Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலிக்கடாக்களாகும் அரசியல் கைதிகள்

Featured Replies

பலிக்கடாக்களாகும் அரசியல் கைதிகள்
 

அநுராதபுர சிறைச்சாலையில், மூன்று தமிழ் அரசியல் கைதிகள் நடாத்தி வரும், தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை அடுத்து, தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம், மீண்டும் தீவிர கவனிப்புக்குரிய விவகாரமாக மாறியிருக்கிறது.  

image_6ed343932b.jpg

கடந்த இரண்டரை ஆண்டுகளில், அரசியல் கைதிகள் விவகாரம், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், காணிகள் விடுவிப்பு விவகாரம் என்பன, அவ்வப்போது சில சம்பவங்கள், போராட்டங்களால் உச்ச கவனிப்புக்குரியதாக மாறுவதும், பின்னர் அது தணிக்கப்படுவதும் அல்லது தணிந்து போவதும் வழக்கமாகியுள்ளன.  

அந்தவகையில், இப்போது மூன்று வாரங்களாக, தமிழ் அரசியல் கைதிகள் நடத்தி வருகின்ற உண்ணாவிரதப் போராட்டத்தினால், அரசியல் கைதிகளின் விடுதலை, அவர்களுக்கான பொதுமன்னிப்பை வலியுறுத்தியும், தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளைத் தென்பகுதிக்கு மாற்றுவதைக் கண்டித்தும், மீண்டும் போராட்டங்கள் இடம்பெறத் தொடங்கியுள்ளன. 

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வடக்கில் இன்று முழு அடைப்புப் போராட்டத்துக்கு தமிழ் மக்கள் பேரவை உள்ளிட்ட அமைப்புகளும், குறிப்பிட்ட அரசியல் கட்சிகளும் அழைப்பு விடுத்திருக்கின்றன.  

அரசியல் கைதிகளின் விவகாரம் உள்ளிட்ட, தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைளை, தமிழ் அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் தமக்கான அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்வதற்கு ஒரு போதும் தயங்கியதில்லை.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடங்கி, தமிழ் மக்கள் பேரவை வரை அந்த நிலையில் இருந்து மாறவில்லை.  

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக, அனைத்துத் தரப்பினரும் குரல் கொடுத்தாலும், அதைச் சாத்தியமாக்கியவர்கள் தாங்களே என்று உரிமை கொண்டாடுவதில், அனைவருக்கு இடையேயும் போட்டி நிலவுவதுடன், அடுத்தவர் மீது பழிபோடுவதற்கும் பின்நிற்பதில்லை.  

வடக்கில் இன்று முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையைப் பார்த்தால், இந்த விவகாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அரசாங்கத்துடன் சேர்த்து குற்றவாளியாக்கி, இந்தப் போராட்டத்தில் இணைந்து கொள்ளாமல் தவிர்ப்பதற்கு, மிகக் கவனமாகச் சொற்கள் கையாளப்பட்டிருப்பதை அவதானிக்க முடியும்.  

ஏற்கெனவே, சில போராட்டங்களின் போதும் இதே அணுகுமுறை கையாளப்பட்டது. எல்லாத் தரப்புகளும் ஒன்றிணைந்து குரல்கொடுக்க வேண்டிய, செயற்பட வேண்டிய தருணங்களில், அரசியல் பேதங்களை வெளிப்படுத்தி, பிரிந்து நிற்கின்ற அல்லது பிரித்து வைக்கின்ற செயற்பாடுகள் தமிழர் அரசியலில் மேலோங்கி வருகிறது.  

அநுராதபுர சிறைச்சாலையில், தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று அரசியல் கைதிகள், தம்மை விடுவிக்குமாறு கோரி, இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கவில்லை.  

அவர்கள் கோருவது, கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக, வவுனியா மேல் நீதிமன்றத்தில் நடாத்தப்பட்டு வந்த விசாரணைகளை, தொடர்ந்து அங்கேயே முன்னெடுக்க வேண்டும் என்பதைத்தான்.  

சாட்சிகளின் பாதுகாப்பைக் காரணம் காட்டி, இவர்களின் வழக்குகளை, அநுராதபுர நீதிமன்றத்துக்கு மாற்றியிருந்தார் சட்டமா அதிபர். அதற்கு எதிராகத்தான் அரசியல் கைதிகள், உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.  

இவர்களின் வழக்குகள் அநுராதபுர சிறைக்கு மாற்றப்பட்டதன் பின்னால், உள்நோக்கம் இருக்கிறது என்ற சந்தேகம் அரசியல் கைதிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் இருக்கிறது.  

