Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய அரசியலமைப்பு குறித்த தமிழக அரசின் கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதிய அரசியலமைப்பு குறித்த தமிழக அரசின் கோரிக்கை

[24 - January - 2007] [Font Size - A - A - A]

இந்திய அரசியலமைப்பை புதியதாக மீள வரையவேண்டுமென்று தமிழக மாநில அரசாங்கத்திடமிருந்து கோரிக்கை எழுந்திருக்கிறது. தமிழக சட்டசபையின் புதிய சட்டத்தொடரை கடந்த சனிக்கிழமை ஆரம்பித்துவைத்து சம்பிரதாய பூர்வமான உரையை நிகழ்த்திய மாநில ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா, காலத்தின் தேவைக்கேற்ப இந்திய அரசியலமைப்பை திருத்தியெழுதுவதற்கு மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

`மாநிலங்களுக்கான அதிகாரப்பரவலையும் மத்திய அரசாங்கத்துக்கும் மாநிலங்களுக்கும் இடையேயான அதிகாரப்பகிர்வுப் பட்டியலையும் மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் அடிப்படையில் இந்திய அரசியலமைப்பு புதிதாக இயற்றப்பட வேண்டும். அவ்வப்போது தவிர்க்க முடியாத தேவைகளையொட்டி இந்திய அரசியலமைப்பில் இதுவரை சுமார் 100 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியில் மாற்றம் என்பது தவிர்க்க இயலாதது. பல நாடுகளில் அரசியலமைப்புகள் பல தடவைகள் மீள வரையப்பட்டிருக்கின்றன. கடந்த அரைநூற்றாண்டு காலத்தில் இந்திய அரசியல் சமூக, பொருளாதாரப் பரிமாணங்களும் உழைக்கும் வர்க்கத்தின் தேவைகளும் முற்றிலும் மாற்றங்கண்டுவிட்டன. பிற்படுத்தப்பட்டோர். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்கள் தாங்கள் போராடிப்பெற்ற சமூக நீதியைப் பேணிப்பாதுகாப்பதற்கும் சிறுபான்மையினரின் உரிமை மற்றும் பெண்ணுரிமை உள்ளிட்ட சமூக நீதியை உறுதிசெய்வதற்கும் கம்பிமீது நடப்பதைப்போன்று செயற்படவேண்டியிருக்கிறது. உண்மையான கூட்டாட்சித் தத்துவம் நிலைபெறவும் சமூக நீதிச் சக்கரம் தங்குதடையின்றிச் சுழலவும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் காலத்தின் தேவைக்கு ஏற்ப புதிதாக இயற்றப்பட வேண்டும்' என்று ஆளுநர் பர்னாலா தனதுரையில் தெரிவித்தார். மீள்சிந்தனைக்கும் மறுகணிப்பீட்டுக்குமான நேரம் வந்துவிட்டது என்று முன்னாள் தமிழக முதலமைச்சர் அறிஞர் சி.என். அண்ணாத்துரை 40 வருடங்களுக்கு முன்னர் குறிப்பிட்டதையும் நினைவு படுத்த ஆளுநர் தவறவில்லை.

