Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுக்கும் டெல்லி போலீஸ்... கைதாகிறாரா டி.டி.வி.தினகரன்?!

Featured Replies

இறுக்கும் டெல்லி போலீஸ்... கைதாகிறாரா டி.டி.வி.தினகரன்?!

 
 

டி.டி.வி.தினகரன்

 

இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுக்க பேரம் பேசியதாக டி.டி.வி.தினகரன் மீது டெல்லி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கில் டி.டி.வி.தினகரன் கைதாகலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

இரட்டை இலைச் சின்னத்துக்கு சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி ஆகியவை உரிமை கோரின. இதனால் இரட்டை இலைச் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்தது. இந்நிலையில் டெல்லியைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகரிடம் இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுக்க டி.டி.வி.தினகரன் தரப்பு 50 கோடி ரூபாய் பேரம் பேசியதாக டெல்லி போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் சுகேஷ் சந்திரசேகர் மற்றும் டி.டி.வி.தினகரன் நடவடிக்கைகளை போலீஸார் கண்காணித்தனர். அப்போது, டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சுகேஷ் சந்திரசேகர் கோடிக்கணக்கில் பணம் வைத்திருக்கும் ரகசியத் தகவல் டெல்லி குற்றப்பிரிவு போலீஸாருக்கு கிடைத்தது. அதன்பேரில் ஓட்டலில் சோதனை நடத்தி சுகேஷ் சந்திரசேகரிடமிருந்து ஒருகோடியே 30 லட்சம் ரூபாயை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், சுகேஷ் சந்திரசேகரையும் போலீஸார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுக்க டி.டி.வி.தினகரன், பணம் கொடுத்ததாக சுகேஷ் சந்திரசேகர் வாக்குமூலம் கொடுத்ததாக டெல்லி போலீஸார் தெரிவித்தனர். அடுத்து, தினகரன் மீதும் மூன்று பிரிவுகளின் கீழ் டெல்லி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, டெல்லியிலிருந்து சென்னை வந்த போலீஸார், டி.டி.வி.தினகரனிடம் நேரில் சம்மனை கொடுத்தனர். அதன்பேரில் கடந்த 22-ம் தேதி விசாரணைக்காக டி.டி.வி.தினகரன் டெல்லி சென்றார். அங்கு அவரிடம் கடந்த மூன்று நாள்களாக டெல்லி போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். 


விசாரணையில் டி.டி.வி.தினகரன் அளித்த பதில்கள் போலீஸாருக்கு திருப்திகரமாக இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்துவருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர். டி.டி.வி.தினகரன், சுகேஷ் சந்திரசேகர் ஆகியோரின் தொடர்பு குறித்த ஆவணங்கள் எங்களிடம் உள்ளன. அந்த ஆவணங்கள் அடிப்படையில் டி.டி.வி.தினகரனிடம் விசாரணை நடத்திவருகிறோம். எங்களது கேள்விகளுக்கு டி.டி.வி.தினகரன் மழுப்பலான பதில்களையே தெரிவித்துவருகிறார். மேலும், சில கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்காமல் அமைதியாக இருக்கிறார். சுகேஷ் சந்திரசேகர் யாரென்றே தனக்குத் தெரியாது என்றே சொல்லிவருகிறார் என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். 

டி.டி.வி.தினகரன்


இதுகுறித்து டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "டி.டி.வி.தினகரனிடம் விசாரணை நடத்த தயாராக 100க்கும் மேற்பட்ட கேள்விகளை தயாரித்துள்ளோம். அந்த கேள்விகள் ஆங்கிலத்திலும், தமிழிலும் உள்ளன. இதற்காக தமிழ் தெரிந்த அதிகாரிகள் மூலம் டி.டி.வி.தினகரனிடம் கேள்விகளைக் கேட்டோம். எங்களின் விசாரணைக்கு டி.டி.வி.தினகரன் முழுஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். அதே நேரத்தில் நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் சொல்வதில்லை. இதனால் விசாரணை தொடர்ந்து வருகிறது. 


