Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திரை விமர்சனம்: குற்றம் கடிதல்

Featured Replies

kutram1_2561803f.jpg
 

எந்தக் கதாபாத்திரத்தையும் மையப் படுத்தாமல் ஒரு சம்பவத்தை அல்லது பிரச்சினையை மையப் படுத்தும் படங்களின் வகையைச் சேர்ந்தது பிரம்மாவின் இயக்கத்தில் வந்துள்ள ‘குற்றம் கடிதல்’. யதார்த்தத்தைச் சமரசம் செய்துகொள்ளாமல் விறுவிறுப்பாக இதைக் கையாண்டுள்ள பிரம்மாவின் முயற்சி பாராட்டத்தக்கது.

லாரியில் பயணம் செய்யும் அந்த இளம் ஜோடியின் முகத்தில் பெரும் கலவரம். குறிப்பாக அந்தப் பெண்ணின் முகத்தில். அதற்கான காரணத்தைச் சொல்வதாக விரிகிறது படம்.

தனியார் பள்ளியொன்றில் ஆசிரியை யாகப் பணியாற்றுபவர் மெர்லின் (ராதிகா பிரசித்தா). திருமண விடுப்பு முடிந்து பள்ளிக்குச் செல்கிறார். சக ஆசிரியையின் வேண்டுகோளை ஏற்று அவரது வகுப்பை கவனித்துக்கொள்ளச் செல்கிறார். அங்கே மெர்லின் செய்யும் ஒரு சிறு தவறு ஒரு பையனைக் கடுமை யாகப் பாதித்துவிடுகிறது. மெர்லினையும் பெரும் சிக்கலில் தள்ளி விடுகிறது.

அந்தப் பையன் என்னவானான்? ஆசிரியைக்கு என்ன நடக்கிறது? இந்த இருவரையும் சுற்றியிருப்பவர்கள் இந்தப் பிரச்சினையை எப்படி அணுகு கிறார்கள்? பிரச்சினையின் வேர் எப்படிப் பார்க்கப்படுகிறது? இந்தக் கேள்விகளுக்கான பதிலாகப் பரபர வென்று நகர்ந்து செல்கிறது படம்.

ஒரு சம்பவம் அதனோடு சம்பந்தப் பட்டவர்களாலும், காவல் துறை, ஊடகம், பொதுமக்கள் ஆகியோராலும் எவ்வாறு பார்க்கப்படுகிறது என்பதை யதார்த்தமாகவும் அழுத்தமாகவும் காட்டி யிருக்கிறார் இயக்குநர். பார்வையாளர் களைப் பதற்றத்துக்கு உள்ளாக்கும் இச் சம்பவங்களையொட்டிப் பல தரப்பட்ட மனிதர்கள் வருகிறார்கள். ஒவ்வொரு வரின் கோணமும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. எல்லாருடைய பின்னணிகளும் முறையான பிரதிநிதித் துவம் பெறு கின்றன. அசம்பாவிதம் நிகழக் காரணமான ஆசிரியையின் உணர்வு, பள்ளி நிர்வாகத்தின் அணுகுமுறை, பாதிக்கப்பட்ட சிறுவனின் தாய்மாமனின் கோபம், அம்மாவின் கையறு நிலை, என எல்லாமே அடர்த்தியானவை.

காட்சிகளால் கதை சொல்லும் கலை பிரம்மாவுக்குக் கைகூடியிருக்கிறது. பிரச்சினையில் மாட்டிக்கொள்ளும் ஆசி ரியையின் கால் செருப்பில் ஒரு பிளாஸ்டிக் உறை ஒட்டிக்கொள்கிறது. அது தெரியா மல் அவர் நெடுந் தூரம் நடந்து வருவது அவரது பதற்றம் அவரை எந்த அள வுக்கு ஆட்கொண்டிருக்கிறது என்பதைக் காட்டி விடுகிறது.

