Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

என் உலகம்: கடலோரத்துக் கதைகள்

Featured Replies

என் உலகம்: கடலோரத்துக் கதைகள்

 

 
meeran_3105036f.jpg
 
 
 

இன்றைய கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப் பட்டணம் எங்களது சொந்த ஊர். 1944-ம் ஆண்டு பிறந்தேன் என்பது பதிவேடுகளில் உள்ளது. ஆனால், நிச்சயமாக அதற்கு ஓரிரு ஆண்டுகள் முன்பு பிறந் திருப்பேன். என் தகப்பனார் அப்துல் காதர்; தாயார் பாத்திமா. இருவருக்கும் எழுதப் படிக்கத் தெரியாது. தகப்பனாருக்குக் கருவாடு வியாபாரம். இங்கிருந்து இலங்கைக்குக் கருவாடு ஏற்றுமதி செய்துவந்தார். என் தகப்பனாருக்கு எங்களைப் படிக்கவைக்க வேண்டும் என்ற ஆர்வமெல்லாம் கிடையாது. ஆங்கிலக் கல்வி இஸ்லாத்தில் விலக்கப்பட்டது என்ற நம்பிக்கை அப்போது பரவலாக இருந்தது. அதனால் நாங்கள் சகோதரர்கள் பள்ளிக்குப் போய்ப் படிப்பது எங்கள் தகப்பனாருக்குப் பிடிக்கவில்லை. இந்த ஆங்கிலக் கல்வி எதிர்ப்பை எனது ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’ நாவலில் சொல்லியிருப்பேன்.

எங்கள் தகப்பனாருக்கு இரு மனைவிகள். மூத்த மனைவிக்குக் குழந்தைகள் இல்லை என்பதால் என் தாயாரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். எங்கள் பெரியம்மா எங்கள் மேல் மிகுந்த அன்பு கொண்டவர். அவரிடம் போய் பள்ளிக்குண்டான கட்டணத்தைப் பெற்றுக்கொள்வோம். அந்த ஒண்ணேகால் ரூபாயையும் நாங்கள் கேட்டதற்காகத் தருவாரே தவிர பிள்ளைகள் படிக்க வேண்டும் என்ற அக்கறையில் இல்லை. இந்தச் சூழலில்தான் நாங்கள் சகோதர, சகோதரிகள் வளர்ந்தோம்.

அந்தக் காலத்தில் எஸ்.எஸ்.எல்.சி சான்றிதழ் வாங்குவதற்குத் தகப்ப னாரின் கையெழுத்து அவசியம். நான் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தகுதி யானதும் அதற்கான சான்றிதழ் வாங்கு வதற்கு என் தகப்பனாரை அழைத்து வர வேண்டும் என்று பள்ளியில் சொன் னார்கள். என்னுடைய தகப்பனாருக்கு நாங்கள் படிப்பதிலேயே இஷ்ட மில்லையே, எப்படிச் சான்றிதழில் கையெப்பமிட வருவார், ஆனால் சான்றிதழும் வாங்க வேண்டும், என்ன செய்ய? அந்தக் காலத்தில் ராமநாதபுரத்திலிருந்து ஒரு சங்கு வியாபாரி எங்கள் ஊருக்கு வருவார். எனக்கு அவருடன் நல்ல பழக்கம்.

என் பள்ளியில் உள்ளவர்களுக்கு என் தகப்பனாரைத் தெரியாது. அதனால் சங்கு வியாபாரிக்கு என் தகப்பனார் வேஷம் கட்டிவிட்டேன். எஸ்.எஸ்.எல்.சி. சான்றிதழில் கையொப்பமிட அவரைக் கூட்டிச் சென்றேன். ஆனால், மாண வர்கள் விளையாட்டாகக் காட்டிக் கொடுத்துவிட்டார்கள். அதற்குப் பிறகு ஊராரின் நிர்ப்பந்தத்தின் பேரில் என் தகப்பனார் விருப்பமில்லாமல் கையெழுத்துப் போட்டார்.

என் தகப்பனாருக்கு நாங்கள் பள்ளி யில் படிப்பதில் இஷ்டமில்லையே தவிர எங்களுடன் பிரியமாக இருந்தார். வாய் நிறைய வெற்றிலை போட்டுக்கொண்டு எங்களுக்குக் கதைகள் சொல்வார். அவரது வேலைகளுக்கு இடையில் எங்களுடன் கதைகள் பேசுவதற்கும் நேரம் ஒதுக்குவார். நாட்டுப்புறக் கதை கள், ஊரிலுள்ள முதலாளிகளின் அடா வடித்தனங்கள் இவற்றையெல்லாம் நடிப்புடன் சொல்லிக் காண்பிப்பார். நாங்கள் வட்டமாக உட்கார்ந்து கேட் போம். என் தகப்பனார் சிறந்த ஒரு கதை சொல்லி. கல்வி அறிவு இல்லையா கிலும் இவ்வளவு பரந்த அறிவு எப்படிக் கிடைத்தது, என்று நாங்கள் சகோதர, சகோதரிகள் அடிக்கடி வியப்பதுண்டு.

