Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக திரைப்பட வரிசை 'தி 400 ப்ளோஸ்.'

Featured Replies

"உலகம் ஒரு அலுவலகமாக சுருங்கிவிட்டது" என்றார் காஃப்கா. குழந்தைகளின் உலகம் இன்னும் மோசம். பெற்றோர்களின் ஆதிக்கமும் பள்ளிக் கூடங்களின் அதிகாரமும் அதனை சிறைக்கூடமாக மாற்றிவிட்டன. சிறுவர்களின் உலகம் அவர்களை சுற்றியுள்ள மனிதர்களாலும் சமூக சூழல்களாலும் எவ்வாறு சிதைவுறுகின்றது என்பதை துல்லியமாக காட்சிப்படுத்திய திரைப்படங்கள் ஏராளம். அவற்றில் முக்கியமானது பிரெஞ்ச் இயக்குனர் பிரான்ஸ்வோ த்ரூபோ (Francois Truffot)இயக்கிய 'தி 400 ப்ளோஸ்.'

த்ரூபோ 1932-ம் வருடம் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பிறந்தார். இவரது தாயின் இரண்டாவது கணவர் இவரை மகனாக ஏற்றுக்கொண்டாலும் பாட்டி வீட்டிலேயே வளர்ந்தார். த்ரூபோவுக்கு கல்வியில் நாட்டம் செல்லவில்லை. பல பள்ளிக்கூடங்கள் மாறிய பின் தனது 14-வது வயதில் பள்ளிக்கூடம் செல்வதை முற்றிலுமாக தவிர்த்தார்.

பள்ளிகளைவிட த்ரூபோவை திரையரங்குகள் அதிகம் ஈர்த்தன. திரைத்துறையில் நுழைவதற்கான முதல் முயற்சியாக தனது பதினாறாவது வயதில் திரைப்படச் சங்கம் ஒன்றை தொடங்கினார்.

பிரெஞ்ச் சினிமாவை பாதித்த மிக முக்கியமான நிகழ்வு என்று 'காகியேது சினிமா' என்ற பிரெஞ்ச் சினிமா பத்திரிகையை சொல்லலாம். இதில் வெளிவந்த காத்திரமான சினிமா விமர்சனங்கள் மற்றும் சினிமா குறித்த கட்டுரைகள் பிரெஞ்ச் சினிமாவை பெரிய அளவில் பாதித்தன. ஐம்பதுகளின் பிற்பகுதியில் பிரெஞ்ச் புதிய அலை இயக்கம் உருவாகி உலகம் முழுவதும் உள்ள சினிமாவை பாதித்ததற்கு இப்பத்திரிகையின் பங்கு கணிசமானது.

1951-ல் வெளிவரத் துவங்கிய 'காகியேது சினிமா'வில் விமர்சனங்கள் எழுதினார் பிரான்ஸ்வோ த்ரூபோ. இவரது விமர்சனங்களும் கட்டுரைகளும் பிரெஞ்ச் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. 1959-ல் தனது முதல் படமான 'நானூறு உதைகள்' படத்தை இயக்கினார் த்ரூபோ.

இத்திரைப்படம் அந்த்யோன் என்ற சிறுவனைப் பற்றியது. அந்த்யோனின் தாய் வேலைக்கு காலையில் சென்றால் இரவு வெகுநேரம் கழித்து வீடு திரும்பக் கூடியவர். "நீ நேரம் கழித்து வருவதால் நான் இவனுக்கு தந்தையாகவும் இருந்து கொண்டு இவனுக்கு சமைத்தும் போட வேண்டுமா?" என அந்த்யோனை முன்னிறுத்தி தனது மனைவியிடம் சண்டையிடுபவர் அந்த்யோனின் தந்தை. உண்மையில் இவர் அந்த்யோனின் தந்தை அல்ல. அவன் தாயின் இரண்டாவது கணவர். அந்த்யோனின் வீடு இப்படியென்றால் பள்ளிக்ககூடமோ நெகிழ்ச்சியற்ற தண்டனைகள் மட்டுமே அளிக்கக்கூடிய இறுக்கமான ஓர் அமைப்பு.

இந்த இளவயது புறக்கணிப்பு அந்த்யோன் என்ற சிறுவனை பொய் சொல்ல வைக்கிறது. திருட கற்றுக் கொடுக்கிறது. வீட்டை துறந்து நாள் கணக்கில் தெருவில் அலையவிடுகிறது. இறுதியில் சீர்திருத்தப் பள்ளி என்ற பெயரில் சிறைவாசத்தையும் பெற்றுத்தருகிறது.