புரோக்கர் சுகேஷ் சந்திரசேகருக்கு டி.டி.வி.தினகரனை அறிமுகப்படுத்தியவரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தனித்தனியாக விசாரணை நடந்துவருகின்றது. ஒவ்வொருவரிடமும் நடத்தப்படும் விசாரணை அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது. ஏற்கெனவே சுகேஷ் சந்திரசேகரை கைதுசெய்துவிட்டோம். அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் எந்தவகையில் கொடுக்கப்பட்டது என்ற விசாரணை நடந்துவருகிறது. அதில் எங்களுக்கு சில தகவல்கள் கிடைத்துள்ளன. பணம் கொடுத்ததற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன. மேலும் டி.டி.வி.தினகரன், அவருக்கு நெருக்கமானவர்களுடன் புரோக்கர் சுகேஷ்சந்திரசேகர் கடந்த சில வாரங்களாக நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். ஆனால், அதை டி.டி.வி.தினகரன் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் முற்றிலும் மறுக்கின்றனர். டி.டி.வி.தினகரன் மீது நடவடிக்கை எடுக்க எங்களிடம் உள்ள ஆதாரங்கள் போதுமானது. இதனால் அவர் விரைவில் கைது செய்யப்படலாம்" என்றனர். 


இதுகுறித்து டெல்லி போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "சுகேஷ் சந்திரசேகருக்கு கொச்சின், பெங்களூரு, சென்னை வழியாக ஹவாலா பணம் கைமாறப்பட்டுள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. சுகேஷ் சந்திரசேகரை டி.டி.வி.தினகரனுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் குறித்த விவரங்களும் கிடைத்துள்ளன. அவர்களும் எங்களது சந்தேக வளையத்துக்குள் இருக்கின்றனர். மேலும், டி.டி.வி.தினகரன், சுகேஷ்சந்திரசேகர் ஆகியோர் பேசிய போன் உரையாடல்களும் எங்களுக்கு ஆதாரமாக கிடைத்துள்ளன. இதனால் டி.டி.வி.தினகரன் விரைவில் கைது செய்யப்படுவார்" என்றார். 

http://www.vikatan.com/news/tamilnadu/87412-ttv-dinakaran-might-get-arrested-soon.html

  • தொடங்கியவர்

‘இனியும் இந்த நாடகத்தை நம்பத் தயாரில்லை!’ - தினகரனை நெருக்கும் கைது வளையம் #VikatanExclusive

 
 

தினகரன்

ரட்டை இலைச் சின்னத்தை மீட்க லஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டின்பேரில் கைது நடவடிக்கைகயை எதிர்கொள்ள இருக்கிறார் டி.டி.வி.தினகரன். ‘சசிகலா குடும்பத்தை அரசியலில் இருந்து முற்றாக அப்புறப்படுத்தும் வரையில் மத்திய அரசின் நடவடிக்கைகள் ஓயப்போவதில்லை. 'அந்தக் குடும்பத்துடன் தொடர்பில்லை' என்று கூறிக் கொண்டு, தினகரனோடு தொடர்பில் இருப்பவர்களின் நாடகத்தையும் டெல்லி கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது' என்கின்றனர் பா.ஜ.கவினர். 

அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும் இணைப்புக்கான பேச்சுவார்த்தையை இன்னும் தொடங்கவில்லை. 'முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்கு நீதி விசாரணை வேண்டும்; சசிகலா குடும்பத்தை முழுமையாக ஒதுக்கி வைக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றினால், பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார்' என அறிவித்தார் பன்னீர்செல்வம் அணியின் கே.பி.முனுசாமி. இதற்குப் பதில் அளித்த எடப்பாடி பழனிசாமியின் அணியின் வைத்திலிங்கமோ, 'அணிகள் இணைப்பில் முட்டுக்கட்டை போடுகிறார் முனுசாமி. அம்மா மரணம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது, விசாரணைக்கு எப்படி உத்தரவிட முடியும்?' என ஆதங்கப்பட்டனர். 'பேச்சுவார்த்தை தொடருமா? முறியுமா?' என்ற கேள்விகள் ஒருபுறம் இருக்க, அடுக்கடுக்கான சோதனைகளை சந்தித்து வருகிறார் அ.தி.மு.க அம்மா அணியின் தினகரன். 