நான் எழுத ஆரம்பித்ததற்கு என் தகப்பனாரிடம் கதைகள் கேட்டதுதான் காரணம். கருவாட்டு ஏற்றுமதியில் என் தகப்பனாருக்குப் பெரிய இழப்பு ஏற்பட்டது. எங்கள் சரக்குடன் சென்ற கப்பல் கவிழும் நிலைக்குச் சென்ற போது கப்பலில் இருந்த சரக்குகளை யெல்லாம் கடலுக்குள் எறிந்துவிட்டனர். அவற்றில் எங்கள் சரக்குகளும் அடக் கம். அதில் ஏற்பட்ட இழப்பு எங்கள் குடும்பத்தைத் துண்டுதுண்டாக்கி விட்டது. இதை என் தகப்பனார் கதை யாகச் சொல்லி, நான் எனது ‘துறை முகம்’ நாவலில் எழுதியிருக்கிறேன்.

என் தகப்பனாரின் கதைகளை எழுதியிருக்கிறேனே தவிர அவருக்கு நான் கதைகள் எழுதுவதும் பிடிக்காது. “காண்டம் எழுதுறான்” எனச் சொல் லியபடி காகிதங்களைக் கிழித்துப் போட்டுவிடுவார். என் சகோதர, சகோதரிகளுக்கும் நான் எழுதுவதைக் குறித்த அறிவோ ஆர்வமோ இருந்த தில்லை. எனக்கு முதலில் மலையாளப் பத்திரிகையான சந்திரிகாவில் வேலை கிடைத்தது. ஆனால், என் மூத்த அண்ணனுக்கு அதில் விருப்பம் இல்லை. சென்னையில் ஒரு எண் ணெய்க் கடை வேலைக்கு என்னை அனுப்பிவைத்தார். அங்கு வேலை பார்த்தபோது எனக்கு சினிமா மீது ஆர்வம் வந்தது.

அந்த அடிப்படையில் கடக்காவூர் தங்கப்பன் என்னும் மலையாள தயாரிப்பாளர் ஒருவர் படம் எடுப்பதற்குப் பணம் உதவினேன். பிரபல மலையாள நடிகர் மதுவும் சாரதாவும் இணைந்து நடித்த அந்தப் படமும் வெளிவந்தது. ஆனால், என் கடை முதலாளி என் சினிமா ஆர்வத்தை என் அண்ணனிடம் தெரிவித்துவிட்டார். “கலையும் வியாபாரமும் பொருந்திப் போகாது. ஒன்று வியாபாரியாக இரு. இல்லையென்றால் கலைஞனாக இரு” என்று எனக்கு எழுதினார். இந்த அண்ணன் ஒரு ஓவியர். நாகர்கோவில் இந்துக் கல்லூரியின் சின்னம் இவர் வரைந்ததுதான்.

எனக்கு சாகித்திய அகாடமி விருது கிடைத்தபோதும்கூட என் சகோதர, சகோதரிகள் யாரும் எனக்கு வாழ்த்துச் சொல்லவும் இல்லை; சந்தோஷப்பட்டதும் இல்லை. ஒருவேளை இந்த சாகித்திய அகாடமி விருது பற்றி அவர்களுக்குத் தெரியாதிருந்திருக்கலாம்.

நான் இப்போது திருநெல்வேலி யில் வியாபாரத்துக்காக வந்து தங்கிவிட்டேன். என் மனைவியின் பெயர் ஜெலீலா. எங்களுக்கு சமீம் அகமது, மிர்சாத் அகமது என்று இரண்டு மகன்கள். இருவரும் அரபு நாட்டில் ஐடி துறையில் பணியாற்றிவருகிறார்கள். என் பிள்ளைகள் இருவரும் வாசிக்கும் பழக்கம் உடையவர்கள்தான். இரவு நேரங்களில் நான் கதைகள் எழுதும்போது என் மனைவி வாஞ்சை யுடன் எனக்குத் தேநீர் வைத்துத் தருவாள்.

வியாபாரம், எழுத்து என்று நான் இருந்தபோது, என் பிள்ளைகளைக் கவனித்துக்கொண் டாள். மலையாளம் வாசிக்கத் தெரிந்தவள். என்னுடைய கதைகளை அவ்வப்போது படிக்கக்கூடியவள். ஆனால், அபிப்ராயங்கள் எதுவும் பெரிதாகச் சொல்ல மாட்டாள். நான் பிறருடைய அபிப்ராயங்களைக் கேட்கக் கூடியவனும் இல்லை.