குற்றம்சாட்டப்பட்டவர்கள் அல்லது சாட்சிகளுக்குப் பாதுகாப்பில்லை என்று தென்பகுதிக்கு மாற்றப்பட்ட வழக்குகளில், தமிழ் மக்களுக்கு சரியான நீதி கிடைக்கவில்லை என்பது, இந்தச் சந்தேகத்துக்கு முக்கிய அடிப்படை.  

அதைவிட, அநுராதபுர மேல் நீதிமன்றத்தில் வழக்கை மீண்டும் விசாரிப்பதானால், புதிய விசாரணைகளே நடாத்தப்படும்; அதற்குக் காலம் வீணடிக்கப்படும். அநுராதபுர நீதிமன்றத்தில், சிங்களத்தில் வழக்கு நடத்தப்படுவதால் மொழிப் பிரச்சினையும் ஏற்படும்.  
இதனால்தான், தமது வழக்குகளைத் தொடர்ந்தும் வவனியா நீதிமன்றத்திலேயே விசாரிக்க வேண்டும் என்கின்றனர் அரசியல் கைதிகள்.  

ஆனால், சட்டமா அதிபர் திணைக்களமோ, வவுனியா நீதிமன்றத்தில் விசாரணை நடத்துவதற்கு சாட்சிகளுக்குப் பாதுகாப்பு இல்லை; அவர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறுகிறது.  

சட்டமா அதிபர் திணைக்களத்தின் இந்தப் போக்கு, நீதித்துறை சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்ளும் நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.  

சாட்சிகளுக்குப் பாதுகாப்பு இல்லையென்றால், அதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது ஒரு நீதிமன்றத்தில் கடப்பாடு. அதைச் செய்திருக்கலாம். தேவைப்பட்டால் பொலிஸ் பாதுகாப்பையும் பெற்றுக் கொடுத்திருக்கலாம்.  

அதேவேளை, சாட்சிகளுக்கு யாரால் அச்சுறுத்தல், யாரால் பாதுகாப்பு இல்லை, இதற்காக மீண்டும் சட்டமா அதிபர் திணைக்களம் புலிப்பூச்சாண்டி காட்டப் போகிறதா? போன்ற கேள்விகள் எழுகின்றன.  

போர் முடிந்து எட்டு ஆண்டுகளாகி விட்டன. முழுமையாகப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் இராணுவம், பொலிஸ், அரசாங்கம் எல்லாமே கூறுகின்ற நிலையில், யாரால் பாதுகாப்பு அச்சுறுத்தல் என்பதை சட்டமா அதிபர் திணைக்களம் வெளிப்படுத்தியே ஆக வேண்டும்.  

பாதுகாப்பு அச்சுறுத்தல் என்பது, சாதாரண விடயமல்ல. முக்கியமாகத் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை. அதை விட்டுவிட்டு, ஓடி ஒளிய வேண்டிய பிரச்சினையல்ல. வழக்குகளை இடம்மாற்றுவது, பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் ஓடி ஒளிவதற்குச் சமமானது.  

இங்கு பாதுகாப்பு என்பது பிரச்சினைக்குரிய விடயமல்ல; எப்படியாவது வழக்குகளை அநுராதபுர நீதிமன்றத்துக்கு மாற்றி, வழக்குகளை இழுத்தடித்து, தண்டிப்பதுதான் உள்நோக்கமாகத் தெரிகிறது.  

சாட்சிகளுக்குப் பாதுகாப்பு இல்லை என்று, இப்போது வவுனியாவில் இருந்து அநுராதபுர நீதிமன்றத்துக்கு வழக்குகளை மாற்றிய சட்டமா அதிபர் திணைக்களம், திருகோணமலை குமாரபுரத்தில் 26 அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சாட்சிகளின் பாதுகாப்பைப் பற்றி கருத்தில் கொள்ளவில்லை.  

போர்ச் சூழலில் கூட, சாட்சிகளின் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல், குற்றம்சாட்டப்பட்ட இராணுவத்தினரின் பாதுகாப்புக்காக என்று காரணம் கூறி, வழக்கு அநுராதபுரத்துக்கு மாற்றப்பட்டது.  

அந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, சரியான நீதி வழங்கப்படவில்லை. அதுபோன்ற நிலை, மீண்டும் ஏற்பட்டு விடக்கூடாது.  

