Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போரும் தேசபக்தியும்

Featured Replies

தேசபக்தி என்பது அயோக்கியர்களின் புகலிடம்' என்ற கூற்று நான் பலமுறை மேற்கோளாகக் கேட்டது. எனினும் யாருடைய கூற்று என்று நினைவில்லை. தேசபக்தி மட்டுமல்லாமல் மொழி, மதம் என்பனபோன்ற மனித அடையாளங்களில் எதைப் பற்றியும் காட்டப்படும் தீவிரமான பக்தியும் பற்றும் பெரும்பாலும் பரப்பானவையாகவும் குறுகிய நோக்கங்களுக்கான மூடுதிரையாகவுமே இருந்துள்ளன. எங்கெல்லாம் தேசமும் இனமும் மொழியும் மதமும் புனிதப்படுத்தப்பட்டு அவற்றின் நலன் மனிதரது அடிப்படையான உரிமைகளையும் தேவைகளையும் உணர்வுகளையும் மறுக்கிற அளவுக்குப் போகிறதோ அங்கு சமூகப் பற்றுக்குப் பதிலாகச் சமூகத்தைச் சின்னாபின்னமாக்கக் கூடிய வெறித்தனம் ஆட்சி செலுத்துகிறது.

ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தின் தேசப்பற்றும் இனப்பற்றும் மொழி உணர்வும் மத உணர்வும் தற்காப்பு என்ற நிலைப்பாட்டினின்று எழுகிற உணர்வுகளாக உள்ளளவில் மனித விடுதலை எனும் இலங்கை உடையன. எனினும் அந்த விடுதலை என்கிற இலக்கினுள்ளும் பிற சமூகங்கள் மீதான ஆதிக்க நோக்கங்கள் மறைந்திருக்க இயலும். அந்நிய ஆதிக்கம் தூக்கியெறியப்பட்ட பின்பு அந்த நோக்கங்கள் மேலெழ நேருகிறது. அதைக் கொலனிய ஆட்சியினின்று விடுதலை பெற்ற நாடுகளிற் பல வேறு விதங்களிற் காணுகிறோம். எனினும், நாம் பெரும்பாலும் கவனிக்கத் தவறுகிற ஒரு விடயம் ஏதெனில், அந்நிய ஆதிக்கமாயினும் உள்ளூர் அதிகாரமாயினும் ஓர் இனம் இன்னொரு இனத்தையோ ஒரு தேசம் இன்னொரு தேசத்தையோ ஒடுக்குகிறது என்பது ஒரு தோற்றம் மட்டுமே. உண்மையில் தேசத்தின் பேராலும் இனத்தின் பேராலும் பிற அடையாளங்களின் பேராலும் ஒரு சிறு சமூகப் பிரிவு தன்னுடைய சமூகத்தின் மீது கட்டுப்பாட்டைப் பேணிக் கொண்டு பிற சமூகங்களின் ஏகப் பெரும்பான்மையினரை ஒடுக்குகிறது.

உள்நாட்டில் ஒரு எதிரி இருப்பது ஆளுகிற வர்க்கங்கட்கு எப்போதுமே வசதியானது. அவர்களிடமிருந்து பெரும்பான்மை மொழி, பெரும்பான்மை மதம், பெரும்பான்மைப் பண்பாடு, பெரும்பான்மையின் நலன்கள் என்பனவற்றைப் பாதுகாப்பதை ஆளும் மார்க்கம் தனது பணியாகப் பிரகடனப்படுத்திக் கொள்ளுகிறது. அதை விடவும் இவ்வாறு அடையாளப்படுத்தப்படுகிற பெரும்பான்மை நலன்கள், தேசிய நலன்களாகின்றமை அவற்றுக்கு எதிரான மிரட்டல்களாகக் காணப்படுகிறவை தேசத்திற்கு எதிரான மிரட்டல்களாகின்றன. எனவே, தேசத்தைப் பாதுகாப்பதற்காக மிரட்டல்களுக்கெதிரான கடும் நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. அவை உரிமை மறுப்பு முதல் இன ஒழிப்புப்போர் வரை எவ்வடிவையும் எடுக்கலாம்.

ஜேர்மனியின் தூய ஆரிய அடையாளத்தைக் காப்பாற்றுவதற்காக யூதர்களை அழிக்க வேண்டியிருந்தது. தேசத் துரோகிகளாக அடையாளங்காணப்பட்டவர்களை இலக்கு வைக்க வேண்டியிருந்தது அதன்பின்பு முழு உலகத்திற்கும் எதிராக ஒரு போரை நடத்த வேண்டி வந்தது. ஜேர்மன் ஃபாலிஸிம் தேசிய வாதத்தினதும் இனவெறியினதும் அதி தீவிரமான ஒரு நிலைப்பாடு என்று யாரும் வாதிக்கலாம். அவ்வாறான வெறியுடன் ஒப்பிடத்தக்க யப்பானிய தேசியவாதமும் இனவெறியும் ஏறத்தாழ அதே காலகட்டத்திற், சீனா, கொரியா ஆகிய நாடுகளில் யப்பானிய ஆக்கிரமிப்பையும் ஆதிக்கத்தையும் வெறித்தனமான கொடுமைகளையும் இயலுமாக்கின. அதே விதமான கொடுமைகள் பிலிப்பின்ஸ், மலாயா, பர்மா உட்பட பல நாடுகட்கும் உலகப் போரின் போது நீடிக்கப்பட்டது.