24 மணிநேரத்தில் நடக்கும் சம்பவங் களினூடே வேகமாக நகர்கிறது படம். வேகமான திரைக்கதை என்றாலும் பல்வேறு நுட்பங்களையும் தவறவிடாமல் பதிவுசெய்திருப்பது சிறப்பு. மனிதன் என்னதான் சூழ்நிலைக் கைதியானாலும், எல்லாருமே பதற்றத்தில் மனித நேயத் தைத் தொலைத்துவிட மாட்டார்கள் என் னும் உண்மையையும் படம் காட்டு கிறது. கோபத்தின் உச்சியில் இருக்கும் தாய்மாமன் பள்ளியின் முதல்வரைச் சொற்களால் வறுத்தெடுக்கிறார். அதற் குப் பதிலாக முதல்வரின் மனைவி சொல்லும் சில வார்த்தைகள் அவர் மனதைத் தொடுகின்றன. “நாங்க விட்ற மாட்டோம் தம்பி” என்று அந்த அம்மையார் மெய்யான உணர்வுடன் சொல்லும்போது தாய்மாமனின் மனம் நெகிழ்வதை உணர முடிகிறது. பாதிக்கப்பட்ட அன்னையை ஆசிரியை சந்திக்கும் இடம் அற்புதமான கவிதை. மனித இயல்பின் மகத்தான பரிமாணத்தை அழகாகக் காட்டும் காட்சிகள் இவை.

சிறுவனின் தாய்மாமன் பொது வுடமைச் சித்தாந்தம் பேசும் தோழராக வருவது யதார்த்தம். ஆனால் அரசியல் கோட்பாடு பேசப்படும் இடங்கள் இயல்பாக இல்லை. ஆசிரியையின் கிறிஸ்துவத் தாயார் தன் மகள் ஒரு இந்துவைத் திருமணம் செய்துகொண்டது குறித்துக் காட்டும் வெறுப்பும் நம்பும்படி இல்லை. பள்ளிக்கூடக் காட்சிகளும் பள்ளிக்கு அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியின் காலைநேரக் காட்சிகளும் இயல்பாக இருக்கின்றன.

பாலியல் கல்வி குறித்த விவாதம் தேவைக்கதிகமாக நீள்வதைத் தவிர்த் திருக்கலாம். ஊடகங்களின் போக்கைச் சொல்லும் காட்சிகள் கூர்மையாக இருந்தாலும் திரைக்கதையில் கச்சித மாக ஒட்டவில்லை. சில காட்சிகள் துருத்திக்கொண்டிருக்கின்றன. குறிப் பாகப் பையனின் தாய்மாமனின் சமூக உணர்வைக் காட்டுவதற்கான காட்சிகள்.

நடிகர்கள் தேர்வு திரைக்கதையின் நம்பகத்தன்மைக்குப் பெரிதும் உதவி யிருக்கிறது. பாத்திரங்கள் நிஜ வாழ்வில் நாம் சந்திக்கும் மனிதர்களுக்கு மிக நெருக்கமாக இருக்கிறார்கள். கிட்டத்தட்ட எல்லாருமே புதுமுகங்கள். ஒவ்வொரு நடிகரையும் கதாபாத்திரமாகவே மாற வைத்திருப்பதில் இயக்குநரின் ஈடுபாடும் உழைப்பும் தெரிகின்றன. ராதிகா பிரசித்தா வின் நடிப்பு அபாரம். குற்றவுணர்வும் பீதியும் பதைபதைப்பும் அவர் முகத்தில் தத்ரூபமாகப் பிரதிபலிக்கின்றன. பல சமயம் அவர் கண்களே எல்லாவற்றையும் சொல்லி விடுகின்றன.

சங்கர் ரங்கராஜனின் இசையில் பாடல் கள் இனிமையாக உள்ளன. பின்னணி இசை திரைக்கதையின் ஆழத்தைக் கூட்டுகிறது. மணிகண்டனின் ஒளிப்பதிவு படத்துக்கு இயல்புத் தன்மையைத் தருவதில் பெரும் பங்கு வகிக்கிறது. பாரதியாரின் ‘சின்னஞ்சிறு கிளியே’ பாடலைப் படமாக்கிய விதம் அற்புதம். ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ என்னும் வரியைக் காட்சிப்படுத்திய விதமும், அடுத்த வரியைப் பாடாமல் இசையால் இடைவெளியை நிரப்பிய விதமும் படத்தின் அடிநாதத்துக்கு பொருத்தமாய் அமைந்து மனதை நெகிழச் செய்கின்றன.

