Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாவோ தே ஜிங்: செயல்படாமையின் வேத நூல்

Featured Replies

படம்: இயான் லாக்வுட்
படம்: இயான் லாக்வுட்

சீனாவில் 2,500 ஆண்டுகளுக்கு முன்னால் லாவோ ட்சு என்பவரால் எழுதப்பட்டது ‘தாவோ தே ஜிங்’. இந்நூலே தாவோயிசத்துக்கு அடிப்படை. கன்பூசியஸைவிட 50 வயது மூத்தவரான லாவோ ட்சு சீனத் தலைநகரில் ஆவணக் காப்பாளாராகப் பணிபுரிந்தார். அரசியல் நிலைமை மோசமானதால் பதவி விலகினார். இவர் தலைமறைவாகப் போக எண்ணி எல்லையைக் கடக்கும் முன் எல்லைப்புற அதிகாரி இவரை வற்புறுத்தி ஏதாவது எழுதித் தரச் சொன்னதால், இவர் 5,000 சித்திர எழுத்துகளில் ‘தாவோ தே ஜிங்’ எழுதியதாகத் தெரிகிறது. இவரைப் பற்றி நிலவும் பலகதைகளில் ஒன்று இது.

‘தாவோ’ என்பதற்குப் பல பொருள்கள், அவற்றுள் இந்த நூலின் தலைப்புக்குப் பொருத்தமானது ‘வழி’ என்னும் பொருள். ‘தே’வுக்கு ‘நேர்மைக்கு உந்துதல் அல்லது ஊக்கம் தேவை’ என்று இப்புத்தகத்தில் பொருள் கூறப்பட்டிருக்கிறது. ‘ஜிங்’ என்றால் நூல். ஆக, ‘தாவோ தேஜிங்’ என்றால் ‘தாவோ’வையும் ‘தே’யையும் பற்றிய நூல் என்று பொருள்.

இன்றைய வாழ்க்கை முறை மிக வேகமாகச் சென்றுகொண்டிருப்பதுபோல் தோன்றுகிறது. வேகம்தான் மனிதர்களை அழைத்துச்செல்கிறது என்றே தோன்றுகிறது. வேகம் குறைந்தாலோ நின்றாலோ அவர்கள் பதற்றமாகிவிடுவார்கள் என்று தோன்றுகிறது.

தாவோ மிதத்தை, மெலிவை, குறைவை, தேய்வைப் பற்றி மட்டுமே பேசுகிறது. வலியது, கடினமானது, அதீதம், மூர்க்கம் எல்லாம் மரணத்தின் அறிகுறிகள் என்கிறது:

உயிரோடு இருக்கும்போது மனிதன் 
மென்மையாக, மிருதுவாக இருக்கிறான்; 
உயிர் போன பிறகு அவன் 
கடினமாக, விறைப்பாக இருக்கிறான்

......................

கடினமும் விறைப்பும் சாவின் கூறுகள்; 
மென்மையும் மிருதுவும் வாழ்வின் கூறுகள்; 
எனவே மிகக் கடுமையாக இருக்கும்போது போர் வீரன் 
வெற்றி பெற முடியாது; 
மிகக் கடினமாக இருக்கும்போது மரம் 
முறியாமல் இருக்க முடியாது’

என்கிறது ஒரு பாடல்.

இதன் தொடர்ச்சியாக ‘வீரம்’, ‘மேலாதிக்கம்’ ஆகிய கருதுகோள்களையும் அப்படியே புரட்டிப்போடுகிறது தாவோ:

‘மிகச் சிறந்த போர்வீரன் 
வீரத்தனமாக இருப்பதில்லை; 
மிகச் சிறந்த போராளி 
மூர்க்கத்துடன் இருப்பதில்லை. 
மிகச் சிறந்த வெற்றிகளைக் குவிப்பவன் 
போரில் பங்குபெறுவதில்லை; 
மிகச் சிறந்த முதலாளி 
வேலைக்காரர்களுக்குக் கீழே தன்னைத் 
தாழ்த்திக்கொள்கிறான்’

என்கிறது ஒரு பாடல்.

இன்றைய வாழ்க்கை முறையின் அதீதங்களாகிய போர், ஆயுதங்கள், தீவிர அதிகாரம் போன்றவற்றுக்கு எதிரான கருத்துகளை ‘தாவோ தே ஜிங்’ நெடுகக் காண முடிகிறது. ஆக்கிரமிப்புக்கான போரையும் மரண தண்டனையையும் தவிர்ப்பது, முற்றிலும் எளிமையாக வாழ்வது, தீவிர அதிகாரத்தை வற்புறுத்த மறுப்பது ஆகிய மூன்று வழிகளைப் பரிந்துரைப்பதன் மூலம் நடைமுறை வாழ்க்கைக்கும் நடைமுறைக்கும் அரசியலுக்கும் வழிகாட்டுகிறது ‘தாவோ’.

