Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அ.தி.மு.க சண்டையில் வேட்டி கிழிந்தால் கவர்னருக்கு ஏன் வியர்க்கிறது?

Featured Replies

அ.தி.மு.க சண்டையில் வேட்டி கிழிந்தால் கவர்னருக்கு ஏன் வியர்க்கிறது?

 

ப.திருமாவேலன்

 

வர்னர் வித்யாசாகர் ராவ்தான் தமிழ்நாட்டின் இன்றைய சூழ்நிலைக்கு வில்லன். எடப்பாடியும் பன்னீர்செல்வமும் தினகரனும் பாவம்... தாங்கள் செய்வது இன்னதென்று தெரியாமல் செய்கிறார்கள். வித்யாசாகர் ராவ் தெரிந்தே செய்கிறார். தவறுக்கு மேல் தவறைத் திட்டமிட்டுச் செய்கிறார். ஆடும் நாற்காலியில் உட்கார்ந்து இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு முட்டுக்கொடுக்கும் இரண்டு கால்கள் கவர்னருடையவை. ‘ஏன் இப்படி நடந்துகொள்கிறார்’ என்பதற்கான காரணங்கள் பச்சையாக வெளியே தெரிந்தபிறகும், தெருவில் நாறிய பிறகும் வித்யாசாகர் ராவ் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. அவருக்கான அசைன்மென்ட் ‘அவ்வளவு’ பெரியது போல!

அ.தி.மு.க கடந்த சட்டசபைத் தேர்தலில் 134 இடங்களை வென்றது. (பிறகு நடந்த தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தல் வெற்றிகளைச் சேர்த்தால் 136). ஜெயலலிதா இறந்து போனார். சபாநாயகரைக் கழித்தால் 134 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு அந்தக் கட்சிக்கு இருக்க வேண்டும். அதில் 22 பேர் இன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று தினகரன் பக்கம் நிற்கிறார்கள். இதனால் பெரும்பான்மைக்குத் தேவையான 117 உறுப்பினர்கள் ஆதரவு இல்லாமல் ஆகிவிட்டது எடப்பாடி பழனிசாமியின் அரசுக்கு. அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்த கவர்னர் வித்யாசாகர் ராவ் இதுபற்றிக் கேள்வி கேட்டிருக்க வேண்டும்; யாரும் சொல்லாமலேயே கேள்வி எழுப்பியிருக்க வேண்டும். தினகரன் அணியைச் சேர்ந்த 19 சட்டமன்ற உறுப்பினர்கள் வித்யாசாகர் ராவை ஆகஸ்ட் 23-ம் தேதி நேரில் சந்தித்தார்கள். ‘முதல்வர் எடப்பாடிமீது நம்பிக்கை இல்லை’ என்று கடிதங்கள் கொடுத்துள்ளார்கள். ‘உங்கள் மீது நம்பிக்கை இல்லை என்று 19 எம்.எல்.ஏ-க்கள் சொல்லி இருக்கிறார்கள். அதற்கு உங்கள் விளக்கம் என்ன?’ என்று முதலமைச்சரிடம் கவர்னர் கேட்டிருக்க வேண்டும். அதையும் செய்யவில்லை.

p2.jpg

‘இந்தக் கடிதங்கள்மீது நடவடிக்கை எடுங்கள்’ என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைக்கின்றன. ‘மாநில சட்டசபையை உடனே கூட்ட வேண்டும். முதலமைச்சர் தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்று எதிர்க்கட்சிகள் வைத்த கோரிக்கையை கவர்னர் வெளிப்படையாக நிராகரித்துள்ளார். ‘‘இது அவர்களின் உள்கட்சி விவகாரம்’’ என்று கவர்னர் சொன்னதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் சொல்லியிருக்கிறார்.

‘அ.தி.மு.க-வுக்கு சசிகலா பொதுச்செயலாளராக இருக்கலாமா, கூடாதா?’ என்பது அந்தக் கட்சியின் உள்விவகாரம். ‘அவர் போட்ட கையெழுத்து செல்லுமா, செல்லாதா?’ என்பது அந்தக் கட்சியின் உள்விவகாரம். ‘சசிகலாவால் துணைப் பொதுச்செயலாளர் ஆக்கப்பட்ட தினகரனுக்கு அந்தப் பதவியில் தொடரவோ, உத்தரவுகள் போடவோ, யாரையும் சேர்க்கவோ, நீக்கவோ அருகதை இருக்கிறதா?’ என்ற கேள்வி அந்தக் கட்சியின் உள்விவகாரம். ஆனால், ‘முதலமைச்சருக்கு எங்கள் ஆதரவு இல்லை’ என்று அவரைத் தேர்ந்தெடுத்த உறுப்பினர்களில் ஆறில் ஒரு பகுதியினர் சொல்வது அந்தக் கட்சியின் உள்விவகாரமாக எப்படி இருக்க முடியும்?

