Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

6 ப்ளஸ்! ஒரு மைனஸ்! சொல்லி அடிக்குமா கில்லி இந்தியா? சிக்ஸர் பீவர் (மினி தொடர் -6)

Featured Replies

6 ப்ளஸ்! ஒரு மைனஸ்! சொல்லி அடிக்குமா கில்லி இந்தியா? சிக்ஸர் பீவர் (மினி தொடர் -6)

 
 
க்ரசிவ் பேட்ஸ்மேன்கள்,  அசத்தல் ஆல்ரவுண்டர்கள், ஆக்ரோஷ பந்து வீச்சாளர்கள், அனுபவம் வாய்ந்த சிறந்த கேப்டன் என  டி20 போட்டிகளில் உலகின் மிகச்சிறந்த அணியாக மாறியிருக்கிறது இந்தியா.
 
இம்முறை உலகக்கோப்பையை வெல்லப்போவது இந்தியாதான் என ரசிகர்கள் மட்டுமல்ல, முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் முதற்கொண்டு வரிசையாக பேட்டி தட்டி வருகிறார்கள். கடந்த ஆண்டு ஐந்து டி20 போட்டியில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்ற இந்திய அணியின் நிலை தற்போது தலைகீழ். ஆஸ்திரேலியா, இலங்கை, ஆசிய கோப்பை தொடர் என இந்தாண்டு இதுவரை விளையாடிய  பதினோரு போட்டியில் பத்தில் வென்று அசாத்திய சாதனை புரிந்திருக்கிறது.
 
5%20%281%293.jpg
 
1975 முதல் இந்நாள் வரை,  இந்தியா இதுவரை உலககோப்பைகளில் பங்கேற்றதில் இந்தமுறைதான் மிக வலுவான அணியாக உலகக்கோப்பைக்குள்  நுழைகிறது. ஏனெனில் தற்போதைய அணி எந்தவொரு தனி நபரையும் சாராமல் சிறப்பாக விளையாடி வருகிறது. அணியில் விளையாடும் 11  பேரும் சிறப்பான ஃபார்மில் இருப்பது  கிரிக்கெட் உலகில் அரிதிலும் அரிதான நிகழ்வு . அது இப்போது இந்திய அணியில்  நடந்திருக்கிறது.  
 
இந்திய அணி இம்முறை உலககோப்பையை கைப்பற்றுவதற்கு எந்த அளவுக்கு வாய்ப்பிருக்கிறது? வாருங்கள் பார்ப்போம்...
  
மாஸ் காட்டும்  மும்மூர்த்திகள்
 
ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், விராட் கோலி என மூன்று அதிரடி வீரர்களும் இந்தியாவுக்கு பலம். இந்த மூன்று பேரில் யாரவது ஒருவராவது நிலைத்து நின்று விளையாடி,  அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்கின்றனர். ரோஹித் ஷர்மா இந்திய மண்ணில் மிக மிக அபாயகரமான  பேட்ஸ்மேன். 
 
ரோஹித்தின் பேவரைட் மைதானங்களில் எப்பொதுமே கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்துக்கு இடம் உண்டு. டெஸ்ட், ஒருதின போட்டி, டி20 என கொல்கத்தா மைதானத்தில் எந்த போட்டி நடந்தாலும் ரோஹித் வெளுத்து கட்டுவார். வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் சமீபத்தில் நடந்த பயிற்சி போட்டியிலும் அபாரமாக விளையாடினார் ரோஹித்.  இந்தியா - பாகிஸ்தான் போட்டி கொல்கத்தாவில் நடக்கவிருக்கிறது குறிப்பிடத்தக்கது. ஷிகர் தவான்  மிகச்சமீபமாக ஃபார்முக்கு திரும்பியிருக்கிறார், ஆசியக் கோப்பை இறுதி போட்டியில் மேட்ச் வின்னராக  திகழ்ந்தார் தவான்.
 
இரண்டு நாட்களுக்கு முன் மும்பையில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான  பயிற்சி ஆட்டத்தில் விளாசித்தள்ளினார். விராட் கோலியை பற்றி எழுதுவதற்கு ஒன்றுமே இல்லை.  ஏனெனில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் விராட் கோலி என்பதில் ஐயமில்லை. எப்பேர்பட்ட ஆடுகளமாக இருந்தாலும்,  எந்த அணியாக இருந்தாலும் சீராக ரன்கள் குவிக்கிறார் கோலி. டி20 போட்டியில் ஐம்பது ரன்களுக்கு மேல் சராசரி வைத்திருப்பதெல்லாம்  அசாத்தியமான  விஷயம். 
 