‘தாவோ’வின் கருத்துகளிலேயே மகத்தான தாகவும் மிகவும் பயனுள்ளதாக இருப்பதுவும் ‘செயல்படாமை’ என்ற கருத்தாக்கம்தான். ‘செயல்படாமை’ என்பதற்கு எதையும் செய்யாமல் சும்மா இருப்பது என்பது பொருளல்ல. மிகக் குறைந்த முயற்சியுடன் சரியான சமயத்தில் ஒன்றின் அல்லது ஒருவரின் இயல்பைச் செயல்படவிடுவது என்பது இதன் பொருள்.

நாம் எப்போதும் செயல்பட்டுக்கொண்டே இருக்கிறோம் (தாவோவின் அர்த்தத்தில்). நமது இயல்பைச் செயல்பட விடுவதில்லை. மலையளவு முயற்சியைக் கொண்டு தினையளவு பலனை அறுவடை செய்கிறோம். ஆனால், செயல்படாமை அப்படியல்ல; தினையளவு முயற்சியைக் கொண்டு மலையளவு பலனை அறுவடை செய்வது.

‘புலமையை நாடிச் செல்கிற மனிதன் 
நாள்தோறும் வளர்வான்; 
தாவோவை நாடிச் செல்கிற மனிதன் 
நாள்தோறும் தேய்வான் 
தேய்வான், தொடர்ந்து தேய்வான், 
செயல்படாமையை அடைகிறவரையும் 
மேலும் 
எல்லாவற்றையும் செய்ய முடியும், 
செயல்படாமையினால்.’

இந்தக் கருத்துகள் மிகவும் சிக்கலானவை; மேலோட்டமான பார்வையில் குழப்பக்கூடியவை. மேலோட்டமான பார்வையில் இப்படி முரண்படு கிற, வெறும் வார்த்தை விளையாட்டு என்று தோன்று கிற பல பாடல்கள், வரிகள் தாவோவில் உண்டு; அவை எல்லாமே நல்லது x கெட்டது, அழகு x விகாரம், நன்மை x தீமை போன்றவற்றைப் பற்றி நாம் கொண்டிருக்கும் பொதுவான கருதுகோள்களைத் தூக்கி எறியக் கூடியவை:

‘அழகாயிருப்பது அழகு என்று 
எல்லோரும் புரிந்துகொண்டால் 
விகாரம் தோன்றுகிறது. 
நன்மையை நன்மை என்று 
எல்லோரும் புரிந்துகொண்டால் 
தீமை தோன்றுகிறது.’

நன்மை, அழகு போன்ற விஷயங்களெல்லாம் பிரக்ஞைபூர்வமானவை அல்ல. இயல்பானவை. அழகாக இருப்பது அழகு என்பதால் அழகாக இருக்க முயல்வதும், நன்மை செய்வது நன்மை என்பதால் நன்மை செய்ய முயல்வதும் இயல்புக்கு அதாவது தாவோவுக்கு எதிரானது. நன்மை என்று ஒன்றைக் கருதும்போது தீமையும் அழகு என்று ஒன்றைக் கருதும்போது அந்த இடத்தில் விகாரமும் தோன்றிவிடுகிறது. கடவுள் என்று நினைத்தால் சாத்தான் தோன்றிவிடுகிறது அல்லவா? அதுபோலத்தான் இதுவும்.

‘தாவோ’ வெறும் தத்துவம் அல்ல; நூறு சதவீதம் நடைமுறைக்கானது. தாவோவின் கருத்துகளை, முக்கியமாக செயல்படாமையை, அனைத்துத் துறைகளிலும் பயன்படுத்தலாம்; பயன்படுத்தியுமிருக்கிறார்கள். இன்றைய வாழ்வுக்கு மிகச் சரியான வழிமுறையை ‘தாவோ தே ஜிங்’ நமக்குப் பரிசளிக்கிறது.

உலகில் அதிக அளவில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களில் ‘தாவோ தே ஜிங்’கும் ஒன்று. தமிழிலும் இதற்குப் பல மொழிபெயர்ப்புகள் வந்திருக்கின்றன. அவற்றில், சி.மணி மொழி பெயர்த்த ‘தாவோ தே ஜிங்’ தனித்துவமானது.

jink_2708805a.jpg

 

http://tamil.thehindu.com/general/literature/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8B-%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/article8147674.ece?ref=relatedNews

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.