Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘யாரும் செய்யாததையா செய்துவிட்டேன்’ என்றார் ஜெயலலிதா!

Featured Replies

‘யாரும் செய்யாததையா செய்துவிட்டேன்’ என்றார் ஜெயலலிதா!

சொத்துக் குவிப்பு விசாரணை அதிகாரி நல்லம நாயுடு பேட்டி

 

என்.நல்லம நாயுடு. ஜெயலலிதாவுக்கும் சசிகலா உறவுகளுக்கும் இந்தப் பெயர் சிம்ம சொப்பனம். ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தில் எஸ்.பி-யாக இருந்து, சொத்துக் குவிப்பு வழக்கில் விசாரணை நடத்தியவர். இவரின் உறுதியான விசாரணைதான் இந்த வழக்கின் அஸ்திவாரம். உச்ச நீதிமன்றம் வரை வழக்கு உறுதியாக நின்று, நீதி கிடைக்க இதுவே காரணமாக அமைந்தது. தீர்ப்பு வெளியாகி உள்ள நிலையில், சென்னை பெரவள்ளூரில் வசிக்கும் நல்லம நாயுடுவைச் சந்தித்தோம். 79 வயதிலும் உறுதியானக் குரலில் பேசுகிறார். வழக்கு பற்றிய தகவல்களை விரல்நுனியில் வைத்திருக்கிறார்.

p12c.jpg

“முன்னாள் முதல்வர் மீதான வழக்கை விசாரித்தபோது இடையூறுகள் வரவில்லையா?”

“சில தாமதங்கள்தான் ஏற்பட்டன. மற்றபடி இடையூறுகள் ஏதும் இல்லை. சுப்பிரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தவுடன், ‘டி.ஐ.ஜி லத்திகா சரண் விசாரிக்க வேண்டும்’ என்று நீதிபதி உத்தரவிட்டார். லத்திகா சரண், தனக்கு உதவியாக இருக்கும்படி பலரைக் கேட்டுப் பார்த்தார். யாரும் முன் வரவில்லை. என்னிடம் கேட்டபோது, நான் சம்மதம் தெரிவித்தேன். இந்த வழக்கின் முழுமையான விசாரணை அதிகாரியாக இருந்தேன். லத்திகா சரண், மேற்பார்வை செய்தார். 1996-ம் ஆண்டு செப்டம்பர் 19-ம் தேதி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தின் சார்பில் கிரிமினல் வழக்காகப் பதிவுசெய்து விசாரணையில் இறங்கினோம். முதலில், ஜெயலலிதாவுக்கு எந்தெந்த இடங்களில் சொத்துகள் இருக்கின்றன என்று ஆய்வு செய்தோம். 78 இடங்களைக் கண்டறிந்தோம். அதனைப் பட்டியலிட்டோம். பத்திரப் பதிவு அலுவலகங்களுக்கெல்லாம் கடிதம் எழுதி ஆவணங்களைச் சேகரித்தோம். ஜெயலலிதா பெயரில் 32 வங்கிக் கணக்குகள் இருந்தன. வங்கிகளில் இருந்து ஆவணங்களைப் பெறுவதுதான் சிரமமானக் காரியமாக இருந்தது. அப்போது வங்கிகள் கம்ப்யூட்டர் மயமாக்கப்படவில்லை. அவர்கள் ஆவணங்களைத் தேடி எடுத்துத் தருவதற்கு தாமதம் ஆனது.”

“ஜெயலலிதாவிடம் விசாரணை நடத்தினீர்களா? விசாரணைக்கு அவர் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லையா?”

