Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடமாகாண விவசாய அமைச்சருக்கு எதிராக உறுப்பினர்கள் போர்க் கொடி, தனித்து நின்ற விவசாய அமைச்சர்!

Featured Replies

வடமாகாண விவசாய அமைச்சருக்கு எதிராக உறுப்பினர்கள் போர்க் கொடி, தனித்து நின்ற விவசாய அமைச்சர்!
 
 
வடமாகாண விவசாய அமைச்சருக்கு எதிராக உறுப்பினர்கள் போர்க் கொடி, தனித்து நின்ற விவசாய அமைச்சர்!
வடமாகாண விவசாய அமைச்சருக்கு எதிராக மாகாண சபையில் பிரேரணை கொண்டுவரப்பட்டு சபையில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
 
வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது.
 
அதன்போது, இரணைமடு நீர்ப்பாசன திட்டம் தொடர்பிலான செயற்பாடுகள், பார்த்தீனிய ஒழிப்பு தொடர்பான செயற்பாடுகள் , பளை பிரதேசத்தில் நிறுவப்பட்ட காற்றாலை தொடர்பிலான விடயம்,சுன்னாக நிலத்தடி நீர் தொடர்பிலான செயற்பாடுகள், மருதங்கேணி கடல்நீரை நன்னீர் ஆக்கும் செயற்பாடு, கார்த்திகை மர நடுகை, அனர்த்த நிவாரண விநியோகம், உழவர் திருநாள், மலர்க்கண்காட்சி, விவசாய தினம், மண் தினம் , போன்றவை தொடர்பில் மாகாண சபை உறுப்பினர்களுக்கு உரிய முறையில் அறிவிக்காமல் நடாத்தியமை மற்றும் இந்த விழாவுக்கான செலவீனங்களை வெளிப்படுத்தாமை, கூட்டுறவு துறையில் உள்ள முறைகேடுகளை சீராக்காமை, விவசாய துறையில் பல செயற்திட்டங்களை முன்னெடுக்காமை, சிறு குளங்களை புனரமைக்க மத்திய அமைச்சு அழைத்த போது அதனை நிராகரித்தமை, மற்றும் வவுனியா மாவட்டம் தொடர்ந்து விவசாய அமைச்சினால் புறக்கணிக்கப்பட்டு வருகின்றமை, போன்ற பல்வேறு முறைகேடுகளில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஈடுபட்டதாக மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் பிரேரணை ஒன்றினை மாகாண சபையில் முன்மொழிந்தார்.
 
அத்துடன் இந்த குற்றச்சாட்டு தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விவசாய அமைச்சர் மீது விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரி பிரேரணையை சமர்ப்பித்தார்.
 
குறித்த பிரேரணை மாகாணசபை உறுப்பினர்கள் எவரது எதிர்ப்பும் இன்றி, சபையில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
 
அதேவேளை இந்த பிரேரணை சபையில் எடுத்துக்கொள்ளப்பட்டதும், உறுப்பினர்கள் சிலரும் விவசாய அமைச்சருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.
 
மாகாண சபை உறுப்பினர் தியாகராஜா.
 
விவசாய அமைச்சினால் தொடர்ந்து வவுனியா மாவட்டம் புறக்கணிக்கப்பட்டு வருகின்றது. மரநடுகை மாதம் என கூறி கன்றுகளை நட்டார்கள் அவை இன்று அழிந்து போயுள்ளன. ஆடு மாடுகள் அவற்றை தின்னுகின்றன. மரநடுகை ஒரு சதத்திற்கு கூட பயனில்லாமல் , போயுள்ளது.
 
தென்னைம் பிள்ளை,  பலா போன்ற கன்றுகளை நாட்டினார்கள். அவை கூட இன்று பட்டு விட்டன. அதனால் எந்த பயனும் இல்லை அவற்றை விவசாய குடும்பங்களுக்கு கொடுத்து இருந்தால் அவர்கள் அவற்றை நாட்டி பராமரித்து பயனடைந்து இருப்பார்கள். 
 
