Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்காலக்குழுவின் செயலாளராக ஒரு தமிழர் நியமணம்

Featured Replies

mathi-l.gif

செயலாளர் பதவியை வகிக்கும் முதலாவது தமிழன்

-ஏ.தேவராஜா-

"இலங்கை கிரிக்கெட் அணி தற்போது சர்வதேச ரீதியில் மிகவும் பலம் வாய்ந்த ஒரு அணியாகத் திகழ்வதினால், எதிர்வரும் உலக கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் இறுதி ஆட்டம் வரை இலங்கை முன்னேறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது"

இவ்வாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்காலக்குழுவின் செயலாளர் கே.மதிவாணன் தினக்குரலுக்கு அளித்த விசேட பேட்டியில் தெரிவித்தார். இப்பேட்டியில் அவர் முதலில் தன்னைப் பற்றி தெரிவிக்கையில்;

எனது சொந்த இடம் பருத்தித்துறை. நான் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியில் கல்வி கற்றேன். சிறுவயதில் இருந்து எனக்கு கிரிக்கெட்டில் மிகவும் ஆர்வம். கல்லூரியின் கிரிக்கெட் அணியில் நான் சிறப்பாக விளையாடியதினால் யாழ். மாவட்ட தெரிவு அணியிலும் அங்கம் வகித்து விளையாடியுள்ளேன்.

எனது குடும்பம் ஒரு சாதாரண குடும்பம் தான். நான் கல்லூரிக்குச் செல்லும் போது தினமும் நடந்தே செல்வேன். கல்லூரிக் காலம் முடிந்து நான் கொழும்புக்கு வேலை தேடி வந்தேன். கொழும்பிலும் ஒரு நிறுவனத்தில் சாதாரண கிளார்க் வேலைதான் கிடைத்தது.

இக்கால கட்டத்தில் நான் முதலில் "சதனஸ்" விளையாட்டுக் கழகத்தில் இணைந்து, 3 வருடங்கள் "சரா" கிண்ணப் போட்டி உட்பட பல போட்டிகளில் விளையாடியுள்ளேன். நான் வேலை செய்த நிறுவனம் என்னை விற்பனை முகாமையாளராக நியமித்ததினால், நான் இலங்கையின் அனைத்துப் பகுதிகளுக்கும் அடிக்கடி செல்ல வேண்டி வந்ததினால் சில வருடங்கள் கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கும் நிலை ஏற்பட்டது.

இக்கால கட்டத்தில், நான் கடுமையாக பகல் - இரவு என்று பாராமல் உழைத்ததினால், ஒரு குறிப்பிட்ட பணத்தை சேகரித்து, சொந்தமாக ஒரு தொழிலை ஆரம்பித்தேன். இதன் பின்பு தான் நான் "கோல்ஸ்" கிரிக்கெட் கழகத்தில் உறுப்பினராக இணைந்து மீண்டும் கிரிக்கெட் ஆட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தேன்.

ஒரு சில வருடங்களுக்கு முன்புதான், நான் ""EAST WEST MARKETING PRIVATE LIMITED' கொட்டாஞ்சேனையில் ஆரம்பித்தேன். தற்போது எனது நிறுவனத்தில் நூற்றுக் கணக்கான ஊழியர்கள் வேலை செய்து வருகிறார்கள். கோல்ஸ் விளையாட்டுக் கழகத்தில் கடந்த 7 வருடங்களாக தலைவர் பதவியை வகித்து வருகின்றேன். எங்கள் கழகம் தான் கடந்த 6 வருடங்களாக, பிறிமியர் லீக் போட்டியில் முன்னணி வகித்து வருகின்றது. சமிந்தவாஸ், களுவித்தாரண போன்ற வீரர்கள் எங்கள் கழகத்தில் இருந்து தான் உருவானவர்கள். களுவித்தாரண சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றமையினால் இவர் தற்போது எமது கழகத்தின் பயிற்சியாளராக இருந்து வருகின்றார்.

கேள்வி : ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்காலக் குழுவில் எவ்வாறு இணைந்து கொண்டீர்கள்?

பதில் : 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தான் கௌரவ விளையாட்டு அமைச்சர் ஜீவன் குமாரதுங்க என்னை அழைத்து ஷ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்கால குழுவில் இணைந்து சேவை ஆற்றும்படி வேண்டுகோள் விடுத்தார். அதை நான் ஏற்றுக் கொண்டேன். முதலில் கிரிக்கெட் அபிவிருத்தி, போட்டிகளை நடாத்துவது, மத்தியஸ்தர்களை நியமித்தல் போன்ற பொறுப்புகள் என்னிடம் ஒப்படைக்கப்பட்டன. இப்பொறுப்புகளை நான் சிறப்பாகச் செய்து வந்த போது தான், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, இடைக்காலக் குழுவின் செயலாளர், பதவி விலகியதினால் செயலாளர் பதவிக்கு ஏகமனதாக நான் நியமிக்கப்பட்டேன்.