ஜேர்மன் இனத்தவர் மட்டுமோ யப்பானியர் மட்டுமோ அல்லது குறிப்பிட்ட சில இனத்தவர் மட்டுமே பிற சமூகங்கட்கெதிரான குரூரமான கொடுமைகளை இழைக்கக் கூடியவர்கள் என்று சொல்ல முடியுமா? முழு அமெரிக்கக் கண்டமும் அவுஸ்திரேலியாவும் ஸ்பானிய, போர்த்துக்கேய, பிரித்தானிய ஆக்கிரமிப்பாளர்களால் ஏறத்தாழ முழுமையான இன ஒழிப்பு நடவடிக்கைகட்குட்பட்டன. அத்தனை கொடுமைகளும் தேசங்களின் முடிக்குரிய மன்னர்களதும் மகாராணிகளதும் திருச்சபைகளினதும் பேராலும் அவர்களது பூரண அனுமதியுடனும் ஆசிகளுடனுமே மேற்கொள்ளப்பட்டன. அந்தப் பாரம்பரியம் அமெரிக்காவால் இன்று முழு மானிடத்திற்கும் எதிராக முன்னெடுக்கப்படுகிறது. உள்ளூரில் அமெரிக்காவின் பாதுகாப்பு, அமெரிக்க வாழ்க்கை முறையின் பாதுகாப்பு என்கிற பேர்களிலும் சர்வதேச நுகர்வுக்காகத் தனி மனித சுதந்திரம் சனநாயகம் என்பனவற்றைப் பாதுகாக்கிற நோக்கத்தின் பேரிலும் அமெரிக்கா முழுமானுட உலகையும் நூறு முறை அழித்தொழிப்பதற்குப் போதிய ஆயுத வலிமையை தனதாக்கிக் கொண்டுள்ளது. தேசப்பற்று மனித இனத்தின் மீதான அன்பையும் ஆதரவையும் மேவி நிற்கிறது. மறுபுறம் தனிமனிதவாதச் சிந்தனைகள் சமூக அடிப்படையிலான சிந்தனையின் இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளன. அதன் மூலம் அமெரிக்காவின் உழைக்கும் மக்கள் ஒன்று திரண்டு தம்மீதும் முழு மானிடத்தின் மீதும் ஆதிக்கம் செய்து அடிமைப்படுத்துவோருக்கு எதிராகப் போராடாதவாறு தனி மனிதர்களாகப் பிளவுண்டுள்ளனர்.

அமெரிக்காவின் பாதுகாப்பின் பேரால் எந்த நாட்டின் மீதும் போர் தொடுக்கலாம். அமெரிக்க மக்கள் தேசபக்தியின் பேரால் அதை ஏற்கப்பழகிவிடுகின்றனர். போர் எதிர்பார்த்த வெற்றிகளைத் தராத போதும் அமெரிக்காவின் மக்களுக்குக் கெடுதல்களை விளைவிக்கும் போதும், எதிர்ப்பு அலை எழுகிறது. ஆக மிஞ்சினால் ஆட்சிபீடத்திலுள்ள சனாதிபதியையும் அவரது ஆலோசகர்களையும் பதவி நீக்கலாம். ஆனால், உண்மையான ஆட்சியாளர்களை அகற்ற முடியாது. அமெரிக்கப்படைகள் பெருநாசத்தை விளைத்துத் தாமும் அழிவைச் சந்தித்து விரட்டியடிக்கப்படும் வரை, அதே ஆக்கிரமிப்புக் கொள்கை சிற்சில மாற்றங்களுடன் தொடரும். இது மேலாதிக்கவாதிகளின் சிந்தனையின் தவிர்க்க முடியாத போக்கு. அவர்கள் என்றுமே தாமாகத் திருந்தியதாக வரலாறு இல்லை.

