Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜீவ் கொலை மர்மம்

Featured Replies

ராஜீவ் கொலை மர்மம் உடைக்கும் ‘தடா’ ரவி!

 
 

தனு... அனுஜா - பொய் சொன்ன சி.பி.ஐ - சிவராசனுக்கு உத்தரவிட்டது சி.ஐ.ஏ

 

‘இந்திய உளவுத்துறைகளின் கண்கள் அந்தப் ‘பொருளின்’ மீது விழுந்துவிட்டிருந்தது. ஆமாம், தமிழகத்துக்குள் இயங்கிக்கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் மூன்று வயர்லெஸ் கருவிகளில் இரண்டு செயலிழந்து போய்விட்டன. மிஞ்சியிருப்பது ஒன்றுதான். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உளவுப்பிரிவுத் தலைவரான பொட்டம்மானுடன் நான் நேரடியாகப் பேசிக்கொள்ள கொடுக்கப்பட்டிருந்த கருவி அது. அதன் வழியாகத்தான் இருவரும் தகவல்களைப் பரிமாறிக் கொண்டிருந்தோம். பேசி முடித்தவுடன் தொடர்புகளை அறுத்துக்கொண்டு வேறு இடத்துக்குக் கொண்டுபோய் பதுக்கிவிடுவேன். அவ்வப்போது வெளிப்படும் ‘சமிக்ஞை’யை வைத்து இந்த ரகசிய நடமாட்டத்தையும் கண்டுபிடித்துவிட்டிருந்தார்கள்...’

- முதல் அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ள இந்த வரிகளைப் படிக்கும்போது, ‘யார் இவர், என்ன சொல்லவருகிறார்’ எனப் புத்தகத்துக்குள் தேடத் துடிக்கிறது மனம். தன் அனுபவங்களைச் சொல்லும் இரா.பொ.ரவிச்சந்திரன் வேறு யாருமல்ல... ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதி. நளினி, சாந்தன், பேரறிவாளன், முருகனைப்போல் ரவிச்சந்திரனும் 27 ஆண்டுகளாக சிறைக்குள்தான் இருக்கிறார். ஆனால், மற்றவர்களைப் போல ரவிச்சந்திரனை பரவலாகத் தெரியாது.

p44d_1515146858.jpg

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட மற்றவர்களின் அனுபவங்கள் வேறு; ரவிச்சந்திரனின் அனுபவம் வேறு. நளினியோ, பேரறிவாளனோ இலங்கைக்குச் சென்றதில்லை. புலிகள் இயக்கத்தில் நேரடியாகப் பயிற்சி பெற்றவர்களும் இல்லை; பணியாற்றியவர்களும் இல்லை. ஆனால், ரவிச்சந்திரனுக்கு அந்த அனுபவம் உண்டு! அதுவும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பாரதி மாஸ்டர், செல்வராஜ் மாஸ்டர் போன்றோரிடம் பயிற்சி பெற்றவர். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கியத் தளபதிகளான மில்லர், சூசை, டேவிட் உள்ளிட்டவர்களோடு சேர்ந்து சமர் புரிந்த அனுபவங்கள் உடையவர். இந்த விவரங்கள் தெரியவரும்போதுதான், ரவிச்சந்திரனின் பாத்திர முக்கியத்துவத்தை நம்மால் உணர முடிகிறது.

