Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாற்றுத் தலைமை ஏன்?

Featured Replies

ஆயுதப் போராட்டம் 2009ஆம் ஆண்டு மே மாதம் மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர் தமிழ்த் தேசிய இனத்தின் பிரச்சினையைக் கையாள்கின்ற பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலையில் சுமத்தப்பட்டது.

அப்பொழுது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அங்கம் வகித்தன. யுத்தத்திற்குப் பின்னர் 2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வவுனியா நகரசபைக்கும் யாழ். மாநகரசபைக்கும் தேர்தல்கள் நடத்தப்பட்டன.

முகாமில் அடைக்கப்பட்டிருந்த மக்கள் தொடர்பாகவும் ஒட்டுமொத்த யுத்தம் தொடர்பாகவும் வன்னி மக்களும் யாழ்ப்பாண மக்களும் எத்தகைய உணர்வுகளைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிவதற்காக இலங்கை அரசாங்கம் இந்த இரண்டு தேர்தல்களையும் நடத்தியது.


வேட்புமனுக்களில் கையெழுத்திட்டு தேர்தல் திணைக்களத்திடம் கையளிப்பதற்கேகூட தமிழரசுக் கட்சியின் செயலாளர் வவுனியா வர முடியாத நிலையில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு ஒரு நாள் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அனுராதபுரம் சென்று  மாவை சேனாதிராஜாவின் கையெழுத்து வாங்கி வந்து வேட்பாளர்களை நியமித்து அந்தத் தேர்தலுக்கு முகங்கொடுத்தோம்.

வேட்பாளர்களாகப் பெயர் கொடுத்தவர்கள் பலர் இறுதி நேரத்தில் பின்வாங்கினர். அப்படியிருந்தபொழுதிலும்கூட கூட்டமைப்பு வெல்ல வேண்டும் ; அதன் மூலம் அரசாங்கத்திற்கு தெளிவான செய்தி சொல்லப்படவேண்டும் என்பதை முன்னிறுத்தி, ஈழ  மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கடினமாகப் போராடி வவுனியா நகரசபைத் தேர்தலில் பெரும்பான்மையான ஆசனத்தை வெற்றிகொள்ள வைத்தது. பயத்தின் நிமித்தம் வேட்பாளர்களே ஒதுங்கியிருந்த நிலையிலும் தமிழரசுக் கட்சி பிரசாரத்திற்கு வருவதற்கே அஞ்சிய நிலையிலும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியே அந்த வெற்றியைத் தேடிக்கொடுத்தது.


இதனைப் போன்றே யாழ். மாநகரசபைத் தேர்தலிலும் போட்டியிடுவதற்கு வேட்பாளர்கள் ஒருவரும் முன்வராத நிலையில் குறிப்பாக இளைஞர்கள் முன்வராத நிலையில், யாழ்ப்பாணத்திற்கு வெளியிலிருந்து இளைஞர்களை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி களமிறக்கியது. அது மாத்திரமில்லாமல், வேட்பாளர்களே பிரசாரத்திற்கு வருவதற்கு அஞ்சிய நிலையிலும் தமிழரசுக் கட்சியின் செயலாளர் உள்ளிட்ட அனைவரும் மார்ட்டின் வீதி காரியாலயத்தில் முடங்கியிருந்த நிலையிலும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸும்தான் வீதி வீதியாகப் பிரசாரங்களில் ஈடுபட்டு, இலங்கை தமிழரசுக் கட்சியின் வீடு சின்னத்தில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்காக அரும்பாடுபட்டன. 


இவ்வாறு இராணுவத்தினதும் புலனாய்வுப் பிரிவினரதும் கட்டுப்பாட்டில் இருந்த வடக்கு மாகாணத்தில் ஜனநாயகத்தை நிலைநிறுத்தவும் ஐக்கியத்தைக் காக்கவும் மக்களுக்கு நம்பிக்கையூட்டவும் தமிழினம் தோற்றுவிடவில்லை என்பதை நிலைநாட்டவும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸும் தங்களது கட்சிச் சின்னங்களை விடுத்து வீட்டுச் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பிரசாரத்தில் ஈடுபட்டன.

இவ்வாறுதான் தமிழரசுக் கட்சி காப்பாற்றப்பட்டது என்பதை இன்று பதவிக்கு வந்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாண சபை உறுப்பினர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.


விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒவ்வொரு தேர்தல் விஞ்ஞாபனத்திலும் தமிழ் மக்களின் கோரிக்கைகள் மிகத் தெளிவாக வரையறை செய்யப்பட்டன.


1. வடக்குகிழக்கு மீண்டும் இணைக்கப்படவேண்டும்.
2. தமிழ் மக்களின் இறையாண்மை, சுயநிர்ணய உரிமை என்பவை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
3. சமஷ்டி அரசியல் அமைப்பு முறையிலான அதிகாரப் பங்கீடு மேற்கொள்ளப்படவேண்டும்.
4. இவை எல்லாவற்றின் அடிப்படையிலும் தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழும் பிரதேசத்தில் ஒரு சுயாட்சி அரசு உருவாக்கப்பட வேண்டும்.


இந்தக் கொள்கைகளின் அடிப்படையில், ஓர் தீர்வுத் திட்டமும் தயாரிக்கப்பட்டது. இதனடிப்படையிலேயே மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டோம். மூன்றாந்தரப்பு மத்தியஸ்தத்துடனான பேச்சுவார்த்தைகள் அவசியம் என்பதை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தொடர்ந்தும் வலியுறுத்திவந்தது. குறைந்த பட்சம் பேச்சுவார்த்தைகள் குழம்புகின்றபொழுது யாரால் எவ்வாறு பேச்சு வார்த்தைகள் குழம்பின என்பதை சர்வதேச சமூகம் அறிந்துகொள்வதற்காகவாவது இந்த மூன்றாம் தரப்பு தேவைப்பட்டது.

ஆனால், அதனை தமிழரசுக் கட்சி தவிர்த்தே வந்தது. பேச்சுவார்த்தைகளை நிராகரித்த மகிந்த ராஜபக்ஷ  பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை நியமிப்பதாகவும் அங்கு சென்று எமது பிரச்சினைகள் தொடர்பாகப் பேசும்படியும் கூறியபொழுது ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அதனை நிராகரித்தது.

மேற்சொன்ன நான்கு முக்கியமான விடயங்களில் இருதரப்புக்கும் இடையில் முடிவுகள் எட்டப்பட்டால் மாத்திரமே பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்குச் செல்வதில் பிரயோசனம் இருக்கும் என்று நாம் வலியுறுத்தினோம். அதன் பின்னரே கூட்டமைப்பின் தலைவர் தெரிவுக்குழுவுக்குச் செல்வதில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்தார்.


இப்பொழுது அவ்வாறானதொரு பேச்சுவார்த்தை புதிய அரசாங்கத்துடன் ஏற்படுத்தப்பட வேண்டும். அதுவும் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை நாம் வலியுறுத்தியபோதும் இன்று அதனை ஏற்றுக்கொள்வதற்கு  சம்பந்தன்  தயாராக இல்லை. மாறாக 51பேர் கொண்ட ஒரு அரசியல் சாசன வழிநடத்தல் குழுவில் இந்த விடயங்கள் எல்லாம் பேசப்படும் என்று எமக்குச் சொல்லப்பட்டது.

அது ஒரு சரியான வழிமுறையல்ல. வழிநடத்தல் குழுவில் அங்கத்துவம் பெற்றுள்ளவர்களில் மிகப் பெரும்பான்மையோர் சிங்களப் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்பதால், எமது கோரிக்கைகள் அனைத்தும் நிராகரிக்கப்படும் என்றும், ஆகவே இருதரப்புப் பேச்சுவார்த்தை என்பது முக்கியம் என்றும் நாம் வலியுறுத்தியபோதும் அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருந்தது.


1. வடக்குகிழக்கு இணைக்கப்படமாட்டாது. இது தொடர்பாக யாரும் எந்தக் கோரிக்கையையும் முன்வைக்கவில்லை என்று அரச தரப்பின் அமைச்சர்களும் பிரதமர் மற்றும் ஜனாதிபதி உள்ளிட்டவர்களும் கூறுகின்றனர்.
2. ஒற்றையாட்சியில் எந்தவித மாற்றமும் இல்லை. அதனை யாரும் கோரவுமில்லை எனவும் அரச தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது.
3. பௌத்தத்திற்கு முதலிடம் என்பதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. அதனை மாற்றுமாறு யாரும் கோரவுமில்லை எனவும் அரச தரப்பினரால் மகாநாயக்கர்களுக்கு விளக்கமளிக்கப்படுகிறது.