(தொடரும்)
- தோப்பில் முஹம்மது மீரான்,
மூத்த தமிழ் எழுத்தாளர்.

http://tamil.thehindu.com/general/literature/என்-உலகம்-கடலோரத்துக்-கதைகள்/article9432176.ece?homepage=true&theme=true

  • தொடங்கியவர்

என் உலகம்: என் நண்பர்கள்

தோப்பில் முஹம்மது மீரான்

 

 
 
ஓவியம்: முத்து
ஓவியம்: முத்து
 
 

என் முதல் நாவல் ‘ஒரு கடலோரக் கிராமத்தின் கதை’ 1988-ல் வெளிவந்தது. அதுவரை தமிழ்ப் படைப்புகள் எதைப் பற்றியும் எனக்குத் தெரியாது; வாசித்ததில்லை. மலையாளம் மூலமாகத்தான் எழுதினேன். எனது நாவலை கேரளப் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுநிலைப் பாடத்திட்டத்தில் சேர்த்திருந்தார்கள். ஒரு சமயம் திருவனந்தபுரம் போயிருந்தபோது, கேரளப் பல்கலைக்கழகம் சென்று தமிழ்த் துறைத் தலைவரான பேராசிரியர் கி. நாச்சிமுத்துவைச் சந்தித்தேன். அவர் தமிழ்ப் படைப்புகள் பற்றி என்னிடம் பேசினார். எனது பதிலை வைத்து நான் தமிழில் எதுவும் படித்ததில்லை என்பதைப் புரிந்துகொண்டார். அன்று ‘ஒரு புளிய மரத்தின் கதை’, ‘கோபல்ல கிராமம்’ ஆகிய நாவல்களைப் படிக்கத் தந்தார். நான் முதன்முதலில் தமிழ்ப் படைப்புகள் வாசித்தது அப்போதுதான். அவர் மூலமாகத்தான் ஆ. மாதவன் எனும் தமிழ் எழுத்தாளர் திருவனந்தபுரத்தில் இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டேன்.

ஆ. மாதவனைச் சென்று பார்த்தேன். அவரது ‘கடைத்தெருக் கதைகள்’ புத்தகத்தை வாசிக்கத் தந்தார். முதன்முதலில் ஒரு தமிழ் எழுத்தாளரின் பழக்கம் அப்போதுதான் எனக்கு ஏற்பட்டது.

அதன் பிறகு வியாபார விஷயமாகத் திருவனந்தபுரம் செல்லும்போதெல்லாம் ‘செல்வி ஸ்டோர்’ சென்று மாதவனுடன் பேசிக்கொண்டிருப்பேன். அவர்தான் பல தமிழ்ப் படைப்புகளை அறிமுகப்படுத் திவைத்தார். அவர் மூலமாகத்தான் சுந்தர ராமசாமியின் நட்பு கிடைத்தது.

frds_3108331a.jpg

சுந்தர ராமசாமியை நாகர்கோவிலில் சென்று சந்தித்தேன். அவரிடம் எனது ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’ நாவலைக் கொடுத்தேன். நாவலைப் பற்றிய அவரது கருத்தை எதிர்பார்த்திருந்தேன். ஆனால், அவர் மெளனமாகவே இருந்தார். அது நடந்து ஒரு வருடத்துக்குப் பிறகு அவரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் நாவலின் ஐந்து படிகளை நெய்தல் கிருஷ்ணனுக்கு அனுப்பிவைக்கவும் என எழுதியிருந்தார். நெய்தல் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த அந்தக் கூட்டத்துக்கு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வ.ஐ. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். எனக்கு எதிர்பாராத சந்தோஷமாக சுந்தர ராமசாமியே அந்த நாவலைப் பாராட்டிப் பேசினார். எனது நாவலுக்குக் கிடைத்த முதல் பாராட்டு அதுதான். அதன் பிறகு எனக்கும் சுந்தர ராமசாமிக்குமான நட்பு நெருக்கமானது. எனது ‘கூனன் தோப்பு’ நாவலுக்கு அவரிடம் முன்னுரை எழுதிக் கேட்டேன். முன்னுரை எழுதியதோடு அல்லாமல் நாவலில் உள்ள பிழைகளைத் திருத்தவும் உதவினார். இலக்கியம் தொடர்பாகப் பல அறிவுரைகளை அவரிடம் கேட்டுக்கொள்வேன். அவர் போட்டுத்தந்த தடத்தில் இன்றுவரை பயணித்துக்கொண்டிருக்கிறேன்.

கி. ராஜநாராயணனுடனும் எனக்கு நெருங்கிய நட்புண்டு. அவரைச் சந்திப்பதற்காகவே பாண்டிச்சேரி சென்றேன். இன்றுவரை அவருடனான நட்பு தொடர்கிறது. அவரும் அவரது மனைவி குணவதி அம்மாளும் எங்கள் பிரியத்துக்குரிய குடும்ப நண்பர்கள். எனக்கு சாகித்ய அகாடமி விருது கிடைக்க ஒரு வழியில் கி.ரா. முக்கியக் காரணம்.

