Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பங்கு பிரித்தார் சசிகலா! - ஆட்சிக்கு நடராஜன்... கட்சிக்கு திவாகரன்!!

Featured Replies

பங்கு பிரித்தார் சசிகலா! - ஆட்சிக்கு நடராஜன்... கட்சிக்கு திவாகரன்!!

 

‘‘மன்னார்குடி குடும்பத்துக்குள் அதிகாரப் பங்கீடுகள் நடந்து முடிந்துவிட்டன” என்ற பீடிகையுடன் ஆஜரானார் கழுகார். அவரைப் பேசவிட்டுக் காத்திருந்தோம்.

p42c.jpg‘‘சில மாதங்கள் காத்திருப்பார். தனது குடும்பத்திலேயே யாரையாவது நியமித்துவிட்டு சசிகலா அமைதியாக இருப்பார், ஏப்ரல் மாதம் வரை துணைப் பொதுச்செயலாளராக இருந்துவிட்டு அதன்பிறகு பொதுச்செயலாளர் ஆவார் என்றெல்லாம் பலரும் சொல்லி வந்தார்கள். அதை பொய்யாக்கிவிட்டு அ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டுவிட்டார். தலைமை அலுவலகத்துக்கு வந்த சசிகலா, ‘இனி எல்லாமே நான்தான்’ என்பதைச் சொல்லிச் சென்றுவிட்டார். தலைமை அலுவலகத்தில் நடந்ததை எல்லாம் உமது நிருபர்கள் விரிவாகச் சொல்லி இருப்பார்கள். அடுத்தகட்ட நடவடிக்கைகளைப் பற்றி மட்டும் சொல்கிறேன்.”

‘‘சொல்லும்!”

‘‘பொதுச்செயலாளர் பதவியை ஏற்பதற்கு சசிகலாவுக்கு முதலில் தயக்கம் இருந்ததற்கு காரணம், ‘அனைத்து நிலைமைகளையும் தன்னால் சமாளிக்க முடியுமா?’ என்பதால்தான். ஆனால், அவருக்கு தன்னம்பிக்கை ஊட்டியது மொத்தமும் அவரது கணவர் நடராஜன்தான். ‘இன்றைய சூழ்நிலையில் நீங்கள்தான் பொதுச்செயலாளர் ஆகவேண்டும். நமது குடும்பத்திலேயே யாரை நியமித்தாலும் இந்தக் கட்சியை நடத்திச் செல்ல முடியாது. ஜெயலலிதாவைத் தெரிந்தவர்களுக்கு எல்லாம் சசிகலாவைத் தெரியும். மேடம், சின்ன மேடம்.... அம்மா, சின்னம்மா.... என்று ஜெயலலிதாவின் இமேஜுடன் சேர்ந்து உங்கள் இமேஜும் வளர்ந்துள்ளது. தமிழ்நாட்டு மக்களுக்கு உங்களைப் புதிதாக அறிமுகப்படுத்த வேண்டியது இல்லை. அதனால், இந்தப் பொறுப்பை தயங்காமல் எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று சசிகலாவின் கணவர் எம்.நடராஜன் சொல்லி இருக்கிறார். ‘எனக்குப் பேச வராது’ என்று சசிகலா சொல்ல... ‘ஜெயலலிதாவே எழுதி வைத்துக்கொண்டுதான் வாசித்தார். ஸ்டாலினும் பலநேரங்களில் எழுதிவைத்துதான் பேசுகிறார். அதனால், எழுதிப் படிப்பது தவறு இல்லை’ என்று அவருக்கு உற்சாக வார்த்தைகள் சொல்லப்பட்டன. சசிகலாவின் இந்த தயக்கத்தைப் பார்த்து சில ஏற்பாடுகள் செய்யப்பட்டனவாம்.”

p42big.jpg

‘‘அது என்ன?”