"மாநில அரசில் நடக்கும் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகள் கவனித்து வருகின்றனர். இதுகுறித்து, பா.ஜ.க தலைமையின் கவனத்துக்கு தினமும் அறிக்கை அனுப்பி வருகின்றனர். குறிப்பாக சசிகலா குடும்பத்துடன் ஆட்சியில் இருப்பவர்களின் அனுசரணைகள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. ' சசிகலா குடும்பத்தை நீக்கிவிட்டோம்' என்று சொல்லிக் கொண்டே, தலைமைக் கழகத்தில் உள்ள சசிகலா, தினகரன் படங்களை அப்புறப்படுத்ததாததை உன்னிப்பாக கவனிக்கின்றனர். பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைவதற்கு முன்னால், இதுபோன்ற முட்டுக்கட்டைகளை நீக்குவது முக்கியமானதாகப் பார்க்கின்றனர். ஆட்சி தொடர்வதே சசிகலா குடும்பத்தின் தயவால்தான் என்று தெரிந்த பிறகு, எடப்பாடி பழனிசாமியின் கவனத்துக்கு சில விஷயங்களைக் கொண்டு சென்றனர். இதையடுத்து, பழனிசாமியிடம் பேசிய டெல்லி தூதுவர், 

எடப்பாடி பழனிசாமி'சசிகலா குடும்பத்தின் மீதான அதிரடிகள் தொடரும். அந்தக் குடும்பத்துடன் சமசரம் என்ற பேச்சுக்கே இடமில்லை. எங்களிடம் ஒரு மாதிரியும் அந்தக் குடும்பத்திடம் வேறு மாதிரியும் நடந்து கொள்வதை கவனித்துக் கொண்டுதான் வருகிறோம். 'நாடகத்தை நாங்கள் நம்பிக் கொண்டு இருக்கிறோம்' என இருந்துவிட வேண்டாம். ஜூன் மாதம் வரையில் நடவடிக்கைகளை தொடரும். அதன் ஒருபகுதிதான் தினகரன் மீதான நெருக்குதல்கள்' எனச் சொல்லி அனுப்பியுள்ளனர். கூடவே, ஆட்சியில் இருப்பவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் டெல்லியின் கவனத்துக்குக் கொண்டு செல்கிறார் பன்னீர்செல்வம். எனவேதான், பேச்சுவார்த்தையில் எந்த அளவுக்கு இறங்கிப் போக முடியுமோ, அந்தளவுக்கு வைத்திலிங்கம் இறங்கிப் போகிறார்.

'யாரையும் விமர்சித்துப் பேச வேண்டாம்' என கண்டிப்பான குரலில் உத்தரவிட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில், 'தினகரன் கைது செய்யப்படலாம்' என்ற தகவலைக் கேள்விப்பட்டு, சசிகலா கவலையில் ஆழ்ந்துவிட்டார். 'அவரைக் காப்பாற்ற ஏதேனும் வழி இருக்கிறதா?' என வழக்கறிஞர்களிடம் விசாரித்திருக்கிறார். அவரிடம் பேசியவர்கள், 'நமது வழக்கறிஞர் குமாரையும் வளைத்துக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள்' எனக் கூறியுள்ளனர். இதற்கு மேல் என்ன பேசுவது எனத் தெரியாமல் அமைதியாகிவிட்டார் சசிகலா" என விவரித்தார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர். 