வவுனியா மாவட்டத்தில் ஆயிரம் குளம் இருக்கின்றது. அவற்றில் ஒன்றையாவது கடந்த இரண்டரை வருடத்தில் புனரமைத்தார்களா ? ஒரு குளத்தை புனரமைத்தோம் என கூறினால் நான் எனது பதவியை இராஜினாமா செய்கிறேன்.
 
பார்த்தீனியம் அழிக்கின்றோம் என கூறி பெரும் செலவு செய்தார்கள். வடமாகாணத்தில் யாழில் மட்டும் தான் பார்த்தீனியம் உள்ளதா ? வவுனியா முல்லைத்தீவில் இல்லையா ? ஏன் அங்கே அழிக்கவில்லை.  சரி யாழில் ஆவது முற்றாக பார்த்தீனியத்தை அழித்து விட்டீர்களா ? 
 
வடமாகாண சபையின் ஆட்சி மகிந்த ஆட்சியை விட சர்வாதிகாரமாக நடக்கின்றது என மாகாண சபை உறுப்பினர் தியாகராஜா தெரிவித்தார்.
 
மாகாண சபை உறுப்பினர் எஸ்.சுகிர்தன்.
 
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேசத்தில் கடல் நீரை நன்னீர் ஆக்குவதற்கான செயற் திட்டம் மாகாண சபையின் அனுமதி பெறப்படாமல், முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ள பட்டு உள்ளது.
 
அதற்கு மருந்தங்கேணி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்கள். அதனை மாகாண சபை உறுப்பினர்கள் எவரும் கவனத்தில் எடுக்கவில்லை.
 
இரணைமடு குளம் தொடர்பில் வாத, பிரதிவாதங்களை நாடாத்திய போதும் மருதங்கேணி மக்களின் பிரச்சனை தொடர்பில் நானும் (சுகிர்தன்) சிவாஜிலிங்கமும் மாத்திரமே குரல் கொடுத்து வருகின்றோம். ஏனைய உறுப்பினர்கள் மௌனமாக இருக்கின்றார்கள்.
 
யாழ்.மாவட்டத்திற்கான நன்னீர் நிலைகளை புனரமைத்து நீரினை பெற்றுக் கொள்ளலாம் மற்றும் தொண்டமனாற்று நன்னீர் ஏரியை கடலுடன் கலக்க விடாது அதனை குளமாக கட்டலாம். 
 
விவசாய அமைச்சர் மீது எனக்கு நம்பிக்கையும் மதிப்பும் இருந்தது அவர். எப்பொழுது கடல் நீரை நன்னீர் ஆக்குவதற்கு எதிராக குரல் கொடுத்த வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் சமாசத்தை கலைத்தாரோ அன்றே அவர் மீதான நம்பிக்கை மதிப்பு எல்லாம் போய்விட்டது. 
 
அதிகளவில் கடற்தொழில் செய்து வாழும் மக்கள் உள்ள மருதங்கேணி பிரதேசத்தை நன்னீர் திட்டம் ஆரம்பிக்க தெரிவு செய்ய வேண்டும் மக்கள் வாழாத கடற்பகுதிகளை தெரிவு செய்து இருக்கலாமே 
 
கடல் நீரை நன்னீர் ஆக்கி 24 ஆயிரம்கன அடி நீரினை பெற்றுக் கொள்ள உள்ளனர். அதற்காக கடலில் இருந்து 80 கன அடி நீரினை உறிஞ்சி எடுத்து மீண்டும் 50 கன அடி நீர் கடலுக்குள் விடப்படும். அவ்வாறு கடலுக்குள் விடப்படும் அந்த 50 கன அடி நீரும் இராசாயன பதார்த்தங்கள் கலந்ததாகவும் அதிக உப்பு செறிவு உடைய நீராகவும் மீள கடலுக்குள் விடப்படும். அதனால் தமது மீன் பிடி தொழில் பாதிக்கப்படும் என அப்பகுதி மக்கள் அஞ்சுகின்றார்கள். எனவே அந்த திட்டத்தை மருதங்கேணி பகுதியில் மேற்கொள்ள கூடாது என கோருகின்றேன் என மாகாண சபை உறுப்பினர் எஸ்.சுகிர்தன் தெரிவித்தார்.
 
