Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தல் முடிவுகளில் நான் செய்த தவறுகள்..! - மனம் திறந்த வைகோ

Featured Replies

தேர்தல் முடிவுகளில் நான் செய்த தவறுகள்..! - மனம் திறந்த வைகோ

vaikovc1.jpg

 

எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருந்து விலகியபோது கூட அவருடன் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பெருமளவு விலகவில்லை. ஆனால் வைகோ தி.மு.க.வில் இருந்து விலகியபோது 8 மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகினர். தி.மு.க.வில் ஒரு செங்குத்தான பிளவை ஏற்படுத்தியவர் வைகோ. தி.மு.க.வின் கொடி, சின்னத்துக்கு உரிமை கோரி தி.மு.க.வை கிடுகிடுக்கச் செய்தவர். ஆனால், இப்போது அடுத்தடுத்த தோல்விகள் காரணமாக சற்று நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது ம.தி.மு.க.

1993ல் தி.மு.க.வில் இருந்து வெளியேறி பின்னர் ம.தி.மு.க.வை துவக்கிய வைகோ, இந்த 23 ஆண்டுகளில் 5 சட்டமன்ற தேர்தல், 5 நாடாளுமன்ற தேர்தல்களைக் கடந்து வந்துள்ளார். தனி அணி, தனித்துப் போட்டி, தி.மு.க. அணி, அ.தி.மு.க. அணி, தேர்தல் புறக்கணிப்பு என இவர் கடந்து வந்த தேர்தல் பாதை இவருக்கு சறுக்கலாகவே இருந்தது. இதன் உச்சம்தான் சமீபத்திய சட்டமன்றத் தேர்தல் தோல்வி.

ஆனால், சமீபமாக மீண்டும் பரபரப்பாக இயங்கத் துவங்கி விட்டார் வைகோ. தோல்விக்கான காரணம் குறித்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடையே கலந்தாலோசிக்க மாவட்டம், மாவட்டமாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார். 20 மாவட்டங்களை வலம் வந்துவிட்ட வைகோவிடம், தேர்தல் தோல்விக்கான காரணங்களை பட்டியலிடுகிறார்கள் ம.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும்.

நாம் தே.மு.தி.க.வுடன் சேர்ந்தது தான் பிரச்னை. அவர்களுடன் சேர்ந்திருக்க கூடாது... தேர்தலில் போட்டியிடுவதில்லை என நீங்கள் எடுத்த முடிவு தவறு. உங்கள் முடிவை நீங்கள் கட்சியினரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.... பேட்டியின்போது பாதியில் வெளியே வந்தது. நிதானமின்றி சில இடங்களில் நடந்து கொண்டதை தவிர்த்திருக்கலாம்.’ எனச் சொல்லும் கட்சியினர், வைகோ மீது எங்கும் கடுமை காட்டவில்லை.

"தமிழகத்தில் ஊடகங்கள் திட்டமிட்டே ஒரு மோசமான பிம்பத்தை வைகோவின் மீது உருவாக்கி விட்டது. 1.76 லட்சம் கோடி கொள்ளையடித்த தி.மு.க.வை விமர்சிக்காத ஊடகங்கள். பல ஆயிரம் கோடி கொள்ளையடித்து நீதிமன்றத்தில் தண்டனை பெற்று, இப்போது மேல்முறையீடு வழக்கை சந்தித்து வரும் அ.தி.மு.க.வை விமர்சிக்காத ஊடகங்கள், திட்டமிட்டு வைகோவை கடுமையாக விமர்சித்தன. அதுதான் தோல்விக்கு காரணம்" என ஊடகங்கள் மீது பாய்ந்தார் ம.தி.மு.க. இளைஞர் அணியின் செயலாளர் ஈஸ்வரன்.

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டேன்...

இந்நிலையில் தேர்தலின்போது நிகழ்ந்த தவறுகள் எவை, கூட்டணியில் நடந்த குழப்பங்கள் குறித்து கோவையில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் வைகோ மனம் திறந்து பேசினார்.

வைகோ. பேசியது அப்படியே...

"உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு. 23 வருடங்களாக உங்கள் கரங்களில் மலர்களாக என்னை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களை வைத்து தான் நான் அரசியல் வாழ்வில் உலவி வருகிறேன். எனக்கு அரசியல் வாழ்வை நீங்கள்தான் கொடுத்தீர்கள். நீங்கள் இல்லை என்றால் 1993ல் என் அரசியல் வாழ்வு அழிந்து போயிருக்கும். எனக்கு புனர் ஜென்மம் கொடுத்தீர்கள். என்னை கண்டிக்கவும், குறை சொல்லவும் உங்களுக்கு உரிமை உண்டு. என்னிடத்தில் என்ன குறைகள் என அமைதியாக யோசிக்கும்போது, அவைகளை நான் உணர்கிறேன். அதற்கு என்ன காரணம் என்பதையும் நான் அறிகிறேன்.