வவுனியா நீதிமன்றத்தில் சாட்சிகளுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதும் அநுராதபுரத்தில் அது கிடைக்கும் என்பதும், வடக்கிலும் தெற்கிலும் இருவேறு நீதி முறைகள், பாதுகாப்பு முறைகள் இருப்பதாகவே அர்த்தப்படுத்தும் என்பதையும் சட்டமா அதிபர் திணைக்களம் கவனத்தில் கொள்ளவில்லை.  

அதேவேளை, அரசியல் கைதிகள் விவகாரத்தில், அரசாங்கம் தீர்க்கமான ஒரு நடவடிக்கையை எடுத்திருக்கலாம். அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து, தெளிவான ஒரு முடிவை அரசியல் ரீதியாக அறிவித்திருக்கலாம். ஆனால், அரசாங்கம் இந்தப் பிரச்சினையில் முன்னுக்குப் பின் முரணாகவே செயற்பட்டு வருகிறது.  

வழக்குகளை இடம்மாற்றும் நடவடிக்கை நிறுத்தப்படும் என்று ஜனாதிபதி வாக்குறுதி அளித்திருந்த போதும், அது நிறைவேற்றப்படவில்லை.   

இந்த விவகாரம் தீவிரமடைந்து, பிரச்சினைகளுக்குக் காரணம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் நடவடிக்கைகளே ஆகும் என்று, கடந்த புதன்கிழமை அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருந்தார்.  

சட்டமா அதிபர் திணைக்களத்துக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் ஒரு மறைமுக பனிப்போர் நடந்து வருவது உண்மைதான். அதனால், அரசாங்கமும் கூட, சட்டமா அதிபர் திணைக்களத்தில் அதிக தலையீடுகளைச் செய்யத் தயங்குகிறது.  

ஆனாலும், அரசியல் கைதிகள் விவகாரத்தில், ஜனாதிபதியும் அரசாங்கமும் தீர்க்கமான முடிவுகளை எடுக்காவிடின், அது ஒட்டுமொத்த நல்லிணக்க முயற்சிகளையும் புரட்டிப் போட்டு விடும் ஆபத்து இருப்பதை மறந்து விட முடியாது.  

செவ்வாயன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் குறித்து, அமைச்சர் மனோ கணேசன், ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பியபோது, அதுபற்றித் தனக்குத் தெரியாது என்று ஜனாதிபதி, பதிலளித்ததாகக் கூறப்படுகிறது.  

ஏற்கெனவே தாம், வழக்குகளை இடம்மாற்றக் கூடாது என்று சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அறிவுறுத்தியதாகவும் ஜனாதிபதி கூறியதாக, மனோ கணேசன் கூறியிருக்கிறார்.  

அரசியல் கைதிகளின் போராட்டம் பற்றி, ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைப்புகளும் ஜனாதிபதிக்கு கடிதங்களை அனுப்புகின்றனர்.   

நாடாளுமன்றத்திலும் இந்தப் பிரச்சினையை எழுப்பி உரைகள் ஆற்றப்பட்டன.  
ஆனாலும், தனக்கு ஒன்றுமே தெரியாது என்று ஜனாதிபதி கூறியிருந்தால், அவருக்குத் தெரியாமல் இன்னும் எவ்வளவு சம்பவங்கள் நாட்டில் நடக்கின்றன என்று தெரியவில்லை.  

பிரச்சினைகளுக்குப் பொறுப்புக்கூறாமல் நழுவிக் கொள்வதற்குப் பயன்படுத்திக் கொள்ளப்படும் வார்த்தைதான் “ஒன்றும் தெரியாது”; அது ஜனாதிபதியின் வாயில் இருந்தும் வந்திருக்கிறது.  

ஜனாதிபதிக்கு உண்மையிலேயே ஒன்றும் தெரியாமல் இருந்தால், அதற்கு அவரைச் சுற்றியிருக்கும் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு மாத்திரமன்றி, பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பங்கு இருப்பதை மறுக்க முடியாது.  

தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்ற நோக்கம் அரசாங்கத்திடம் இல்லை. இந்த விடயத்தை சட்டமா அதிபர் திணைக்களமும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது.  

அதேவேளை, இந்தப் பிரச்சினையை ஒன்றுபட்டுத் தீர்ப்பதற்கு உள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளாமல், தமிழர் தரப்பிலும் பலவீன நிலையே வெளிப்படுத்தப்படுகிறது.  இவையெல்லாம் அரசியல் கைதிகளுக்கு எதிரான வியூகங்களுக்கு சாதகமாக்கப்பட்டு வருகின்றன.   