சி.எஸ். பிரேமின் படத்தொகுப்பு அருமை. லாட்ஜுக்கு அருகே நடக்கும் கட்டைக் கூத்து கதாபாத்திரத்தின் நிலையைப் பிரதிபலிக்கிறது. ஆனால் இந்தப் பொருத்தத்தை நீட்டிமுழக்காமல் சிக்கனமாகப் பயன்படுத்திக்கொள்கிறார் எடிட்டர். கடைசிக் காட்சியில் தோழர் உதயன் ஊடகத்திடம் பேசுவார் என்று எதிர்பார்க்கிறபோது அவர் கேமராவைக் கையால் மறைத்துத் திரையில் கருப்பு வண்ணைத்தை படரவிடுவதோடு காட்சியை முடித்துக்கொள்கிறார் எடிட்டர். இப்படித்தான் பல காட்சிகளில் எடிட்டிங் கூர்மையாக இருக்கிறது.

ஒரு சம்பவத்தை முன்வைத்துச் சமூக யதார்த்தத்தையும் மனித இயல்பு களையும் அழுத்தமாகக் காட்டியிருக்கும் ‘குற்றம் கடிதல்’ தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல வரவு. மனித மனம், பழிவாங்க மட்டுமல்ல; மன்னிக்கவும் தயாராக இருக்கும் என்னும் உண்மையைக் கவித்துவமாகக் கூறும் ஆரோக்கியமான படம் இது.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/திரை-விமர்சனம்-குற்றம்-கடிதல்/article7691918.ece

  • தொடங்கியவர்

திரைப் பார்வை: குற்றம் கடிதல் - இதயத்தை நோக்கி ஒரு சினிமா

ku1_2569197f.jpg

தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக என்னவோ நடந்துகொண்டிருக்கிறது. புதுப்பேட்டை, பருத்திவீரன், சுப்பிரமணியபுரம், நான் கடவுள் தொடங்கி மூடர் கூடம், சூது கவ்வும், ஜிகர்தண்டா என்றெல்லாம் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் படங்கள் பெரும்பாலும் குவெண்டின் டாரண்டினோவின் படங்கள், அமெரோஸ் பெர்ரோஸ், சிட்டி ஆஃப் காட் போன்ற படங்களின் தன்மையில் வருகின்றன. உலகெங்கும் உள்ள பெரும்போக்கு இது.

உலக சினிமாவில் இன்னொரு போக்கும் இருக்கிறது. அதுதான் ஈரானிய சினிமா. தமிழில் உலக சினிமாவைப் பற்றிய பேச்சு, விவாதங்கள் மிகப் பரந்த அளவில் சூடுபிடிக்கத் தொடங்கியது 2000-க்குப் பிறகுதான். அப்போது எங்கே பார்த்தாலும் ஈரானிய சினிமாவைப் பற்றிய பேச்சுதான். எனினும், அதைப் பின்பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லும்படியான படங்கள் ஏதும் எடுக்கவில்லை. அந்தக் குறையை ஓரளவுக்குப் போக்கும் வகையில் சமீபத்தில் வந்த படங்கள்தான் ‘காக்கா முட்டை’, ‘குற்றம் கடிதல்’ ஆகியவை.

ஈரானிய சினிமாக்களில் அதிக அளவில் குழந்தைகளின் உலகம் வரும். அடுத்ததாகப் பெண்களின் உலகம். இவை தவிர போர் பற்றிய படங்கள், வாழ்வின் அழகுகள், அர்த்தங்கள் போன்றவற்றைத் தேடும் படங்கள் என்று ஈரானிய சினிமாவை வகைப்படுத்தலாம். இவை எல்லாமே மறைந்திருந்து அச்சுறுத்தும் பெரிய உலகத்தின் பின்னணியில் சின்னஞ்சிறு உலகத்தை, சின்னஞ்சிறு சந்தோஷங்களை, அன்பை மிகவும் எளிமையாகச் சொல்பவை. எளிமையான காட்சி அமைப்பின் உள்ளே வாழ்க்கையின் சிக்கல்களை மறைத்துச் சொல்வதுதான் ஈரானிய சினிமா.

தமிழில் ஈரானிய சினிமாவுக்குச் சிறிய அளவில் முன்னோடியாக மகேந்திரனின் ‘உதிரிப்பூக்கள்’, பாலு மகேந்திராவின் ‘வீடு’, ‘சந்தியா ராகம்’ போன்ற படங்களைச் சொல்லலாம். “பிரம்மாண்டமாகப் படம் எடுப்பதற்குப் பதிலாக அன்பைப் பிரம்மாண்டமாகக் காட்டுங்கள்” என்று மகேந்திரன் சொல்வார். அது காக்கா முட்டை, குற்றம் கடிதல் போன்ற திரைப்படங்களால் சாத்தியப்பட்டிருக்கிறது.