கேள்வி : தற்போதைய இலங்கை கிரிக்கெட் அணி பற்றி உங்கள் அபிப்பிராயம்?

பதில் : குறிப்பாக இலங்கை கிரிக்கெட் அணி ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடக் கூடிய அணி என்று சர்வதேச ரீதியில் நல்ல பெயர் உண்டு. ஆனால் கடந்த ஒருவருடத்துக்கு முன் இலங்கை அணி வீரர்களின் ஆட்டத்தில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டதினால், பல தோல்விகளை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. குறிப்பாக இந்தியா சென்ற இலங்கை அணி படுதோல்விகளுடன் நாடு திரும்பியது.

இதன் பின்புதான் இலங்கை அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டதுடன், இளம் வீரர்கள் பலரும் அணியில் இணைக்கப்பட்டனர். இதன் நிமித்தம் இலங்கை அணி, இங்கிலாந்து, நியூஸிலாந்து சுற்றுப் பயணங்களில் டெஸ்ட், ஒருநாள் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி ஒரு பலம் வாய்ந்த அணியாக தற்போது திகழ்கின்றது. ஆனாலும், இக்கால கட்டத்தில் ஐ.சி.சி. கிண்ணப் போட்டியில், துரதிர்ஷ்டவசமாக தோல்வியைத் தழுவியதும் உண்மைதான்.

ஆனாலும், இன்று எமது அணி வீரர்கள் ஒன்றிணைந்து சிறப்பாக விளையாடி வருவதினால், எதிர்வரும் உலகக் கிண்ணப் போட்டியில் எமது அணி சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டி வரை முன்னேறும் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய இருக்கின்றது.

அடுத்த மாதம் எமது அணி இந்தியா செல்லவுள்ளது. அங்கு 4 ஒருநாள் போட்டிகளில் பங்குபற்றும். இந்தியா செல்லவுள்ள இலங்கை அணியில் எமது முன்னணி பந்து வீச்சு வீரர்களான முரளிதரன், சமிந்தவாஸ் ஆகிய இரு வீரர்களும் அங்கம் வகிக்கவில்லை. இந்தியா செல்லும் இலங்கை அணிக்கு இப்போட்டிகள் ஒரு பயிற்சிப் போட்டியாகவே இருக்கும்.

கேள்வி : இலங்கை அணியின் பயிற்சியாளர் ரொம் மோடி, உலகக் கிண்ணப் போட்டி முடிவடைந்ததும், ஒப்பந்தத்தை மீண்டும் புதிப்பிக்காது, அவுஸ்திரேலியா செல்ல இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது உண்மையா?

பதில் : இவ்வாறான செய்திகள் பத்திரிகைகளில் வெளிவந்ததை நானும் பார்த்துள்ளேன். இதில் எந்த விதமான உண்மையும் கிடையாது. ஏனென்றால் அவர் இதுபற்றி இதுவரை எம்முடன் ஏதும் கதைத்ததும் கிடையாது. அவர் தற்போது வெளிநாடு சென்றுள்ளார். அவர் நாடு திரும்பியதும், ஒப்பந்தம் பற்றி நான் கதைக்கவுள்ளேன்.

எங்களுடைய நிர்வாகம் ரொம் மோடியைத்தான் மீண்டும் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்வதென்று, ஒருமனதாக முடிவு செய்துள்ளது.

கேள்வி : கடல்கோளால் பாதிக்கப்பட்ட காலி சர்வதேச கிரிக்கெட் அரங்கை புனரமைப்பதற்காக, அவுஸ்திரேலிய வீரர் ஷேன்வோர்ன் இலங்கை வந்தபோது 50,000 அமெரிக்க டொலர்களை வழங்குவதாகத் தெரிவித்தார். அந்தப் பணம் உங்களுக்கு கிடைத்ததா?

பதில் : ஷேன்வோர்ன் கூறியபடி அந்தப்பணம் எமக்கு இதுவரை கிடைக்கவில்லை. ஆனால், 50 ஆயிரம் அமெரிக்க டொலர்களை ஷேன்வோர்ன் அனுப்பத் திட்டமிட்டிருப்பதாகக் கேள்விப்பட்டேன். ஆனாலும் இச் செய்தியும் உத்தியோக பூர்வமாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. எதுவாக இருந்தாலும், காலி கிரிக்கெட் மைதானத்தை புனரமைப்பதற்கான வேலைகளை நாம் தற்போது ஆரம்பித்துவிட்டோம். இவ்வருடம் நவம்பர் மாதம் இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளது. இந்த மைதானத்தில் தான் 1 ஆவது டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. அதற்கிடையில் இந்த மைதானத்தின் புனரமைப்பு வேலைகள் யாவும் முடிவடைந்து விடும். இதற்கான முழுச் செலவும் 70,000 டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. முழுச் செலவையும் எமது நிர்வாகமே பொறுப்பேற்கும்.