எடப்பாடி பழனிசாமியைச் சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளர் பதவியில் இருந்து தினகரன் நீக்கியது அக்கட்சியின் உள்விவகாரம். ஆனால், முதலமைச்சரைக் கேள்வி கேட்பது எப்படி உள்விவகாரமாக இருக்க முடியும்? இது உள்விவகாரம் என்றால், எடப்பாடியையும் பன்னீரையும் மாட்டுச் சந்தையில் கைகோக்க வைத்து, பேரம் படிய வைப்பதுபோல கண்றாவிக் காட்சிகளை கவர்னர் மாளிகையில் அரங்கேற்றியது அரசியல் அமைப்புச் சட்ட விதிகளுக்குள் வருகிறதா?

அ.தி.மு.க கோஷ்டி சண்டையில் வேட்டி கிழிந்தால் வித்யாசாகர் ராவுக்கு ஏன் வியர்க்கிறது? அவர்கள் இருவரும் ஒன்றுசேருவது ஏன் இனிக்கிறது? இது வித்யாசாகர் ராவின் கனவா? அந்தக் கனவை இருவரும் நிறைவேற்றியதால் இந்த மகிழ்ச்சியா? இந்த இருவரும் மத்திய பி.ஜே.பி-க்குப் பயந்து சாகும் பூனைகள் என்பதை கவர்னர் உணர்ந்ததால் கருவாடு போடுகிறார். அதற்கு தினகரன் இடைஞ்சலாக இருப்பதால் முகத்தைத் திருப்புகிறார்.

தினகரனை ஆதரிக்கும் 19 பேர் எழுதிக் கொடுத்த கடிதங்களை ஒழுங்காகப் படித்து இருந்தாலே, ‘இது அவர்களின் உள்கட்சி விவகாரம்’ என்று கவர்னர் சொல்லி இருக்க மாட்டார். அந்தக் கடிதங்கள் பட்டவர்த்தனமாக இந்த ஆட்சியைக் குற்றம்சாட்டுகின்றன. எடப்பாடி பழனிசாமியை நேருக்கு நேர் கேள்வி கேட்கின்றன.

‘நாங்கள் எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைக்க நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஆதரித்து வாக்களித்தவர்கள். ஆனால், இப்போது அவர்மீது ஏமாற்றம் அடைந்துள்ளோம். அதிகார துஷ்பிரயோகம், அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், பரவலான ஊழல், சார்பு நிலை என்று எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செயல்பட்டதால் மிகுந்த ஏமாற்றம் அடைந்தோம். கடந்த 4 மாதங்களாக எடப்பாடி பழனிசாமிமீது பல்வேறு தரப்பிலிருந்தும் கடுமையான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. எடப்பாடி பழனிசாமியும் ஊழலில் ஈடுபட்டு பல்வேறு மட்டத்தில் ஊழலை ஊக்குவித்தது எங்கள் கட்சிக்குப் பெரிய இழுக்கை ஏற்படுத்தி உள்ளது. எங்கள் தலைவி ஜெயலலிதாவின் கனவை எடப்பாடி பழனிசாமியால் நிறைவேற்ற முடியாது. இந்தக் காரணங்களுக்காக அவரை ஆதரிக்க முடியாது. எனவே, தாங்கள் உடனே அரசியலமைப்பு சட்டப்படி தலையிட வேண்டும்’ என்றுதான் அந்த 19 பேரின் கடிதங்களிலும் இருக்கிறது. இதில் அ.தி.மு.க-வின் உள்கட்சி விவகாரம் எங்கே பேசப்படுகிறது?