அரசியலமைப்புச் சட்டம் புதிதாக வரையப்பட வேண்டுமென்ற தமிழக அரசாங்கத்தின் கோரிக்கைக்கு ஆளும் தி.மு.க.வின் நேசக் கட்சிகளான காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் வலது கம்யூனிஸ்ட் கட்சிஆகியவை முழுமையான ஆதரவைத் தெரிவித்திருக்கின்றன. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான பீற்றர் அல்போன்ஸ், தமிழக அரசாங்கத்தின் கோரிக்கை அரசியலமைப்பை புதிதாக வரைவது தொடர்பில் தேசியளவிலான ஒரு விவாதத்துக்கு வழிவகுத்திருக்கிறது என்றும் இந்த விவகாரத்தின் சகல அம்சங்கள் மீதான ஆரோக்கியமான விவாதம் மக்களுக்கு குறிப்பாக, இளந்தலைமுறையினருக்கு பயனளிக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார். தி.மு.க. அரசாங்கமும் அதன் நேசக்கட்சிகளும் விடுத்திருக்கும் கோரிக்கை தொடர்பாக திருமதி சோனியாகாந்தி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் ஆராயப்படும் என்று திங்களன்று புதுடில்லியில் காங்கிரஸ் பேச்சாளர் திருமதி ஜெயந்தி நடராஜன் அறிவித்திருக்கிறார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சிகள் இந்திய அரசியலமைப்பு புதிதாக வரையப்பட வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்திருப்பதால், கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் விவாதித்து அந்த விவகாரம் தொடர்பில் பொருத்தமான கருத்து உருவாக்கப்படும் என்றும் திருமதி நடராஜன் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கை இனநெருக்கடிக்கு பேச்சுவார்த்தை மூலமான அரசியல் இணக்கத் தீர்வொன்றை காண்பதற்கான முயற்சிகள் என்று கூறப்படுகின்றவற்றைப் பொறுத்தவரை, கடந்த பல வருடங்களாக இலங்கையில் அதிகாரப் பரவலாக்கம், அதிகாரப்பகிர்வு என்பவை தொடர்பில் தீவிரமானவாதப் பிரதிவாதங்கள் மூண்ட வண்ணமேயிருக்கின்றன. சிறுபான்மையினங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை குறைந்தபட்சமேனும் பூர்த்தி செய்யக்கூடிய தெளிவான யோசனைகள் தொடர்பில் கருத்தொருமிப்புக் காணப்படக் கூடிய ஒரு நிலைக்கு அண்மித்தாகவேனும் வருவதற்கு தென்னிலங்கையின் பிரதான அரசியல் கட்சிகள் மானசீகமாக ஒரு போதும் முயற்சித்ததில்லை. ஆனால், பல்வேறு வகையான அதிகாரப் பரவலாக்கல் யோசனைகள் குறித்து பேச்சளவிலேனும் ஆராயப்பட்டுக் கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இவற்றில் இந்தியாவில் மாநிலங்களுக்கு இருக்கக்கூடிய அதிகாரங்கள் குறித்தும் அடிக்கடி பேசப்படுவதுண்டு. இந்திய மாநிலங்களுக்கு இருக்கின்ற அதிகாரங்களை விடவும் கூடுதலான அதிகாரங்கள் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வழங்கப்படக் கூடியதான எந்தவொரு ஏற்பாட்டையும் இந்திய அரசாங்கம் ஆதரிக்காது என்று பேசுபவர்களும் இருக்கிறார்கள். இலங்கையில் இடம் பெறுகின்ற அதிகாரப் பரவலாக்கல் தொடர்பிலான வாதப் பிரதிவாதங்களில் இந்திய அதிகாரப் பகிர்வு பற்றிய கருத்துப் பரிமாறல்கள் முக்கியத்துவம் பெறு வதன் காரணத்தினாலேயே அரசியலமைப்பை புதிதாக வரைய வேண்டுமென்ற கலைஞர் கருணாநிதி அரசாங்கத்தின் கோரிக்கை எமது கவனத்தை பெரிதும் ஈர்த்தது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ கூட்டியிருக்கும் சர்வகட்சி மகாநாட்டின் பிரதிநிதித்துவக் குழுவினர் அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் செய்து அங்குள்ள அதிகாரப் பரவலாக்கல் குறித்து ஆராய்ந்து அறிந்து கொள்ள முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. பஞ்சாயத்து முறையின் சாதகபாதகங்களுக்கு அப்பால் இந்திய அதிகாரப்பரவலாக்கல் குறித்தோ அல்லது குறைந்தபட்ச கூட்டாட்சி குறித்தோ இந்த பிரதிநிதித்துவக் குழுவினர் அறிந்து கொள்வதில் காட்டிய அக்கறையிலும் பார்க்க அவர்களின் கவனம் பஞ்சாயத்து ராஜ் முறை மீதே விசித்திரமானமுறையில் பெரிதும் குவிந்திருந்தது. சர்வகட்சி மகாநாட்டுக்கு பரிந்துரைகளை செய்வதற்கு நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவில் உள்ளவர்களில் பலரும்கூட அண்மையில் கொழும்புக்கு விஜயம் செய்த இந்திய அமைச்சர் மணிசங்கர் ஐயருடனான பேச்சுவார்த்தைகளின்போது பஞ்சாயத்துமுறை குறித்தே தீவிர கவனம் செலுத்தினர். ஆனால், அந்தப் பஞ்சாயத்து முறைக்கு மேலாக, மாநில மட்டத்திலான அதிகாரப் பரவலாக்கம் அல்லது அதிகாரப் பகிர்வுகூட தற்போதைய கால கட்டத்தின் தேவைகளுக்கு போதுமானவையல்ல என்று விசனமடைந்திருக்கும் தமிழக அரசாங்கம், அரசியலமைப்பை முற்று முழுவதுமாக மாற்றியமைக்க வேண்டுமென்று கோரியிருக்கிறது. இதை இலங்கையின் சர்வகட்சி மகாநாட்டு பிரதிநிதித்துவக் குழுவினரும் நிபுணர் குழுவினரும் எவ்வாறு நோக்குகின்றார்கள் என்பதை அறிய விரும்புகின்றோம்.

சிக்கல்கள் நிறைந்த இலங்கையின் இனநெருக்கடிக்கு உருப்படியான அரசியல் இணக்கத்தீர்வைக் காண்பதற்கு இந்திய மாநிலங்களுக்கு இருக்கக்கூடிய அதிகாரங்களின் அடிப்படையிலான யோசனைகள் - ஏற்பாடுகள் போதுமானவையல்ல என்ற கருத்தும் ஏற்கனவே முன்வைக்கப்பட்டிருந்தது. அரசியலமைப்பை மீளவரைய வேண்டுமென்ற கலைஞர் கருணாநிதி அரசாங்கத்தின் கோரிக்கை இந்தக் கருத்து நிலைப்பாட்டை மேலும் வலிமையுடையதாக்குகிறது என்பது எமது அபிப்பிராயம். அரசியலமைப்பு புதிதாக வரையப்பட வேண்டுமென்ற கோரிக்கையையடுத்து இந்தியாவில் மூளக்கூடிய விவாதம் இலங்கையர்களினால் மிகவும் உன்னிப்பாக நோக்கப்பட வேண்டியதாகும்.

நன்றி தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.