ஈழத்தில் அவர் நேரில் கண்ட காட்சிகளையும், தன் பயிற்சி அனுபவங்களையும், போர்க்களங்களையும் விவரிக்கும்போது, படிப்பவர்கள் மனதில் ஈரம் கசியும். ரவிச்சந்திரனின் அப்பா பெயர் பொய்யாழி. வேளாண் துறை அதிகாரியாக இருந்தவர். இப்போது இறந்துவிட்டார். இளவயதில் ஈழம் பற்றிப் படித்த, கேட்ட செய்திகளால் உந்தப்பட்டு, ‘ஈழ விடுதலைப்போரில் பங்கெடுக்க வேண்டும்; அதற்காக விடுதலைப்புலிகள் அமைப்பில் சேர வேண்டும்’ என்ற எண்ணத்தோடு இருந்திருக்கிறார் ரவி. பதினொன்றாம் வகுப்பு படிக்கும்போது, காலாண்டுத் தேர்வு கட்டத்திலேயே படிப்பைத் துறந்து, வீட்டிலிருந்து வெளியேறி ராமேஸ்வரம் சென்றவர், அங்கு அலைந்து திரிந்து அகதிகளின் படகில் யாழ்ப்பாணம் சென்று, பல சிரமங்களுக்கு மத்தியில், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிடிவாதமாகச் சேர்ந்தார். பிறகு, புலிகள் இயக்கத்தின் நலனுக்காகவே, அங்கிருந்து வெளியேறி மீண்டும் தமிழகம் வந்து தனி இயக்கம் ஆரம்பித்தவர். புலிகளுக்கு அத்தியாவசிய பொருள்களை அனுப்பி வைக்கும் உதவிகளைச் செய்து வந்தார். அந்த நிலையில், தமிழக கியூ பிரிவு போலீஸார் இவரைக் கைது செய்தார்கள். பிறகு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி இன்று ஆயுள் தண்டனைக் கைதியாக இருக்கிறார். நல்ல ஆங்கில, சட்டப் புலமை பெற்றவராக இருக்கிறார். ஊடக வெளிச்சம்படாத மனிதராக இருப்பது குறிப்பிடத்தக்கது. ‘இரண்டு முறை ஜூ.வி-யில் தன்னைப் பற்றி வந்த செய்திகளைத் தவிர்த்து வேறெதுவும் இத்தனை ஆண்டுகளில் வெளிவந்தததில்லை’ என்கிறார். வழக்கில் சிக்கியது, சிவராசனின் செயல்பாடு என்ன, அவரின் உண்மையான திட்டம் என்ன என்பது உள்ளிட்ட பல அதிர்ச்சி, திருப்புமுனைத் தகவல்களை இந்தப் புத்தத்தில் தெரியப்படுத்தியுள்ளார். கடந்த காலங்களில் ரவிச்சந்திரன் அவ்வப்போது எழுதி வைத்திருந்ததை எல்லாம் அவரின் வழக்கறிஞர் T. திருமுருகன் உதவியோடு பெற்று, முறைப்படுத்தி, விறுவிறுப்பாகத் தொகுத்துள்ளார் பா.ஏகலைவன். ‘யாழ்’ பதிப்பகத்தின் வெளியீடாக வரும் ‘சிவராசன் டாப் சீக்ரெட்’ புத்தகத்திலிருந்து சில பகுதிகள் இங்கே...


‘ஒரு தேசத்தின் அடுத்த பிரதமர் யார்’ என்பதைத் தீர்மானிக்கும் முக்கியத் தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்கு உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் புகைப்படம் எடுக்க வருவார்கள் என்பது யாரும் அறிந்த ஒன்றுதான். அந்தச் சாதாரண விஷயம்கூட விடுதலைப்புலிகள் போன்ற ஓர் அமைப்புக்கும் அதன் தலைமைக்கும் தெரியாதா? மிக ரகசியமான ஒரு கொலைத் திட்டத்தைப் புகைப்படம் எடுக்கத் திட்டமிட்டிருந்தால், அதற்கென தனியாக ஒரு புகைப்படக்காரரைப் பயன்படுத்தி இருப்பார்களே? விடுதலைப்புலிகளிலேயே திறமையான புகைப்படக்காரர்கள் இருக்கிறார்களே? அப்படியே அந்தப் புகைப்படம் எடுப்பவர் இறந்திருந்தாலும், கேமராவை அங்கிருந்து அகற்றும் ஏற்பாட்டையும் செய்திருக்க மாட்டார்களா?

ஹரிபாபு ஒரு தொழில்முறை புகைப்படக்காரர். ஓர் இடத்துக்குப் போனால் மற்றவர்கள் படங்களையும் எடுக்கக் கூடியவர். 7 மணியிலிருந்து 10.20 மணிக்கு குண்டுவெடிப்பு நடக்கும் வரை வெறும் பத்தே ஸ்டில்கள்தான் எடுத்திருப்பார் என்பது நம்பும்படியாக இருகிறதா? இந்தச் சந்தேகங்களுக்கு வலுவான காரணங்கள் இருக்கின்றன. ஏனென்றால் அந்த புகைப்படச்சுருள் வெட்டப்பட்டு இருந்தது. கேமராவும் ஃபிலிம் ரோலும் சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றப்பட்டு சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்கப்படும் வரையிலான அந்த மூன்று நாள் நிகழ்வுகள் எல்லாமும் மர்மமாக இருந்தன.