மாகாண சபை உறுப்பினர் இ.ஆர்னோல்ட்.
 
இரணைமடு குளத்து நீரை கொண்டுவருவது தொடர்பில் பல பிரச்சனைகளை எழுப்பி அந்த காசை திருப்பி விட்டாச்சு.  யாழில் நன்னீரை தேக்கி வைப்பதற்கு பல வழிகள் உண்டு.
 
பெரியளவிலான நன்னீர் நிலைகளில் நீரினை தேக்கி வைக்க நாவற்குழி, தொண்டமனாறு, மற்றும் அராலி பகுதியில் உள்ள நன்னீர் அணைக் கட்டுக்களை புனரமைப்பதன் ஊடக நீரினை சேமிக்கலாம்.
 
இரணைமடுவில் இருந்து நீரணை பெற முடியாது.என கூறி பெருமளவான நீரினை கடலுக்குள் அனுப்பி விடுகின்றார்கள். மருதங்கேணி பிரதேசத்தில் கடல் நீரை நன்னீர் ஆக்கும் செயற்த்திட்டத்தை ஆரம்பிக்க காராணம் அப்பகுதியில் கடலில் உப்பின் செறிவு குறைவு எனப்படுகின்றது. அது ஏனெனில் இரணைமடு குளத்தில் இருந்து வெளியேறும் மேலதிக நீர் அப்பகுதியில் தான் கடலில் கலக்கின்றது.
 
நாம் இரணைமடு குளத்து நன்னீரை கடலில் கலக்க விட்ட பின்னர், கடலில் இருந்து நீரை பெற்று நன்னீர் ஆக்கும் செயர்த்திட்டத்தை முன்னெடுக்க உள்ளோம்.
 
மகாவலியை வடக்குக்கு திருப்புவது பற்றி கதைக்கின்றார்கள் ஆனால் இரணைமடு குளத்தில் இருந்து வெளியேறும் நீர் வீணாக கடலில் கலக்கின்றது. அதனை கடலில் கலக்க விடாது திருப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
 
மாகாண சபை  உறுப்பினர் கே.சயந்தன்.
 
கடந்த இரண்டரை வருடமாக கூட்டுப் பொறுப்பு என நினைத்து வாய் மூடி இருந்து விட்டேன் இனியும் அப்படி இருக்க முடியாது. விவசாய அமைச்சருக்கு ஆதரவாக ஆரம்பத்தில் செயற்பட்டேன். ஆனால் இப்பொழுது தான் புரிகின்றது அவர் எங்களை முட்டாள் ஆக்கியுள்ளார் என்று. 
 
சுன்னாக நீர் பிரச்சனை தொடர்பில் நிபுணர்கள் சிலரை கடந்த சில தினங்களாக சந்தித்து அது தொடர்பில் பல விடயங்களை அறிந்து வருகிறேன். அதன் போது ஒருவர் கூறினார் விவசாய அமைச்சர் ஒரு துறை சார் அதிகாரிக்கு பதவி லஞ்சம் கொடுக்க கூட தயாராக இருந்தார் என 
 
வடக்கில் நன்னீர் பிரச்சனை இருக்கின்றது. இதுவரை காலமும் வடக்கில் நீர் முகாமைத்துவம் தொடர்பில் விவசாய அமைச்சு என்ன நடவடிக்கை எடுத்து உள்ளது.  நீர் முகாமைத்துவத்தை மேம்படுத்த என்ன திட்டத்தை வைத்து இருக்கின்றது.
 
பாத்தீனியம் அழிப்பதற்காக அமைச்சினால் பெருமளவான நிதி செலவழிக்கப்பட்டது. அதன் பின்னூட்டம் என்ன ? வடக்கில் பாத்தீனியம் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதா ?
 