‘‘கட்சி, ஆட்சி என இரண்டு பெரிய பிரிவுகள் பிரிக்கப்பட்டன. ஆட்சியை எம்.நடராஜன் மேற்பார்வை பார்ப்பது. கட்சியை திவாகரன் கவனித்துக்கொள்வது. கட்சி ரீதியான விஷயங்களில் திவாகரனே அனைத்தையும் தீர்மானிப்பார். நடராஜன் அதில் அதிகமாகத் தலையிட மாட்டார். ஆட்சி நிர்வாகம், அதிகாரிகள் போன்ற விஷயங்களில் நடராஜனே கட்டளைப் பிறப்பிப்பார். அதில் திவாகரன் தலையிட மாட்டார். இப்படி அவர்களுக்குள் ஓர் ஒப்பந்தம் நடந்துள்ளதாம். ஒரேநாளில் நான்கைந்து தடவை திவாகரனுக்கு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போன் செய்ததாகவும், ‘அத்தானிடம் இதுபற்றி பேசுங்களேன்’ என்று அவர் சொன்னதாகவும் சொல்லப்படுகிறது. ‘அத்தான்’ என்று திவாகரன் சொல்வது, அக்கா சசிகலாவின் கணவர் என்ற அடிப்படையில் நடராஜனை!”

‘‘ஓஹோ!”

‘‘ராம மோகன ராவ் வீட்டில் ரெய்டு நடந்ததைத் தொடர்ந்து அவரை தலைமைச்செயலாளர் நாற்காலியில் இருந்து அதிரடியாகத் தூக்கினார்கள். இதனை ராம மோகன ராவ் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. தன்னை முழுமையாகக் காப்பாற்றுவார்கள் என்று அவர் நினைத்தார். நடராஜன்தான், ‘இப்படி ஒரு நடவடிக்கைக்கு உள்ளானவரை தலைமைச்செயலாளராக வைத்திருக்க முடியாது’ என்று சொல்லி ஆக்‌ஷனுக்குத் தூண்டினாராம். இதை அறிந்துதான், ‘தமிழக அரசுக்குத் துணிச்சல் இல்லை. எனக்கு எதிராகப் பலரும் செயல்படுகிறார்கள்’ என்ற தொனியில் ராம மோகன ராவ் பேட்டியில் சீறினார். அதிகாரிகள் நியமனம், மாற்றம் போன்றவை நடராஜன் மேற்பார்வையில் நடக்க ஆரம்பித்துவிட்டன.”

‘‘திவாகரனும் நடராஜனும் உட்கார்ந்துகொண்டு சசிகலாவை ஆட்டிவைக்கிறார்கள் என்கிறீரா?”

“இப்படித்தான் கோட்டையில் பேசிக்கொள்கிறார்கள். நடராஜனின் நண்பரும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான பன்னீர்செல்வம் அவருடன் இருக்கிறார். அனைத்துக் கட்டளைகளையும் அவர்கள் பிறப்பிக்கிறார்கள் என்று அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு இருக்கிறது. ஜெயலலிதா ஆட்சியில் கோலோச்சிய ஷீலா பாலகிருஷ்ணனும் வெங்கடரமணனும் சைலன்ட் ஆகிவிட்டார்களாம். இப்போது வந்துள்ள தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், எதிலும் பட்டுக்கொள்ளாதவர்.”

‘‘திவாகரன், கட்சிக்காரர்களை கன்ட்ரோல் பண்ணிவிடுவாரா?”

p42b.jpg

“அவரை அ.தி.மு.க-வினர் எப்போதும் ‘பாஸ்’ என்றுதான் அழைப்பார்கள். ஜெயலலிதா இருந்தபோதே, ‘பாஸ்’ என அழைக்கப்பட்ட அவர், ஜெயலலிதா இல்லாதபோது சும்மா இருப்பாரா? புத்தாண்டு தினத்தில் அவரது வீட்டை நோக்கிப் பலரும் படையெடுத்தார்கள். எம்.ஜி.ஆர். நினைவு தினத்தன்று உறுதிமொழி வாசிப்பை திவாகரனின் ஆளான ஓ.எஸ்.மணியனிடம் கொடுத்ததில் இருந்தே இதனை அறியலாம். இந்த அடிப்படையில் 12 மாவட்டச் செயலாளர்களை மாற்றப் போகிறார்கள். போயஸ் கார்டன் வீட்டில் இருந்து கட்சியைக் கவனிக்கிறார் டி.டி.வி.தினகரன். தலைமைக்கழகத்தில் இருந்து கட்சியைக் கவனிக்கப் போகிறார் டாக்டர் வெங்கடேஷ்.”