எளிமையான ஒரு கதைக் கருவை எடுத்துக்கொண்டு அதை வளர்த்தெடுத்துக்கொண்டு போய் ஒரு உச்சத்தில் முடிப்பது நல்ல சிறுகதையொன்றின் இயல்பு. இந்த அளவுகோலை வைத்துப் பார்க்கும்போது ‘குற்றம் கடிதல்’ படத்தை நல்ல திரைப்படம் என்று சொல்வதைவிட நல்ல சிறுகதை என்றே சொல்லத் தோன்றுகிறது.

ku3_2569199a.jpg

எளிமையாகத் தொடங்கும் காட்சிகள் ஆசிரியை மெர்லின் ஒரு சிறுவனை அறைந்த பிறகு வேகம் கொள்கின்றன.

பிறந்த நாளுக்கு இனிப்பு கொடுத்த சிறுமிக்கு முத்தம் கொடுத்த சிறுவனைக் கண்டிக்கும் ஆசிரியையிடம், ‘உங்களுக்கு பர்த்டேன்னாலும் உங்களுக்கு முத்தம் குடுப்பேன் டீச்சர்’ என்கிறான். கோபமுற்ற ஆசிரியை அந்தச் சிறுவனை அறைந்துவிடுகிறார். கீழே விழும் சிறுவன் பேச்சு மூச்சற்றுப் போய்விடுகிறான்.

ஆசிரியை அவ்வளவு வேகமாக அறையவில்லை என்றாலும் அப்படி ஆகிவிடுகிறது. நமக்கு அந்தப் பையன் மீதும் கோபம் ஏற்படுகிறது. சின்ன வயதில் என்ன மாதிரியான புத்தி என்றுகூடத் தோன்றுகிறது. ஆனால், முத்தத்துக்குப் பெரியவர்கள் வைத்திருக்கும் அர்த்தமும் குழந்தைகள் வைத்திருக்கும் அர்த்தமும் வேறு வேறு என்பதை ‘சின்னஞ்சிறு கிளியே’ பாடலில் வரும் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ என்ற வரி உணர்த்திவிடுகிறது. அந்த வரியின்போது அந்தச் சிறுவன் தன் அம்மாவுக்கு முத்தம் கொடுக்கிறான். அடுத்ததாக, ஆசிரியைக்கு அந்தச் சிறுவன் முத்தம் கொடுக்கிறான். அது ஆசிரியையின் பிரமை. ஆனால், அந்தச் சிறுவனின் முத்தத்தில் உள்ள பரிசுத்த அன்பை, குழந்தைமையை ஆசிரியைக்கும் நமக்கும் அந்தக் காட்சி உணர்த்திவிடுகிறது. ஒரு பாடலின் இடையே வரும் சிறு காட்சித் துணுக்கு படத்தை எங்கோ உயர்த்திவிடுகிறது.

தெரியாமல் செய்த ஒரு விஷயம் ஒரு குற்றம்போல மாறிய பிறகு அந்த ஆசிரியைக்கு ஏற்படும் மன உளைச்சல், விசித்திரப் போக்கு தமிழ்த் திரைக்கு மிகவும் புதிது. எந்த ஒரு நிலையிலும் தான் தப்பிக்க வேண்டும் என்றே அவள் நினைக்கவில்லை. தனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை, அந்தப் பையனுக்கு ஏதும் ஆகிவிடக் கூடாது என்று உணர்வே மேலிடுகிறது. குற்றவுணர்வை இவ்வளவு நுட்பமாகத் தமிழில் சித்தரித்த படங்கள் மிகவும் குறைவு.

எல்லாத் தரப்புகளின் பின்னணியிலும் ஒரு தடுமாற்றம் இருக்கும், பதற்றம் இருக்கும், மனஉளைச்சல் இருக்கும் என்ற விஷயத்தை அழகாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். ஆசிரியர் மாணவரை அடித்துவிட்டார் என்றால் இயல்பாக நமது பொதுப்புத்தி ஆசிரியரைக் குற்றவாளியாக்கித் தண்டனையும் வழங்கிவிடும். குற்றத்தையோ தவறையோ நாமே செய்யும்போதுதான் நாம் படும் கஷ்டம் நமக்குத் தெரியும். அந்த நிலையை ஆசிரியை அவ்வளவு நுணுக்கமாக நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார். மறு தரப்பின் நிதர்சனத்தையும் காட்டிவிடுகிறார். பணக்காரர் X ஏழை என்பதுபோல் கருப்பு வெள்ளையாகக் காட்டிவிடாமல் இரண்டு தரப்பின் மீதும் நமக்குப் பரிவை ஏற்படுத்திவிடுகிறார் இயக்குநர்.