p44c_1515146878.jpg

ஹரிபாபு எடுத்த மொத்த படங்களில் சி.பி.ஐ வெளியிட்ட படங்கள் தவிர மற்ற படங்களில் எத்தனை காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் அல்லது பிரமுகர்கள் இருந்திருப்பார்கள்? மற்ற படங்களைக் காட்டி அவர்களை வழிக்குக் கொண்டு வரவாவது சிவராசன் எடுக்கச் சொல்லியிருக்கலாம் அல்லவா? ‘இல்லை, பத்து படங்கள்தான் எடுக்கப்பட்டன’ என்றால், ‘ராஜீவைக் கொன்றது புலிகள்தான் என்று உலகம் தெரிந்துகொள்ள வேண்டும். கொலைப்பழி சுமக்க வேண்டும்’ என்று சிவராசன் திட்டமிட்டுச் செய்தார் என்று புரிகிறது அல்லவா?

புலிகள் தங்கள் ஆவணத்துக்காக எடுத்தார்கள் என்பது உண்மையானால், புலிகள் அமைப்பின் ரகசியம் காக்கும் தன்மைக்கே இது முரண்பாடாக இருக்கிறதே. சாதாரண போராளிகளே தடயங்களை விடமாட்டார்கள் எனும்போது, மூத்த போராளி சிவராசன் எப்படி தடயத்தை விட்டுச் சென்றார்? ஹரிபாபு இறந்தாலும் அவரது கேமராவை எடுக்காமல் சிவராசன் வந்திருக்க மாட்டார். ‘ஏன் அப்படி விட்டுவிட்டு வந்தார்’ என்பதையும், ‘அதன்பிறகு உடனடியாக ஈழத்துக்குத் தப்பிச் செல்ல அவர் ஏன் அக்கறை காட்டவில்லை’ என்பதையும் முடிச்சுப்போட்டுப் பார்க்க வேண்டும். ‘கடற்கரையே இல்லாத பெங்களூருவுக்கு ஏன் சென்றார்’ என்று என்னிடம் பொட்டம்மான் கேட்ட கேள்வியுடன் முடிச்சுப் போட்டுப் பார்க்க வேண்டும்.

சிவராசனிடம் மூன்று டைரிகளைக் கண்டெடுத்தது சி.பி.ஐ. அவற்றில் இரண்டு பாக்கெட் டைரிகள்; ஒன்று பெரிய டைரி. அந்த டைரியில் சிவராசன் எனது சொந்தப் பெயரான ‘இரவி’ என்று எழுதியிருக்கிறார். பொதுவாக இயக்கத்தினர் யாருடைய சொந்தப் பெயரையும் பயன்படுத்துவதில்லை; குறிப்பாக எழுத்தில் பதியமாட்டார்கள். வேண்டுமென்றே பல சந்திப்புகளை, தகவல் பரிமாற்றங்களை தேதிவாரியாகக் குறிப்பிட்டு டைரி எழுதியிருக்கிறார். இது புலிகளின் உளவுப்பிரிவு செயல்பாட்டுக்கு விரோதமானது. எழுத்தில் உள்ள சாதாரணத் தகவலைக்கூட உடனுக்குடன் எரிக்க வேண்டும்.

p44_1515146835.jpg

தனு போட்டோ வெளியானதிலிருந்தே பயஸ், ஜெயக்குமார், விஜயன் ஆகியோர் வேறு இடம் செல்ல முயன்றபோது தடுத்தவர் சிவராசன். மே 24-ம் தேதியிலிருந்து ஜூன் 14-ம் தேதி வரை நான்கைந்து தடவையாவது சிவராசனை ‘ஈழம் சென்று விடுங்கள்’ என்று நான் சொன்னதைத் தவிர்த்தார். ‘ராஜீவ் இறந்ததும் சிவராசன் நேபாளம் செல்லத் திட்டமிட்டார்’ என்பதை வாணன் என்ற இலங்கைத் தமிழர் வாக்குமூலத்திலிருந்து அறியலாம்.