அமைச்சின் நிதிகளை செலவு செய்ய வேண்டும் என்பதற்காக புதிது புதிதாக தினங்களை அறிமுகம் செய்து பெரியளவில் விழாக்களை நடாத்தி பெரும் செலவு செய்கின்றார்கள் 
 
வடமாகாணத்தில் சில மாவட்டங்களை சில உறுப்பினர்களை விவசாய அமைச்சர் திட்டமிட்டு புறக்கணித்து வருகின்றார் அதனை அவர் கைவிட வேண்டும் என மாகாண சபை உறுப்பினர் கே.சயந்தன் கோரினார்.
 
மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்.
 
ஐ.நா அறிவித்து உள்ளது 2020 ஆண்டு அனைவருக்கும் தூய நீர் என இன்னமும் நான்கு வருடங்களே  இருக்கின்றது. நாம் தூய நீருக்காக என்ன செய்துள்ளோம்.
 
இலங்கையின் ஏனைய மாவட்டங்கள் 90 வீதம் வரை தூய நீரை பெறுகின்றது அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளது. வடமாகாணம் இன்னமும் 10 வீதத்தை கூட தாண்ட வில்லை.
 
இதனால் தான் நான் பல தடவைகள் கோரி இருந்தேன் வடமாகாண நீர் பிரச்சனை தொடர்பில் உறுப்பினர்கள் தமது கருத்துக்களை தெரிவிக்க தனியே நீர் தொடர்பில் கதைப்பதற்காக ஒரு நாளோ இரு நாள் அமர்வையோ ஏற்பாடு செய்யுமாறும், ஆனால் இதுவரை எனது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.என சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
 
எதிர்கட்சி உறுப்பினர் தவநாதன்.
 
"பாவம் மக்கள் " எனும் கவிதை தொகுப்பு நூல் ஒன்று 1984 ம்  ஆண்டு கால பகுதியில் வெளியாகி இருந்தது. அதனை தேடி எடுத்து மாகாண சபை நூலகத்தில் வைக்க வேண்டும்.
 
அக்கால பகுதியில் தமிழீழம் கோரி பல குழுக்கள் போராடினார்கள். அக்கால பகுதியில் இன்னமொரு கதை கூறுவார்கள், இவர்களிடம் தமிழீழத்தை கொடுத்து விட்டு பார்க்க வேண்டும் என அது இங்கு நடக்கும் செயலை பார்க்கும் போது எனக்கு நினைவுக்கு வந்தது.
 
வடமாகாண அவைத்தலைவர் கூறுவார் இங்கே எதிர்க்கட்சி இல்லை, அனைவரும் ஆளும் கட்சியே என்று, ஆனால் ஆளும் கட்சிக்குள்ளே கருத்து முரண்பாடுகள் இருக்கின்றது. உட்கட்சி மோதல்கள் நடைபெறுகின்றன. அதனால் அமர்வின் நேரம் வீணாகின்றது.
 
சபை அமர்வின் முதல் நாள் ஆளும் கட்சி கூட்டம் நடைபெறும், அங்கு இந்த விடயங்களை பேசி முடிவெடுக்கலாம்.  இந்த சபை திறம்பட இயங்க வேண்டும் ஆயின் பிரச்சனைகளை அந்த அந்த மட்டத்திலேயே முடிக்க வேண்டும்.
 
மக்களுடைய பிரச்சனை தொடர்பில் விபரங்களை உறுப்பினர் து.ரவிகரன் சபையில் எடுத்துக் கூறும் போது சுருக்கமாக சொல்லுங்கள் நேரம் செல்கின்றது என அவர் விபரத்தை முழுமையாக சொல்ல விடாத அவைத்தலைவர் கருத்து மோதலுக்காக பெருமளவான நேரத்தை ஒதுக்கி உள்ளார். என தெரிவித்தார்.
 
