Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“அத்தையிடம் நான் நெருங்கிவிடக் கூடாது என பயந்தார்கள்!”

Featured Replies

“அத்தையிடம் நான் நெருங்கிவிடக் கூடாது என பயந்தார்கள்!”

உண்மைகளை உடைக்கும் தீபா

 

ஜெயலலிதா உயிருடன் இருக்கு வரையில் அவரை சந்திக்க முயன்று தோற்றுப் போனவர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா. ‘‘அப்போலோ தொடங்கி ராஜாஜி ஹால் வரையில் பெரிய போராட்டத்தையே நடத்திவிட்டேன். கடைசியாக அவரிடம் ஒரு வார்த்தை பேசக் கூட முடியாமல் போய்விட்டதே’’ என உருகுகிறார் தீபா. ஜூ.வி-காக அவரிடம் பேசினோம்.

p38.jpg

‘‘அப்போலோவிலே உங்களை அனுமதிக்கவில்லை. அஞ்சலி செலுத்த எப்படி போனீர்கள்?’’

‘‘அத்தையின் உடல் போயஸ் கார்டனுக்கு வந்தபிறகு அப்போலோவில் இருந்து கார்டனுக்கு போனேன். அங்கே நள்ளிரவு 12.30 மணியில் இருந்து அதிகாலை 6 மணி வரையில் ரோட்டில்தான் நின்றுகொண்டிருந்தேன். அத்தையைப் பார்க்கவிடவில்லை. அதன்பிறகு ராஜாஜி ஹாலுக்கு போய் போராடினேன். அனுமதி தரவேயில்லை. ‘முதல்வர் என்னுடைய அத்தை. அவர் முகத்தை கடைசியாகப் பார்க்க அனுமதியுங்கள்’ என கெஞ்சியும் போராடியும் அழுத பிறகுதான் அஞ்சலி செலுத்த முடிந்தது. அப்போலோவில் அத்தையைப் பார்க்கவிடாமல் தடுத்தார்கள். அதைவிட ராஜாஜி ஹாலில் மோசமாக நடந்து கொண்டார்கள். ஒருவர் இறந்தபிறகு அவரை பார்க்க விடாமல் கடைசி நேரம் வரையில் இப்படி நடந்து கொண்டவர்கள் மனசாட்சியே இல்லாதவர்கள். இது மனிதர்கள் செய்யும் வேலையே இல்லை. அத்தை இருந்தபோது அதை வைத்து பாலிடிக்ஸ் செய்தீர்கள். உயிருடன் இல்லாதபோது அவரை கடைசியாக பார்க்ககூட விடாமல் தடுப்பதில் அவர்களுக்கு என்ன பிரச்னை? போயஸ் கார்டன் வீட்டில் பிறந்து அவரால் பெயர் வைக்கப்பட்ட நான் அத்தையிடம் கடைசியாக ஒரு முறை பேசிவிட முடியாதா என துடித்தேன். உறவினர் என்ற முறையில் அத்தையை பார்க்க என்னை அனுமதித்திருக்க வேண்டும். அந்த விருப்பத்தைக் கூட நிறைவேற்ற முடியாமல் தடுத்துவிட்டார்கள். வலுக்கட்டயமாக வெளியேற்றியது எல்லாம் தவறு.’’

‘‘ஜெயலலிதா இறந்தபிறகு ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றம் பற்றி?

‘‘மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. கட்சி இப்போதும் அவர்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. மாற்றம் ஏற்பட வேண்டும். அத்தையோட லட்சியம் நிறைவேற்றக் கூடிய நல்ல தலைமை வர வேண்டும். அந்தத் தலைமை யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அது முறையாக நடக்க வேண்டும்.’’

‘‘ஜெயலலிதா இறப்புக்குப் பிறகு அரசியலில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது. அது யாரால் நிரப்பப்படும்?’’

‘‘அது யாராலும் நிரப்ப முடியாது. யாராலும் அவர் மாதிரி ஆக முடியாது. ஒரு அண்ணா இருந்தார். ஒரு எம்.ஜி.ஆர் இருந்தார். ஒரு ஜெயலலிதா இருந்தார். புதிதாக ஒருவர் உருவாகி வரலாமே தவிர ஜெயலலிதாவாக யாராலும் முடியாது.’’

‘‘உங்கள் சகோதரர் தீபக் மீது சசிகலா காட்டும் ஆதரவு உங்கள் மீது ஏன் காட்டப்படவில்லை?’’

