Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

`16 வயதினிலே' பிறந்து 40 வருடங்கள் ஆனாலும், இன்றும் அது `Sweet 16'தான்!

Featured Replies

`16 வயதினிலே' பிறந்து 40 வருடங்கள் ஆனாலும், இன்றும் அது `Sweet 16'தான்!

 
 
 

ஒரு காலத்தில் தமிழ் சினிமாக்கள் அனைத்தும்  படப்பிடிப்பு அரங்குகளிலேயே சுழன்றுகொண்டிருந்தன. அரங்குகளைவிட்டு தமிழ் சினிமா வெளியே வந்துகொண்டிருந்த காலகட்டத்தில், முதன்முறையாக முழுப் படமும் ஒரு கிராமத்தில் எடுக்கப்பட்ட படம், ‘16 வயதினிலே’தான். இந்தத் திரைப்படம் வெளிவந்த பிறகு, பல படங்கள் கிராமத்தை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்தன. தமிழ் திரையுலகில் வெளிப்புறப் படப்பிடிப்பின் மூலம் புதியதொரு சகாப்தமே உருவானது. இதற்கெல்லாம் காரணம், அந்த அல்லி நகரத்து இளைஞர் இயக்குநர் பாரதிராஜா.

16 வயதினிலே

சாதாரண கிராமம். அங்கு பெட்டிக்கடை வைத்து பிழைக்கும்  ஒரு பெண். `பத்தாவது பாசான பிறகு, டீச்சராக வேண்டும்' என்ற ஆசையோடு வாழும் அந்தப் பெண்ணின் மகள். அந்த ஊரில் உள்ளோர் சொல்லும் வேலைகளைச் செய்யும் ஓர் அப்பாவி இளைஞன். அதே ஊரில் வம்பு பேசியே வாழ்நாளைக் கடத்தும் ஒருவர்... என நம் கிராமங்களில் புழங்கும் கேரக்டர்களையே ‘சப்பாணி', `மயில்', `பரட்டை' `குருவம்மா'  என்று  பெயர் வைத்து உலவவிட்டு இருப்பார் பாரதிராஜா. அதனால்தான் அந்த கதாபாத்திரங்கள் சாகாவரம் பெற்று இன்றும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளன. 

தமிழ் சினிமாவில் காதல் இளவரசனாக  கமல்ஹாசன் வலம்வந்துகொண்டிருந்த நேரத்தில், எந்நேரமும் வெற்றிலையை மென்றுகொண்டே இருக்கும் வாய், முக்குத்தி, விந்தி விந்தி நடக்கும் நடை, கோமண உடை... என்று  வெள்ளந்தியான `சப்பாணி' வேடத்தை ஏற்றார் கமல்ஹாசன். அவர் அன்று பரபரப்பாக நடித்துக்கொண்டு இருந்த சூழலில் இந்த ‘சப்பாணி’யாக நடிக்க எப்படி ஒப்புக்கொண்டார் என்பது பலருக்கும் ஆச்சர்யம்தான். இவரிடம் பாரதிராஜா கதை சொன்ன விதமும் இவர் நடிக்க ஒப்புக்கொண்டது பற்றியும் இன்றும் கதைகதையாக சொல்கிறார்கள் திரையுலகில். 

பாரதிராஜாவின் மனதில் இருந்த அந்தக் கதாபாத்திரமாகவே மாறினார் கமல். `ஒரு ஓணானைக்கூடக் கொல்லக் கூடாது' எனச் சொல்லும் இடமாகட்டும், `like you' என்று மயில் சொல்லும்போது தன்னைத்தான் அப்படி சொல்கிறார் என நினைத்து குதூகலிப்பதாகட்டும் இறுதிக்காட்சியில் கொலைகாரனாக மாறுவதாகட்டும் ஒவ்வொரு காட்சியிலும் சப்பாணியாகவே வாழ்ந்திருப்பார் கமல்.