ku2_2569202a.jpg

பழிவாங்கும் இயல்பு மனிதர்களின் ஆதார உணர்ச்சிகளில் ஒன்று. மன்னிக்கும் உணர்வும் அப்படியே. கோமாவில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் சிறுவனின் தாய் மாமன் ஆசிரியையைக் கொலைவெறியுடன் தேடிக்கொண்டிருக்கிறார். ஆசிரியையும் அவரது கணவரும் பல்வேறு பிரச்சினைகளுக்குப் பிறகு மருத்துவமனைக்குச் செல்கிறார்கள். திக்பிரமை பிடித்து அமர்ந்திருக்கும் அந்தத் தாயின் காலடியில் தஞ்சம் புகுந்து ஒரு அழுகை அழுவாரே, தமிழ் சினிமாவில் அப்படியொரு அழுகையை யாரும் அழுததில்லை! அடிவயிற்றால் அழுதிருப்பார். தாயின் கைகளைப் பிடித்து மாறி மாறித் தன் கன்னத்தில் அடித்துக்கொள்ளும் அவரைச் சட்டென்று ஒரு கணம் நிறுத்தி அந்தத் தாய் பார்க்கும் கனிவான பார்வை திரைப்படத்தின் மகத்தான தருணம். அந்த முகத்தில் அப்படியொரு மினுங்கல், அப்படியொரு கனிவு. அந்தக் கணத்தில் அந்த ஆசிரியைக்கும் தாயாகிறார். ஆசிரியையை அணைத்துக்கொண்டு ‘எனக்கு என் பிள்ளை பிழைக்க வேண்டும். வேறெதுவும் வேண்டாம்’ என்கிறாள். அது மன்னிப்பு என்றுகூடச் சொல்லிவிட முடியாது. ஏனெனில் அந்தத் தாயின் மனதில் பழிவாங்கல், வெறி ஏதும் இல்லை. குற்றத்தை யார் செய்தது என்ற உணர்வோ நினைவோகூட இல்லை. தாய்க்கு முதலும் கடைசியும் பிள்ளையின் நினைவுதான். இந்த ஒரு காட்சி போதும், ஒட்டுமொத்தத் திரைப்படத்தையும் வேறு ஒரு உயரத்துக்கு எடுத்துச்செல்வதற்கு. அதன் பிறகு வருபவையெல்லாம் அநாவசியமான காட்சிகளே!

மனிதர்களின் ஆதார உணர்ச்சி ஒன்றைப் பற்றி மிகவும் எளிமையாகப் படமெடுத்திருக்கும் பிரம்மா நமக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்திருக்கிறார். படம் பார்க்கும்போது ‘நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், ஏதோ குறைகிறதே’ என்று ஏற்படும் உணர்வை ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ வரிக்கு வரும் காட்சியும், ஆசிரியையும் மன உளைச்சல் வெளிப்பாடுகளும் ஒரு தாயின் உச்சபட்சக் கனிவும் மாற்றிவிடுகின்றன. டாரண்டினோ வகைத் திரைப்படங்களைவிட இதுபோன்ற திரைப்படங்கள்தான் தமிழ்த் திரைப்பட உலகத்துக்கும் நமது சமூகத்துக்கும் மிகவும் அத்தியாவசியமானவை. வாழ்த்துக்கள் பிரம்மா

http://tamil.thehindu.com/cinema/cinema-others/திரைப்-பார்வை-குற்றம்-கடிதல்-இதயத்தை-நோக்கி-ஒரு-சினிமா/article7715477.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

நான் குற்றம் கடிதல்,கிருமி இரண்டும் இணையத்தில் பார்த்தேன்.பரவாயில்லை.ஆனால் எனக்குப் பெரிதாய் பிடிக்கவில்லை."குற்றம் கடிதல்" தமிழகத்தில் தப்பு செய்யும்/மாணவர்களை கண்ட படி தண்டிக்கும் ஆசிரியர்களுக்கு ஆதரவாய் எடுக்கப்பட்ட படம் மாதிரி எனக்குப்பட்டது.ஆனால் இந்த இரு படத்தையும் விட புலி டப்பா படமாய் இருக்கும் என நினைக்கிறேன். இன்னும் பார்க்க மனம் வரவில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.