‘‘ ‘அவர்களை நான் எதிர்க்கிறேன்’ என ஆரம்பத்தில் இருந்தே நினைக்கிறார்கள். அதுமட்டுமல்ல. கார்டனில் அத்தையைப் பார்க்க முயற்சி செய்கிறேன். அவரோடு நெருக்கமாக இருக்க விரும்புகிறேன் என்பது எல்லாம்கூட காரணமாக இருக்கலாம். நான் எதுவும் கேள்வி கேட்டுவிடுவேனோ என நினைத்திருக்கலாம். தீபக் எதுவும் கேட்க மாட்டான் என்கிற மனநிலையில் அவர்கள் இருந்திருக்கலாம்.’’


‘‘ஜெயலலிதாவின் சொத்துக்கள் யாருக்கு போகும்?’’

‘‘உயில் எழுதாமல் இருந்தால் சட்டப்படி வாரிசுகளுக்குதான் போகும். அவருக்கு பிறகு சொத்துக்கள் வாரிசுகளுக்குத்தான் போகும் என சட்டம் சொல்கிறது. அதனால் எந்த சர்ச்சையும் ஏற்படாது என்றுதான் நினைக்கிறேன். உயில் எழுதியிருந்தால் அதை பொது மக்கள் பார்வைக்கு கொண்டு வர வேண்டும். அதன் உண்மைத் தன்மை ஆராயப்பட வேண்டும். எந்தக் காலத்தில் என்ன காரணத்துக்காக உயில் எழுதப்பட்டது என்கிற விவரம் எல்லாம் தெரிய வேண்டும்.’’

‘‘ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கை சசிகலா செய்தது பற்றி..?”

‘‘எங்க முறைப்படி ஆண்கள்தான் செய்ய வேண்டும். பெண்கள் செய்யும் வழக்கம் கிடையாது. இப்படி செய்தது புதிதாக இருந்தது. அதற்காக வருத்தம் எதுவும் இல்லை.’’

‘‘ ‘அ.தி.மு.க-வுக்கு நீங்கள் தலைமை ஏற்க வேண்டும்’ என கோரிக்கைகள் வைக்கப்படுகின்றனவே..?’’

‘‘இப்படியொரு விருப்பம் எல்லோருக்கும் இருக்கிறது என்பதை முதன்முறையாகத் தெரிந்து கொள்கிறேன். இப்படியான முயற்சியில் நான் எப்போதுமே ஈடுபட்டதில்லை. அ.தி.மு.க-வில் இருப்பவர்கள் இந்த எண்ணத்தில் இருக்கிறார்கள் என்பதை கேள்விப்பட்டேன். இதை நான் எதிர்ப்பார்க்கவும் இல்லை. இந்த சூழல் ஏற்படும் எனவும் நினைத்ததில்லை. அதற்கான சூழல் இப்போது உருவாகியிருக்கிறது. இது நல்ல சிந்தனை அவ்வளவுதான்’’

‘‘ ‘அப்போலோவில் ஜெயலலிதா அட்மிட் ஆனபிறகுதான் தீபா வெளியே வந்தார். அதற்கு முன்பு அவர் எங்கே போனார்’ எனக் கேள்வி எழுப்பப்படுகிறதே..?”

‘‘அதற்கு முன்பே நான் முயற்சிசெய்து கொண்டுதான் இருந்தேன். அப்போது எல்லாம் இது செய்தியாக மாறுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படவில்லை. அது பர்ஷனல் லெவல் மட்டத்திலேயே இருந்தால் வெளியே தெரியவில்லை. அத்தை அப்போலோவில் அட்மிட் ஆன பின் நான் முயற்சி செய்தபோது அது பெரிய செய்தியாகிவிட்டது. திடீரென்று நான் வந்தேன் என்று சொல்வது எல்லாம் உண்மை கிடையாது. பல வருடங்களாக முயற்சி செய்து வருவது என் மனசாட்சிக்குத் தெரியும்.’’

‘‘உங்களுடைய அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?’’

‘‘அத்தையின் பெயரையும் புகழையும் நிலை நாட்ட வேண்டும். அதுதான் என் முன் இருக்கும் முக்கியமான கடமை. அவருடைய தியாகத்தை மக்கள் முன்பாக கொண்டு போய் சேர்ப்பேன். அதை சரியான முறையில் செய்வேன்’’

 

‘‘ஜெயலலிதாவின் மரணம் பற்றி சந்தேகங்கள் கிளம்புகிறதே.. நடிகை கெளதமியும் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறாரே...?’’