பொதுவாக உளவுப்பிரிவு உறுப்பினர்கள், அரசியல் பிரிவு உறுப்பினர்களுடன் சேரமாட்டார்கள். அரசியல் பிரிவு ஆட்கள் வெளிப்படையாக இயங்குபவர்கள். ஆனால், அரசியல் பிரிவு திருச்சி சாந்தனுடன் இவர் வலியச் சென்று சேர்ந்துள்ளார். இருவருமே மாத்தையாவின்கீழ் பணியாற்றியவர்கள். புலிகளின் அரசியல் பிரிவு தலைவராக இருந்த மாத்தையா, ‘ரா’ உளவாளி என்று கண்டுபிடிக்கப்பட்டு உண்மை நிரூபணமாகி, மரண தண்டனைக்கு உள்ளானவர். இந்த மாத்தையாவின் ‘ரா’ தொடர்பாளராக அறியப்பட்டவர், நெய்வேலியில் இருந்த நீலன். அவரைத் தமிழகம் வந்ததும் சிவராசன் பார்த்துள்ளார். இந்த நீலனைத் தமிழக கியூ பிரிவு விசாரித்தது. ஆனால், உடனடியாக விடுதலை செய்துவிட்டது. இந்த நீலன் கைது செய்யப்பட்ட பிறகுதான் மாத்தையாவின் செயல்கள் அம்பலமாகின. இப்படிப் பல்வேறு மர்மங்கள் கொண்டவர் சிவராசன்.

1987-ல் தளபதி சூசையின்கீழ் வல்வெட்டித்துறை நகரில் நான் பணியாற்றினேன். மயிலியதனை என்ற பகுதியில் சிவராசன் இருந்தார். அப்போது இரகு அல்லது இரகுவரன் என்று அழைக்கப்பட்டார். அப்போதுதான் அவருக்கும் எனக்கும் அறிமுகம். அந்த ஆண்டு மே மாதம் வடமராச்சி பகுதி சிங்கள ராணுவத்தின் பிடிக்குள் போனது. அதன்பிறகு நாங்கள் வேறு வேறு பகுதிகளுக்குப் போய்விட்டோம். நான் 1990-ல் தமிழகம் திரும்பியபோது, ‘இரகுவோடு தொடர்பில் இருங்கள்’ என்று பொட்டம்மான் சொன்னார். 1991 மே மாதத்துக்கு முன்னதாக ஐந்து முறை சந்தித்து இருப்பேன். இவை எதுவும் ராஜீவ் கொலைத்திட்டம் குறித்தது அல்ல!

p44a_1515146811.jpg

ராஜீவ் கொலைக்கு முன்னும் பின்னுமாக சிவராசனுக்கு மும்பையிலும் சவுதி அரேபியாவிலும் வங்கிக் கணக்கு இருந்தது. பணப்பரிமாற்றமும் நடந்தது. இதனை இந்திய அரசின் நிதி நுண்ணறிவுப் பிரிவு கண்டுபிடித்தது. ஆனால், அதை சி.பி.ஐ மூடி மறைத்தது. சிவராசனுக்கு உத்தரவிட்டது புலிகள் அல்ல; சி.ஐ.ஏ. முகம் மறைத்து பல சதிகாரர்கள் இருக்கிறார்கள்.

இப்படி உருவான சதிகளில் ஒன்றுதான், அனுஜா படத்தை தனு என்று சொன்னது. அனுஜா படத்தை என்னிடம் காட்டினார்கள். நான் ‘அது அனுஜா’ என்றேன். வடமராச்்சியில் நான் அவரைப் பார்த்திருக்கிறேன். குரூப் லீடர் அவர். ‘விடுதலைப் புலிகளின் பிரசாரப் பிரிவு வெளியிட்ட காலண்டரில் அவர் படம் இருக்கும்’ என்றேன். அந்த அனுஜாவைத்தான் தனு என்று சொல்லி, ‘விடுதலைப்புலிகளால் அனுப்பப்பட்ட பெண்தான்’ என்று கதை கட்டினார்கள்.

இந்தக் கட்டுக்கதைகளுக்கு தமிழக தடயவியல் துறையும் ஒத்துப்போனது.


 


p44b_1515146795.jpg

பா.ஏகலைவன் பத்திரிகையாளராகப் பணியாற்றிவர். 2010-ம் ஆண்டு, ‘நாம் தமிழர் கட்சி’த் தலைவர் சீமான், தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைதாகி சிறையிலிருந்தபோது, அவரைப் பார்க்க வேலூர் சிறைக்குச் சென்றிருந்தார். ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலிருக்கும் சாந்தன், முருகன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய ஐந்து பேரையும் அப்போதுதான் நேரில் சந்தித்துள்ளார். அவர்களுடன் பேசியபிறகு, ‘இந்த வழக்கில் வெளியில் தெரியாமல், புதைந்துகிடக்கும் பல விஷயங்களை உலகுக்குத் தெரியப்படுத்த வேண்டும்’ என்ற முடிவுக்கு வந்துள்ளார். ராஜீவ் கொலைவழக்கில் முதல் குற்றவாளியாக இருக்கும் நளினியின் தரப்பு பல ஆண்டு காலமாக வெளியில் வராமல் இருந்தது. அதனால், நளினியின் தரப்பிலிருந்து முதல் புத்தகத்தை எழுதினார். அதுதான், ‘ராஜீவ் கொலை வழக்கு - மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்காவின் சந்திப்பும்!’ அதன் தொடர்ச்சியாக, தற்போதுவரை வெளியில் அதிகம் தெரியாத ரவிச்சந்திரனின் அனுபவங்களை, ‘ராஜீவ் காந்தி படுகொலை... சிவராசன் டாப் சீக்ரெட்’ என்ற தலைப்பில் எழுதியுள்ளார். க்ரைம் த்ரில்லர் நாவலைப் போல் உள்ள இந்தப் புத்தகம், ராஜீவ் கொலையின் பின்னணியில் உள்ள சர்வதேச சதிகளை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தும் ஓர் உண்மை ஆவணம்!