மாகாண சபை  உறுப்பினர் க.சர்வேஸ்வரன்.
 
தற்போது வடமாகாண சபை தொலைக்காட்சி தொடர் நாடகங்கள் போன்று மாகாண சபையில் பிரச்சனைகள் ஒவ்வொரு பக்கத்தால் செல்கின்றது. இறுதியில் எந்த பிரச்சனைக்கும் முடிவு இல்லாமல் சபை ஒத்தி வைக்கபப்டுகின்றது.
 
இனிவரும் காலத்தில் இவ்வாறு இல்லாமல் ஒரு பிரச்சனையை மையப்படுத்தி அது தொடர்பில் உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்க வேண்டும் விவாதிக்க வேண்டும் அதற்கான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.
 
நீர் பிரச்சனை என்றால் அது தனியாக எடுக்கப்பட வேண்டும் அதே போன்று மீள் குடியேற்ற பிரச்சனை என்றால் அது தனியா எடுத்து பேச வேண்டும். 
 
இன்றைய அமர்வில் இந்த பிரச்சனை தொடர்பில் பேசப்படும் என முன்னரே  உறுப்பினர்களுக்கு அறிவித்தால் ஒவ்வொரு உறுப்பினர்களும் அந்த பிரச்சனை தொடர்பில் தமது பிரதேசம் எவ்வாறு பாதிக்கப்பட்டு உள்ளது என்ற தகவல்கள் தரவுகளை பெற்று வந்து விவாதிக்க முடியும். அதன் ஊடாக அந்த பிரச்னைக்கு ஒரு முடிவு எட்டப்படும்.
 
அதனை விடுத்து ஒவ்வொரு அமர்விலும் ஏதோ ஒரு பிரச்சனை கதைக்க தொடங்கி அது வேறு பிரச்சனைக்கு சென்று அது வேற வழியாக வேறு பிரச்சனையில் சென்று முடியும். இறுதியில் எந்த பிரச்சனைக்கும் தீர்வு  இன்றி  சபை ஒத்தி வைக்கப்படும். அவ்வாறன செயற்பாடுகள் இனி வரும் காலத்தில் நடக்காது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாகாண சபை உறுப்பினர் சர்வேஸ்வரன் தெரிவித்தார்.
 
 
குற்றச்சாட்டுகளையும் மறுத்தார் விவசாய அமைச்சர்.
 
வடமாகாண விவசாய அமைச்சருக்கு எதிராக உறுப்பினர்களால் முன்வைக்கபட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களையும் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மறுத்தார்.
 
அனைத்தும் தன் மீது அபாண்டமாக குற்றம் சாட்டபடுகின்றது. இது வேணும் என்றே என் மீது சேறு பூசும் நடவடிக்கை. யாருக்கோ முதுகு சொறிந்து விடுவதற்காக என் மீது குற்றம் சாட்டுகின்றார்கள்.
 
விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவதில்லை என கூறப்பட்ட விடயம் விவாதிக்கும் போது அதனை அவைத்தலைவர் தடுக்காது இருந்துள்ளீர்கள்.
 
பொது பிரச்சனை என கூறி என் மீதான குற்ற சாட்டுக்களை உறுப்பினர்கள் முன் வைக்க வேண்டும் என அவைத்தலைவர் செயற்பட்டு உள்ளீர்கள்.
 
அவைத்தலைவர் உங்களுக்கு கண்ணியமாக சபையை நடாத்த தெரியவில்லை. இந்த இரண்டரை வருடத்தில் அரை நாள் அமர்வை மாத்திரமே உபஅவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் நடாத்தி இருந்தார். அந்த அரை நாள் அமர்வு எவ்வளவு கண்ணியமாக நடந்தது
 
இது வேணும் என்றே என் மீதான சேறு பூசும் நடவடிக்கைக்கு அவைத்தலைவர் துணை போயுள்ளார் என்பது வெளிப்படையாக தெரிகின்றது. என விவசாய அமைச்சர் தெரிவித்தார

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.