அதிகார துஷ்பிரயோகம், ஊழல், சார்பு நிலை, அரசாங்கம் உள்நோக்கத்துடன் பயன்படுத்தப்படுகிறது - இந்த நான்கும் நாடு சம்பந்தப்பட்டவை. ‘நாங்கள் யாரை முதலமைச்சராகத் தேர்வு செய்தோமோ அவரே ஊழல் செய்கிறார்’ என்று நெஞ்சுக்கு நேராகக் குற்றம்சாட்டுகிறார்கள். இதற்கு விளக்கம் கேட்க வேண்டிய கடமை கவர்னருக்கு இல்லையா? இதைக்கூட கேட்காமல் இவர் ஏன் இருக்க வேண்டும்? ‘‘மாநிலங்கள் அரசியலமைப்புக்கு மதிப்புக்கொடுத்து இயங்குகிறதா என்பதைக் கண்காணிப்பதுதான் கவர்னரின் வேலை” என்றார் டாக்டர் அம்பேத்கர். அப்படி இயங்கவில்லை என்று ஆளுங்கட்சி உறுப்பினர்களே சொல்கிறார்கள். ‘‘பந்து என்னுடைய கோட்டில் இல்லை” என்கிறார் வித்யாசாகர் ராவ். ஆனால், அவரது கோட்டில்தான் பந்து இருக்கிறது. அது, தமிழக பந்து அல்ல. டெல்லி பந்து. அதனால்தான் அரசியலமைப்பு சட்டம் விதித்துள்ள கடமையைத் தட்டிக்கழிக்கிறார் கவர்னர்.

p2a.jpg

பி.ஜே.பி சில அஜெண்டாக்களை வழங்கி யிருக்கிறது. அதன்படி செயல்பட நினைப்பதால் தான் கவர்னர் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார். தங்களுக்கு வேண்டிய காரியங்களை மாநிலங்களில் பார்ப்பதற்காக மத்திய அரசால் அனுப்பி வைக்கப்படும் டெல்லி கூஜாக்கள்தான் கவர்னர்கள். எதிர்க்கட்சி ஆட்சியாக இருந்தால் கிரண்பேடியைப் போல் குடைச்சல் கொடுப்பார்கள். தங்களுக்கு வேண்டிய ஆட்சியாக இருந்தால் வித்யாசாகர் ராவைப் போல முட்டுக்கொடுப்பார்கள். இது ஏதோ இன்று நடப்பது மட்டுமல்ல. இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் இப்படித்தான் நடக்கிறது.

1952-ம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலின்போது நாம், சென்னை ராஜதானியாக இருந்தோம். ஆந்திரா நம்மோடு இருந்தது. மைசூர் நீங்கலாக கர்நாடகாவும், திருவிதாங்கூர் நீங்கலாக கேரளாவும் நம்மோடு இருந்தது. மொத்தம் 375 உறுப்பினர் கொண்ட சபை அது. காங்கிரஸ் கட்சி 153 இடங்களில்தான் வென்றது. சுதந்திரம் வாங்கிக்கொடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள்ளேயே காங்கிரஸ் கட்சியைத் தோற்கடித்த மாகாணம் இது. காங்கிரஸால் ஆட்சி அமைக்க முடியவில்லை. கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்ட மற்ற கட்சிகள் ஜனநாயக முன்னணி அமைத்து டி.பிரகாசத்தை முதல்வராக்க முயற்சி செய்தன. அன்று சென்னை கவர்னராக இருந்த பிரகாசா இதை ஏற்கவில்லை. ‘தேர்தலுக்கு முன்னால் கூட்டணி அமைத்திருக்க வேண்டும். தேர்தலுக்குப் பிறகு அமைக்கும் கூட்டணி செல்லாது’ என்று சொல்லி ஜனநாயகக் கூட்டணியை நிராகரித்தார். அதன்பிறகு ராஜாஜி உள்ளே நுழைந்தார். மந்திரி பதவிக்கு ஆசைகாட்டி, சில கட்சிகளை உள்ளே சேர்த்தார். ஜனநாயகப் படுகொலையுடன்தான் முதல் ஆட்சியே அமைந்தது. ‘காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமையக் கூடாது’ என்பதுதான் அன்றைய கவர்னருக்கு டெல்லி காங்கிரஸ் போட்ட உத்தரவு. ‘நமது கூஜா ஆட்சியைக் கவிழ்ப்பதா?’ என்பதுதான் இன்றைய கவர்னருக்கு டெல்லி பி.ஜே.பி போட்ட உத்தரவு.

இந்தக் கொல்லைப்புற வழிமுறைகள் அடைக்கப்பட வேண்டாமா? அப்புறம் என்ன புடலங்காய் ஜனநாயகம்?

http://www.vikatan.com/juniorvikatan/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.