“ஜெயலலிதாவின் அனுமதியுடன் அவரது வீட்டிலும், ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்திலும் சோதனை நடத்தினோம். சோதனையில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் ஜெயலலிதாவிடம் கேட்க 1,800 கேள்விகள் தயாரித்தோம். அப்போது அவர் சென்னை மத்தியச் சிறையில் இருந்தார். சிறைக் கண்காணிப்பாளர் முன்னிலையில் இரண்டு பெண் போலீஸ்காரர்கள் உடன் இருந்தபோது விசாரித்தேன். டைப்பிஸ்ட் ஒருவர் பதில்களை டைப் செய்து கொண்டார். கேள்விகளுக்கு, ‘ஆம்’, ‘இல்லை’ என்று பதில் அளித்தார். சில கேள்விகளுக்கு ‘சசிகலாவிடம் கேட்க வேண்டும்’, ‘ஆடிட்டரிடம் கேட்க வேண்டும்’, ‘வழக்கறிஞரிடம் கேட்க வேண்டும்’ என்று சொன்னார். விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்புக் கொடுத்தார். 27 நாள்கள் அவரிடம் விசாரணை செய்தேன். ஒருமுறை, ‘யாரும் செய்யாததை நான் செய்துவிட்டேனா? நான் மட்டும்தான் உலகத்தில் இல்லாததைச் செய்திருக்கிறேனா? எத்தனையோ பேர் இருக்கிறார்கள். என்னை மட்டும் ஏன் விசாரிக்கிறீர்கள்?’ என்று உணர்ச்சிவசப்பட்டார். ‘மேடம். இந்த வழக்கில் விசாரிக்க வேண்டியது என் கடமை. அடுத்த முறை நீங்கள் முதல்வராக வரலாம். அப்போதும் நான் ஓர் அதிகாரியாக என்னுடைய கடமையைச் செய்வேன்’ என்றேன். பின்னர் என் கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.”

p12b.jpg

“சசிகலா உள்ளிட்ட மற்றவர்களிடம் விசாரணை நடத்தினீர்களா?”

“அப்போது சசிகலா மருத்துவமனையில் இருந்தார். நீதிமன்ற அனுமதியுடன், மருத்துவர்கள் முன்னிலையில் அவரிடம் விசாரணை நடத்தினேன். அவரிடம் 900 கேள்விகள் கேட்டேன். ஜெயலலிதாவைப் போலவே இவரும் சில கேள்விகளுக்கு ‘அக்காவிடம் (ஜெயலலிதா) கேட்கவேண்டும்’, ‘ஆடிட்டரிடம் கேட்க வேண்டும்’,  ‘வழக்கறிஞரிடம் கேட்க வேண்டும்’ என்று சொன்னார். அப்போது இளவரசி மன்னார்குடியில் இருந்தார். அங்கு சென்று அவரிடம் விசாரணை செய்தோம். சுதாகரனை விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பினோம். மூன்று நாள்கள் விசாரணைக்கு வந்தார். திடீரென்று மறுநாள் விசாரணைக்கு வரவில்லை. ‘தென்னாட்டு எம்.ஜி.ஆர்’ என்று போஸ்டர் ஒட்டிக்கொண்டு காரைக்குடியில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை சென்றதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. பழனியில் லாட்ஜில் தங்கியிருந்த அவரைக் கைதுசெய்து விசாரணைக்கு அழைத்து வந்தோம்.”

‘‘இந்த வழக்கு விசாரணையில் இருந்து உங்களை அகற்ற ஜெயலலிதா அரசு முயற்சி செய்ததாகக் கூறப்பட்டதே?”

“வழக்கில் இருந்து என்னை அப்புறப்படுத்த அவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால், அதற்கான நேரடியான முயற்சிகளை நான் எதிர்கொள்ள வில்லை. இதுபோன்ற வழக்குகளில் சாதாரணமான முறையில் மிரட்டல்கள் வரும். அதுபோன்ற மறைமுக மிரட்டல்களைச் சந்தித்திருக்கிறேன். சென்னையில் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தபோது, படிகளில் ஏறி கோர்ட் அறைக்குச் சென்றுகொண்டிருந்தேன். அப்போது சிலர் என் அருகில் நின்றுகொண்டு, ‘விட்றா... மேலே போகட்டும், அப்படியே மேலே அனுப்பிவிடலாம்’ என்று சொன்னார்கள். அதைக் கண்டு நான் பயப்படவில்லை. ஆனால், இந்த வழக்கை ஒன்றுமில்லாமல் செய்ய முயற்சி நடந்தது. பெரும்பாலான சாட்சிகள் பிறழ்சாட்சிகளானார்கள். இந்த வழக்கை விசாரிக்க எனக்கு அதிகாரம் கொடுக்கப்படவில்லை என என்னுடைய உயர் அதிகாரியே பிறழ் சாட்சியம் அளித்தார். என்னுடைய விசாரணையையே சட்டவிரோதம் என்று காட்ட முயற்சி செய்தார்கள். இந்த வழக்கை முடிக்கப் பார்க்கிறார்கள் என்பது எனக்குப் புரிந்தது. அதன் பின்னர்தான் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றும் முயற்சிகள் தொடங்கின.”

p12.jpg

“சொத்துக் குவிப்பு வழக்கு காரணமாக நெருக்கடியை உணர்ந்தீர்களா?”