"இன்றும் விசாரணை இருப்பதால் டெல்லியில் தங்கியிருக்கிறார் தினகரன். இன்று அவர் கைது நடவடிக்கைக்கு ஆட்படலாம். உடனே கைது செய்தால், அரசியல் உள்நோக்கம் என்று சொல்வார்கள் என்பதால்தான், காலதாமதம் செய்கின்றனர். இடைத் தரகர் சுகேஷ் சந்திரசேகரிடம் அவர் பேசவில்லை என்பதுதான் உண்மை. கார்டனில் இருந்து பணம் எதுவும் கொடுக்கவில்லை. தொலைபேசி உரையாடல் பதிவு இருப்பதாகச் சொல்கின்றனர். உண்மையில், செல்போனில் பேசிய ஸ்டேட்மெண்ட் லிஸ்ட்டைக் கையில் வைத்துக் கொண்டு, ' உங்கள் தரப்பில் இருந்து இவர் பேசியிருக்கிறார்' என நெருக்கடி கொடுக்கின்றனர். சட்டரீதியாகவே அனைத்தும் நடப்பது போல வெளி உலகுக்குக் காட்டுகின்றனர். நேற்று கைது செய்யப்படலாம் என்ற தகவலைப் பரப்பிவிட்டு, அவரைக் காக்க வைப்பதன் மூலம் மனரீதியான அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். ஓய்வு பெற்ற சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடம் தினகரன் பேசியிருப்பதாகவும் அவர்கள் தேர்தல் ஆணையத்தில் பேசியிருக்கிறார்கள் என்பதும் விசாரணையில் சொல்லப்பட்ட முக்கிய விஷயம். 'லஞ்சம் கொடுத்ததை தினகரன் ஒப்புக் கொண்டார்' என செய்தி வெளியிடுகின்றனர். அப்படி அவர் எந்த இடத்திலும் ஒப்புக் கொள்ளவில்லை. தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையராக இருக்கும் சந்தீப் சக்சேனா உள்பட சில அதிகாரிகள் அ.தி.மு.கவுக்கு ஆதரவான மனநிலையில் இருந்தனர். அவர்களுக்கும் பிரச்னை உருவாகியுள்ளது" என்கின்றனர் தினகரன் ஆதரவாளர்கள். 

"அணிகள் இணைப்பை நான் வரவேற்கிறேன். கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லது என்பதால் நான் ஒதுங்கிக் கொள்கிறேன் என தினகரன் கூறுவதையே சந்தேகக்கண் கொண்டு மத்திய அரசு கவனிப்பதன் விளைவைத்தான், லஞ்சம், விசாரணை, கைது எனப் பல வடிவங்களில் அவர் எதிர்கொள்கிறார். சசிகலா குடும்பம் அரசியலில் இருந்து முழுமையாக ஒதுக்கப்படும் வரையில் நடவடிக்கைகள் தொடர்வதை தடுக்க முடியாது" என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். 

http://www.vikatan.com/news/tamilnadu/87474-ttv-dinakaran-getting-arrested-soon.html

  • தொடங்கியவர்

தினகரனின் கைதுக்கு தாமதம் ஏன்?  டெல்லி போலீஸ் அதிகாரி பேட்டி! #VikatanExclusive

 
 

டி.டி.வி.தினகரன்

'டி.டி.வி.தினகரனைக் கைதுசெய்வதில் சில சிக்கல்கள் உள்ளன. அதனால்தான் அவரை கைதுசெய்வதில் தாமதமாகிறது' என, டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. 

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இரண்டு துருவங்களாகச் செயல்பட்டுவருகின்றனர். சிறைக்குள் சசிகலா இருந்தாலும், அவரது கட்டுப்பாட்டிலேயே கட்சிப் பணிகள் நடந்தன. சசிகலாவால் நியமிக்கப்பட்ட கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன்மூலம் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இந்தச் சூழ்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சசிகலா அணி வேட்பாளராக டி.டி.வி.தினகரன் களமிறக்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் அணி வேட்பாளராக மதுசூதனன் போட்டியிட்டார். அப்போது, இரண்டு அணிகளும் இரட்டை இலைச் சின்னத்துக்கு உரிமை கோரியதால், சின்னம் முடக்கப்பட்டது. 

