Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்களின் ஸ்விட்சர்லாந்து வாவ்... வால்பாறை!

Featured Replies

போன வருஷத்தை விட இந்த வருஷம் வெயில் சூடு அதிகமப்பா... ஏ.சி. போட்ட ரூம்ல கூட வேர்த்து கொட்டுது. ஒன்னும் தாக்கு பிடிக்க முடியல. ஒரு வாரம் லீவு போட்டுட்டு காடு, மலை, அருவினு சுத்திவரணும். தவளை மாதிரி தண்ணிக்குள்ளாற கிடக்கணும். அப்பத்தான் இந்த சென்னையோட சூடு தணியும்...!" -  கொளுத்தும் கோடை வெயிலின் உக்கிரம் தாங்காமல்,  அலுவலகங்களில் நண்பர்களுக்கிடையே இதுமாதிரியான பேச்சுக்கள்தான் பேசப்படுகிறது.

valparai05.jpg

சரி... இது கோடை சீசன்... ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு என்று தமிழ்நாட்டில் இருக்கிற எல்லா சுற்றுலா தலங்களிலும் கூட்டம் கும்மி அடிக்கும். போக்குவரத்துக்கு வாகனங்கள், ரூம் கிடைக்கிறது குதிரைக்கொம்பு. வழக்கமான சுற்றுலா தலங்களுக்கு சென்றால் பட்ஜெட் எகிறிடும். எளிமையாக, அதேசமயம் அதிக செலவில்லாமல் சுற்றுலா போறதுக்கு ஒரு இடம் சொல்லணும்னா அதுக்கு வால்பாறை நல்ல தேர்வு.

குளு... குளு... சூழலையும், அருவிகளையும், பசுமை மாறா காடுகளையும் தனக்குள் வைத்துக் கொண்டிருக்கிறது வால்பாறை. பொள்ளாச்சிக்கு பக்கத்தில் இருக்கிற சொர்க்கம்னு இதை சொல்வாங்க. சூரியனுக்கே ஸ்வெட்டர் போடும் ஊர். மலைச் சிகரங்ளில் மேகங்கள் சடுகுடு விளையாடும். காயப்போட்ட பச்சை ஜமுக்காளங்களாக காட்சி தரும் தேயிலைத் தோட்டங்கள். ஆள் நடமாட்டம் இல்லாத அடர் வனங்கள் எல்லாம் உங்களை பூலோக சொர்க்கம் இதுதான் என்று சொல்ல வைக்கும்.

ஆயுளைக்கூட்டும் அற்புத வனங்கள்

பொள்ளாச்சியில் இருந்து 60 கி.மீ. தொலைவில் மலைமேல் இருக்கும் அழகிய ஊர் வால்பாறை. வளைந்து நெளிந்து செல்லும் 40 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டது சாலை. துவக்கத்தில் வருவது ஆழியாறு அணை. அதை ஒட்டிய பசும்புல் பூங்கா, குழந்தைகள் விளையாட சறுக்கு பலகை, ஊஞ்சல், தூரி, பெரியவர்கள் அமர நிழல் இருக்கைகள் என்று கும்மாளம் போட்டு வெளியே வந்தால், வரிசைக் கட்டி நிற்கும் மரத்தடி கடைகள். அதில் கற்கண்டுபோல் இனிக்கும் பொள்ளாச்சி இளநீர், இளம் நுங்கு, பதநீர், சுடசுட அணை மீன் வறுவல் என்று ஒரு கட்டு கட்டிவிட்டு, வண்டியேறி இரண்டு கிலோ மீட்டர் பயணித்தால் வரும் இடம் ஆழியாறு செக்போஸ்ட. இதன் அருகில்தான் உலக புகழ் பெற்ற அறிவுத்திருக்கோயில் பல ஏக்கரில் விரிந்து கிடக்கிறது. அமைதி தவழும் மலைச்சாரலில் அமைந்திருக்கும், இந்த தியான மண்டபத்தில் சில நிமிடங்கள் மௌனமாக அமர்ந்து இருந்தால் போதும், மனம் துடைத்த கண்ணாடி போல மாறிவிடும்.