மொத்தத்தில் எல்லா தரப்பினரதும் பொறுப்பீனங்கள், அரசியல் நலன்களுக்கு, தமிழ் அரசியல் கைதிகள் பலிக்கடாக்களாகி நிற்கின்றனர்.  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பலிக்கடாக்களாகும்-அரசியல்-கைதிகள்/91-205463

  • தொடங்கியவர்

தமிழ் அரசியல் கைதிகள் தென்னிலங்கையின் அரசியல் காய்களா? குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

jail.jpg

 பல பத்தாண்டுகளாக நீளும் பிரச்சினை தமிழ் அரசியல் கைதிகளின் சிறைவாசம். ஆட்சிகள் மாறினாலும் இவர்களின் துன்பம் தீரவில்லை.  இந்த நிலையில்  தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, இன்று வடக்கு கிழக்கு மாகாணங்களில்  பூரண கதவடைப்பு போராட்டம் மேற்கொள்ளப்படுவதை முன்னிட்டு குளோபல் தமிழ் செய்திகளில் இப் பதிவு வெளியிடப்படுகிறது.  
-ஆசிரியர்
 
தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண தளபதியாக இருந்து, விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகிச் சென்ற கருணா அம்மான் எனப்படும் விநாயக மூர்த்தி முரளிதரன் இலங்கை அரசில் அமைச்சராக பதவி வகித்தார். இவரைப் போன்றவர்கள் இன்றைய அரசின் காலத்திலும் உல்லாசமாக வாழ்ந்து உலவிக்  கொண்டிருக்க அப்பாவி தமிழ் இளைஞர்களை மாத்திரம் இந்த அரசும் சிறையில் வைத்து துன்புறுத்திக் கொண்டிருப்பது ஏன்?
 
மகிந்த ராஜபக்ச சர்வாதிகார ஆட்சி நடத்துகிறார் என்றும் தாம் ஆட்சிக்கு வந்தால் மனித உரிமைகளை நிலை நிறுத்துவோம் என்றும் வாக்குறுதி அளித்த இன்றைய ஆட்சியாளர்களின் பங்காளிகள் பலரும் கடந்த காலத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக குரல் கொடுத்தவர்கள். தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்திற்கும் இன்றைய ஆட்சிக்கும் இடையிலும் எந்த வேறுபாடும் இல்லை.
 
யாழ்ப்பாணம் கல்வியங்காட்டை சேர்ந்தவர் ஜெயகலா.  இவர் கைது செய்யப்பட்டு காணாமல் போனதாக கூறப்பட்ட தன் பிள்ளையின் புகைப்படத்தை ஏந்தியபடி கண்ணீர் சிந்துகிறார். கைது செய்யப்பட்ட மகன் பூசா சிறைச்சாலையில் உயிருடன் இருக்கும் புகைப்படத்தை சாட்சியமாக்கி இந்த தாய் போராடுகிறாள். இராணுவத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த தனது பிள்ளை எங்கே? என்று கேள்வி எழுப்பும் இந்த தாயிற்கு இலங்கை அரசு பதில் அளிக்க வேண்டும். இப்படி எத்தனை பிள்ளைகளுக்காக எத்தனை தாய்மார்கள் கண்ணீர் சிந்துகின்றனர்?
 
“மைத்திரி மாமா எங்கள் தந்தையை விடுங்கள். அவர் என்னை பள்ளிக்கூடம் கூட்டிச் செல்ல வேண்டும்…” இப்படி ஒரு பதாகையை ஏந்திய குழந்தை, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணம் வந்தபோது குரல் எழுப்பியதை எவரும் மறந்திரார். இப்படி எத்தனையோ பதாகைகளை ஏந்தியபடி எத்தனையோ குழந்தைகள் தெருவில் நின்று இலங்கை ஜனாதிபதியையும் உலகத்தையும் நோக்கிக் குரல் எழுப்பிவிட்டார்கள்.
 
தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் இலங்கை அரசு நடந்து கொள்வது மிகவும் மனிதாபிமானற்ற செயல் என்பதுடன் மிகவும் மோசமான மனித உரிமை மீறலாகும். இலங்கை அரசின் பார்வையில் விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கத்தினரை புனர்வாழ்வு என்ற சித்திரவதை முகாமில் அடைத்து விடுதலை செய்தது. அப்படியிருக்க விடுதலைப் புலிகளுக்கு சிறு உதவிகளை புரிந்தவர்களையும் விடுதலைப் புலிகள் என்ற பெயரில் சிறை வைக்கப்பட்ட அப்பாவிகளையும் இன்னமும் விடுவிக்காமல் இருப்பது ஏன்?
 