சின்னத்தை மீட்டெடுக்க, இரண்டு அணிகளும் தீவிர முயற்சியில் ஈடுபட்டன. இந்த நிலையில், டெல்லி நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர், ஒரு கோடியே 30 லட்சம் ரூபாயுடன் டெல்லி குற்றப்பிரிவு போலீஸிடம் சிக்கினார். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, இரட்டை இலைச் சின்னத்தை மீட்க டி.டி.வி.தினகரன் தரப்பு பணம் கொடுத்ததாகத் தெரிவித்தார். தொடர்ந்து, டி.டி.வி.தினகரன் மீது டெல்லி போலீஸார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 
அடுத்து, டெல்லி போலீஸார் சென்னை வந்து டி.டி.வி.தினகரனிடம் சம்மனைக் கொடுத்தனர். அதன்பேரில் டி.டி.வி.தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜூனா மற்றும் உதவியாளர் ஜனார்த்தனன் ஆகியோர் டெல்லி சென்றனர். அங்கு, அவர்கள் மூன்று பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. டி.டி.வி.தினகரனிடம் தொடர்ந்து நான்கு நாள்களாக விசாரணை நடந்துவருகிறது. அவர், விரைவில் கைதுசெய்யப்படுவார் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. 

டி.டி.வி.தினகரன்


 இதுகுறித்து டெல்லி போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் டி.டி.வி.தினகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. டி.டி.வி.தினகரனின் நீண்டகால நண்பர் மல்லிகார்ஜூனா, உதவியாளர் ஜனார்த்தனிடம் விசாரணை நடத்தப்பட்டது. டி.டி.வி.தினகரனிடம் மட்டும் இதுவரை 26 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளோம். அவரிடம் இன்னும் விசாரணை நடத்தவேண்டியதுள்ளது. 'சுகேஷ் சந்திரசேகர் யார் என்றே தெரியவில்லை' என்று டி.டி.வி.தினகரன் எங்களிடம் முதலில் தெரிவித்தார். அதன்பிறகு, ஆதாரங்களைக் காட்டியதும் சுகேஷ் சந்திரசேகர் குறித்த விவரங்களை டி.டி.வி.தினகரன் தெரிவித்தார். இதுவரை நடத்திய விசாரணையில்... சுகேஷ் சந்திரசேகரை டி.டி.வி.தினகரனுக்கு அறிமுகப்படுத்தியது ஒரு வழக்கறிஞர் என்று தெரியவந்துள்ளது. அவரிடமும் விசாரணை நடத்தியுள்ளோம். 
சுகேஷ் சந்திரசேகருக்கு டி.டி.வி.தினகரன் தரப்பிலிருந்து 10 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. சில வாரங்களுக்கு முன்பு சுகேஷ் சந்திரசேகருக்கு டி.டி.வி.தினகரன் தரப்பிலிருந்து போன் அழைப்பு வந்துள்ளது. உடனடியாக கொச்சினுக்கு வாருங்கள். அங்கு பேசிக்கொள்வோம் என்ற தகவல் மட்டும் சொல்லப்பட்டுள்ளது. அதன்பேரில் சுகேஷ் சந்திரசேகர், கொச்சினுக்குச் சென்றுள்ளார். அங்கு, அவரிடம் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பணத்துடன் தேர்தல் அதிகாரிகளைச் சந்திக்க சுகேஷ் சந்திரசேகர் டெல்லி சென்றுள்ளார். அப்போதுதான் எங்களிடம் சுகேஷ் சந்திரசேகர் பிடிப்பட்டார். இந்த விவகாரத்தில், சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள பணம் யாரிடம் இருக்கிறது என்று விசாரணை நடத்திவருகிறோம். சுகேஷ் சந்திரசேகரிடம் கொடுக்கப்பட்ட பணம், ஹவாலா என்றும் தெரியவந்துள்ளது. 

டி.டி.வி.தினகரனிடம் இருந்து இன்னும் தகவல்கள் பெறவேண்டியதுள்ளது. இதனால்தான் அவரை கைதுசெய்ய காலதாமதமாகிவருகிறது. அவரை கைதுசெய்வதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இருக்கிறது. என்றாலும் விசாரணை முடிவடையவில்லை. டி.டி.வி.தினகரனிடம் விசாரணை நடத்த தனி டீம் அமைக்கப்பட்டுள்ளது. அவரிடம் நடத்தப்படும் விசாரணையை வீடியோவில் பதிவுசெய்துள்ளோம். டி.டி.வி.தினகரனும், சுகேஷ் சந்திரசேகரும் சந்தித்ததாக எங்களுக்கு ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதுதொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தியுள்ளோம். இந்த வழக்கைப் பொறுத்தவரை சட்டத்துக்கு உள்பட்டு விசாரணை நடந்துவருகிறது"என்றார். 