ஆனால் இவைதான் எமது அடிப்படைப் பிரச்சினைகள். இவற்றை மையமாக வைத்துத்தான் பேசுவோம் என்று தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு, மக்களின் ஆணையைப் பெற்றுக்கொண்டவர்கள், நாம் அரச தரப்புடன் இவ்வாறுதான் பேசினோம். அரச தரப்பினர் பொய் கூறுகிறார்கள் என்று கூட தமக்கு வாக்களித்த மக்களுக்குச் சொல்ல முடியாமல், வாய் அடைத்துப்போய் நிற்பதைப் பார்க்கின்றபொழுது, இவர்கள் ஒட்டுமொத்தமாகவே தமிழ் மக்களின் சகல கோரிக்கைகளையும் கைவிட்டுவிட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. 


புதிய அரசாங்கத்தைக் கொண்டுவருவதனூடாக பல சாதனைகளைப் படைக்கலாம் என்று கூறி புதிய ஜனாதிபதிக்காக வாக்கு சேகரித்துக் கொடுத்தவர்களால், மக்களை தமது சொந்தக் காணிகளில் முழுமையாக மீளக் குடியேற்ற முடியவில்லை.
இராணுவத்தினரின் வசமுள்ள காணிகளை மீட்டெடுக்க முடியவில்லை.
வடக்கு மாகாணத்தில்  இராணுவத்தின் ஆக்கிரமிப்பைக் குறைக்க முடியவில்லை.
காணாமல் போகச்செய்யப்பட்டோர் தொடர்பில் காத்திரமான முடிவுகள் எதனையும் பெற்றுக்கொடுக்க முடியவில்லை.


அரசியல் கைதிகளின் விடுதலைக்கு காத்திரமான பங்களிப்பைச் செய்ய முடியவில்லை. யுத்தத்திற்குப் பின்னர் ஏற்படுத்தப்பட்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. வடக்குகிழக்கெங்கும் பௌத்தர்கள் வாழாத இடங்களில் உருவாக்கப்படும் பௌத்த விகாரைகளை கட்டாமல் நிறுத்த முடியவில்லை.


இவ்வாறு எந்த விடயங்களிலும் ஒரு முறையான பேச்சுவார்த்தையை அரச தரப்புடன் நடத்தி அதன் சாதக, பாதக விடயங்களை மக்களுக்குத் தெரிவிக்க முடியாத ஒரு தலைமையாகவே  சம்பந்தன் தலைமையிலான தமிழரசுக் கட்சி இயங்கி வருகிறது.
இது ஒருபுறமிருக்க, ஒரு சர்வதேச விசாரணையூடாகவே இலங்கை அரசாங்கத்தை வழிக்குக் கெண்டுவர முடியும் என்பதுடன், தமிழ் தேசிய இனப்பிரச்ச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு சர்வதேச விசாரணை என்பது மிக அவசியம் என்பதை மகிந்த ராஜபக்ஷவின் காலகட்டத்தில் வலியுறுத்திவந்த  சம்பந்தன், பின்னர் அமெரிக்காவின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கை அரசாங்கம் முன்வைத்த உள்ளக விசாரணையை ஏற்றுக்கொண்டது மாத்திரமல்லாமல், அதன் மூலம் சர்வதேச சமூகத்திடமிருந்து இலங்கையைப் பாதுகாக்கவும் முற்பட்டார். 


அப்போதைய இலங்கை ஜனாதிபதி மகிந்தவிற்கும் ஐ.நா.வின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கும் இடையில் கொழும்பில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒரு பிரகடனத்தின் பிரகாரம், உள்நாட்டில் இடம் பெயர்ந்த மக்கள் அனைவரும் ஓராண்டிற்குள் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என்று கூறியபோதிலும்கூட எதுவுமே நடைபெறவில்லை. இதன் பின்னர், பான் கீ மூனால் தருஸ்மன் தலைமையிலான மூன்று பேர் கொண்ட ஒரு குழு நியமிக்கப்பட்டு அது இலங்கையில் நடைபெற்ற மனிதவுரிமை மீறல்கள், யுத்தக்குற்றங்ள் தொடர்பாக ஆய்வு செய்தது.