16 வயதினிலே

அசத்தும் அழகு, இயல்பான நடிப்பு, வசீகரிக்கும் குரல்...`ஆத்தா... நான் பத்தாம் க்ளாஸ் பாஸாகிட்டேன்' என்று வரப்பு மேல் ஓடிவரும் `மயிலாக ஸ்ரீதேவி. `ஆசை, தோசை, அப்பளம், வடை' என்று கமலிடம் சொல்லும் தன் அழகின் திமிரும், சட் சடால் எனப் பேச்சைத் தெறிக்கவிடும் தைரியமும், டாக்டரிடம் பேசும்போது கண்கள் வழியே காதலை கடத்தும் விதமும், குடும்பப் பொறுப்பேற்று தன்மானத்தோடு வாழ நினைக்கும் அந்த வைராக்கிய உணர்வும்...கிராமத்து இளம் பெண்ணின் வெவ்வேறு உணர்வுகளை தத்ரூபமாக வெளிப்படுத்தியிருந்தார் ஸ்ரீதேவி.

வெட்டி நியாயம், ஊர் வம்புமாக திரியும் நபர்கள் எல்லா கிராமங்களிலும் இருப்பார்கள். அப்படி ஒரு வேடத்தில், ரசிகர்கள் முன் `பரட்டை'யாக வந்து நின்றார் ரஜினிகாந்த். கமலுடன் ஒப்பிடும்போது ரஜினிக்கு மிகவும் குறைந்த காட்சிகள்தான். ஆனால், பாவாடை-தாவணியில் இருக்கும் ஸ்ரீதேவியைப் பார்த்து `இந்தத் தாவணியை அவ அம்மா போட்டாலும் நல்லதான்டா இருக்கும், இதெப்படி இருக்கு?' என்று வாய்க்கொழுப்பில் உச்சம் தொடுவதாகட்டும், `டேய் சப்பாணி, டேய்...'  என்று சத்தம்போட்டும் கமல் நிற்காமல் செல்வதைப் பார்த்து, அவமானத்தில் கோபம் கொள்வதாகட்டும்... அவ்வளவு தத்ரூபமாக இருக்கும் ரஜினியின் நடிப்பு. உடல்மொழி, குரல் வீச்சு, தெருச்சண்டை என அச்சு அசலாக குருவம்மாவை திரையில் நிலைநிறுத்தினார்  காந்திமதி. இவர்கள் தவிர டாக்டராக வரும் சத்யஜித், ரஜினிக்கு ஜால்ரா போடும் கவுண்டமணி... இப்படி அனைவரும் கச்சிதமான காஸ்டிங். 

16 வயதினிலே

இளையராஜாவை முழுமையாக வெளிக்கொணர்ந்த நூற்றுக்கணக்கான கிராமியப் பிண்ணனிகொண்ட படங்களில் முதன்மையானது என்று இந்தப் படத்தை சொல்லலாம். `அன்னக்கிளி'க்குப் பிறகு, முழுவதும் கிராமிய இசையில் அமைந்த `ஆட்டுக்குட்டி முட்டையிட்டு...', `மஞ்சக் குளிச்சு...' போன்ற பாடல்கள் பட்டித்தொட்டி மட்டுமல்ல, கடல் கடந்த கானங்களாக அப்போது எதிரொலித்தன. `செந்தூரப் பூவே...' என்ற பாடலை எழுதி, பாடலாசிரியராக அறிமுகமானார் கங்கை அமரன். இந்தப் பாடலைப் பாடியதற்காக S. ஜானகிக்கு `சிறந்த பின்னணிப் பாடகிக்கான' தேசிய விருது கிடைத்தது.

சினிமாவில் இருக்கும் இன்றைய இளம் இயக்குநர்கள் கிராமத்துப் படம் எடுக்க  நினைத்தால், அவர்களை அறிந்தோ அறியாமலோ அதில் `16 வயதினிலே' படத்தின் சாயல் அதில் நிச்சயம் இருக்கும். அதற்கு காரணம், கிராமத்தின் இயல்பு வாழ்க்கையை உண்மைக்கு பக்கத்தில் சென்று படம்பிடித்த பாரதிராஜாவின் உழைப்பும் நம்பிக்கையும்தான் என்றால் அது மிகையில்லை. 

http://cinema.vikatan.com/tamil-cinema/102370-its-still-sweet-16-for-16-vayadhinile.html

  • தொடங்கியவர்

16 வயதினிலே - 40 ஆண்டுகள்: என்றும் வாழும் ‘மயில்!’