டெல்லி போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "கைதான சுரேஷ் சந்திரசேகரை எட்டு நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தோம். போலீஸ் காவல் முடிந்து, இன்று அவரை டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளோம்.அவரை மேலும் மூன்று நாள்கள் காவலில் எடுத்துள்ளோம். சுகேஷ் மற்றும் டி.டி.வி.தினகரன் பேசிய ஆடியோ உரையாடலை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளோம். விசாரணையில் சுகேஷ் சந்திரசேகர், எங்களிடம் முழுவிவரத்தையும் தெரிவித்துவிட்டார். இதனால், டி.டி.வி.தினகரன் மற்றும் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் யாரும் வழக்கிலிருந்து தப்பிக்க முடியாது. இரட்டை இலைச் சின்னத்தை குறுக்கு வழியில் பெற தேர்தல் அதிகாரிகள் யாரும் உதவி செய்தார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகரின் நண்பர்களிடமும் விசாரணை நடந்துள்ளது. அவர்களும் சில முக்கியத் தகவல்களைத் தெரிவித்துள்ளார். அதாவது, சுகேஷ் சந்திரசேகருக்கும், டி.டி.வி.தினகரனுக்கும் கடந்த 2003-ம் ஆண்டு முதல் பழக்கம் இருந்த அதிர்ச்சித் தகவல்களையும் தெரிவித்துள்ளனர். அது, தொடர்பாக டி.டி.வி.தினகரனிடம் விசாரணை நடத்த முடிவுசெய்துள்ளோம்"என்றனர். 

 டி.டி.வி.தினகரன் தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், "சுகேஷ் சந்திரசேகர் யாரென்று டி.டி.வி.தினகரனுக்குத் தெரியாது. சுகேஷ் சந்திரசேகரும், டி.டி.வி.தினகரனும் பேசியதற்கான ஆடியோ ஆதாரங்கள் இருப்பதாக டெல்லி போலீஸார் தெரிவித்தனர். அது தவிர, மேலும் சில ஆதாரங்கள் இருப்பதாகத் தெரிவித்தனர். ஆதாரங்கள் இருந்தால், அவரிடம் ஏன் இத்தனை நாள்கள் விசாரணை நடத்தவேண்டும். ஆதாரமே இல்லாமல் விசாரணை நடத்தப்படுகிறது. இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம்"என்றனர். 

http://www.vikatan.com/news/tamilnadu/87500-delhi-police-reveals-the-reason-behind-delay-in-arrest-of-dinakaran.html

  • தொடங்கியவர்

தினகரன் கைது உறுதி... இரட்டை இலையின் நிலை..!?

 
 