‘‘மருத்துவமனையில் அவருக்கு என்ன மாதிரியான சிகிச்சைகள் செய்யப்பட்டன என்கிற விஷயம் எல்லோருக்கும் விளக்கமாக தெரிவிக்கப்பட வேண்டும். மூடி மறைக்கப்பட்ட விஷயங்களை இன்னும் தெளிவாக ஸ்டெப் பை ஸ்டெப்பாக சொல்ல வேண்டும். வெறும் பிரஸ் ரிலீஸ் மட்டுமே தீர்வாக இருக்காது. அத்தைக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் எல்லோரும் விளக்கம் அளிக்க வேண்டும். இதற்காக எக்ஸ்பெர்ட்டுகள் அடங்கிய ஆலோசனைக் குழு நியமித்து உண்மைகளை உலக்குக்கு சொல்ல வேண்டும். அத்தையை யாருமே பார்க்க விடாதது புதிராகவே இருக்கிறது. இப்படி எங்கேயுமே நடந்திருக்காது.’’

‘‘தீபக்கை ஒரு பகடை காயாக பயன்படுத்துகிறார்களா?’’

‘‘தீபக் இதுவரையில் பிக்‌சரில் கிடையாது. இறுதிச் சடங்கு செய்வதற்காகவே தீபக்கை இப்போது கொண்டு வந்திருக்கிறார்கள். இப்போது இந்த சூழ்நிலையில் அவனை பயன்படுத்தியது முழுக்க முழுக்க இறுதிச் சடங்குகளை செய்வதற்காகதான். தீபக்கும் இல்லையெனில் வேறு யாரோ செய்தார்கள் என்கிற பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காக இந்த ஏற்பாட்டை திட்டமிட்டு தெளிவாக செய்திருக்கிறார்கள்.’’

‘‘சசிகலாவுக்கு உங்கள் மீது என்ன கோபம்?’’

‘‘கோபம் எதுவும் கிடையாது. அவங்களுக்கும் எனக்கும் வாக்குவாதங்கள் நடக்கும். ‘அத்தை உன் மேல கோபமாக இருக்காங்க.. இங்கே வர வேண்டாம்’ என்றெல்லாம் அவர் சொன்ன போது அவரிடம் நான் சண்டை போட்டிருக்கிறேன். இதுதான் அவர் மனசுல இருந்திருக்கும். ஒருவேளை இப்போது வந்தாலும் அதே மாதிரி நான் கேள்வி எழுப்புவேன் என நினைத்திருக் கலாம். ‘நீ இங்க வர்றது அவங்களுக்கு பிடிக்கல’னு பல தடவை என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். ‘இதை அத்தை சொல்லட்டும்’ என அவரிடம் நானும் பல முறை சொல்லிவிட்டேன். அத்தை அப்படி ஒருமுறைக்கூட சொன்னதே இல்லை. அப்படி சொல்லியிருந்தால் அதற்கு ஆதாரம் வேண்டும். எதை வைத்து இதை நம்புவது. அத்தை நேரடியாக சொல்லியிருந்தால் மட்டுமே நம்ப முடியும். அத்தை என்னை அழைத்து வர சொல்லியிருக்கிறார். ‘தீபா அங்கே இல்லை. அவரிடம் இருந்து எந்த ரெஸ்பான்ஸும் இல்லை’ என்றெல்லாம் அவர்கள் பொய் சொல்லியிருக் கிறார்கள். இது எல்லாமே அத்தையிடம் நான் நெருங்கிவிடக் கூடாது என்பதற்காகதான். இது தவிர அவரிடம் எந்த பிரச்னையும் எனக்கில்லை.’’

p38a.jpg

‘‘உங்கள் திருமணத்துக்கு அத்தை ஏன் வரவில்லை?’’

‘‘வருவதாகத்தான் இருந்தது. கான்வாய் எல்லாம் ரெடியாக இருந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகள் தயாராக இருந்தன. அதிகாரிகள் எல்லாம் வந்திருந்தார்கள். ஆனால், கடைசி நிமிடத்தில் அவர் மைண்ட் சேஞ்ச் ஆகியிருக்கிறது. அதனால் வரவில்லை. அதன்பிறகு 20 நாளிலேயே எங்க அம்மாவின் உடல்நிலை மோசமாகி அம்மா இறந்துவிட்டார். இதனால் அத்தை ஏன் வரவில்லை என்கிற காரணத்தை அப்போது தெரிந்து கொள்ள முடியவில்லை. அம்மா இறந்த தகவல்கூட அத்தைக்குப் போய் சேரவில்லை.’’   