 

15chrcj16vayadinile%201

‘பரட்டை’யாக ரஜினி

15chrcj16vayadinile%203

‘மயிலாக’ ஸ்ரீதேவி

15chrcj16vayadinile%201

‘பரட்டை’யாக ரஜினி

15chrcj16vayadinile%203

‘மயிலாக’ ஸ்ரீதேவி

கடந்த 2001-ம் ஆண்டு ‘ஆளவந்தான்’ வெளியானது. அதில் கமல் ஹாசன் ஒரு காட்சியில் நிர்வாணமாகத் தோன்றுவது போன்ற ஓர் ஒளிப்படம், அப்போதைய வார இதழ்களில் வெளியானது. அதைப் பார்த்த அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் கமலைத் திட்டித் தீர்த்தார். அதைத் தவிர பெரிய சலசலப்புகள் ஏதுமில்லை.

அந்தப் படம் வெளியாவதற்குச் சுமார் 24 ஆண்டுகளுக்கு முன்பு, ‘16 வயதினிலே’ வெளியானது. அதில் கமல் கோவணத்துடன் தோன்றினார். படம் பார்த்தவர்களுக்கெல்லாம் அதிர்ச்சி. ஒரு முன்னணிக் கதாநாயகன், மூக்குத்தி போட்டுக்கொண்டு, வாயில் வெற்றிலையைக் குதப்பிக்கொண்டு தோன்றினால் அதிர்ச்சி ஏற்படாமல் என்ன செய்யும்?

ஆனால் அந்த அதிர்ச்சிதான் அந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது. தமிழ்த் திரைப்பட உலகில் ‘16 வயதினிலே’ ஒரு மைல் கல். ‘திரைப்படம் என்றால் இப்படியெல்லாம் இருக்கும்’ என்ற கற்பிதங்களை உடைத்த படம்.

இன்று, படத்தில் நிர்வாண நடிப்பு சாதாரணம். அன்று, கோவணம் கட்டிக் கொண்டு நடிப்பதே பெரிய விஷயம். ஒரு தலைமுறை கலாச்சார மாற்றத்தை, சிந்தனைப் போக்கை, அது சினிமாவில் ஏற்படுத்திய தாக்கத்தை இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம். அதனால்தான் ‘சப்பாணி’ கமலுக்கு இருந்த ஆச்சரியமும் அதிர்ச்சியும், ‘ஆளவந்தான்’.. ‘நந்து’ கமலுக்கு இருக்கவில்லை!

 

அதிர்ச்சிக் களம்

இந்தியாவின் கடைக்கோடி கிராமம் ஒன்றில், ஆசிரியராகக் கனவு காணும் ஒரு பெண்ணின் வாழ்க்கைதான் படத்தின் ஒரு வரிக் கதை. அதை, கிராம வாழ்க்கையின் உயிர்ப்புடன் சொன்னதில் வெற்றி பெற்றார் அன்றைய புதுவரவு இயக்குநர் பாரதிராஜா. அவரே கதை எழுதி, அவரே இயக்கிய மிகச் சில படங்களில், இந்தப் படம் மிகவும் முக்கியமான படம்.

‘சப்பாணி’, ‘மயில்’, ‘பரட்டையன்’ என்று படத்தின் டைட்டிலில் முக்கியமான கதாபாத்திரங்களின் கதாபாத்திரத்தின் பெயரையே ஓடவிட்டதிலிருந்து அந்தப் படத்தின் புதுமை தொடங்குகிறது. ‘சப்பாணி’ என்ற கேரக்டரே அன்றைக்குப் புதுமைதான். கமல் கோமண உடையில் தோன்றுவது ஒருவித அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றால், ரஜினியின் முகத்தில் ஸ்ரீதேவி துப்பும் காட்சி இன்னொரு வித அதிர்ச்சி.

இந்தப் படம், கமல், ரஜினி, ஸ்ரீதேவி ஆகியோருக்குத் தங்களின் ‘கரியரில்’ ஒரு லிஃப்ட் ஆகப் பயன்பட்டது என்றால், சிலருக்கு ‘லான்ச் பேட்’ ஆக உதவியது. குறிப்பாக, கவுண்டமணிக்கு. இவர் ‘ராமன் எத்தனை ராமனடி’ உட்பட துணை நடிகராகப் பல கறுப்புவெள்ளைப் படங்களில் தலைகாட்டியிருந்தாலும் இந்தப் படத்தில் ‘கெளண்டன் மணி’யாக அறிமுகமானார். பாராதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டு, அந்தப் படத்தில் ஜொலிக்காமல் போன ஒரு கதாபாத்திரம் சத்தியஜித்தான். ‘மைல்’, ‘மைல்’ என்று அழைத்த அந்த டாக்டரை பிறகு எந்தப் படத்திலும் பார்க்க முடியவில்லை.

