Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீரன் அதிகாரம் ஒன்று திரைவிமர்சனம்

Featured Replies

 
 
 
card-bg-img
 

கார்த்தி கொம்பன், தோழா என தொடர் வெற்றிகளை கொடுத்தவர். இந்த வருடம் காற்று வெளியிடையில் கொஞ்சம் சறுக்கினார், விட்டதை பிடிக்க சதுரங்க வேட்டை வினோத்துடன் களத்தில் தீரனாக இறங்கினார், விட்டத்தை பிடித்தாரா? பார்ப்போம்.

கதைக்களம்

கார்த்தி DSP ட்ரெயினிங்கில் நல்ல ரேங்கில் தேர்ச்சியாகி வெளியே வருகிறார். அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இரவு நேரங்களில் பல வீடுகளில் கொள்ளை நடக்கின்றது.

அந்த கொள்ளையும் மிகவும் கொடூரமாக மக்களை கொன்று செய்கின்றனர். கார்த்தி கைக்கு இந்த கேஸ் வருகின்றது.

இவர் இந்த கேஸில் முழு மூச்சாக இறங்க பிறகு தான் தெரிகின்றது இந்த கொள்ளை இந்தியா முழுவதும் நடக்கின்றது என்று.

அதை தொடர்ந்து பல வருடம் அந்த கேஸுக்காக கார்த்தி அலைய, அந்த கும்பல் யார்? கார்த்தி பிடித்தாரா? என்பதை பரபரப்பின் உச்சமாக காட்டியுள்ளார் வினோத்.

படத்தை பற்றிய அலசல்

கார்த்தி பருத்திவீரன், மெட்ராஸ் படத்திற்கு பிறகு நடித்த ஒரு பெஸ்ட் என்று சொல்லிவிடலாம். சிறுத்தை படத்தில் மாஸ் போலிஸாக கலக்கிய கார்த்தி இதில் கிளாஸ் பெர்பாமன்ஸில் அசத்துகின்றார். மக்கள் அனைவரும் இப்படி ஒரு போலிஸ் வேண்டும் என்று விருப்பப்படும் போலிஸாக நடித்துள்ளார். இதெல்லாம் சினிமாவில் மட்டும் தான் சாத்தியம் என்றும் சிலர் கூறுவார்கள்.

அப்படி எளிதில் கூறி கடக்க முடியாத கதை தான் இந்த தீரன். 1995-ல் தமிழகத்தில் நடந்த கொடூர கொலை, கொள்ளை என உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுத்துள்ளார் வினோத். மக்களுக்காக ஊர், சொந்தம் என மறந்து இப்படியும் போலிஸ்கள் இருந்துள்ளார்கள் என்பதை காட்டியவிதம் அவர்களுக்கு ஒரு சமர்ப்பணமாகவே இருக்கும்.

அதிலும் படம் முழுவதும் போலிஸிற்கு மட்டுமே ஜால்ரா அடிக்காமல், லஞ்சம் வாங்குவது, ஆங்கிலம் தெரியாமல் திணறுவது என ஒரு சில குறைகளையும் சுட்டிக்காட்டியுள்ளார். படத்தின் பல காட்சிகள் பரபரப்பிற்கு பஞ்சமில்லை.

முக்கியமாக இடைவேளையில் கொள்ளை கும்பலை கார்த்தி நெருங்கும் காட்சி சீட்டின் நுனிக்கு இல்லை, சீட்டிலிருந்து எழுந்தாலே ஆச்சரியம் இல்லை. கொள்ளை என்றால் வெறுமென திருடுவதை மட்டும் காட்சிகளாக வைக்காமல், எப்படி இவர்கள் எல்லாம் கொள்ளையர்களாக மாறினார்கள் என்று பின்கதை வைத்து விளக்குவது செம்ம வினோத்.

படத்தின் ஒளிப்பதிவு சத்யன் ராஜஸ்தான், ஹரியானா என இந்தியாவின் அனைத்து பகுதிகளையும் படம்பிடித்து காட்டியுள்ளார், கதையோடு நம்மையும் பயணிக்க வைக்கின்றனர். ஜிப்ரான் கடந்த வாரம் அறம், இந்த வாரம் தீரன் இரண்டிலும் சிக்ஸர் தான், விஸ்வரூபம்-2 எப்போது என்பது தான் எல்லோரின் கேள்வியும்.