தி.க. சிவசங்கரன் பணி ஓய்வுபெற்று திருநெல்வேலிக்கு வந்த பிறகுதான் அவர் எனக்குப் பழக்கம். தினசரி அவரைச் சென்று சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். நள்ளிரவு 12 மணிக்கெல்லாம் அவர் வீட்டுக்குப் போயிருக்கிறேன். அவர் உறங்கிய பிறகும் அவர் வீட்டுக் கதவைத் தட்டியிருக்கிறேன். எவ்வளவு உறக்கத்தில் இருந்தாலும் ‘மீரான்’ என்ற சப்தத்தைக் கேட்டு எழுந்து வந்துவிடுவார் அவர். அவரோடு பேசிக்கொண்டிருந்த ஒரு நள்ளிரவு எனக்குத் தெளிவாக நினைவிருக்கிறது. அன்று தி.க.சி.க்கு ஒரு அழைப்பு வந்தது. இந்தச் சமயத்தில் யார் அழைக்கிறார்கள் என நினைத்தேன். ஆனால், அவர் சாதாரணமாகத்தான் பேசினார். பிறகு சந்தோஷப்பட்டதுபோலத் தெரிந்தது. “அவர் பக்கத்தில்தான் இருக்கிறார். நீங்களே பேசுங்கள்” என்று சொல்லிவிட்டுத் தொலை பேசியை என்னிடம் கொடுத்தார். மறுமுனையில் பேசியவர், “உங் களுக்கு சாகித்ய அகாடமி கிடைத்திருக்கிறது. டிவியில் சொன்னார்கள்” என்றார். அதைக் கேட்டதும் உணர்ச்சி வசப்பட்டுப் போனேன். என்னுடன் பேசியவருக்கு நன்றி சொல்ல வில்லை. அவர் யார், பேரென்ன? என்று கூடக் கேட்க வில்லை. இன்றுவரை அவர் யாரெனத் தெரியாது. தி.க.சி.யை நினைக்கும்போதெல்லாம் எனக்கு இந்தச் சம்பவம் நினைவுக்கு வரும்.

தி.க.சி. எனக்கு நண்பரான பிறகு எனது எல்லா எழுத்துகளின் முதல் வாசகர் அவர்தான். அவற்றில் உள்ள பிழைகளைக் கவனம் எடுத்துத் திருத்தித் தருவார். அவர் எனக்குள் ஒரு பாகமாக இருந்தார். அவர் மறைந்தபோது என்னுடலில் ஒரு உறுப்பை இழந்ததுபோல் உணர்ந்தேன். நெல்லையில் பேரெடுத்துச் சொல்லக்கூடிய ஒரு நண்பர் கிருஷி என்று எல்லோராலும் அழைக்கப்படும் ராமகிருஷ்ணன். இவர்கள் தவிர இந்திரா பார்த்தசாரதி, வாஸந்தி ஆகியோருடனும் எனக்கு நெருங்கிய நட்புண்டு.

மலையாளத்தில் எனக்கு நண்பர்கள் பலருண்டு. குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒருவர், மறைந்த மலையாள கரமனை ஜனார்த்தனன் நாயர். ‘எலிப்பத்தாயம்’ படம் மூலம் பெரும் புகழ்பெற்றவர். எனக்கு அவருக்கும் நெருங்கிய நட்பு இருந்தது. இங்கே திருநெல்வேலியில் வந்து பல நாட்கள் வந்து தங்கியிருக்கிறார். என்னுடைய ‘கூனன் தோப்பு’ நாவலை மலையாள வார இதழான ‘கலாகெளமுதி’யில் நேரடி யாகக் கொண்டுவரப் பெரும் முயற்சி எடுத்துக்கொண்டார். ஆனால், மதக் கலவரம் ஏற்படும் என மறுத்துவிட்டார்கள். அந்த நாவல் தமிழில் வெளிவந்த பிறகு மலையாளத்தில் மொழிபெயர்க்கப் பட்டபோது அதை இதே ‘கலாகெளமுதி’ வெளியிட்டது. அந்த மொழிபெயர்ப்புக்கு சாகித்ய அகாடமி விருதும் கிடைத்தது. இன்னும் நண்பர்கள் பலர் நினைவுக்கு வருகிறார்கள். ஆனால் எல்லோரையும் ஒரே கட்டுரைக்குள் அடக்க முடியவில்லை.

-(தொடரும்)

http://tamil.thehindu.com/general/literature/என்-உலகம்-என்-நண்பர்கள்/article9442706.ece?homepage=true&theme=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.