இதனடிப்படையில் இலங்கையில் யுத்தக் குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் போன்றவை நடைபெற்றதற்கான சாத்தியப்பாடு உள்ளதென்றும் அதனைத் தொடர்ந்தும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் பரிந்துரை செய்திருந்தார்கள். இதனடிப்படையில் ஐ.நா. செயலாளர் நாயகம் அந்த அறிக்கையை  ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிடம் கையளித்து தொடர்ந்தும் இலங்கை தொடர்பாக அவதானம் செலுத்தும்படி கோரியிருந்தார்.

இதன் பிரகாரம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் விசாரணைகளுக்கு முழுமையான ஆதரவினை வழங்குவது என்று முடிவு செய்தபோதிலும் 2012ஆம் ஆண்டு ஐ.நா.விற்குச் செல்வதற்கான தேவையில்லை என்ற முடிவை சம்பந்தர் எடுத்தார். அந்த முடிவுகூட சம்பந்தரின் தனிப்பட்ட முடிவாக இருந்ததுவே அன்றி கூட்டமைப்பின் முடிவாக இருக்கவில்லை.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆரம்பம் முதல் இன்றுவரை தொடர்ச்சியாக சர்வதேச விசாரணையை வலியுறுத்தியது மாத்திரமல்லாமல், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலும் அதன் அங்கத்துவ நாடுகளிலும் தனித்தும் கூட்டாகவும் இதனை வலியுறுத்தி வந்துள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இத்தகைய விசாரணைகள் தொடர்பாக திட்டவட்டமான நிலைப்பாடுகள் சம்பந்தரிடமோ தமிழரசுக் கட்சியிடமோ இல்லாததால், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் செயற்பாட்டில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான செயல்களில் ஈடுபடவும் சம்பந்தரது நடவடிக்கைகளே காரணமாக அமைந்தன.

மனிதவுரிமை மீறல்கள், யுத்தக் குற்றங்கள், மனிதகுலத்திற்கெதிரான குற்றங்கள் மற்றும் சித்திரவதைகள், இன ஒழிப்பு நடவடிக்கைகள் போன்றவற்றில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டிருப்பதாக அத்துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த சர்வதேச நிபுணர்கள் கூறியபோதிலும்கூட அவையெல்லாவற்றையும் கைவிட்டு இலங்கை அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள் சம்பந்தன், சேனாதி மற்றும் சுமந்திரன் ஆகியோர் செயற்பட்டு வருவதையே இன்று காணக் கூடியதாக உள்ளது. சர்வதேச விசாரணை இன்றேல், எந்தவிதமான தீர்வும் எட்டப்படமுடியாது என்று கூறிவந்த சம்பந்தர், தனக்கும் தனது சகாக்களுக்கும் சில வசதிகளும் வரப்பிரசாதங்களும் கிடைத்ததன் காரணமாக தாமே முன்வைத்த சகல கோரிக்கைகளையும் கைவிட்டதாகவே தோன்றுகின்றது.


ஆகவே அடிப்படையில்,  சம்பந்தனதும் தமிழரசுக் கட்சியினதும் காய் நகர்த்தல் என்பது மிகப் பெரிய தோல்விகளையே சந்தித்து வருகிறது. இந்த இக்கட்டான சூழலில்கூட இந்த விடயங்களை மீளாய்வு செய்யாமல் தமிழர்களுக்கு ஒரு கருத்தும் சிங்கள மக்களுக்கு ஒரு கருத்துமாக இரு முகங்களைக் காட்டிநிற்கும் போக்கை  தமிழ் மக்கள் தமது தலைமையின்மீது வைத்திருந்த நம்பிக்கையை சிதறடிக்கும் ஒரு போக்காகவே நாம் பார்க்கிறோம்.


இறுதியாக அண்மையில் வடக்கு மாகாண சபையில் ஏற்படுத்தப்பட்ட குழப்பங்களும் தமிழரசுக் கட்சியின் தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளால் முதலமைச்சருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானமும் அந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவருவதற்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் அதன் பேச்சாளர்  சுமந்திரனும் எடுத்த முயற்சிகளும் கொடுத்த வழிகாட்டுதல்களும் தமிழரசுக் கட்சியின் நடவடிக்கைகள்மீது தமிழ் மக்கள் மத்தியில் பாரிய வெறுப்பை ஏற்படுத்தியுள்ளன.

