விக்னேஸ்வரன் இணங்கவில்லை, இந்நிலையில் தான் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் கோபிரத்தினம் கோபி என்பவர் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் ஊடாக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை சந்திப்பதற்கும் சிறப்புரை ஒன்றை ஆற்றுவதற்கும் ஏற்பாடுகளை செய்தார்.

சர்வதேச தமிழ் செய்தியாளர் சங்கம் அரசியல் கலப்பற்ற வகையில் லண்டன், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, டென்மார்க், ஜேர்மனி ஆகிய நாடுகளில் உள்ள தமிழ் ஊடகவியலாளர்களை ஒன்றிணைத்து கடந்த 9வருடங்களுக்கு முதல் ஆரம்பிக்கப்பட்டது.

ஆனால் பிற்பட்ட காலத்தில் அநாமதேய இணையத்தளங்களை நடத்துபவர்களும், அரசியல் பின்னணி கொண்டவர்களும் அதில் இணைந்து கொண்டதால் அந்த அமைப்பை உருவாக்குவதற்கு முன்னின்ற சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் பலரும் விலகி கொண்டனர். சில அரசியல் பின்னணி கொண்டவர்களின் கைகள் ஓங்கிவிட்டன.

லண்டனுக்கு வரும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை வைத்து அரசியல் ஒன்றை நடத்தவதற்கு சர்வதேச தமிழ் செய்தியாளர் சங்கத்தினை சேர்ந்த கோபிரத்தினம் போன்றவர்கள் முனைந்திருந்தனர்.

விக்னேஸ்வரன் தனது சிறப்புரையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களின் போக்கை கடுமையாக விமர்சனம் செய்வார் என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கோரிக்கையான ஒரு நாடு இரு தேசம் என்ற கொள்கையை ஆதரித்து பேசுவார் என்றும் அவர்கள் எதிர்பார்த்தார்கள். இதனை தாம் ஒரு தேர்தல் பரப்புரைக்காக பயன்படுத்தலாம் என்றும் எதிர்பார்த்திருந்தனர்.

அது தவிர விக்னேஸ்வரனின் சிறப்புரையை கேட்க வந்தவர்களிடம் 10பவுண்கள் அறவிடப்பட்டன. இந்த நிதி அரசியல் கட்சி ஒன்றின் தேர்தல் பரப்புரைக்காக பயன்படுத்தப்பட இருப்பதாகவும் தகவல்.

ஆனால் விக்னேஸ்வரனின் உரையில் தமிழ் தலைவர்கள் திம்பு கோட்பாட்டின் அடிப்படையில் தீர்வை நோக்கி உறுதியாக செயல்பட வேண்டும் என வலியுறுத்தினாரே ஒழிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இரு தேசக் கொள்கையை அவர் வலியுறுத்தவில்லை, வடகிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அதிகார பரவலாக்கலைத்தான் அவர் வலியுறுத்தினார்.

சர்வதேச தமிழ் செய்தியாளர் சங்கம் ஒரு அரசியல் கலப்பற்ற அமைப்பு என நம்பியே அவர்களின் அழைப்பை ஏற்றுக்கொண்டதாகவும் அந்த அமைப்பினருக்கு ஞாபகமூட்டினார்.

அவர் உரையாற்றும் போது பின்வருமாறு கூறினார்.

இன்று சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் அனுசரணையின் கீழ் நான் இந்தக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்குக் காரணம் ஒன்றுண்டு. பலரும் என்னைப் பேசவேண்டும் என்று அழைத்திருந்தார்கள். எவர் மனதையும் புண்படுத்த நான் விரும்பவில்லை.

எல்லோர் கோரிக்கைகளையும் ஏற்றுக்கொள்ளவும் என்னால் முடியவில்லை. நான் அரசியலுக்குப் புதியவன். பல கட்சிகள் சேர்ந்து என்னை வடக்கு மாகாண முதல்வராக வர முன்னின்றன. பல தடவைகளில் சில கட்சிகள் நான் எந்த ஒரு கட்சிக்கும் பக்கச்சார்பு காட்டக்கூடாது என்று என்னைப் பலவந்தப்படுத்தியதும் உண்டு.