கேள்வி : வடக்கு, கிழக்குப் பகுதிக்கு உங்களுடைய நிர்வாகம் இதுவரை எந்தவிதமான கிரிக்கெட் அபிவிருத்தி வேலைகளைச் செய்துள்ளது?

பதில் : கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கு முன்பு, கிளிநொச்சியில் ஒரு சர்வதேச தரத்திலான புற்தரை மைதானத்தை அமைப்பதற்கும் மற்றும் மன்னார், வவுனியா, மட்டுநகர், திருமலை ஆகிய இடங்களிலும் மாதிரி புற்தரை ஆடுகளங்களை அமைப்பதற்கும், விடுதலைப் புலிகளின் விளையாட்டுப் பொறுப்பாளர் பாப்பாவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி நிதிகளையும் ஒதுக்கியுள்ளோம். ஆனாலும் இன்றைய சூழ்நிலையில் அவற்றை நடைமுறைப்படுத்த முடியவில்லை. ஆனாலும் திருமலை, மட்டுநகர், வவுனியா ஆகிய பகுதிகளில் கிரிக்கெட் பயிற்சியாளர்கள் தற்போதும் மாதத்துக்கு இரு தடவைகள் சென்று பயிற்சிகளை மேற்கொண்டு தான் வருகின்றார்கள்.

கேள்வி : உங்களுடைய இந்த இடைக்கால குழு விரைவில் கலைக்கப்பட்டு, பொதுத் தேர்தல் நடைபெற இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது உண்மையா?

பதில் : இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. இடைக்கால குழுவை கலைப்பதும், பொதுத் தேர்தலை நடத்துவதும் விளையாட்டு அமைச்சின் பொறுப்பு. ஆனாலும் இந்த இடைக்கால குழுதான் இன்று கிரிக்கெட் அபிவிருத்திக்காக பல திட்டங்களை மிக வெற்றிகரமாக அமுல்படுத்தி வருகின்றது.

குறிப்பாக, கழக மட்டத்தில் கிரிக்கெட் விளையாடும் சகல வீரர்களுக்கு பணம் வழங்கும் திட்டத்தை நான்தான் ஆரம்பித்து வைத்துள்ளேன். முன்னர் நாங்கள் கிரிக்கெட் விளையாடும் காலத்தில் நாங்கள் தான் பணத்தை செலவு செய்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினோம். இன்று ஒரு கிரிக்கெட் வீரனுக்கு, பிரயாணம் செலவும் உட்பட ஆகக்குறைந்தது 5 ஆயிரம் ரூபாவுக்கு மேல் ஒரு போட்டிக்கு வழங்குகின்றோம். இதுபோல் மத்தியஸ்தர்களுக்கும் கூடுதலான பணத்தை வழங்கி வருகின்றோம்.

இவை தவிர, பாடசாலை மட்டத்தில் இருந்து கழகங்கள் வரை பல போட்டிகளை நடத்தி வருகின்றோம். கிரிக்கெ்ட் அகடமி பயிற்சி முகாம்களை நாம் சிறப்பாகச் செயல்படுத்தி வருகின்றோம். கடல்கோள் திட்டத்தையும் சீராகச் செயல்படுத்தி வருகின்றோம். பாதிக்கப்பட்ட இடங்களில் வீடுகளை அமைத்த படிப்படியாக பொது மக்களுக்கு கையளித்து வருகின்றோம். வடபகுதியிலும் குறிப்பாக, முல்லைத்தீவு, கிளிநொச்சி பகுதிகளிலும் கடல்கோளினால் பாதிக்கப்பட்ட இடங்களில் வீடுகளை அமைப்பதற்கு முன்கூட்டியே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நிலைமை சீரானதும் இத்திட்டம் உடனடியாகச் செயல்படுத்தப்படும்.

இடைக்காலக்குழுதான் இவ்வாறான சிறந்த திட்டங்களை அமுல்படுத்தி வருவதினால், பொதுக் கூட்டத்தை கூட்டும்படி இதுவரை எந்த ஒரு கழகமும் கோரிக்கை விடுத்தது கிடையாது. பாகிஸ்தானிலும் இடைக்கால குழுதான் நீண்டகாலமாக செயல்பட்டு வருகின்றது. எமது இடைக்காலக் குழுவின் செயல் திட்டங்களை இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களும் வரவேற்கின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.thinakkural.com/news/2007/1/28/...s_page20217.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.