சக்திக்கு மீறிய சுமையை தூக்கிக் கொண்டு, கட்சிப்பணிகளுக்காக உறக்கமின்றி, சரியான நேரத்தில், மருத்துவர் ஆலோசனையின் படி உண்ணாமல் இருந்ததால், எனக்கு ஏற்பட்ட மனஅழுத்தம் என்னைக் கடுமையாகப் பாதித்திருக்கிறது. அதை உங்களிடம் சொல்வதில் தவறில்லை என கருதுகிறேன். அந்த பாதிப்பு கட்சிக்கு பாதகத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் நான் அறிவேன்.

vaikoo4.jpg



எனக்கு கட்சியைப் பற்றியே சிந்தனை. வேறு எந்த சிந்தனையும் எனக்கு கிடையாது. நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். கட்சி முன்னேற வேண்டும் என்பதைத் தவிர எந்த சிந்தனையும் எனக்கு கிடையாது. இதை கருதிதான் இடைவிடாத தமிழக மக்களுக்காக போராடி இருக்கிறேன். யாரும் நம் அளவுக்கு போராடவில்லை. நம் குறைகளை சுட்டிக்காட்டி பெரிதுபடுத்திய பத்திரிகைகளோ, ஊடகங்கள், ஊர் ஊராக வெயிலில், மழையில் நடந்து, உடல் நலிவுற்று ரோட்டின் ஓரத்தில் கட்டாந்தரையில் துண்டை விரித்துப் படுத்துக் கிடந்ததை நினைத்து பார்க்கக் கூடவில்லை.

ரூ.1,500 கோடி புகாரை உதாசீனப்படுத்தியது என் தவறு தான்...

ஒன்றே முக்கால் ஆண்டு சிறையில் இருந்தபோது நான் கவனமாக இருந்தேன். நீங்கள் தலை குனிந்துவிடக் கூடாது என்பதற்காக மிகக் கவனமாக இருந்து வந்தேன். பிணையில்கூட வராமல் இருந்தது நீங்கள் தலை குனிந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான். அப்படி எல்லாம் கவனமாக இருந்தும் இந்த முறை என் மீது பழிச்சொல் வந்திருக்கிறது. அதை நான் உதாசீனப்படுத்தினேன்.. உண்மைதான்.

அ.தி.மு.க.விடம் இருந்து 1,500 கோடி வைகோ வாங்கியிருக்கிறார்’ எனச் சொல்லும்போது, அக்கிரமமாக போட்டிருக்கிறார்கள் என அலட்சியப்படுத்தி விட்டேன். அதைப் பொருட்படுத்த ஆரம்பித்தால் அது மிகப்பெரிய செய்தியாகும் என மனதளவில் நினைத்து அதை தவிர்த்தேன். அப்போது தான் பாலிமர் தொலைக்காட்சியில் என்னை பேட்டிக்கு அழைத்தார்கள். நான் அதை தவிர்க்க முயன்றேன். மிகவும் வற்புறுத்தியதால் போனேன். அங்கு கேட்ட கேள்விகள் எனக்கு அதிர்ச்சி அளித்தன. 'உங்களைப் பற்றிகூடத் தான், அ.தி.மு.க.விடம் 1,500 கோடி வாங்கி விட்டீர்கள் என சொல்கிறார்கள்' என செய்தியாளர் கேட்டபோது, இதற்கு நான் முக்கியத்துவம் கொடுத்து பதிலளித்தால், கேள்விதான் தொலைக்காட்சி பார்வையாளர்கள் மனதில் பதியும். பதில் நிற்காது என எண்ணினேன்.

கேள்வி பல சந்தேகங்களை எழுப்பும் எனக் கருதி பதிலளிக்காமல் வெளியேறினேன். இது விவாதப்பொருளாகி கட்சியைக் களங்கப்படுத்திவிடும் என கருதி தான் வெளியேறினேன். நான் நினைத்தது தவறாகக் கூட இருக்கலாம். அந்தப் பேட்டி தொலைக்காட்சியில் வரப்போவதில்லை என நினைத்துத் தான் வெளியே போனேன். அந்த செய்தியாளர் வருந்தியிருப்பார்... வருத்தம் தெரிவிப்பார் என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இதை ப்ளாஷ் நியூஸ் ஆக்கி, விவாதப்பொருளாக்கினார்கள்.

இதற்கெல்லாம் தி.மு.க. தான் காரணம்...