விராட் கோலி தனது  ஃபார்மை  தக்கவைத்துக்கொண்டால் இந்தியாவை வெல்வது  எந்தவொரு அணிக்கும் மிகப்பெரிய சவாலாக இருக்கும். ரஹானேவுக்கு அணியில் வாய்ப்பு  கிடைப்பது கடினம் தான். மும்மூர்த்திகளில் யாராவது ஒருவருக்கு காயம் என்றாலோ, சரியாக விளையாட வில்லை என்றாலோ மட்டுமே ரஹானேவுக்கு வாய்ப்பு கிடைக்கும். இந்த ஆண்டு துவக்கதில் இருந்து ரஹானே சரியான ஃபார்மில் இல்லை. எனினும் விரைவில் ஃபார்மை  மீட்டெடுக்கும் திறமை ரஹானேவுக்கு உள்ளது. 
 
team%20india.jpg
 
 
பலம் சேர்க்கும் நடுவரிசை
 
ரெய்னா, யுவராஜ் என இரண்டு இடது கை ஆட்டக்கார்களும் இந்தியாவின்  மிகப்பெரிய தூண்கள் . பேட்டிங்கில் மட்டுமின்றி அணிக்கு  தேவைப்படும் நேரத்தில் சிக்கனமாக பந்துவீசி விக்கெட்டுகளை பறிப்பதிலும் கெட்டிக்கார்கள். சுழற்பந்துக்கு சாதகமான இந்திய  மண்ணில் இவ்விருவருக்கும் பந்துவீச்சிலும் நிறைய பங்கு இருக்கிறது.
 
ரெய்னா, யுவராஜ் இருவருமே இந்திய அளவில் மட்டுமல்ல  உலகிலேயே சிறந்த டி20 ஸ்பெஷலிஷ்ட்கள். அணிக்கு தேவைப்படும் விதத்தில் அந்தந்த ஆட்டத்துக்கு ஏற்றவாறு,  இரண்டாவது கியரில் இருந்து ஐந்தாவது கியர் தட்டி எகிறி அடிப்பார்கள். இந்திய அணியில்  ஃபினிஷிங் செய்யும் பொறுப்பும் இவ்விருவருக்குத்தான் உண்டு. யுவராஜ் பொதுவாக உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில் அசத்தலாக விளையாடக் கூடியவர்.
 
அண்டர் 15, அண்டர்17,  2007 டி20  கோப்பை, 2015 உலகக்கோப்பை என அத்தனை தொடர்களிலும் மாஸ் காட்டியவர் யுவராஜ். ஆனால் கடந்த டி20 உலககோப்பையில் வில்லனாக அமைந்து  விட்டார். யுவராஜ் அதிரடி பார்முக்கு திரும்பியிருப்பதால், இம்முறை மீண்டும் இந்தியா கோப்பையை வெல்வதற்கு உறுதுணையாக இருப்பார் என நம்பலாம்.
 
 
இரட்டைக் குழல் ஸ்பின்னர்கள்
 
அஷ்வின், ஜடேஜா இருவரும் இந்திய  மண்ணில் சிறப்பாக பந்துவீசுபவர்கள். கடந்த ஆண்டு இறுதியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஷ்வின்,  ஜடேஜா இருவரையும் கண்டு நடுங்கினார்கள் தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேன்கள். அஷ்வின், ஜடேஜா போன்றோரின் பந்தை எப்படி கையாளுவது என்றே தெரியாமல் குழம்பி,  பல சமயங்களில் விக்கெட்டை  பறிகொடுத்தார் டிவில்லியர்ஸ். எனினும் டி20 போன்ற ஷார்ட் பார்மேட் கிரிக்கெட் போட்டிகளில்,  எதிரணியினர் அக்ரசிவ் பாணியில் பேட்டிங் செய்தால் அஷ்வின், ஜடேஜா பந்துவீச்சை கிழித்து தொங்கவிடவும் வாய்ப்பிருக்கிறது. எனவே  பவர்பிளேவுக்கு  பிறகான அடுத்த எட்டு ஓவர்களில் இவ்விருவரும் கவனமாக பந்துவீசினால் எதிரணியின் ரன்வேகம் மட்டுப்படும்.
 