அமெரிக்காவிற் கருத்துச் சுதந்திரம் இருக்கிறதாகச் சொல்லப்படுகிறது. ஆயினும் அந்த கருத்துகள் எப்படி அமைய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிற ஆற்றலும் அதிகாரமும் தகவல் ஊடகங்கள் மீதும் கல்வி நிறுவனங்கள் மீதும் எவரது அதிகாரம் உள்ளது என்பதில் தான் தங்கியுள்ளன. நிலைமைகள் கட்டுக்கடங்காமற் போகும் வரை, அமெரிக்க ஊடகங்கள் அமெரிக்க மக்களை உண்மைகளிடமிருந்து பாதுகாப்பாக வைத்திருக்க வல்லன.

அமெரிக்காவிலாவது பேரளவிலான கருத்துச் சுதந்திரம் உண்டு. 1950 களின் மக்கார்த்தி யுகத்தின் போது கம்யூனிஸ்ற் வேட்டை அமெரிக்கக் கருத்துச் சுதந்திரத்தையும் வேட்டையாடியது. அதன்பின்பு இன்னொரு மக்கார்த்தி யுகம் வராத விதமாக அமெரிக்க நிறுவனம் சிறிது கவனமாகவே இருந்து வந்துள்ளது. எனினும், மக்களை ஏய்ப்பதில் அமெரிக்க ஆட்சி என்றுமே பின்னிற்கவில்லை. வாட்டர் கேற் அலுவலிற் போன்று இடையிற் கையும் மெய்யுமாக அகப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சனநாயகம் போலியானதாக இருக்கலாம். எனினும், அமெரிக்க மக்கள் சனநாயகம் பற்றியும் தங்கள் சட்ட ரீதியான உரிமைகள் பற்றியும் பெரும் நம்பிக்கையும் எதிர்பார்ப்புகளையும் உடையவர்கள் என்பதால் அவர்களது உரிமைகளை அப்பட்டமாக மீறுவது கடினம். எனவே, சனநாயகத்தின் பேராலேயே சனநாயகத்தை மறுக்க வேண்டிய சூழ்நிலை அங்குள்ளது.

நமது நிலைமைகள் கொஞ்சம் வேறுபட்டவை. இந்த நாடு சுதந்திரமடைந்ததாகச் சொல்லப்பட்ட நாளிலிருந்து ஒரு புறம் தொழிற்சங்கங்களும் இடதுசாரிகளும் போராடியதாலும் பாராளுமன்றத் தேர்தல் அரசியலின் நிர்ப்பந்தங்களாலும் பல உரிமைகள் வென்றெடுக்கப்பட்டன. ஆனால், அந்தக் காலம் நீடிக்கவில்லை. இன்றைய தேசிய இனங்களில் ஒன்றான மலையகத் தமிழ்ச் சமூகத்தினால் முதலிருந்தே அனுபவிக்கப்பட்ட உரிமை மறுப்பு, பின்பு தமிழர் மீதும் முஸ்லிம்கள் மீதும் படர்ந்தது. அதைத் தட்டிக் கேட்க வேண்டிய போது, தவறவிட்ட பாராளுமன்ற சந்தர்ப்பவாத இடதுசாரிகள், தம்மையும் அழித்து நாட்டின் தொழிற்சங்க இயக்கத்தையும் பலவீனப்படுத்தி இடதுசாரி இயக்கத்தையும் சீர்குலைத்தார்.

1977 க்குப் பின்பு, சனநாயக உரிமைகளின் மறுப்பும் தேசிய இன ஒடுக்கலும் கைகோர்த்துச் சென்றன. இலங்கைச் சமூகம் தான் இழந்த உரிமைகள் பற்றி விழிப்படைந்த போது அவற்றை மீள வென்றெடுக்கக் கூடிய சமுதாய அமைப்புகள் சிதைக்கப்பட்டுவிட்டன. எனினும், அதிகார, வர்க்க முரண்பாடுகளும் வெகுசன எதிர்ப்பின் படிப்படியான வளர்ச்சியும், 1994 ஆம் ஆண்டு ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்தன. ஆயினும் அந்த மாற்றம் போதுமானதாக இருக்கவில்லை. ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் நிறைவேற்றதிகாரமுள்ள சனாதிபதி முறை மூலம் என்ன செய்ய முடியும் என்பதை மேலும் மேலுங் கசப்பான பாடங்கள் மூலம் இந்த நாடு கற்று வந்துள்ளது.

இன்று, தேசத்தின் பாதுகாப்பின் பேரால் ஊடகவியலாளர்கட்கு எதிரான ஒரு போர் தொடுக்கப்பட்டுள்ளது என்றே தோன்றுகிறது. கருத்துச் சுதந்திரத்திற்கெதிரான இச் சவாலை எதிர்த்துப் போராடுவதற்குச் சுதந்திரமான கருத்தில் நம்பிக்கையுள்ள அனைவரும் தமது கருத்து குறைபாடுகளை மீறி ஒன்றுபட வேண்டிய தேவையை நான் விளக்க வேண்டியதில்லை.

http://www.thinakkural.com/news/2007/3/11/...pakkam.htm`

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.