valparai03.jpg

ஒரு குழந்தையின் குதூகலத்துடன் அங்கிருந்து மலைமேல் பயணித்தால், சாலையின் இரண்டு புறங்களிலும் வானுயர மரங்களை கொண்ட பள்ளத்தாக்குகள், சாலை கடந்து ஓடும் சிற்றோடைகள், துள்ளி ஓடும் புள்ளிமான்கள், தடுப்பு சுவர்களின் மேல் தவமிருக்கும் குரங்கு கூட்டங்கள் என்று பயணிக்கும் சாலையில் ஆர்ப்பாட்ட சத்தம் எழுப்பி உங்களை கைதட்டி அழைக்கும் இடம்தான், மங்கி பால்ஸ் என்கிற குரங்கு அருவி. மினரல் வாட்டரை மிஞ்சும் சுத்தமான அந்த அருவி நீரில் ஒரு சுகமான குளியல் போட்டு, ஈரம் காய சிறிது நடந்து வந்து வால்பாறை நோக்கி பயணிக்கலாம்.

இருபுறமும் பகலில் ஒரு இரவு காட்டும் அடர் வனம் முடிந்து, திடீர் என்று கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை பச்சை புடவைகளை காயப்போட்டது போல காட்சி அழிக்கும் தேயிலைத் தோட்டங்கள். அதில் கொழுந்து கிள்ளும் முக்காடு பெண்கள் என்று கடந்தால் ஒரிடத்தில் ஒரு வெள்ளைக்காரரின் சிலை. அவர்தான் இந்த வால்பாறை மலை பிரதேசத்திற்குள் காலடி எடுத்து வைத்த முதல் மனிதர் மார்ஷல்.

வரவேற்கும் வரையாடுகள்

 

மேற்குத்தொடர்ச்சி மலையில் மட்டுமே காணப்படும் ஓர் அதிசய விலங்கு, வரை ஆடு. அழிந்து வரும் விலங்குகள் பட்டியலில் உள்ளது இந்த இனம். தமிழ்நாட்டின் தேசிய விலங்கு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆடுகள் ஆங்காங்கே நின்று நம்மை வரவேற்கும்.

பக்திரசம் கொட்டும் பாலாஜி கோயில்

வால்பாறை நகரத்தைத் தொடும் முன்பாகவே பிரிந்து செல்லும் சாலை மார்க்கத்தில் 10 கி.மீ. பயணித்தால் வரும் அழகிய இடம் கருமலை எஸ்டேட். இங்குள்ள ஒரு உயரமான இடத்தில் பிர்லா நிறுவனத்தால் அமைக்கப்பட்ட ஸ்தலம் பாலாஜி கோயில். அமைதி தவழும் இந்த கோயிலில் வழிபாடு முடித்து அருகில் உள்ள சிறுவர் பூங்காவில் உலா வரலாம்.

valparai01.jpg

ஜில்... ஜில்... சின்ன கல்லாறு நீர்வீழ்ச்சி

தென்னிந்தியாவில் அதிக மழை பொழிவு உள்ளதாகக் கண்டறியப்பட்ட இடம். வானம் விட்டுவிட்டு பூவாளி தூறல் போட்டுக்கொண்டே இருக்கும். அதில் நனைவது அற்புத சுகம். பாறைகள் மீது ஏறிப்போனால் ஓடை போன்று அமைதியாக சின்னக்கல்லாறு கண்ணாடி போல ஓடுவதை பார்க்கலாம். ஆற்றைக்கடக்க தொங்கு பாலம் ஒன்று உண்டு. அதில் நடந்து கடப்பது த்ரில் அனுபவம்.

குட்டீஸ்களை ஈர்க்கும் கூழாங்கல் ஆறு

வால்பாறை நகரத்தை ஒட்டியுள்ள சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் சலசலத்து குழந்தைபோல தவழ்ந்து ஓடும் ஆழம் குறைவான ஆறு இது. இதில் குழந்தைகளுடன் நீந்தி குளித்து குதூகலிக்கலாம். தண்ணீரை விட்டு எழ மனமிருக்காது. ஆற்றை ஒட்டியுள்ள தேயிலைத் தோட்டங்களில் செந்நாய் கூட்டங்கள் உலா வரும். தொலைவில் இருந்து அதை கண்டு ரசிக்கலாம்.