எனவே தனித்துவமாக நிற்பதே உசிதம் என்று எனக்குப்பட்டது. அத்துடன் மக்களுக்கு நன்மை பெற்றுக் கொடுக்கவே கட்சிகளை உருவாக்கினோம். இப்போது கட்சிகள் மக்களிலும் பார்க்க முக்கியத்துவம் அடைந்து வருவதைக் காண்கின்றோம்.

என்னைப் பொறுத்தவரையில் மக்களின் நலனே எமக்கு முக்கியமாக இருக்க வேண்டும். கட்சிகளைக் கடந்த நிலையில் சேவையில் ஈடுபடவே நான் விரும்புகின்றேன்.

உங்கள் ஒன்றியம் பக்கச்சார்பற்று இயங்குவதாக எனக்குத் தகவல் கிடைத்தது. எனவேதான் உங்கள் அழைப்பை ஏற்க முன்வந்தேன். என விக்னேஸ்வரன் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

விக்னேஸ்வரின் உரை தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவாக இருக்கும் என அந்த அமைப்பினர் எதிர்பார்த்திருந்த போதிலும் விக்னேஸ்வரின் உரை அவ்வாறு அமையவில்லை.

இதன் பின்னர் கேள்வி நேரத்திலாவது விக்னேஸ்வரன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை ஆதரிக்கிறேன் என கூற வேண்டும் என்ற பிராயத்தனம் மேற்கொள்ளப்பட்டது.

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கொள்கைரீதியில் முரண்பட்டு நிற்கிறீர்கள், நீங்கள் ஏன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து கொள்ளக் கூடாது.

அவர்களுக்கு நீங்கள் ஆதரவளிப்பீர்களா என ஒருவர் எழுத்து மூலம் கேட்டிருக்கிறார் என அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தினேஷ்குமார் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் கேட்டார்.

நான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூலம் அரசியலுக்கு வந்தவன், அக்கட்சியை விட்டு வேறு கட்சிக்கு செல்ல வேண்டிய அவசியம் கிடையாது, செல்லவும் மாட்டேன் என மிக உறுதியாக நேரடியாக அவர் வழங்கிய பதில் அங்குள்ள சிலருக்கு அதிர்ச்சியாகவே இருந்திருக்கும்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு விக்னேஸ்வரன் ஆதரவை வழங்குகிறார் என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே அக்கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அவர்களின் நோக்கத்திற்கு எதிர்மாறாக விக்னேஸ்வரனின் பதில் அமைந்திருந்தது.

இதன் பின்னர் லண்டனில் உள்ள தமிழ் தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலும் நடைபெறப்போகும் பொதுத்தேர்தலில் யாருக்காக பிரசாரம் செய்வீர்கள் என கேட்கப்பட்டது.

அதன் போதும் அவர் மிகத்தெளிவான பதிலை வழங்கினார். நான் அமெரிக்கா புறப்பட்ட பின்னரே பொதுத்தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டது. நாடு திரும்பியதும் எனது அமைச்சர்களுடன் ஆலோசித்து தேர்தல் பிரசாரத்தில் நேரடியாக ஈடுபடுவதா இல்லையா என்பதை தீர்மானிப்பேன் என தெரிவித்தார்.

விக்னேஸ்வரனின் அமெரிக்க லண்டன் பயணத்தை வைத்து அரசியல் நடத்த முற்பட்ட மேற்குலக நாடுகளில் உள்ள சிலருக்கு இது பலத்த ஏமாற்றமாகவே அமைந்து விட்டது.

கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியை ஆதரிக்கிறேன் என விக்னேஸ்வரனின் வாயால் ஒரு வார்த்தை வர வேண்டும் என அவர்கள் பட்டபாட்டை சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் கூட்டத்திலும், அதன் பின்னர் தொலைக்காட்சி ஒன்றின் பேட்டியின் போதும் காணமுடிந்தது.

தோல்வியடையப்போகும் நொண்டிக்குதிரையில் பணத்தை கட்ட விக்னேஸ்வரன் என்ன விபரம் தெரியாத முட்டாளா? 
 

இரா.துரைரத்தினம்
thurair@hotmail.com

http://www.tamilwin.com/show-RUmtyHRaSVnxzE.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.