              மந்திரிகளுடன் டி.டி.வி.தினகரன்         

 தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டிருக்கும் இரட்டை இலைச் சின்னத்தை மீண்டும்  பெற அ.தி.மு.க. அம்மா அணியின் லீடர் டி.டி.வி.தினகரன் மேற்கொண்ட முயற்சி இப்போது அவருக்கு எதிராகத் திரும்பியுள்ளது. "இரட்டை இலைச் சின்னத்தை மீட்பதற்காக முறைகேடான வழிகளில் முயற்சி செய்துள்ளார் தினகரன். இதற்காக ஐம்பதுகோடி ரூபாய் பேரம் பேசி  எட்டரை கோடி ரூபாயை முன்பணமாகவும் கொடுத்ததை கண்டுபிடித்து விட்டோம்" என்கிறது தினகரனைப் பிடித்து வைத்திருக்கும் டெல்லி க்ரைம் பிராஞ்ச். அதே டெல்லித்தரப்பின் இன்னொரு பக்கமோ ரொம்பவும் யோசிக்க வைக்கும்படியான தகவல்களை வீசிச் செல்கிறது. "வி.ஐ.பி-களின் குரல்களில் பேசி மோசடி செய்ததாக பலமுறை கைதானவர் இந்த சுகேஷ் சந்திரசேகர்.  தினகரனின் டெல்லி லாபி என்பது  மிகவும் பெரிது. சுகேஷ் சந்திரசேகர் போல பலரை தினகரனுக்குத் தெரியும்.  அப்படி இருக்கும்போது, இதுபோன்ற 'டீல்' களை  தினகரன் போனில் பேசினார் என்று சொல்வதற்கே வாய்ப்பு இல்லை.  தினகரன், அவ்வளவு விவரமில்லாத ஆளும் அல்ல. தினகரன் சார்பில் யாராவது பேசினார்கள் என்ற லெவலில்தான் இந்த வழக்கை முடிக்க முடியும். அப்படி ஒரு நிலையில் தினகரனை பெரிய அளவுக்கு முடக்கி வைக்கவும் முடியாது.  இப்போதைக்கு தினகரன் மீது  இன்னொரு எஃப்.ஐ.ஆர். போடலாம், அவ்வளவுதான்  செய்ய முடியும். தினகரனை முதல்நாள் விசாரிக்கும் போதே போலீசுக்கு தெரிந்திருக்கும்...  இதில் நாம் அரைகிணறு கூட தாண்ட முடியாது என்று. தினகரன் மீது போடப்படும் எஃப்.ஐ.ஆரை வைத்துக் கொண்டு எதிர்தரப்பு வலுவாக ஆர்க்யூமென்ட் செய்யவும் வாய்ப்பில்லை. 
சென்னை சைபர் க்ரைம் போலீசிலேயே சுகேஷ் சந்திரசேகர் மீது பல வழக்குகள் விசாரணை முடிக்கப்படாமல், கிடப்பில் கிடக்கிறது. அந்த வழக்குகளை தூசு தட்டினாலே சுகேஷ் சந்திரசேகர் பின்னணி வெளிச்சத்துக்கு வந்து விடும். சென்னையில், இருந்த தினகரனுக்கு சம்மன் கொடுத்து டெல்லிக்கு வரவழைத்த போலீஸ், சுகேஷ் சந்திரசேகர் குறித்த தகவல்களைத் தோண்டியெடுக்க எவ்வளவு நேரம் ஆகப் போகிறது?  இவ்வளவுதூரம் தினகரனை நெருக்குவதற்கு என்ன காரணம்? இரட்டை இலையை மீட்கக் கொடுத்ததாக சொல்லப்படும் எட்டரை கோடி ரூபாய் மட்டும்தானா? தினகரன் டெல்லி க்ரைம் பிராஞ்ச் பிடியிலும், சசிகலா பெங்களூரு சிறையிலும் இருக்க,  'கொடநாடு' எஸ்டேட்டில் நடந்த கொலை குறித்து என்ன விசாரணை நடந்திருக்கிறது? பொலிரோ ஜீப்களில் வந்தவர்கள்தான் இந்தக் கொலையைச் செய்துள்ளனர். பொலிரோ ஜீப்பின் முகப்பிலும், பின்னாலும் அரசின் முத்திரை இருந்ததாக  முதற்கட்ட போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகியிருக்கிறது. அந்த அரசு முத்திரை உண்மையானதா, போலியா?" என்று பல்வேறு கேள்விகளை எழுப்புகிறார்கள்.


                     டெல்லி க்ரைம் பிராஞ்ச் விசாரணையில் டி.டி.வி. தினகரன்                

                           