 

கேமரா வாங்கக் காசில்லை

பி.எஸ்.நிவாஸின் ஒளிப்பதிவும் இளையராஜாவின் இசையும் படத்தை வேறொரு இடத்துக்கு எடுத்துச் சென்றன. ‘செந்தூரப்பூவே’ பாடலுக்காகப் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி, தேசிய விருது வென்றார். ஆனால், அந்த ஆண்டில் தமிழின் சிறந்தபட விருது யாருமே பார்த்திராத ‘அக்ரஹாரத்தில் கழுதை’க்குத்தான் வழங்கப்பட்டது. செந்தூரப்பூவே பாடலின் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால், பாடலின் ஆரம்பத்தில் சூரியன் அஸ்தமிக்கும் பின்னணியில் ஸ்ரீதேவியை ‘ஸ்லோ மோஷனில்’ ஓடவிட்டு, ‘சில் அவுட்’டாகப் படம் பிடித்திருப்பார்கள்.

அந்தக் காலத்தில் ‘ஸ்லோ மோஷன்’ காட்சிகளைப் படம்பிடிக்கும் கேமராவை வாங்கும் அளவுக்கு அந்தப் படத்தின் பட்ஜெட் இடம் கொடுக்கவில்லை. எனவே, ஸ்ரீதேவியை மெதுவாக ஓடச் சொல்லி, படம் பிடித்திருப்பார்கள். பார்க்கும் நமக்கு, ‘ஸ்லோ மோஷனில்’ ஸ்ரீதேவி ஓடுவது போலத் தெரியும். இந்தத் தகவலை கமலே மேடை ஒன்றில் சொல்லியிருக்கிறார்.

முதலில் இந்தப் படத்தை ‘மயில்’ என்ற தலைப்பில், தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் மூலமாகக் கறுப்பு வெள்ளையில் எடுக்க நினைத்திருந்தார் பாரதிராஜா. ஆனால் கடைசி நேரத்தில் அந்தக் கழகம் கைவிரித்துவிட, ‘16 வயதினிலே’வாக வேறொரு வடிவமெடுத்தது.

 

காண முடியாத குழந்தைமை

எவ்வளவோ வசதிகள் இருக்கும் இந்தக் காலத்தில், இந்தப் படத்தை மீண்டும் ‘ரீமேக்’ செய்ய நினைக்கலாம். ஆனால் செய்ய முடியாது என்பதுதான் உண்மை. அப்படியே செய்தாலும், இந்தப் படம் அன்று பெற்ற வெற்றியை, இன்று பெற முடியாது என்பதும் உண்மை. என்ன காரணம் தெரியுமா? ‘மயிலி’ன் குழந்தைமைதான் அது!

‘என்னோடு பேரு குயில் இல்ல… மயில்’ என்று கனவுலகில் சஞ்சரிக்கும் மயில்… இடுப்பளவு நீர் உள்ள குளத்தில் தன் தாவணியைத் தூக்கிக் கொண்டு வரும்போது கொட்டக் கொட்டப் பார்க்கும் டாக்டரைப் பார்த்துச் சிரிக்கும் மயில்… டாக்டரால் கைவிடப்படும்போது ஆதரவற்று நிற்கும் மயில்… ‘சப்பாணின்னு கூப்பிட்டா சப்புனு அரைஞ்சிடு’ என்று ஆதரவாக நிற்கும் மயில்… என எல்லாக் காட்சிகளிலும் தன் முகத்தில் குழந்தைமையைத் தாங்கி நின்றிருப்பார் ஸ்ரீதேவி. அந்தக் குழந்தைமையை இன்று வேறு எந்த ஒரு நடிகையிடமும் காண முடியாது என்பதுதான் நிதர்சனம்! அதனால்தான் இந்தப் படத்தை ‘ரீமேக்’ செய்ய முடியாது. அதனால்தான், ‘மயில்’ 40 வருடங்கள் கழித்தும் நம் மனதில் நிற்கிறாள்!

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article19689649.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.