‘‘அமைச்சரவையில் மாற்றம் வருமா?”

“வரலாம். உதயகுமார், செல்லூர் ராஜு, பாலகிருஷ்ண ரெட்டி, கருப்பணன், துரைக்கண்ணு, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய அமைச்சர்களின் தலைக்கு மேல் கத்தி தொங்கிக்கொண்டு இருக்கிறதாம். சில அமைச்சர்களின் துறைகள் மாறலாம். சிலர் புதிதாகச் சேர்க்கப்படலாம். செங்கோட்டையன், செந்தில்பாலாஜி, பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரின் பெயர்கள் புதிய அமைச்சர்கள் பெயருக்கு அடிபடுகின்றன. கவுண்டர், நாடார் சமூகத்துக்கு முக்கியத்துவம் தரும் வகையில் இந்த மாற்றம் அமையுமாம். தேவர் டாமினேஷன் தெரியாதது மாதிரி இந்த மாற்றத்தைச் செய்யப் போகிறார்களாம்.”

‘‘சசிகலா முதலமைச்சரானால், பன்னீர்?”

‘‘ஓ. பன்னீர்செல்வம், சபாநாயகர் ஆக்கப்படலாம். சபாநாயகராக இருக்கும் தனபால், அமைச்சர் ஆகலாம். பன்னீர் வகித்த நிதித்துறை மாஃபா பாண்டியராஜனுக்குப் போகலாம் என்கிறார்கள்.”

‘‘அ.தி,மு.க-வில்கூட அதிரடி மாற்றங்கள் இருக்கும்போல?”

‘‘ஆமாம். அது அ.தி.மு.க பொதுக்குழுவிலேயே தெரிந்துவிட்டது. சுமார் 20 மாவட்டச் செயலாளர்களின் பெயர்களை தீர்மானம் முன்மொழிதல் பட்டியலில் இருந்து தூக்கிவிட்டார்கள். அதுவே பலருக்கும் பீதியைக் கொடுத்துள்ளது. முக்கிய அமைச்சர்களில் சிலரும் பார்வையாளர்கள் வரிசையில் உட்கார வைக்கப்பட்டார்கள். தலைமைக்கழக நிர்வாகிகளில் சிலருக்கும் பொதுக்குழுவில் உரிய முக்கியத்துவம் தரப்படவில்லை. பொதுக்குழு மேடையில் அமரவேண்டியவர்கள், பார்வையாளர்கள் வரிசையில் முக்கியத்துவம் தரப்படவேண்டியவர்கள், தீர்மானங்களை முன்மொழிபவர்கள் என்று போயஸ் கார்டனில் முன்கூட்டியே ரிகர்சல் நடந்தது. அனைத்தும் சசிகலா மேற்பார்வையில்!”

“அட!”

“ஜெயலலிதா இருந்தவரை, அ.தி.மு.க பொதுக்குழுவுடன், செயற்குழுக் கூட்டமும் பெரும்பாலும் சேர்த்தே நடத்தப்படும்.  சிறப்பு அழைப்பாளர்கள் என்ற பெயரில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பொதுக்குழுவில் அனுமதிக்கப்படுவார்கள். இப்போது சசிகலா குடும்பத்தினர் `டிக்’ செய்தவர்களுக்குத்தான் வாய்ப்பு கிடைத்ததாம். கடந்த காலங்களில் சசிகலாவால் மறைமுகமாகத் தட்டி வைக்கப்பட்ட
வர்கள், சசிகலாவை நிச்சயமாக ஆதரிக்க மாட்டார்கள் என்ற சின்ன சந்தேகம் உள்ளவர்களுக்கும் சிறப்பு அழைப்பாளர்கள் என்கிற பேனரில் தப்பித்தவறிக்கூட அழைப்பிதழ் போகாமல் பார்த்துக்கொண்டனர். அதாவது, நிர்வாகிகள் அளவில் யாருமே தனக்கு எதிர்ப்பாக இல்லை என்பதைக் காட்ட நினைக்கிறார் சசிகலா!”

