Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளை அழித்து பிரச்சினைக்கு தீர்வு காண நினைத்தால் 100 வருடங்கள் கழிந்தாலும் முடியாது: சிறி காந்தா.

Featured Replies

புலிகளை அழித்து பிரச்சினைக்கு தீர்வு காண நினைத்தால் 100 வருடங்கள் கழிந்தாலும் முடியாது: சிறி காந்தா

கிழக்கிலிருந்து விடுதலைப் புலிகளை விரட்டியடித்து விடலாமென நப்பாசை கொண்டு அரசு யுத்த முனைப்புகளில் ஈடுபடுகிறது. விடுதலைப்புலிகளை அழிப்பதன் மூலமே பிரச்சினைக்குத் தீர்வு காணலாமென அரசு நினைக்குமாகவிருந்தால் நூறு வருடங்கள் சென்றால் கூட அது நிறைவேறாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் என்.சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற வடக்கு, கிழக்கின் இன்றைய நிலை தொடர்பாக இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது..

விடுதலைப்புலிகளை அழித்து விடலாமென ஜே.ஆர்.ஜயவர்தன முதல் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வரை கனவு கண்டார்கள். இதனால் அவர்கள் குப்பைத்தொட்டிக்குள் வீசப்பட்டார்கள். அவ்வாறானதொரு நிலைக்கு இந்த ஜனாதிபதியும் செல்ல விரும்பினால் நாம் அவருக்காக எமது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கௌரவமான சமாதானம் காணப்போவதாகக் கூறிக் கொள்கிறார்களே தவிர, அதற்கான எந்த நடவடிக்கையையும் இந்த அரசு முன்னெடுக்கவில்லை. ஏ 9, ஏ 15 வீதிகளை மூடி தமிழ் மக்களை பட்டினி போட்டு கொலை செய்கிறீர்கள். மனித உரிமை சட்டங்களை மதிக்காது விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி சிறுவர், பெண்கள், முதியோர்களென கொன் று குவிக்கிறீர்கள். சமாதானம் ஏற்பட வேண்டுமென உங்களுக்கு ஆசையிருந்தால் முதலில் ஏ 9, ஏ 15 வீதிகளைத் திறந்து விடுங்கள். மக்களைக் கொன்று குவிக்கும் படுபாதகச் செயல்களை நிறுத்திக் கொள்ளுங்கள்.

அரச தரப்பு மற்றும் ஹெல உறுமய தரப்பு உறுப்பினர்கள் இனப்பிரச்சினை மற்றும் வடக்கு, கிழக்கு இணைப்பு விவகாரம் தொடர்பாக பேசுவதைக் கேட்கும் போது அவர்கள் இன்னும் யதார்த்த நிலைக்கு அப்பாற்பட்டுள்ளனர் என்பதனை வேதனையுடன் உணர்கின்றோம். இவர்கள் தாங்கள் இன்னும் கண்மூடித்தனமாகவே இருக்கிறோம் என்பதனை தமது கருத்துகள் மூலம் அடிக்கடி வெளிப்படுத்தி வருகின்றனர்.

நாட்டு மக்களை பாதுகாக்கும் மற்றும் அவர்களின் தேவைகளை நிறைவேற்றும் பொறுப்பிலிருந்து அரசாங்கத்தினால் விலகமுடியாது. ஜனாதிபதி தலைமையிலான அரசு புலிகளுடன் யுத்தம் புரிகிறோமெனக் கூறிக்கொண்டு தமிழ் மக்களை கொன்று குவிக்கிறது. அரசு காட்டுமிராண்டித்தனமாக செயற்படுகின்றது.

வாகரையில் மக்கள் உணவின்றி தவிக்கின்றனர். அத்தியாவசிய பொருட்களின்றி திண்டாடுகின்றனர். ஆனால், வாகரையில் புலிகளின் பிடியிலிருந்து தமிழ் மக்கள் தப்பி இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருவதாக அரசாங்கம் தம்பட்டம் அடிக்கிறது.

உண்மை அதுவல்ல. விமானக்குண்டுவீச்சுகளாலும், ஷெல் தாக்குதல்களினாலும் பாதிக்கப்பட்டவர்களையும், உணவின்றி வாடுபவர்களையும் புலிகளே இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு மக்களின் நன்மை கருதி அனுப்பி வருகின்றனர். இதுதான் உண்மை.

வடக்கு, கிழக்கு மாகாணத்தில் மக்கள் தினமும் கொல்லப்படுகின்றனர். இளைஞர்கள், மாணவர்கள் எனப் பலர் கடத்தப்படுகின்றனர். இராணுவத்தினரும் அவர்களோடு சேர்ந்தியங்கும் தேசவிரோத துணை இராணுவ குழுக்களுமே இப் படுபாதக செயல்களைப் புரிகின்றனர்.

ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, டாக்டர் ஜயலத் ஜயவர்தன ஆகியோர் உண்மையை பேசியதற்காக அவர்களை பாராட்டுகிறேன். ஆனால், அவர்கள் அரசாங்கம் ஐ.தே.க.வின் ஆதரவை எதற்காக பயன்படுத்துகின்றதென்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஏ 9, ஏ 15 வீதிகளைத் திறக்குமாறு இந்த அரசாங்கத்திடம் எத்தனை தடவைகள் கேட்டுவிட்டோம். விமானத்தாக்குதல்கள், ஷெல் தாக்குதல்களை நடத்தி மக்களைக் கொல்கிறீர்களென இச் சபையில் கூட எத்தனை தடவை கேட்டோம். ஆனால், என்ன நடந்தது?

அரசாங்கம் உலக நாடுகளின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு தமிழ் மக்களுக்கு எதிரான அத்தனை அட்டூழியங்களையும் மேற்கொண்டு வருகின்றது. அரச தரப்பினர் கடந்த கால சம்பவங்களை எடுத்துக் கூறுகின்றனர். அந்த வகையில் நானும் ஒரு சம்பவத்தை கூறுகின்றேன்.

இற்றைக்கு 32 வருடங்களுக்கு முன்னர் இதே ஜனவரி மாதம் 10 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் 10 பேர் பாதுகாப்பு தரப்பினரால் படுகொலை செய்யப்பட்டனர். இது தமிழர் வரலாற்றில் சிங்கள பேரினவாதம் செய்த முதல் கொடூரம். இந்தச் செயலே தமிழ் இளைஞர்களை ஆயுதம் ஏந்த வைத்தது.

அவசரகால சட்டத்தின் கீழ் தனது பதவியை நீடித்து விட்டு இந்தியாவிலிருந்து கொண்டு முன்னாள் யாழ். மாநகர சபை மேயர் அல்பிரட் துரையப்பா தான் இந்த நாடகத்தை அரங்கேற்றினார். வரலாறு தெரியாமல் அடிக்கடி துரையப்பாவைப் பற்றி இந்தச் சபையில் எம்.பி.க்கள் பேசுவதனால் தான் அவரைப்பற்றிக் கூறினேன்.

சாதாரண பொதுமக்கள் எங்கு கொல்லப்பட்டாலும் நாம் அதனை கண்டிப்போம். காட்சிக்கு காட்சி, சம்பவத்துக்கு சம்பவம், நாளுக்கு நாள் கொள்கை மாறும் கட்சியினரல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்.

எமது மக்கள் உணவின்றி பட்டினியால் வாடுவதையும் விமான, ஷெல் வீச்சுகளால் கொல்லப்படுவதையும் பிரதிபலிக்காது விட்டால் இந்தச் சபையில் நாம் இருக்க வேண்டிய தேவையில்லை.

தமிழ் பேசும் மக்களின் தாயக பூமியான வடக்கு, கிழக்கு பிரிக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை வந்துள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினைத் தீர்வுக்கான அடித்தளமே தகர்க்கப்பட்ட நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சர் இங்கு வந்துள்ளார்.

பாராளுமன்றத்தில் யோசனைகளைக் கொண்டு வந்து வடக்கு, கிழக்கை மீண்டும் இணைக்கலாமென உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. இதற்கான ஆதரவை வழங்குவதாக ஐ.தே.க. கூறியுள்ளது. ஆனால், அர சாங்கம் ஏன் இன்னும் மௌனமாகவுள்ளது. எங்களால் துளிகூட அரசை நம்ப முடியாதுள்ளது.

வடக்கு, கிழக்கில் மூடப்பட்டுள்ள பாதைகளை திறந்து விட அரசு தயாரா? உணவின்றி வாடும் மக்களுக்கு உணவுப் பொருட்களை அனுப்ப அரசு தயாரா? இல்லையே. இவ்வாறான நிலையில் நாங்கள் அரசாங்கத்தை எவ்வாறு நம்ப முடியும். எங்களது அரசியல் பிரச்சினைகளை தீர்க்கும்படி நாம் அரசாங்கத்தை பல தடவை கோரினோம். இப்போது கூட அதையே வலியுறுத்துகிறோம். முடியாவிட்டால் பகிரங்கமாக கூறிவிடுங்கள். நாங்கள் பிரிந்து தனிவழி சென்று விடுகிறோம்.

எமது பிரச்சினையை தீர்க்க முடியுமா? முடியாதாவென்ற தனது நிலைப்பாட்டை அரசு விரைவில் தெரிவிக்க வேண்டும். எம்மால் இனியும் பொறுமை காக்க முடியாது.

-Sankathi-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.