மாகாண சபையை திறம்பட நடத்துவதற்கு வழிகாட்ட வேண்டியவர்கள், அதனைச் சீர்குலைப்பதற்கு முன்னின்று உழைத்தார்கள். மக்கள் அணிதிரண்டு வந்து இந்த சீர்குலைப்பு நடவடிக்கைக்கு எதிராக நடத்திய பெரும் போராட்டங்களிலிருந்து தமிழரசுக் கட்சி நிறையவே பாடங்கள் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கின்றது. 
யுத்தத்திற்கு பின்னர் எமக்குக் கிடைத்த பல சந்தர்ப்பங்கள் கைநழுவவிடப்பட்டன. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பாக மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்கவுடன் எமது பிரச்சினை தொடர்பில் ஒரு உடன்பாட்டிற்கு வருமாறு கோரினோம். அது கைவிடப்பட்டது. 


ஆட்சி மாற்றம் என்பது அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளுக்கும் தேவைப்பட்டது. அவர்களுடன் பேசி சில முக்கிய விடயங்களைக் கையாண்டிருக்கலாம். அதுவும் கைவிடப்பட்டது.  ஐ.நா. சபையில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தியிருக்கலாம். அதுவும் கைவிடப்பட்டது. 
எமது முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக அரசாங்கத்துடன் ஒரு வெளிப்படையான பேச்சுவார்த்தையை நடத்தி தீர்வுகளை எட்ட முயற்சித்திருக்கலாம். அதற்கான சர்வதேச சூழல்களும் கனிந்திருந்தன. அதனை நாங்கள் வலியுறுத்தியபோது அதுவும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.


பாராளுமன்றம், மாகாண சபைகளில் இருக்கக் கூடிய எமது பிரதிநிதித்துவ பலத்தைப் பிரயோகித்து எமது அன்றாடப் பிரச்சினைகளான மீள்குடியேற்றம், காணிவிடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் திட்டவட்ட முடிவுகளை எடுத்திருக்கலாம். ஆனால் அவற்றின்மீது உரிய அக்கறை செலுத்தப்படவில்லை.


வெளிப்படைத் தன்மையுடன் நடத்தப்பட வேண்டிய பல விடயங்கள் இரகசியம் பேணுதல் என்ற அடிப்படையில் நடந்ததாலும் பங்காளிக் கட்சிகளுடன்கூட பேச்சுவார்த்தை மற்றும் கலந்துரையாடல்களை நடத்தத் தயங்கியதாலும் அரசியல் சாசன விவகாரத்தில் உள்ளார்ந்த நடவடிக்கைகளை எம்மால் அறிய முடியவில்லை. இந்த இரகசிய நடவடிக்கைகள் என்பவை தமிழ்ச் சமூகத்தை இன்று நட்டாற்றில் தள்ளிவிட்டிருக்கின்றன. தமிழரசுக் கட்சியின் தன்னிச்சையான செயற்பாட்டால் ஏற்பட்டுள்ள இந்த அவல நிலைக்கு ஒட்டுமொத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் பங்காளிகளாக்க அந்தக் கட்சி எத்தனிக்கிறது.


தமிழரசுக் கட்சியின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளும்  அந்தக் கட்சி உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் இராஜதந்திர ரீதியில் அடைந்துவரும் தோல்விகளாலும் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோரின் சர்வாதிகாரத் தனமான நடவடிக்கைகளாலும் வெளிப்படைத் தன்மையற்ற அரசுடன் இணைந்த இரகசிய வேலைத்திட்டங்களாலும் ஐக்கியம் என்று சொல்லிக்கொண்டே ஐக்கியத்தை சீர்குலைப்பதாலும் இன்றைய இக்கட்டான காலகட்டத்தில் தமிழ் மக்களுக்கு ஓர் கூட்டான மாற்றுத்தலைமை தேவை என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கருதுகின்றது.


சுரேஷ் க. பிரேமச்சந்திரன்
தலைவர் 
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

 

http://www.thinakkural.lk/article.php?article/thhwsudvbv302309d37c08f76866fzynkb129e96277388757530c72caa2v

  • தொடங்கியவர்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.