 

 

 

“அந்த பெல்ட் பாம் இந்தியத் தயாரிப்புதான் என்றார் சிவராசன்!”

 
 
 

தடா ரவி அவிழ்க்கும் மர்மங்கள்

 

ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இரா.பொ.இரவிச்சந்திரன் எழுதியுள்ள ‘சிவராசன் டாப் சீக்ரெட்’ என்ற புத்தகம், இந்த வழக்கு பற்றிய அவிழ்க்கப்படாத பல முடிச்சுகளைக் கண்முன் நிறுத்துகிறது. வழக்கறிஞர் திருமுருகனிடம் ரவிச்சந்திரன் கூறியதைப் பத்திரிகையாளர் பா.ஏகலைவன் புத்தகம் ஆக்கியுள்ளார். ஜூ.வி-யின் சென்ற இதழ்த் தொடர்ச்சியாக, அந்தப் புத்தகத்தில் உள்ள மர்மங்கள் சில...

‘‘தமிழகத்தில்தான் புலிகள் பயிற்சி பெற்றார்கள் என்பது பலருக்கும் தெரியாது. அன்றைக்குப் பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கும் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆருக்கும் தெரிந்தே இந்தப் பயிற்சி முகாம்கள் இருந்தன. திண்டுக்கல் மலைப் பகுதியில் புலிகளின் 7-வது பயிற்சிப் பாசறையில் பெண் புலிகளுக்கான பிரத்யேகப் பயிற்சி முகாம் இருந்தது. அதில் பயிற்சிபெற்ற பெண் போராளிகளில் ஒருவர்தான் அனுஜா. 1986-ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் பிரசாரப் பிரிவு, அந்த ஆண்டுக்கான காலண்டரை வெளியிட்டது. அதில், பெண் போராளிகள் அணிவகுத்துச் செல்வது போன்ற படம் இருக்கும். அதில், புலிக்கொடி ஏந்தி தலைமையேற்று நடப்பவர்தான் அனுஜா.

அந்தப் புகைப்படம் உலகெங்கும் பல இதழ்களில் வந்துள்ளது. அப்போது பயிற்சி பெற்ற, வெளிப்படையாக இயங்கிய புலிகளின் புகைப் படங்களெல்லாம் இந்திய உளவுத்துறைகளிடம் உள்ளன. ராஜீவ் காந்தியைக் கொல்ல, இப்படிப் பரவலாக அறிந்த ஒரு பெண் போராளியை அனுப்பியிருப்பார்கள் என்று நினைப்பதே கேலிக்கூத்தானது. ‘சி.பி.ஐ அதிகாரிகள் காட்டிய புகைப்படத்தில் இருப்பது அனுஜாதான்’ என்று நான் சொன்னேன். ‘ஸ்ரீபெரும்புதூரில் மாலையுடன் நிற்பதும், புலிக்கொடி ஏந்தி நடந்து செல்வதும் தனுதான்’ என்றார்கள் அவர்கள். ‘இல்லை’ என்று நான் சொன்னேன். அடித்தார்கள். ரத்தம் வரும் வரை அடித்தார்கள். கையில் வழிந்த ரத்தத்தைச் சட்டையில் துடைத்தபடி விளக்கினேன்.

p30a_1515512344.jpg

சம்பவம் நடந்து ஒன்பது மாதங்கள் ஓடிவிட்டன. இன்னமும் தனுவை இன்னாரென்று கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் யார், எந்த ஊர் என்ற விவரங்களையும் அவர்களால் அறிய முடியவில்லை. அதனால், அனுஜாவை ‘தனு’ என்று கதைவிட்டு அதையே உண்மை என்று முடிக்க இருக்கிறார்கள். சி.பி.ஐ சொன்னதையே தடய அறிவியல் துறை ‘உண்மை’ என்று சொன்னது.