 
சீனியர் பந்துவீச்சாளர்கள்
 
ஹர்பஜன் சிங்,  டி20 போட்டிகளில் மிகவும் குறைவாக ரன்களை விட்டுக்கொடுக்க கூடிய சிக்கனமான பந்துவீச்சாளர் என்பது மட்டுமல்ல, வட இந்தியாவில் இருக்கும் அத்தனை சர்வதேச மைதானங்களும் அவருக்கு அத்துப்படி. தோனி கண்டெடுத்த பொக்கிஷம் நெஹ்ரா. தொடக்க ஓவர்கள் மட்டுமின்றி கடைசிக் கட்ட ஓவர்களிலும் கூட சிறப்பாக,  நேர்த்தியாக பந்து வீசக்கூடியவர் நெஹ்ரா.   சி.எஸ்.கேவில் நெஹ்ரா கலக்கலாக பந்து வீசியதன் பயனாக இம்முறை அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டுள்ளார் நெஹ்ரா. 
 
உலகக் கோப்பையில் இந்தியா விளையாடும் போட்டிகளில்,  அன்றைய தினம் நெஹ்ராவுக்கானதாக அமைந்துவிட்டால் இந்தியாவுக்கு வெற்றி உறுதி. காயத்தில் இருந்து திரும்பியிருக்கும் முகமது ஷமி,  பயிற்சி போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினார். கடைசிக் கட்ட ஓவர்களில் மிகச் சிறப்பாக வீசும் திறன் படைத்தவர் என்பதால் முகமது ஷமிக்கு சில போட்டிகளில் தோனி வாய்ப்பு கொடுப்பார் என எதிர்பார்க்கலாம்.
 
5%20%281%294.jpg
 
 
தெறிக்க விடும்  இளஞ்சிங்கங்கள்
 
ஹர்டிக் பாண்டியா,  பும்ரா, பவன் நெகி என மூன்று இளம் வீரர்கள் மீதும் எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருக்கிறது. ஹர்டிக் பாண்டியா ஆக்ரோஷமாக பந்துவீசுவது மட்டுமின்றி,  பேட்டிங்கில் களமிறங்கினால் சிக்ஸராக வெளுத்து கட்டுகிறார். அட்டகாசமாக பீல்டிங் செய்வதுடன்,  சூப்பராக கேட்ச் பிடிக்கவும் செய்கிறார் என்பதால்,  சிறந்த ஆல்ரவுண்டராக திகழ்கிறார்.
 
"இவரைப்போன்ற ஒரு ஆளைத்தான் இத்தனை நாளா தேடிக்கிட்டு இருந்தேன். இதோ கிடைச்சுட்டார்" என பெருமை பொங்க சொல்கிறார்  கேப்டன் தோனி.
 
'பூம்... பூம்... பும்ரா'  என ரசிகர்கள் மைதானங்களில் கோஷமிட ஆரம்பித்துவிட்டார்கள். தொடர்ந்து சரியான அளவில் யார்க்காராக பந்துவீசும் திறன் பெற்றவர் பும்ரா. ஆஸ்திரேலிய அணியை அதன் மண்ணிலேயே கலங்கடித்தார் பும்ரா. இந்திய அணிக்கு நீண்ட நாளாக கடைசி கட்ட ஓவர்களில் சிறப்பாக பந்துவீசும் பந்துவீச்சாளர் இல்லையே என்ற கவலை இருந்தது. பும்ரா தற்போது ஆறுதலாக இருக்கிறார். பவன் நெகியை பொறுத்தவரையில் நல்ல சுழற்பந்து வீச்சாளர் மட்டுமின்றி,  பேட்டிங்கிலும் கடைசிக் கட்ட நேரங்களில் அதிரடியாக விளையாடக்கூடியவர். உலகக்கோப்பையில் வாய்ப்பு கிடைத்தால் சிறப்பாக விளையாடும் ஆர்வத்தில் இருக்கிறார் நெகி. 
 
