Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரட்டை இலை தர இரண்டு நிபந்தனைகள்!

Featured Replies

மிஸ்டர் கழுகு: இரட்டை இலை தர இரண்டு நிபந்தனைகள்!

 
 

 

‘‘முதல் நாள் இரட்டை இலை தீர்ப்பு... அடுத்த நாள் ஆர்.கே.நகர் தேர்தல் அறிவிப்பு’’ என ரைமிங்கோடு வந்தமர்ந்தார் கழுகார்.

‘‘இரட்டை இலைக்கு உயிர் கொடுக்கும் எண்ணமே இல்லாமல்தான் பி.ஜே.பி ஆரம்பத்தில் இருந்தது. ‘எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்’ என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் கவர்னரிடம் மனு கொடுத்த பிறகுதான் இரட்டை இலை யாருக்கு என்கிற வழக்கு தேர்தல் கமிஷனில் வேகம் பிடித்தது. ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் கண்டிப்பு காட்டிய சூழலில், இரட்டை இலை இறுதித்தீர்ப்பு வெளியானது. ஆர்.கே.நகர் தேர்தலை ஒரு பரிசோதனைக் களமாகப் பார்க்கிறது பி.ஜே.பி. இங்கு ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் அணி பெறும் வாக்குகளைப் பொறுத்து 2019-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில், பி.ஜே.பி-அ.தி.மு.க கூட்டணிக்கான பாதையைத் திட்டமிடலாம் என்பதுதான் பிளான். கணிசமான வாக்குகளை வாங்கி எடப்பாடி வேட்பாளர் வெற்றி பெற்றால், அடுத்து நடக்கும் உள்ளாட்சித் தேர்தலில் குறிப்பிட்ட இடங்களைத் தர வேண்டும் என ஒரு நிபந்தனையும், நாடாளுமன்றத் தேர்தல்களில் தாங்கள் கேட்கும் இடங்களைத் தர வேண்டும் என்ற இன்னொரு நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளதாம்.”

p2d.jpg

‘‘ஆர்.கே.நகர் தேர்தலில், பிஜே.பி-அ.தி.மு.க கூட்டணி அமையுமா?”

‘‘அமையாது என்கிறார்கள். அப்படிக் கூட்டணி அமைந்தால், ‘இரட்டை இலையை பி.ஜே.பி-தான் பெற்றுக் கொடுத்தது’ என்கிற விமர்சனம் வலுவாகுமே. மேலும், எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. ‘அந்த வழக்குகளில் என்ன தீர்ப்பு வரும் எனத் தெரியாத நிலையில் கூட்டணி ஏன்?’ என யோசிக்கிறது பி.ஜே.பி. எடப்பாடி ஆட்சியின்மீது கடுமையான எதிர்ப்புகள் இருக்கும் நிலையில் கூட்டணி போட்டு ஆர்.கே.நகர் தேர்தலை எதிர்கொள்ள பி.ஜே.பி விரும்பவில்லை.”

‘‘இரட்டை இலை பறிபோனது தினகரனுக்குப் பின்னடைவுதானே?”

‘‘தினகரன் அணி இதை முன்கூட்டியே எதிர்பார்த்தது. ‘நிர்வாகிகள் மட்டுமே எடப்பாடி அருகில் இருக்கிறார்கள். தொண்டர்கள் தங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள்’ என தினகரன் தரப்பு சொல்லிக்கொண்டிருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பில் சில குழப்பங்கள் இருப்பதாகவும் தினகரன் அணி நினைக்கிறது. கட்சியின் பெயர், சின்னம் எல்லாம் பறிபோனதால் இன்றைய சூழ்நிலையில் தினகரன் புதுக்கட்சிதான் ஆரம்பிக்க வேண்டும். ஆனால், அப்படியான திட்டம் எதுவும் தினகரனிடம் இல்லை. கட்சியையையும் சின்னத்தையும் கைப்பற்றுவதில் அவர் உறுதியாக இருக்கிறார். தேர்தல் கமிஷன் தீர்ப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.’’

p2.jpg

‘‘முட்டை விவகாரத்தில் என்ன நடக்கிறது?”