‘‘ஜெயலலிதாவின் உடலை சுற்றி மன்னார்குடி ஆட்களே சூழ்ந்து நின்றிருந்தார்களே..’’

‘‘(சிரிக்கிறார்) ரொம்ப செயற்கைதனமாக இருந்தது. உறவினர்கள் எல்லோருமே அருகில் இருந்திருக்க வேண்டும். நானும் தீபக் மட்டுமே அத்தையின் உறவுகள் அல்ல. அதைத் தாண்டி அப்பா, அம்மா வழியில் நிறைய சொந்தங்கள் இருக்கின்றனர். அவர்கள் யாருமே உடலுக்கு அருகில் நிற்க முடியவில்லை. யாருக்குமே இடம் தராமல் இவர்கள் மட்டுமே சூழ்ந்திருந்தது எதற்காக எனப் புரியவில்லை.’’ 

‘‘அரசியல் பற்றி உங்க கருத்து என்ன?’’

‘‘அரசியல் மீது ஒருவிதமான வெறுப்பு மண்டிக் கிடக்கிறது. ஆரோக்கியமான அரசியல்தான் எல்லோருடைய எதிர்பார்ப்பு. ஆரோக்கியமான போட்டியோடு கூடிய அரசியல் வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். அதுமாதிரியான அரசியலைதான் நான் விரும்புகிறேன்.’’

‘‘அரசியல் ஆர்வம் உண்டா?’’

‘‘ஆர்வம் எப்போதுமே உண்டு. ஜனர்னலிஸ்டாக அரசியலை எப்போதுமே உற்று நோக்கிக் கொண்டு தான் இருக்கிறேன். அத்தையின் சமாதியில் அஞ்சலி செலுத்த வந்தபோது என்னை சுற்றிக் கொண்ட தொண்டர்களைப் பார்த்து ரொம்ப பிரமிப்பாக இருந்தது. இது எல்லாமே அத்தையின் மீது மக்கள் வைத்திருந்த அன்பைக் காட்டியது.’’

http://www.vikatan.com/juniorvikatan

  • தொடங்கியவர்

‘கண்ணீர் விட்டு அழுத ஜெயலலிதாவை நான் பார்த்திருக்கிறேன்!’ கலங்கும் தீபா

கண்ணீர்

கண்ணீர் விட்டு அழுவதுதான் உண்மையான ஜெயலலிதா என அவரது அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார். 

இது குறித்து ஆங்கில ஏடு ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, ''கடந்த 1974-ம் ஆண்டு ஒரு தீபாவளி தினத்துக்கு முன்னதாக நான் பிறந்தேன். அந்த தருணத்தில் மருத்துவமனையில் எனது பெற்றோருடன் எனது அத்தையும் இருந்ததாக சொல்வார்கள். எனக்கு 'தீபா' என அத்தைதான் பெயர் சூட்டினார்கள். தீபா என்றால் வெளிச்சம் என்று அர்த்தம். ஆனால், எனது அத்தையின் மரணம் குறித்து இன்னும் இருள் விலகாத நிலையில்தான் நான் இருக்கிறேன். நான் அவரை மிகவும் நேசித்தேன். என்னால் முடிந்தவரை அத்தையுடனேயே  அதிகமுறை தங்கவும் முயற்சித்துள்ளேன்.

சிறுவயதில் இருந்தே எனக்கு அவர்தான் எனது ரோல் மாடல். அத்தையின் உறுதி, தன்னம்பிக்கை, தன்னலமற்றத்தன்மை, உழைப்பு இவைகள் எல்லாம் எனக்குப் பிடித்தவை. நாங்கள் போயஸ் கார்டனில் இருந்து வெளியேறிய பிறகு, திடீரென்று  அந்நியர்கள் அங்கே நிரம்பியிருந்தனர். அதற்குப் பிறகும் நான் அங்கே செல்வேன். ஆனால், அவர்களிடம் என்னால் சகஜமாக பழக முடியவில்லை. 