தமிழ் அரசியல் கைதிகள் பல்வேறு முன்னுதாரணமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் தமது விடுதலையை வலியுறுத்தி பல்வேறு தடவைகள் ஜனநாயக ரீதியான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2015ஆம் ஆண்டு காலவரையறையற்ற ரீதியில் உண்ணாவிரதப் போராட்டத்தை தமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுத்தனர். இதற்கு ஆதரவாக வடக்கு கிழக்கிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தமது உடல் நிலை மோசமான நிலையை அடைந்தபோதும் கைதிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
அன்று ஆட்சிக்கு வந்த மைத்திரிபால சிறிசேன – ரணில் அரசு, தமிழ் அரசியல் கைதிகளை விரைவில் விடுவிப்பதாகவும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியும் புனர்வாழ்வு அளித்தும் விடுவதாகவும் கூறியது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆறு மாதம், ஒரு வருடம், ஒன்றரை வருடம் சிறை வழங்கப்பட்டது. ஆனால் மைத்திரி – ரணில் அரசு, வாக்குறுதி அளித்தே இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. அத்துடன் தமிழ் அரசியல் கைதிகள் இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள்.
 
தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினை என்பது வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினை. அந்த இளைஞர்கள் சிறையில் வாட அவர்களை நினைத்து தமிழ் மக்களின் வீடுகள் தோறும் தாய்மாரும் மனைவியரும் கண்ணீரும் கம்பலையுமாக வாழ்கின்றனர். அப்பாவை சிறையில் விட்டு வாழும் குழந்தைகளை எங்கள் நிலம் கொண்டிருக்கிறது. ஒன ஒடுக்குமுறைக்கு ஓரினம் எதிராக ஆயுதம் ஏந்திப் போரிட்டமைக்காக, கைது செய்யப்பட்டு சிறையிடப்பட்ட வடக்கு கிழக்கு அப்பாவி இளைஞர்கள் அவர்கள்.
 
பயங்கரவாத தடைச் சட்டம் கொடியது என்றும் அதனை நீக்க எமது  அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் மைத்திரிபால அரசின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜெனீவாவில் கூறினார். பின்னர் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பெயர் மாற்றும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டது. அத்துடன் அந்தக் கொடிய சட்டத்தின் ஊடாக சந்திரிக்கா, மகிந்த ராஜபக்ச அரசுகளால் கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுவிக்காமல் உள்ளது இன்றைய அரசு.
 
அரசியல் கைதிகளை விடுவித்தால், புலிகளை விடுவிக்கிறோம் என்று அரசியல் செய்கிறது மகிந்த தரப்பு. புலிப் பயங்கரவாதிகளை விடுக்க மாட்டோம், சட்டத்தின் முன்னால் நிறுத்துவோம் என்கிறது இன்றைய அரசு. தமிழ் அரசியல் கைதிகளை விடுவியுங்கள் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசை கேட்கிறது. எல்லோருமே அவரவர் அரசியலுக்காகவே தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைகளை அணுகுகிறார்களா? அப்பாவிகளின் விடுதலையை அரசியலின்றி மனிதாபிமானத்துடன் மனித உரிமை பார்வையுடன் அணுகுங்கள்.
 
தமிழ் அரசியல் கைதிகளை அரசியல் காய்களாகப் பாவித்து அவர்களை தொடர்ந்து சிறையில் அடைக்காமல், அவர்களின் குடும்பங்களை தொடர்ந்து ஏமாற்றாமல் இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்டுவோம். வடக்கு கிழக்கில் இன்று முன்னெடுக்கப்படும் பூரண கதவடைப்பு போராட்டத்தின் கோரிக்கைக்கு இலங்கை அரசு செவிசாய்க்க வேண்டும். தமிழ் மக்களின் கோரிக்கைக்கு இலங்கை அரசு செவிசாய்க்க வேண்டும். இலங்கை அரசின் மனித உரிமைக்குப் புறம்பான இந்த செயலை உலகம் கண்டிக்க வேண்டும். தமிழ் அரசியல் கைதிகள் உடனே விடுதலை பெறவேண்டும் என்பதற்கான போராட்டத்தை முழு அளவில்  இன்றைய நாளில் முன்னெடுப்போம்.
 
குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

http://globaltamilnews.net/archives/45019

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.