நல்லகாத்து காட்சி முனை

வால்பாறையில் இருந்து 25 கி.மீ பயணித்தால் வருவது நல்லகாத்து எஸ்டேட். இந்த பகுதியில் இருக்கிறது காட்சி முனை. இதன் உச்சியில் இருந்து பார்த்தால் கேரளா மலைவாழ் மக்களின் குடியிருப்புகள், தூரத்தில் சுற்றித்திரியும் யானைக் கூட்டங்களையும் காணலாம். நல்ல காற்றையும் வாங்கிக் கொள்ளலாம்

valparai02.jpg

அக்கா மலை புல்வெளி

வால்பாறையின் அதிசயம் அக்கா மலைப் புல்வெளி. கண்ணுக்கெட்டிய தூரம் வரை விரிந்து கிடக்கும். இந்த புல்வெளிதான் பெய்யும் மழை நீரை சேமித்து வைக்கும் அட்சய பாத்திரங்கள். புல்வெளியில் இருந்து கசியும் நீர்தான் சிறு சிறு ஓடைகளாக உருவாகி ஒன்று சேர்ந்து ஆர்ப்பரிக்கும் ஆறாக மாறி நாட்டை வளப்படுத்துகிறது என்பது இயற்கையின் சுழற்சி முறை. கொடிய விலங்குகளின் நடமாட்டம் உள்ள அக்காமலை புல்வெளியை சுற்றிப்பார்க்க வனத்துறையிடம் அனுமதி பெறவேண்டும்.

புன்னகை மன்னன் பால்ஸ்

வால்பாறையில் இருந்து சாலக்குடி செல்லும் சாலையில் சென்றால் 2 மணிநேர பயணத்தில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி என்கிற புன்னகை மன்னன் அருவி. கமலஹாசன் நடித்த புன்னகை மன்னன் படத்தின் முக்கிய காட்சிகள் இந்த அருவிப்பகுதியில் எடுக்கப்பட்டதால் இந்த பெயர். குட்டி நயாகரா போல் தண்ணீர் கொட்டும் இந்த பிரமாண்டம் காண்போரை கவரும் என்பதில் ஐயமில்லை.

அணைகள்

வால்பாறையை சுற்றியுள்ள பகுதிகளில் சின்னக் கல்லாறு, அப்பர், காடாம்பாறை, ஆழியாறு, சோலையாறு அணைகள் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள். இவையெல்லாம் வால்பாறையை சுற்றியும், போகும் வழியிலும் அமைந்துள்ளவை.

valparai04.jpg

டாப் சிலிப்

பொள்ளாச்சியில் இருந்து 35 கி.மீ. தொலைவில் இருக்கிறது டாப் சிலிப். அதாவது ஆழியாறு அணையிலிருந்து வால்பாறைக்கு ஒரு சாலையிலும், டாப்சிலிப்க்கு இன்னொரு சாலை வழியாகவும் செல்ல வேண்டும். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் இடம். அடர்ந்த காட்டினுள் சென்று சுற்றிப் பார்த்து வர யானை சவாரி உண்டு.  இன்னும் ஒரு அதிசயம் மர வீடு. உயரமான பெரிய மரங்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள மரத்தினாலான வீடுகள் இரண்டு உண்டு. நூல் ஏணியில் எறிச்சென்று இரவு தங்கலாம். நடு இரவில் உலா வரும் காட்டு விலங்குகளை மரவீட்டின் ஜன்னல் வழியே கண்டு ரசிக்கலாம். இதில் தங்கி மகிழ முன்பதிவு அவசியம்.

விடுதிகள் பல

வால்பாறை பகுதியை சுற்றிப்பார்க்க இரண்டு நாட்கள் தேவைப்படும். அங்கு தனியார் காட்டேஜ்கள் நிறைய உள்ளது. பொதுப்பணித்துறை, மின்சார வாரியம், வனத்துறையின் ஓய்வு விடுதிகளும் உண்டு.

சரி... என்ன யோசனை பட்ஜெட் டூர் செல்ல விரும்புகிறவர்கள் கண்டிப்பாக வால்பாறையினை தேர்வு செய்யலாம்.

http://www.vikatan.com/news/miscellaneous/46380.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.