‘‘அவைத்தலைவரில் மாற்றம் உண்டா?”

‘‘பண்ருட்டி ராமச்சந்திரன் அவைத்தலைவர் ஆக்கப்படலாம் என்கிறார்கள். பொன்னையனுக்கும் அந்த ஆசை இருக்கிறது. செங்கோட்டையன் பெயரைச் சிலர் சொல்கிறார்கள். கட்சிப் பதவியில் இருந்துகொண்டு ஆட்சிக்கு ஆலோசனை சொல்லும் ஒரு குழுவை உருவாக்கப் போகிறார்களாம். அமைப்புச் செயலாளர் பதவியிலும் மாற்றங்கள் வரப்போகின்றன. டெல்டா ஏரியாவில் முன்பு கோலோச்சினார் வைத்திலிங்கம். இனி, அந்த இடத்துக்கு ஓ.எஸ்.மணியன் வருவார். சசிகலா இனி கட்சிக்குள் செய்யப்போகும் கல்தா, புது நியமனம்... போன்ற நடவடிக்கைகளைக் கட்சியின் முன்னணி தலைவர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள். அவரின் நடவடிக்கையைப் பொறுத்து அதிருப்தி கோஷ்டிகள் உருவாகும்.”

p42a.jpg

“தம்பிதுரைக்கு முக்கியத்துவம் கூடுமோ?”

‘‘அப்படித் தெரியவில்லை. நாடாளுமன்ற மக்களவை துணை சபாநாயகராக அவர் இருப்பதால் டெல்லிக்கும் இந்த ஆட்சிக்குமான மீடியேட்டராக தம்பிதுரை இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அவர் அனைத்துக்கும் முன்னால் வந்து நிற்பதை முதல்வர் பன்னீர் விரும்பவில்லை. டெல்லி பி.ஜே.பி தலைமையிடம் நெருக்கம் இருப்பதாக ஒரு தோற்றத்தைக் காட்டிக்கொண்டு நிறைய விஷயங்களில் தம்பிதுரை தலையிடுவதாகச் சொல்கிறார்கள். ‘சசிகலாவே முதலமைச்சர் ஆகவேண்டும், ஆட்சியும் கட்சியும் ஒரே நபரிடம்தான் இருக்க வேண்டும்’ என்று தம்பிதுரை, சசிகலாவுக்கு ஏகத்துக்கும் ஐஸ் வைத்துள்ளார். இதன் மூலமாக சசிகலாவிடம் தனக்கு செல்வாக்கு உயரும் என்று நினைக்கிறாராம். ஆனால், அ.தி.மு.க எம்.பி-க்கள் தம்பிதுரைக்கு சசிகலா முக்கியத்துவம் தருவதை ரசிக்கவில்லையாம். புலம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.!”

‘‘அப்படியா?”