தாய் தந்தை இருவரும் வேலைக்குச் செல்லும் இந்த நவீன யுகத்தில் சிறுவர்களின் உலகில் பெற்றோர்களின் இடம் காலியாகவே உள்ளது. அந்த இடத்தை பரிசுகள் கொண்டோ தண்டனைகளாலோ நிறைத்துவிட பெற்றோர்கள் முயல்கின்றனர். புறக்கணிப்பின் ஒரு பகுதியான பரிசுகளும் தண்டனைகளும் வெற்றிடத்தை அதிகப்படுத்தவே செய்கின்றன.

ஒருநாள் காலை நேரத்தில் அவசர அவசரமாக பள்ளிக்குச் செல்கிறான் அந்த்யோன்.வழியில் சந்திக்கும் நண்பன் ரெனே, "பள்ளிக்கு நேரமாகி விட்டது. இனி சென்றால் வாத்தியார் உள்ளேயாவிடப் போகிறார்?" என்று கூறி அந்த்யோனை திரையரங்குக்கு அழைத்துச் செல்கிறான்.

பிறிதொரு சமயம் பள்ளிக்கு செல்லாததற்கு ஆசிரியர் தண்டிப்பார் என பயந்து அம்மா இறந்து விட்டதாக பொய்யான காரணம் கூறுகிறான் அந்த்யோன். இந்த குட்டு சிறிது நேரத்திலேயே வெளிப்பட்டு விடுகிறது. அவனை அவனது தந்தை கன்னத்தில் அறைந்து, சாயந்தரம் வீட்டுக்கு வா பார்த்துக் கொள்கிறேன் என்கிறார். அன்று இரவு முதன்முறையாக வீட்டிற்கு செல்லாமல் தெருவில் உறங்குகிறான் அந்த்யோன்.

தண்டனைகள் குற்றவாளிகளை திருத்துவதைவிட அதிகமாக குற்றவாளிகளையும் குற்றங்களையும் உருவாக்கவே உதவிபுரிகின்றன. கடுமையான தண்டனைகள் திறமையான குற்றவாளிகளை உருவாக்குகின்றன. பெற்றோர்களும் பள்ளிக்கூடங்களும் 'சிறுவர்களின் உலகை' புரிந்து கொள்ளாமல் அளிக்கும் தண்டனைகள் அவர்களை தவறான பாதைக்கே இட்டுச்செல்கின்றன.

அந்த்யோன் வீட்டிற்கு செல்லாத மறுநாள் பள்ளிக்கூடத்தில் வைத்து அவனை பெற்றோர் கண்டுபிடிக்கிறார்கள். அவனிடம் நல்லவிதமாக பேசும் அவர்கள் அன்றுமாலை அந்த்யோனை சினிமாவுக்கு அழைத்துச் செல்கிறார்கள்.

ஆனால் அன்றைய மாலைக்குப் பிறகு மீண்டும் பழைய நிலையே தொடர்கிறது. பள்ளிக்கூடத்தில் மீண்டும் தண்டிக்கப்படுகிறான் அந்த்யோன். வீட்டிற்கு செல்லும் துணிவில்லை. நண்பன் ரெனேயின் வீட்டில் அவனது அம்மாவுக்கு தெரியாமல் தங்கிக் கொள்கிறான்.செலவுக்கு பணம் இல்லாமல் தனது தந்தையின் அலுவலகத்திலிருந்து டைப்ரைட்டர் ஒன்றை திருடுகிறான் அந்த்யோன்.பிறகுபயந்து அதனை மீண்டும் உரிய இடத்தில் வைக்கச் செல்லும்போது தந்தையிடம் மாட்டிக்கொள்கிறான். அவர் இவனுக்கு நல்லது செய்வதாக நினைத்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அதாவது சிறைச்சாலைக்கு அனுப்புகிறார்.

எந்த குழந்தையும் குற்றவாளியாக பிறப்பதில்லை. சுற்றியுள்ள மனிதர்களும், சமூக சூழலுமே அவர்களை குற்றவாளிகளாக்குகிறது. முக்கியமாக பெற்றோரும், பள்ளிக்கூடங்களும்!

'தி 400 ப்ளோஸ்' திரைப்படத்தில் தனது இளமை பருவத்தையே கதையாக்கியுள்ளார் த்ரூபோ. தனது திரைப்பட முயற்சிக்காக தனது தந்தையின் அலுவலகத்தில் டைப்ரைட்டர் திருடியதை படத்திலும் வேறுவிதமாக பதிவு செய்துள்ளார்.

பிரமாண்டம், அதீத கற்பனை, கேளிக்கை, மலிவான உணர்ச்சி தூண்டல் போன்ற ஹாலிவுட் பிரமாண்டங்களுக்கு எதிர்திசையில் சினிமாவை திருப்பிய பிரெஞ்ச் புதிய அலை இயக்குனர்களில் முக்கியமானவர் பிரான்ஸ்வோ த்ரூபோ. அவரது முதல் படமான 'தி 400 ப்ளோஸ்'ம் அதே அளவுக்கு முக்கியமானது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.