தடா சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தபோது, அரசுத் தரப்புச் சாட்சியாக அந்த தடயவியல் அதிகாரி வந்திருந்தார். அனைவரிடமும் அவர் இயல்பாகப் பேசிக்கொண்டிருந்தார். ‘‘விடுதலைப்புலிகளின் காலண்டரில் இருந்த புகைப்படத்தையும் தனுவின் தலையையும் கம்ப்யூட்டரில் ஒப்பிட்டு, இரண்டும் ஒருவர்தான். தனுதான் அனுஜா என்று எப்படிப் பொய் சொன்னீர்கள்’ என்று அந்த அதிகாரியிடம் சுசீந்திரன் கேட்டார்.

அவரும் சிரித்துக்கொண்டே, ‘‘அப்படியானால் அறிவியல் பொய் சொல்கிறது என்கிறீர்களா?’’ என்று எதிர்க்கேள்வி கேட்டார்.

‘‘அறிவியல் பொய் சொல்லாது என்பது எங்களுக்கும் தெரியும். ஆனால், அந்த அறிவியலைப் பயன்படுத்துபவர்கள் பொய் சொல்லலாம் அல்லவா?’’ என்று சுசீந்திரன் கேட்டார். அதற்கு மேல் அந்த அதிகாரி எங்கள் பக்கத்தில் நிற்கவில்லை.

போலீல் அதிகாரி இக்பால், நாங்கள் பயன்படுத்திய ‘வயர்லெஸ் கருவி’ பற்றி நிறைய கேள்விகளைக் கேட்டார். விடுதலைப் புலிகளின் பல உறுப்பினர்கள் பேசியிருந்ததை உளவுத் துறை ஏற்கெனவே ‘டேப்’பில் பதிவுசெய்து வைத்திருந்தது. அதையெல்லாம் போட்டுக் காட்டி, ‘‘இவை யார் யாருடைய குரல்கள், எங்கிருந்து யாருக்குப் பேசுகிறார்கள். இவற்றின் அர்த்தம் என்ன, அது என்னவிதமான ‘சங்கேத’ மொழி’’ என்றெல்லாம் கேள்விகளை அடுக்கினார். 
பிறகு 50, 60 புகைப்படங்களை என்னிடம் நீட்டினார். அவை, புலிகளின் பிரசாரப் பிரிவு வெளியிட்டிருந்த படங்கள். எட்டு மாதங்களாகப் பத்திரிகைகள் எல்லாம் அவற்றைப் பலமுறை பிரசுரித்துவிட்டன. அவர்களில் பல போராளிகள் ஏற்கெனவே வீரமரணம் அடைந்துவிட்டிருந்தார்கள். எஞ்சியவர்கள் பலரும் வெளியுலகுக்குத் தெரிந்தவர் களாகவே இருந்தார்கள். அவர்களைத்தான், ‘அடையாளம் காட்டச் சொல்லி’ நீட்டினார்.

பார்க்க அது பைத்தியக்காரத்தனமாகத்தான் தெரியும். ஆனால், அதனுள்ளே ஆழமான ஒரு ‘காரணி’ இருந்தது.

விசாரணை... விசாரணை... இடைவிடாத விசாரணை! உடல் மட்டுமல்ல, மூளையும் மழுங்கி சோர்ந்துவிட வேண்டும். அதுதான் ‘காரணி’. அதற்காகத்தான் மாறி மாறி வந்து அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

‘‘இயக்கத்தில் சேர்ந்தபோது உனக்கு என்னென்ன பயிற்சிகள் கொடுத்தார்கள்... என்னென்ன ஆயுதங்கள், வெடிகுண்டு களையெல்லாம் கையாளப் பயிற்சி தந்தார்கள்?’’ என்று கேட்டார்கள். எதற்கோ குறி வைத்துவிட்டார்கள் எனப் புரிந்தது.