“தேசிய அளவில் எங்காவது இயற்கை பாதிப்பு ஏற்பட்டால் எம்.பி-க்கள் விருப்பப்பட்டால், அவர்களது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து குறிப்பிட்ட தொகையை அங்கே தரலாம். தமிழகத்தில் சென்னை உட்பட மூன்று மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது எம்.பி-க்கள் நிதியில் இருந்து பணம் தரலாம் என்று மத்திய அரசு வழக்கம்போல் ஒரு அறிவிப்பை வெளியிட்டதாம். அ.தி.மு.க எம்.பி-க்கள் பலரும் பணம் தர முன்வரவில்லை. ஆனால், தம்பிதுரை முந்திக்கொண்டு தமிழகத்திலுள்ள அ.தி.மு.க-வின் 50 எம்.பி-க்களும் அவர்களின் நிதியில் இருந்து தலா ஒரு கோடி ரூபாய் வீதம் கட்டாயமாகத் தர வைத்துவிட்டாராம். இது பல எம்.பி-க்களுக்குப் பிடிக்கவில்லை. அடுத்த அதிருப்தி... நாடாளுமன்ற மக்களவைத் துணை சபாநாயகர் பதவியுடன் அனைத்து எம்.பி-க்கள் நிதியை கையாளும் குழுத் தலைவர் பதவியையும் வைத்திருக்கிறார். ஆறு வருடங்கள் கடந்துவிட்ட சூழ்நிலையில், அந்த நிதியை உயர்த்தி வாங்கவேண்டிய பொறுப்பு தம்பிதுரையிடம்தான் உள்ளதாம். ஆனால், இதை அவர் மத்திய அரசிடம் இதுவரை கொண்டுபோகவே இல்லை என்கிற புலம்பலும் அகில இந்திய அளவில் எம்.பி-க்கள் மத்தியில் கேட்கிறது. இவை ஒட்டுமொத்தமாக தம்பிதுரைக்கான எதிர்ப்பாக மாறி வருகிறது.”

‘‘சசிகலா உடனடியாக முதல்வராவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றனவா?”

‘‘இரட்டை மனநிலையில் இருக்கிறார் சசிகலா. உடனடியாக அவர் முதல்வர் ஆகிவிடுவது நல்லது என்று உளவுத்துறை ரிப்போர்ட் போட்டிருக்கிறதாம். ‘எதிர்ப்பு மனநிலை இருக்கிறது என்பதை வைத்து முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள தயங்கத் தேவையில்லை. லேசான எதிர்ப்பு இருக்கும்போதே பதவி ஏற்றுக்கொண்டால் அது வளராமல் அமுங்கிவிடும்’ எனச் சொல்லியிருக்கிறாராம் உளவுத்துறை அதிகாரி ஒருவர். சசி தரப்புக்கு எதிர்ப்பாக இருந்து இப்போது மாற்றுப் பதவியில் இருக்கும் ஓர் அதிகாரியும் இதனை ஆதரித்தாராம். அதனால், வெகுசீக்கிரமே பதவிப்பிரமாணத்தை கிண்டியில் பார்க்கலாம்” என்றபடி எழுந்த கழுகார்,

‘‘1991-96-ம் ஆண்டு நடந்த மோசமான கேடுகளுக்கு அந்த மூத்தவல்லியைக் காரணம் என்பார்கள். அவர் மீண்டும் தனது ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டார்” என்றபடி பறந்தார்.

அட்டை ஓவியம்: க.நன்மாறன்


p42.jpg

‘‘நான் சாதி அரசியல் பண்ண மாட்டேன்!”

சிகலாவை விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் சந்தித்தது அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. அப்போலோவில் இருந்த ஜெயலலிதாவை சந்திக்கச் சென்ற முதல் அரசியல்வாதி திருமாதான்.
அதன்பிறகுதான் அனைத்துத் தலைவர்களும் படையெடுத்தனர். அதேபோல், சசிகலாவைப் பாராட்டச் சென்றுள்ளார் திருமா. ‘‘சசிகலா பொதுச்செயலாளராகி உள்ளார். அவரை நீங்கள் சென்று வாழ்த்த வேண்டும்” என்று கட்சி நிர்வாகிகள் சிலரே திருமாவைத் தூண்டினார்களாம். ‘‘என்ன பேசுகிறார் என்பதைவைத்து அவரைச் சந்திக்கலாம்” என்றாராம் திருமா.

பொதுச்செயலாளராக பதவி ஏற்ற அன்று பேசிய சசிகலா, ‘‘சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு இந்த இயக்கத்தை நடத்துவேன்” என்று சொன்னார் அல்லவா? அதன்பிறகுதான் சசிகலாவைப் பார்க்கலாம் என்று முடிவெடுத்தாராம். சசிகலாவை சந்திக்க நேரம் கேட்டதும் உடனடியாகத் தரப்பட்டது. திருமாவுடன் வி.சி.க-வின் பொதுச்செயலாளர் ரவிக்குமாரும் சென்றார்.

http://www.vikatan.com/juniorvikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.