இதற்கெல்லாம் காரணம் தி.மு.கதான். தி.மு.க. பெருமளவு பணத்தை முதலீடு செய்து, சமூக வலைதளங்களில் இதைப் பரப்பியது. இந்த தேர்தலில் பல முனைகளில் பணம் செலவு செய்தது யார் அதிகம் என்றால் தி.மு.க. தான். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததில் வேண்டுமானால் அ.தி.மு.க. அதிகம் செலவு செய்திருக்கலாம். ஆனால், ஓராண்டு தேர்தல் செலவு கணக்கை எடுத்து பார்த்தால் அ.தி.மு.க.வைவிட தி.மு.க. 4 மடங்கு கூடுதலாக செலவு செய்திருக்கும். பெரிய குழுவை வைத்து தேர்தல் பணியை தி.மு.க. மேற்கொண்டது. மோடிக்கு ப்ளான் போட்டு கொடுத்த குழுதான் தி.மு.க.வுக்கு வேலை செய்து, நமக்கு நாமே திட்டத்தை போட்டுக் கொடுத்தது.

vaikoo21.jpg



நான் இப்போதுகூட தோற்றதைப் பற்றி கவலைப்படவில்லை. 52 ஆண்டுகளாக நான் காப்பாற்றி வந்த ஒரே சொத்து என் நாணயமும், நேர்மை. அதையே கேள்விக் குறியாக்கும் நிலைமை ஏற்பட்டது. நீங்கள் என்னை ஒருபோதும் சந்தேகிக்கமாட்டீர்கள் என்பது எனக்கு தெரியும். 2006 சட்டமன்ற தேர்தலிலும் இதையேதான் செய்தார்கள். 40 கோடி வாங்கிவிட்டோம் என்றார்கள். இப்போது நம் ரேட் கூடி விட்டது. இதுபோன்ற பழிக்கு ஆளாகும் போது மிகவும் கூனிக்குறுகி போய் விட்டேன்.

அ.தி.மு.க.வை நான் தாக்கிப் பேசியதுபோல், தி.மு.க. பேசியது உண்டா? அ.தி.மு.க. கூட்டணியில் மரியாதையாக நடத்தவில்லை என வெளியே வந்தோம். ஆனால், 7 இடங்களில் உங்கள் சகோதரி, உங்கள் மதிப்புமிக்க சகோதரி என கடிதம் எழுதினார் ஜெயலலிதா. அவர் வாழ்நாளில் யாருக்கும் அப்படி கடிதம் எழுதி அனுப்பியதே கிடையாது. ஆனால், இவர்கள் கூட்டணிக்கு வரவில்லை என்பதற்காக கட் அவுட்டை கொளுத்தினார்கள். இப்போது கூட்டணிக்கு வரவில்லை என்பதால் வீண் பழியை சுமத்தினார்கள். ம.தி.மு.க.வே இருக்க கூடாது என நினைக்கிறார்கள். அண்ணாவின் கொள்கையை நாம்தான் பேசுகிறோம். அவர் கொண்ட கொள்கையில் இருந்து விலகும்போது, நாம் கண்டிக்கிறோம். நாம் ஆணித்தரமாகச் சொல்வதால் நம்மை அழிக்க நினைக்கிறார்கள்.

தே.மு.தி.க.வுடன் கூட்டணி அமைத்தது ஏன்?

இந்தக் கூட்டணியை அமைப்பதில் எவ்வளவு கஷ்டப்பட்டோம் என்பதை சொல்கிறேன். தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக 4 கட்சித் தலைவர்கள் அமர்ந்து பேசினோம். நான்கு கட்சி மட்டும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பது என முடிவெடுத்தோம். காலை 10 மணிக்கு துவங்கி மதியம் 2 மணி வரை பேசி, உணவுக்கு பின் மீண்டும் பேசினோம். கட்சிக்கு இருவர் வீதம் 8 பேர் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றோம். ம.தி.மு.க. சார்பில் நானும் மல்லை சத்யாவும் சென்றோம். மூன்று கட்சியில் வந்த 6 தலைவர்களும் விஜயகாந்த் வந்தால்தான் ஜெயிக்க முடியும். நாம் 4 பேரும் தனியாக நின்றால் ஒரு இடம் கூட வெல்ல முடியாது என ஆணித்தரமாகச் சொன்னார்கள். நம் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும் அதையே சொன்னார். என் கருத்துக்கு மாறாக அது இருந்தது. இருந்தாலும் எல்லோரும் அதைச் சொன்னதால் அதையே ஏற்கிறேன் என சொன்னேன்.