‘புலிகளின் பயிற்சி என்ன மாதிரியானது’ என்பது இந்தியப் புலனாய்வு அமைப்பு களுக்குத் தெரியாத ஒன்றல்ல. பயிற்சியே அவர்கள் கொடுத்ததுதான். புலிகளின் யுக்திகளும்கூட அவர்களுக்கு அத்துபடி தான். புலிகளே ‘சமர்கள பயிற்சிகளை’ வீடியோவாக எடுத்து ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். அதுவும் புலனாய்வு அமைப்புகளிடம் இருக்கிறது. புலிகளின் நுணுக்கங்களையெல்லாம் இந்திய அமைதிப்படை ஈழத்தில் இருந்தபோது சுமார் மூன்றாண்டுகள் நேரிலேயே பார்த்துள்ளனர். ‘இவ்வளவுக்கும் பிறகு என் மூலம் என்ன கதை எழுதப் போகிறார்களோ?’ என உள்ளுக்குள் அரண்டு கிடந்தேன்.

விசாரித்துக்கொண்டே வந்து, கடைசியாக ‘‘அப்டீன்னா உனக்கு மனித வெடிகுண்டுக்கான பெல்ட் பாம் செய்யத் தெரியும்… இல்லையா?’’ என்று நின்றார் அந்த அதிகாரி.

அங்கிருந்து ஆரம்பித்தது ‘புதுக் கதை’. ‘‘பயிற்சி தரப்பட்டது. ஆனால் எனக்கில்லை. நான் அந்தப் பிரிவு கிடையாது. அதற்கென்று ஒரு தனிப் பிரிவு இருக்கின்றது. M.O (Military Ordinance அல்லது Military Office) என்றழைப்பார்கள். அங்குதான் தயாரிப்பார்கள்’’ என்றேன்..

‘‘உனக்கு அந்தச் செய்முறை தெரியுமா, தெரியாதா. கேள்வி இதுதான். கேட்டதற்கு மட்டும் பதில் சொல்’’ எனக் கையை ஓங்கினார்.

‘தெரியாது’ என்றால் விடவா போகிறார்கள். அதனால், ‘‘தெரியும் சார்!’’ என்றேன். தொடங்கியது பூஜை. கேள்விகளை அடுக்கினார்கள்.

‘‘பெல்ட் பாமைச் செய்தது நீதானே? சொல்... எப்படிச் செய்தாய்? ஆர்.டி.எக்ஸ் (RDX) எப்படிக் கிடைத்தது? எங்கிருந்து வந்தது? அதன் எடை எவ்வளவு? ஜாக்கெட் தைத்தது யார்? சர்க்யூட் இணைப்பு எவ்வாறு கொடுத்தாய்?’’

கடைசியில் நான்தான் ஏதோ அந்த மனித வெடிகுண்டுக்கு பெல்ட் பாம் செய்ததைப் போலவும், அதை அவர்கள் கண்டுபிடித்து விட்டதைப் போலவும் ஆளாளுக்கு என்னைச் சூழ்ந்துகொண்டார்கள். சுமார் 4 மணி நேரம். தொடர்ச்சியான கேள்விகள், துன்புறுத்தல்கள். அவர்களின் ஒரே ‘புலனாய்வு நோக்கம்’, எல்லாவற்றையும் என் தலையில் கட்டிவிட வேண்டும். அதாவது, சித்ரவதைகளை தாங்க முடியாமல் நானே என் வாயால் ‘பெல்ட் பாமைச் செய்தது நான்தான்’ என்று கத்திக் கதறி ஒப்புக்கொள்ள வேண்டும்.

ஒரு கட்டத்துக்கு மேல் என்னால் இந்த ‘பெல்ட் பாம்’ கதையைச் சகித்துக்கொள்ள முடியவில்லை. ‘‘பெல்ட் பாம் செய்யும் அளவுக்கு நான் நிபுணன் இல்லை. அது ஒன்றும் தீபாவளிப் பட்டாசு செய்வதல்ல. அதைச் செய்தது யார், எங்கிருந்து வந்தது என்று எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்தவரையில் அது ஓர் இந்திய வெடிகுண்டு’’ என்றபோது, அங்கே சட்டென மயான அமைதி குடிகொண்டது. அதைத் தொடர்ந்து, ‘‘சிவராசன் தாமாகவே ஒரு சந்தர்ப்பத்தில் இதை என்னிடம் கூறினார்’’ என்றபோது அவர்கள் முகத்தில் ஈயாடவில்லை. மேலும் தெளிவாக அவர்களை முகத்துக்கு நேராக ஏறிட்டு, ‘‘ரா, எம்.ஐ (Military Intelligence), என்.எஸ்.ஜி (கறுப்புப் பூனைப் படைகள்) மற்றும் இந்திய ராணுவத்தின் சிறப்புப் படைப் பிரிவுகள் (Special Forces) பிரத்யேகமாகப் பயன்படுத்தும் வெடிகுண்டு அது’’ என்றேன்.