“மனதில் ஒரு நெருடல் இருந்தது. என்னுடைய மகன், அரசின் தொழில்துறையில் வேலை பார்க்கிறார். அவருடைய பணிமாற்றம், புரமோஷனில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்தன. ‘முதல்வர் வழக்கின் விசாரணை அதிகாரியாக உங்கள் தந்தை இருப்பதால் இப்படியெல்லாம் உங்களுக்கு நெருக்கடி இருக்கிறது’ என்று அதிகாரிகள் சொல்லி இருக்கிறார்கள்.  என்னுடைய மருமகன் விவசாயத் துறையில் பணியாற்றினார். அவருக்கு புரமோஷன் கொடுக்காமல் இழுத்தடித்தனர். இதுபோன்ற மறைமுக அழுத்தங்கள், மனதை வலிக்கச் செய்தன.” 

“அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவுக்கு உதவியாக நீங்கள் நியமிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் இருந்தீர்களே!”

“ஆம்! ஆச்சார்யா சட்ட நுணுக்கங்கள் தெரிந்தவர். என்னுடைய விசாரணையில் தெரியவந்த சின்னச்சின்ன விஷயங்களைக்கூட அவரிடம் சொன்னேன். அவருடைய ஜூனியர் சந்தேஷ் என்பவர், இந்த வழக்குகளின் விவரங்களை விரல்நுனியில் வைத்திருந்தார். சிறப்பு நீதிமன்றத்தில் குன்ஹா வழங்கிய தீர்ப்பு நிறைவு தந்தது. அதன்பின் நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதாவை விடுவித்துத் தீர்ப்பளித்தபோது வருத்தப்பட்டேன். அதிர்ச்சி அடையவில்லை. விசாரணை அதிகாரிகளின் எண்ணத்துக்கு மாறாக நீதிபதிகள் தீர்ப்பளிப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால், இப்படி ஒரு நல்ல வழக்கில், இப்படி தீர்ப்புச் சொல்லிவிட்டாரே என்று வருத்தம் இருந்தது. எனினும் ஜெயலலிதாவை நிரபராதி என்று குமாரசாமி சொல்லவில்லை. ‘வருமானத்துக்கு அதிகமாக, எட்டேகால் சதவிகிதம் சம்பாதித்துள்ளார்’ என்று சொன்னார். ‘அந்தக் கணக்கீட்டில் பிழை இருக்கிறது’ என்று அரசு வழக்கறிஞரிடம் நான் தகவல் சொன்னேன்.” 

p12a.jpg

“சொத்துக் குவிப்பு வழக்கில் இன்னும் விசாரணை நடத்தியிருக்கலாம் என்று கருதுகிறீர்களா?”

“ஆம். இதுபற்றி குற்றப் பத்திரிகையிலேயே சொல்லி இருக்கிறேன். ‘இன்னும் நிறைய சொத்துக்கள் வைத்திருக்கின்றனர். எனவே, அவற்றை எல்லாம் விசாரிப்பதற்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம், பிரிவு 178 (2)-ன் படி எனக்கு அதிகாரம் இருக்கிறது. எனவே, விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும்’ என்று கேட்டிருந்தேன். ஆனால், அதற்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை.”

“உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்து என்ன சொல்கிறீர்கள்?”

“இறுதியில் நீதி வெல்லும். நீதி இன்னும் செத்துப் போகவில்லை. அதிகாரம், பணபலம் எல்லாவற்றுக்கும் மேலே நீதி வெற்றி பெற்றிருக்கிறது. இதுபோன்ற தீர்ப்புகள் வந்தால்தான் ஊழல் கட்டுப்படுத்தப்படும்.”
 

http://www.vikatan.com/juniorvikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.