‘‘முட்டை விலை ஏகத்துக்கும் உயர்ந்து விட்டது. உற்பத்தியில் எந்தப் பாதிப்பும் இல்லை. அதுபோல, ஜி.எஸ்.டி வரியும்கூட காரணமில்லை எனச் சொல்லப்படுகிறது. ஆந்திராவுக்கு அதிக முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுவதால், விலை உயர்ந்ததாகச் சொல்கிறார்கள். ஆனால், அதைத் தாண்டியும் இன்னொரு காரணத்தைச் சொல்கிறார்கள். சத்துணவுத் திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு முட்டை வழங்கும் தமிழக அரசின் திட்டத்தில் கான்ட்ராக்டராக சொர்ணபூமி என்ற நிறுவனம்தான் பல வருடங்களாகச் செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு புதிதாக ஒப்பந்தம் செய்தபோது, முட்டை ஒன்றுக்கு 4.34 ரூபாய் என அரசு விலை நிர்ணயம் செய்திருந்தது. அந்த நேரத்தில் ‘இந்த விலையே அதிகம்’ என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தது உமக்கு நினைவிருக்கும்.’’

‘‘ஆமாம். ஆனால், இப்போது முட்டையின் விலையே வேறு ரேஞ்சில் இருக்கிறதே?’’

‘‘அதைத்தான் சொல்ல வருகிறேன். முட்டை விலை ஆறு ரூபாயைத் தாண்டி உயர ஆரம்பித்ததும், பல மாவட்டங்களில் முட்டை சப்ளை செய்வதை இந்த நிறுவனம் நிறுத்திவிட்டது.  ‘எல்லா பள்ளிகளிலும் வழக்கம்போல முட்டை வழங்கப்படுகிறது’ எனச் சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா சொல்கிறார். சொர்ணபூமி நிறுவனமும் அப்படித்தான் சொல்கிறது. ஆனால், ‘கூடுதல் விலை கொடுத்தால் மட்டுமே பள்ளிகளுக்கு முட்டை சப்ளை செய்ய முடியும்’ என அந்த நிறுவனம் சார்பில் இப்போது தமிழக அரசிடம் பேசப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, முட்டை விலையை 6.75 ரூபாய் வரை உயர்த்தி, கொள்முதல் செய்து கொள்வதாக சொர்ணபூமி நிறுவனத்திடம் வாய்மொழியாக உறுதி அளித்துள்ளது அரசு தரப்பு.”

‘‘இது செயற்கை விலை ஏற்றம் போல இருக்கிறதே..?’’

‘‘அப்படித்தான் சொல்கிறார்கள். தமிழக அளவில் முட்டை விலை ஏற இந்த நிறுவனமும் மறைமுகக் காரணம் என்கிறார்கள். முட்டை விலையை என்.இ.சி.சி என்று சொல்லப்படும் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு கமிட்டிதான் நிர்ணயம் செய்யும். வாரத்துக்கு இரண்டு முறை இந்த விலை நிர்ணயம் நடைபெறும். இந்த நிறுவனத்தின் முக்கியப் பொறுப்புக்கு ராசிபுரத்தைச் சேர்ந்த ஒருவர்தான் வந்திருக்கிறார். இவர் இந்த நிறுவனத்துக்கு நெருக்கமானவராம். இவர் வந்த பிறகுதான் முட்டை விலை விறுவிறுவென ஏற்றம் கண்டது என்கிறார்கள்.’’