vaikoo5.jpg



விஜயகாந்தை கூட்டணிக்குக் கொண்டு வர எல்லா முயற்சியும் எடுக்க வேண்டும் என என்னைச் சொன்னார்கள். "விஜயகாந்தை அழைத்தால், கூட்டணி தலைவராகவும், முதல்வர் வேட்பாளராகவும் அறிவிக்க வேண்டும் என நிபந்தனை விதிப்பாரே" என நான் கேட்டபோது என்ன செய்வீர்களோ தெரியாது. நீங்கள்தான் இதைச் செய்து முடிக்க வேண்டும்' என்றார்கள். அப்போது 'விஜயகாந்த் மக்கள் நலக்கூட்டணிக்கு வர மாட்டார். வைகோவின் ஈகோதான் அதற்கு காரணம். விஜயகாந்த் முதல்வர் வேட்பாளராக அறிவிப்பதை வைகோ ஏற்க மாட்டார்" என அனைத்து ஏடுகளும் எழுதின. அதே நேரம் தே.மு.தி.க.வோடு கூட்டணி அமைத்தால் வெல்லும் சூழல் இருப்பதாகவும் பத்திரிகைகள் எழுதின.

கூட்டணியை வலுப்படுத்துவது என்ற முடிவோடு செல்கிறேன். ஆனால் கூட்டணி தலைமை என்பதை அவர்கள் ஏற்கவில்லை. அந்த நேரத்தில் தே.மு.தி.க.வை வரவழைக்க எல்லா முயற்சிகளையும் தி.மு.க. செய்து கொண்டிருந்தது. அப்போது தான் முதல்வர் வேட்பாளராக ஏற்கிறோம் எனச் சொல்லி அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்குச் சென்றோம். நமக்கு பலமான தொகுதியைக் கேட்டுப்பெற வேண்டும். நம் கட்சியினர் எம்.எல்.ஏ.க்கள் ஆகிவிட வேண்டும் என நினைத்தேன். ஆனால், தொகுதியைப் பெறுவதில் நிறைய பிரச்னைகள் இருந்தன. பல நாள் தூங்காமல் ஒரு மன அழுத்தத்தில் இருந்ததால் என்னால் என்னை பேலன்ஸ் செய்து கொள்ள முடியவில்லை.

என்னைப்பற்றி முடிவுகளில் நான் செய்த தவறு...

அடுத்து என்னைப் பற்றி முடிவெடுக்கும் பிரச்னையில், நானாக யாரையும் ஆலோசிக்காமல் முடிவெடுத்தது ஒரு தவறு தான். நான் போட்டியிட மாட்டேன் என்ற செய்தியை நானாக எடுத்திருக்க கூடாது. என்னைக் குறித்து நான் முடிவெடுக்கும்போது அது தவறாக முடிகிறது. அதைச் சிலரிடம் கேட்டு தான் செய்ய வேண்டும். 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஜெயிலில் இருந்து வந்த உடன் நான் போட்டியிட்டிருக்க வேண்டும். என் பொது வாழ்வில் நான் செய்த மிகபெரிய தவறு. அந்த முடிவு எவ்வளவு பெரிய பாதிப்பை கட்சிக்கு ஏற்படுத்தியிருக்கிறது என்பதை நான் பரிபூரணமாக உணர்கிறேன். சென்றது இனி மீளாது. கறந்த பால் மடி புகாது. இங்கே தவறு செய்தேன். பிழை செய்தேன் என்பதை இப்போது நான் உணர்கிறேன்.

எடுக்கப்பட்ட தேர்தல் முடிவுகளில் பல பிரச்னைகளில் பல குறைகள் இருக்கின்றன அது தவிர்க்க முடியாமல், கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட முடிவு. அதனால் பாதகம் ஏற்பட்டிருக்கிறது என்பது எனக்கு உள்ளூர தெரிகிறது. இனி இந்த இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல எந்த வகையில் பாடுபடுவது என்பது குறித்தும், நான் சோர்ந்து விடக்கூடாது என நானே நினைக்கிறேன். என் உடல்நலம் கெட்டுவிடக் கூடாது என கவலைப்படுகிறேன். எனக்கு இப்போது மனசு லேசாக இருக்கிறது. என் சுமையை இறக்கி வைத்து விட்டேன். கடந்த கால பிழைகளை மனதில் நினைத்து, எப்படி செல்ல வேண்டும் என்பதை தீர்க்கமாக ஆலோசித்து செயல்படுவோம்."

இவ்வாறு பேசினார்.

வைகோ இப்போது மீண்டும் ஊர் ஊராக தன் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.இடைவிடாது செய்தியாளர்களைச் சந்திக்கிறார். மாவட்டந்தோறும் கட்சியினரைச் சந்தித்துப் பேசுகிறார். முக்கியமாக கடந்த கால தேர்தல் தவறுகளை உணர்ந்திருக்கிறார்.

அது அவரது எதிர்கால வியூகங்களில் பிரதிபலிக்குமா.. .காலம்தான் பதில் சொல்லும்!

http://www.vikatan.com/news/coverstory/65953-made-mistakes-in-the-election-open-mind-vaiko.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.