க்ளாப்ஸ்

படத்தின் கதைக்களம் உண்மை சம்பவம் என்றாலும் அதை கமர்ஷியலாகவும், மிகைப்படுத்தாமலும் எடுத்த விதம்.

கொள்ளை என்பதை போகிற போக்கில் சொல்லாமல் அதற்கு பின்கதை வைத்து விளக்கிய விதம்.

ஒளிப்பதிவும், இசை என டெக்னிக்கல் டீம் அனைத்தும்.

படத்தின் சண்டைக்காட்சிகள், அதிலும் கிளைமேக்ஸில் இரண்டு பஸ்ஸுகளுக்கு இடையே வரும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கின்றது.

பல்ப்ஸ்

ராகுல் ப்ரீத் சிங் நடித்ததிலேயே இதில் தான் கொஞ்சம் அழுத்தமான கதாபாத்திரம் என்றாலும், ஆரம்பத்தில் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் கொஞ்சம் படத்தோடு ஒன்றவில்லை.

மொத்தத்தில் தீரன் அதிகாரம் ஒன்றில் பரபரப்பாகவும், வெற்றிகரமாகவும் முடித்தார்.

Direction:
Music:

http://www.cineulagam.com/films/05/100885?ref=review_section

  • தொடங்கியவர்

சினிமா விமர்சனம்: தீரன் அதிகாரம் ஒன்று

2000களின் தொடக்கத்திலிருந்து சென்னையின் புறநகர்ப் பகுதிகள் உட்பட தமிழகத்தின் பல இடங்களிலும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பகுதிகளிலும் கொலை, கொள்ளை சம்பவங்கள் அவ்வப்போது நடந்துவந்தன.

சினிமா விமர்சனம்: தீரன் அதிகாரம் ஒன்று

இதில் ஈடுபட்டவர்கள் குறித்த தகவல்கள் காவல்துறைக்கு பெரிதாகக் கிடைக்காத நிலையில், 2005ல் கும்மிடிப்பூண்டி தொகுதியின் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் இந்தக் கும்பலால் கொல்லப்பட்டார். இதையடுத்து, இந்தக் கும்பலைப் பிடிக்க, தமிழக அரசு அப்போதைய ஐ.ஜியான எஸ்.ஆர். ஜாங்கிட் தலைமையில் ஒரு தனிப்படையை அமைத்தது.

உத்தரப்பிரதேச காவல்துறை, மத்தியப் புலனாய்வு அமைப்புகளின் ஒத்துழைப்புடன் தமிழக காவல்துறை ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பல மாதங்கள் தேடுதல் வேட்டை நடத்தியதில் அந்தக் கும்பலைச் சேர்ந்த பஸுரா பவரியா, விஜய் பவரியா ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஒமா பவாரியா, லட்சுமணன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு தமிழகத்தில் சிறப்பு நீதிமன்றத்தின் மூலம் விசாரணை நடைபெற்று, சிலருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.

இந்தக் கதையையே சிறப்பான திரைக்கதையுடன் படமாக்கியிருக்கிறார் எச். வினோத். ஏற்கனவே சதுரங்க வேட்டை படத்தின் மூலம் திரையுலகின் கவனத்தை ஈர்த்தவர் இவர்.

   
திரைப்படம் தீரன் அதிகாரம் ஒன்று
   
நடிகர்கள் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், மனோபாலா, சத்யன், போஸ் வெங்கட்
   
இசை ஜிப்ரான்
   
ஒளிப்பதிவு சத்தியன் சூரியன்
   
இயக்கம் எச். வினோத்

காவல்துறை துணை கண்காணிப்பாளராக பணியில் சேரும் தீரன் (கார்த்தி), தன்னுடைய நேர்மையான செயல்பாடுகளின் காரணமாக பல இடங்களுக்கும் மாற்றம்செய்யப்படுகிறார்.

பொன்னேரிக்கு மாற்றம் செய்யப்படும்போது, மிகக் கொடூரமான முறையில் ஒரு கொலை - கொள்ளை சம்பவம் அங்கு நடக்கிறது. அதனை விசாரிக்க ஆரம்பிக்கும் தீரனுக்கு, அதுபோலவே பல சம்பவங்கள் ஏற்கனவே நடந்திருப்பது தெரியவருகிறது.