5%20%281%292.jpg
 
இந்தியாவின் பொக்கிஷம் 'தோனி'
 
மரண மாஸ் ஃபார்மிற்கு  திரும்பியிருக்கிறார். விண்டேஜ் தோனி வந்துவிட்டார் என சமூக வலைத்தளங்களில் ஏகத்துக்கும் தோனிக்கு மவுசு.  வழக்கமாக கடைசி ஓவர் வரை போட்டியை இழுத்துச் சென்று, பரபரப்பாக ஃபினிஷிங் செய்வார் தோனி. ஆனால் கடந்த சில போட்டிகளாக ஆரம்பத்தில் இருந்தே அடித்து நொறுக்குகிறார். 4,5,6,7 என நான்கு விதமான இடங்களில் எப்போது வேண்டுமானாலும் தோனி களமிறங்குவார். அணியின் தேவைக்கேற்ப  நடுவரிசையில் மாற்றங்கள் செய்வார் என்பதால்,  எதிரணி  கேப்டன் எந்த பந்துவீச்சாளரை எந்த ஓவருக்கு பயன்படுத்துவது என்பதில் குழப்பமடைவார். நடுவரிசையில் இருக்கும் அத்தனை வீரர்களும் சிறந்த ஃபார்மில் இருப்பதால்தான் தோனியால் திடீர் முடிவுகளை எடுக்க முடிகிறது. 
 
பேட்டிங்கை விட விக்கெட் கீப்பிங்கில் அசத்துகிறார். மின்னல் வேக ஸ்டம்பிங், அசாத்திய  ரன் அவுட்கள் என கலக்குகிறார், இதனால் தோனி இருக்கும் முனைக்கு, பேட்ஸ்மேன் இரண்டாவது ரன் எடுக்க ஓடிவர கொஞ்சம் யோசிக்க வேண்டியதாக  இருக்கிறது. இதுவரை நடந்த ஐந்து உலகக்கோப்பைக்கும் கேப்டனாக இருந்த ஒரே வீரர் தோனி மட்டுமே. ஏற்கனவே ஃபைனலில் வெற்றி பெற்ற அனுபவமும், ஃபைனலில் தோல்வி அடைந்த அனுபவமும் தோனிக்கு உண்டு என்பதால் இம்முறை மாஸ்டர் பிளான்களோடு  களமிறங்குவார். எனது உத்தியில் சில மாற்றங்களை செய்யவிருக்கிறேன் என்றும் தோனி சொல்லியிருக்கிறார்.  கிரிக்கெட் விளையாடும் மற்ற அணிகளில் பல்வேறு சிறந்த பேட்ஸ்மேன்கள், பவுலர்கள், பீல்டர்கள் இருக்கிறார்கள். ஆனால் சிறந்த கேப்டன் இல்லை. இம்முறை சிறந்த வீரர்களோடு சிறந்த கேப்டனும் இருப்பதால் கோப்பை இந்தியாவுக்கே என எதிர்பார்க்கலாம். 
 
5%20%281%29.jpg
 
 
மைனஸ் என்ன ? 
 
 திடீர் சொதப்பல்கள் இந்தியாவின் மைனஸ். பவுன்சர் பந்துகள், கிரீன் பிட்ச் போன்றவற்றில் பேட்ஸ்மேன்கள்  தடுமாறுவார்கள். இதுவரை நியூசிலாந்து அணியை இந்தியா,  உலகக்கோப்பையில் வீழ்த்தியதே கிடையாது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில்,  பாகிஸ்தானுக்கு எதிராக பெரும்பாலும் தோல்வியையே தழுவியுள்ளது இந்திய அணி. சமீபத்தில்  ஆஸ்திரேலிய மண்ணிலேயே அந்த அணியை  வொயிட்வாஷ் செய்து  வந்திருக்கிறது இந்திய அணி. இதனால் இந்திய அணியை வீழ்த்தியே தீர வேண்டும் என வெறியில் வந்திருக்கிறது ஆஸ்திரேலியா. ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்ததற்கு பழி தீர்க்கும் ஆசையில் வங்கதேசம் காத்திருக்கிறது.
 
இந்த  நான்கு அணிகளும் இந்தியாவின் குரூப்பில் இருக்கின்றன. லீக் போட்டிகளில் கொஞ்சம் கவனம் சிதறினாலும் நையப்புடைக்க நான்கு அணிகளும் காத்திருப்பதால், அதீத தன்னம்பிக்கையுடன் அசட்டுத்தனமாக எதிரணிகளை கருதி விளையாடினால்,  அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பே கேள்விக்குறியாகி விடும் வாய்ப்புண்டு. எனவே இந்திய வீரர்கள் கவனமுடன் முழுமூமுச்சுடன் விளையாட வேண்டும். ஏனெனில் 120 கோடி மக்களையும் ஓர் இரவாவது மகிழ்விக்கும் பொறுப்பு அணியில் இருக்கும் பதினைந்து வீரர்களுக்கும் இருக்கிறது.
 
செய்வர்கள்! வெல்வார்கள் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம். 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.