சுகேஷ் சந்திரசேகர் சிக்கியுள்ள பல மோசடி  வழக்குகளில், ஜெயலலிதாவுக்கு ஆஜரான பி.குமார் எனும் வழக்கறிஞரே ஆஜரானதாக சொல்லப்படுகிறது. டி.டி.வி. தினகரனை விசாரித்த டெல்லி போலீசார், மேற்கொண்டு வழக்கறிஞர் பி.குமார்,  தினகரனுக்கு வேண்டப்பட்ட இன்னொரு வழக்கறிஞர் கோபி, டி.டி.வி. தினகரனின் நண்பர் மல்லிகார்ஜூனா, உதவியாளர் ஜனார்த்தனன்  உள்ளிட்ட மேலும் மூவரிடமும் விசாரணை நடத்தியுள்ளனர். "தினகரன் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்... 'இரட்டை இலைச் சின்னத்தை இந்த உள்ளாட்சித் தேர்தலுக்குள் பெற்றுவிட்டால், போதும்' என்ற அவசரம் அவருடைய தொலைபேசி உரையாடலில் அப்பட்டமாகத் தெரிகிறது. பல அணிகளாக கட்சி சிதறியிருந்தாலும், இரட்டை இலை கைக்குவந்துவிட்டால் அனைத்தையும் சரிசெய்து விடலாம் என்ற நம்பிக்கையில்தான் அவரே நேரடியாக இதில் தலையிட்டிருக்கிறார். சுகேஷ் சந்திரசேகர் சந்திப்பதற்காக தினகரன் எந்த ஹோட்டலில் வந்து காத்திருந்தார், இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்து கொடுத்தது யார் போன்ற மொத்த விபரங்களும் சாட்சிகளாக கைவசம் உள்ளது. முதல்நாள் விசாரணையில் தினகரனை கொஞ்சம் விட்டுப் பிடித்தோம். அடுத்தநாள் விசாரணையின் போது, 'எங்களிடம் இந்த ஆவணங்கள் உள்ளது' என்று சிலவற்றை மட்டுமே சொன்னோம். தினகரன் அதன்பின்னர் ஏதும் பேசவில்லை. அமைதியாகிவிட்டார்.
'என்னிடம் போனில் பேசிய குரல், மிகவும் நெருக்கமான ஒரு நீதிபதியின் குரல். அதனால்தான்  அவரிடம்,  ஏதாவது இதில் உதவ முடியுமா? என்று கேட்டேன்' என்று   தன்னுடைய போன் உரையாடலை ஏறக்குறைய தினகரன்  ஒப்புக் கொண்டிருக்கிறார்.  வாய்ஸ் டெஸ்ட்டுக்கு அந்தக் குரலை அனுப்பி வைத்துள்ளதோடு இது தொடர்பாக பல விஷயங்களை பாதுகாத்து  வருகிறோம். அனைத்து கேள்விகளுக்கும், இப்போது  'ஆம்' என்றேதான்  தினகரன் தலையை ஆட்டுகிறார். ஆம் என்றுதான் விசாரணை ரிப்போர்ட்டில் கையெழுத்துப் போட்டிருக்கிறார்.  வருகிற வெள்ளிக்கிழமைக்குள் (28-ம்தேதி) தினகரனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி விடுவோம். விசாரணைக்கு உரிய முகாந்திரங்கள் இருப்பதை கோர்ட்டில் தெரிவித்த காரணத்தால்தான்  எட்டுநாட்கள் விசாரித்த பின்னரும் எங்கள் கோரிக்கையை கோர்ட் ஏற்று சுகேஷ் சந்திரசேகரை மேலும் முன்றுநாள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க  கோர்ட் அனுமதி கொடுத்துள்ளது. தினகரன் கைது செய்யப்படுவது உறுதியாகிவிட்டது.  இரட்டை இலை மீட்பு என்ற அவரது நோக்கம்தான் உறுதியாக சொல்ல முடியாத அளவில் இருக்கிறது." என்று நம்பிக்கையுடன் சொல்கிறது டெல்லி விசாரணைத் தரப்பு. சென்னை ஆர்.கே.நகர்த் தொகுதியில் எப்படியாவது வென்று அடுத்த அத்தியாயத்தை எழுதலாம் என்றிருந்த டி.டி.வி. தினகரன்,  தேர்தல் நிறுத்தம், இரட்டை இலை முடக்கம், சசிகலாவுக்கு தண்டனை என்று அடுத்தடுத்து சரிவுகளை சந்தித்து வருகிறார். நான்காவது சரிவாக அவரே கைது நடவடிக்கைக்குள் வரவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 'இலை' யை மீட்கப் போய், தினகரன் தன்  'தலை' யைக் கொடுத்து இருப்பதுதான் புதிய திருப்பம்.

http://www.vikatan.com/news/tamilnadu/87542-dinakaran-might-get-arrested-soon-what-will-happen-to-two-leaves-symbol.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.