இந்த சம்பவத்தில் ஈடுபடும் கும்பல் யார் என்பதை விசாரிக்க ஆரம்பிக்கிறார் தீரன். வட இந்தியாவைச் சேர்ந்த குற்றக் கும்பல் ஒன்றுதான் இதில் ஈடுபடுவது தெரிந்தாலும் அவர்களைப் பிடிப்பது அவ்வளவு சுலபமாக இல்லை.

சினிமா விமர்சனம்: தீரன் அதிகாரம் ஒன்று

இதற்கிடையில் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரும் இந்த கும்பலால் கொல்லப்பட, வேட்டை தீவிரமாகிறது. இறுதியில் பல போராட்டங்கள், காத்திருப்புகள், அபாயங்களுக்குப் பிறகு அந்தக் கும்பலைச் சேர்ந்த 2 பேர் கொல்லப்பட, மீதமுள்ளவர்கள் பிடிபடுகிறார்கள்.

பல வகையிலும் கவனத்திற்குரிய திரைப்படம் இது. ஒரு பெரிய கொள்ளைக் கும்பல், அதுவும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த கொள்ளைக் கும்பலை மெல்ல மெல்ல துப்புகளைச் சேகரித்து நெருங்குவதை மிக விறுவிறுப்பான திரைக்கதையுடன் உருவாக்குவது அவ்வளவு சுலபமான காரியமல்ல.

காவல்துறை சம்பந்தப்பட்ட ஒரு வழக்கமான "என்கவுண்டர்" மற்றும் ஆக்ஷன் படமாக இல்லாமல், ஒரு துப்பறியும் கதைக்கே உரிய ரகசியங்கள், பின்னணித் தகவல்களுடன் படத்தை நகர்த்துகிறார் வினோத்.

ஆனால், சில பகுதிகளைத் தவிர்த்திருந்தால் படம் இன்னுமும் சிறப்பாக அமைந்திருக்கக்கூடும். குறிப்பாக படத்தின் தொடக்கத்தில் வரும் காதல் காட்சிகள்.

சீட் நுனியில் ரசிகர்களை உட்காரவைத்துவிட்டு, திடீரென கதாநாயகன் - கதாநாயகி இடையிலான ரொமான்சிற்குத் தாவுவது படத்தை முழுமையாக ரசிப்பதற்கு பெரும் தடையாக அமைகிறது. அதேபோல, நாயகன் - நாயகி இடையிலான பாடல்களும் இந்தப் படத்திற்கு தேவையேயில்லாதவை.

காற்று வெளியிடை, காஷ்மோரா என கார்த்தியின் அடுத்தடுத்த படங்கள் வெற்றிபெறாத நிலையில், அவர் மிகவும் எதிர்பார்த்திருந்த படம் இது. கார்த்தியின் திரை வாழ்க்கையில் மிகவும் முக்கியமான, ஒரு குறிப்பிடத்தகுந்த படமாக இந்தப் படம் அமையக்கூடும்.

சினிமா விமர்சனம்: தீரன் அதிகாரம் ஒன்று

கதாநாயகி ரகுல் ப்ரீத் சிங் வரும் காட்சிகள் இயல்பானவை, ரசிக்கத்தக்கவை என்றாலும் இந்தப் படத்திற்குப் பொருந்தாதவை. ஆனால், தன் பணியைச் செவ்வனே செய்திருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங்.

படத்தின் வலுவான திரைக்கதைக்கு மேலும் வலுச் சேர்க்கின்றன சத்தியன் சூரியனின் ஒளிப்பதிவும் ஜிப்ரானின் பின்னணி இசையும். குறிப்பாக, பரந்த பாலைவனப் பகுதிகளையும் அடர்ந்த காடுகளையும் கண்முன் நிறுத்தும் ஒளிப்பதிவு, படத்தின் மிகப் பெரிய பலம்.

வலுவான திரைக்கதை, பொருத்தமான நடிகர்கள், முன்பு பாராத இடங்கள் என ஒரு கவனிக்கத்தக்க திரைப்படம் இது.

http://www.bbc.com/tamil/arts-and-culture-42025165

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.