‘‘இப்படித்தான் மணல் குவாரிகளிலும் மர்மங்கள் புதைந்திருக்கிறதா?’’ என்று கேட்டு, நமது நிருபர் எழுதிய ஸ்பெஷல் ஸ்டோரியை அவருக்குக் காண்பித்தோம்.

p2b.jpg

படித்தவர், ‘‘எட்டு மாவட்டங்களில் 70 இடங்களில் புதிய மணல் குவாரிகள் திறக்கப்படுமாம். ஏற்கெனவே, மணல் குவாரிகளால் அரசாங்கத்துக்குக் கெட்ட பெயர் என்ற நிலையில், புதிதாக 70 இடங்களில் குவாரிகளைத் திறந்தால், மேலும் பிரச்னை வரும் என அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டதாம். ஆனால், முதல்வர் அலுவலகம் கறாராக இடங்களைத் தேர்வு செய்ய உத்தரவிட்டுள்ளதாம். எடப்பாடியின் ரத்த உறவுகள்தான் இனி இதில் கொடிகட்டிப் பறக்கப்போகின்றனர்’’ என்றார்.

கிளம்புவதற்கு முன்பாக, ‘‘இரட்டை இலை தொடர்பாக இன்னொரு விஷயம்... 1989-ம் ஆண்டு  இதேபோல பிரச்னை வந்தபோது, சின்னத்தைப் பெற்றுத் தர வாதாடியவர், முன்னாள் அட்வகேட் ஜெனரல் கே.சுப்பிரமணியம். அவரிடம் ஆலோசனை கேட்க அமைச்சர்கள் தங்கமணியும் வேலுமணியும் போனார்கள். வழக்கில் ஆஜராக மறுத்த அவர், ‘ஜெயலலிதா மறைவுக்கு முன்பு அவரால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளில் உங்கள் பக்கம் இருப்பவர்களை தேர்தல் கமிஷனில் காட்டினால் இரட்டை இலையைப் பெற்றுவிடலாம்’ என ஆலோசனை சொன்னார். அந்த வாதத்தைத்தான் தேர்தல் கமிஷன் ஏற்றுக்கொண்டு தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறது’’  என்றபடியே பறந்தார்.

ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி


p2a.jpg

dot.pngவருமானவரித் துறை ரெய்டில் ஆடிப்போயிருக்கும் தினகரன் தரப்பு, பிரபல மடத்தின் தயவை நாடியது. இப்போது டெல்லியில் இருக்கும் அந்த மடாதிபதி, அதற்காக சிலரைச் சந்தித்தாராம்.

dot.png‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடியும்வரை வேறு எந்த அரசியல் அதிரடியிலும் ஈடுபட வேண்டாம்’ எனத் தமிழக கவர்னருக்கு டெல்லி தலைமை உத்தரவு போட்டுள்ளதாம்.

dot.pngஅழகிரிக்கு ஆதரவாக கருணாநிதியை வளைக்க உறவுகள் சில முயற்சி செய்கின்றனவாம். அதனால் கருணாநிதியைச் சந்திக்க வருபவர்களைக் கட்டுக்குள் வைக்க ஸ்டாலின் சொல்லியிருக்கிறாராம்.

dot.pngதமிழக அமைச்சர் ஒருவர் வெளிநாட்டில் முதலீடு செய்வதில் மும்முரமாக இருக்கிறார். அந்த அமைச்சரின் துறையில் சமீபத்தில் ஏராளமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. 500 கோடி ரூபாயில் ஷார்ஜாவில் மிகப்பெரிய மருத்துவமனை ஒன்றை வாங்கும் வேலைகள் கடந்த வாரம் துவங்கின. இதற்காக அமைச்சருக்கு நெருக்கமான உறவினர் ஒருவர் ஷார்ஜாவில் முகாமிட்டுப் பணிகளைக் கவனித்து வருகிறார். அமைச்சரின் இந்த வெளிநாட்டு முதலீடு விவகாரம் அவரின் ஆதரவாளர்கள் காதுகளை எட்டிவிட்டது. ‘‘எங்களுக்கு இதுவரை அமைச்சர் ஒன்றும் செய்யவில்லை. சரியான வகையில் அமைச்சரை இந்த விவகாரத்தில் சிக்க வைப்போம்’’ என்கிறார்கள் ஆதரவாளர்கள்.

https://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.