கடந்த 1991-ம் ஆண்டு அத்தை முதன்முறையாக தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றார். பதவியேற்ற தினத்தன்று எங்கள் குடும்பத்தினருடன் அத்தை மதிய விருந்து உண்டார். அப்போது எனக்கு 16 வயது. மூத்த அதிகாரிகளிடம் எனது தந்தை, எனது சகோதரர் என ஒவ்வொருவரிடமும் அத்தை அறிமுகப்படுத்தி வைத்தார். என்னைக் கண்டாலே  அத்தையின் முகம் மலரும். என்னை நன்றாகப் படிக்க சொல்வார். அந்த தருணங்கள் என்னால் மறக்க முடியாதவை. ஒருநாள் என்னிடம், 'உன்னை எனது சொந்த குழந்தையாகவே வளர்க்க ஆசைப்பட்டேன் ' என்றார் எனது அத்தை. அந்த வார்த்தையை கேட்ட பிறகு, அத்தையை  சந்திக்க அடிக்கடி போயஸ்கார்டன் செல்வேன். எனது அத்தை பங்கேற்கும் பொதுக் கூட்டங்கள், விழாக்களுக்கு கூட எங்கள் வீட்டுக்கு சிறப்பு அழைப்பிதழ்கள்  வருவது உண்டு. 

mast_11556.jpg

ஆனால் வாழ்க்கை ஒன்றும் ரோஜாப் படுக்கை கிடையாதே. எனது தந்தை மறைவுக்கு பிறகு, எனது அத்தையுடனான உறவும் குலைந்தது. அவரைச் சுற்றியிருந்தவர்களே அதற்கும் காரணமாக இருந்தனர். திடீரென்று வளர்ப்பு மகனும் முளைக்க, என்னால் அதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அந்த சமயத்தில் துயரத்தின் உச்சிக்கே சென்றேன்.. வளர்ப்பு மகன் திருமணமும் எங்களுக்குள் பிளவை அதிகரித்தது. வளர்ப்பு மகன் திருமணத்தால் எனது அத்தை கொடுத்த விலையும் அதிகம். 

இந்த நேரத்தில் இன்னொன்றையும் நான் நினைத்து பார்த்திருக்கிறேன். எனது தந்தை இறந்த போது எங்கள் வீட்டுக்கு வந்த எனது அத்தை நீண்ட நேரம் அழுது கொண்டிருந்தார். ஒரு சகோதரனாக அத்தையை வழிநடத்தியதை பள்ளிப் பருவத்தில் எனது தந்தை அவரது கையை பிடித்துக் கொண்டு,  அழைத்து சென்றதைக்  கூறி நீண்ட நேரம் அழுது கொண்டிருந்தார். கண்ணீர் விட்டுக்கொண்டிருந்த  அவரை எங்களால் தேற்ற முடியவில்லை. இதுதான் உண்மையான ஜெயலலிதா. அத்தனை பாசமிக்கவர் எனது அத்தை. 

1997-ம் ஆண்டு எனது அத்தை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது நான் அவரை பார்க்கச் சென்றேன். வெளிப்படையாக அத்தையிடம் பிரச்னைகள் குறித்து பேசினேன். ஆனால் உடனே என்னை அவர் கண்டித்தார். 'நீ குழந்தை உனக்கு ஒன்றும் தெரியாது. வீட்டுக்கு போ... நான் வெளியே வந்ததும் பார்க்கிறேன் ' என்றார். 

அதற்கு பிறகு பல முறை போயஸ் கார்டனுக்கு நான் சென்றிருக்கிறேன். பலமுறை காவலர்களால் துரத்தப்பட்டுள்ளேன். எனது அத்தை என் மீது அத்தனை பாசமாக இருப்பார். நேர்மையானவர். அப்படியிருக்கையில் இப்படி எப்படி நடக்கிறது என்று ஆச்சரியப்பட்டு போயிருக்கிறேன். ஆனாலும் நான் எனது முயற்சியை கைவிடவில்லை.

கடைசியாக 2002-ம் ஆண்டு அத்தை இரண்டாவது முறையாக தமிழகத்தின் முதல்வராக பதவியேற்ற போதுதான் அவரை மீண்டும் சந்திக்க முடிந்தது. அந்த சமயத்தில் அவருடன் பல விஷயங்களைப் பேசினேன். தந்தை குறித்து பேசினேன். இருவருக்குள்ளும் கடுமையாக வாக்குவாதம் கூட நடந்தது. எங்களை அவர்கள் வளர்த்த விதத்தையெல்லாம் கூறி அத்தையிடம் சண்டையிட்டேன். என்னை சமாதானப்படுத்துவதற்காக என்னுடன் 6 மணி நேரம் செலவழித்தார். பின்னர் 'என்னை வீட்டுக்கு போ... நான் பின்னர் வந்து உன்னை பார்க்கிறேன்' என்றார். அதுதான் அவரை நான் கடைசியாக பார்த்தது. ''

http://www.vikatan.com/news/tamilnadu/74965-she-was-inconsolable-for-a-long-time-that-was-the-real-jayalalithaa---deepa.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.