p30_1515512364.jpg

அவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் மாறி மாறிப் பார்த்துக்கொண்டனர். ‘என்ன சொல்வது’ எனப் பார்வையிலேயே பேசிக்கொண்டனர். ஓரிரு நிமிடங்கள்தான் என்றாலும், யுகம் கடப்பது போலிருந்தது அவர்களின் முகம். ‘‘டேய்... செத்தவன் மீது பழி போடுகிறாயா?’’ என ஆத்திரத்துடன் ‘பளாரென’ ஓங்கி ஓர் அறை விட்டார் ஓர் அதிகாரி.

எனக்கு ‘சுள்’ என்றது. ‘‘செத்தவனையும் இல்லாதவனையும் பற்றித்தானே எல்லாம் கேட்கிறீர்கள். அந்த செத்தவன் சொன்ன உண்மைதான் இதுவும்’’ என்றேன் சூடாக.

என்ன நினைத்தாரோ... சற்று நேரம் உற்றுப் பார்த்தபடி யோசனையில் நின்ற அந்த அதிகாரி நிதானமாகக் கேட்டார். ‘‘அது என்ன வெடிகுண்டு?’’

‘‘PE, C3 அல்லது C4. நிச்சயம் RDX ஆக இருக்காது.’’

‘‘எப்படிச் சொல்கிறாய்?’’

‘‘புலிகளிடம் RDX இல்லை...’’

‘‘அது உனக்கெப்படி தெரியும்?’’

‘‘ஆர்.டி.எக்ஸ், PE போன்றவை உலகில் பெரிய ராணுவங்கள் மட்டுமே பயன்படுத்துவது. சிறிய நாடுகளிடம் அவை இல்லை. கள்ளச்சந்தையில்கூட வாங்க முடியாது. புலிகள் பயன்படுத்துவது ஜெலட்டின் வெடிமருந்துகள்தான். சில சமயம் பென்டலைட் உபயோகிப்பார்கள்.’’

‘‘எந்தெந்த நாடுகளில் ஆர்டிஎக்ஸ், PE கிடைக்கும்?’’

‘‘சுவீடன், ஜெர்மனி, இந்தியா, இஸ்ரேல்’’ என்றேன்.

‘‘ஜெர்மனியில்தானே கே.பி இருக்கிறான்?’’

‘‘கே.பி பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அவரை நான் பார்த்ததுமில்லை, பேசியதுமில்லை சார்!’’

‘‘மனித வெடிகுண்டு செய்வது குறித்த அடிப்படை உனக்குத் தெரியும், இல்லையா?’’

‘‘கண்ணிவெடி பற்றி மட்டுமே நான் அறிவேன். பெல்ட் பாம் பற்றி ஒன்றும் தெரியாது’’ என்றேன்.

ஆங்கில நாவல் ஒன்றில் வந்திருந்த பெல்ட் பாம் கதையை, சி.பி.ஐ அதிகாரி கார்த்திகேயன் மீடியாவுக்குப் பேட்டியாகக் கொடுத்திருந்தார். ‘அது சரியா’ என்று கேட்டார்கள். ‘‘எல்லாவற்றுக்கும் அடிப்படை ஒன்றுதான் சார். வெடிபொருள் (Explosive), துவக்கி (Initiator) இணைப்பு (Connection) சக்தி (Power). இதுதான் அடிப்படை’’ என்றேன்.

ஒரு போட்டோவைக் காட்டினார்கள். அந்த புகைப்படத்தில் சிதைந்த சிறுசிறு டெனிம் துணித்துண்டுகள், நெருப்பில் எரிந்து புகைந்த மிச்ச மீதிகள், ஒரு தடிமனான பெரிய வெள்ளைத் தாளில் பனியன் வடிவில் ஆங்காங்கே இணைத்து ஒட்டப்பட்டிருந்தன. ‘‘இது ஜாக்கெட் ஹோல்ஸ்டர் போல உள்ளது” என்றேன்.

‘‘அப்படீன்னா?’’

‘‘துப்பாக்கி ரவைக்கூடுகள், கையெறிகுண்டுகள், ஷெல்கள் போன்றவற்றை வைத்துக்கொள்ள அணிவது சார்’’ என்று சொன்னதுதான் தாமதம். ‘சொத்... சொத்...’ என மூன்று கரங்கள் என் தலையிலும் தோளிலும் பிடரியிலும் விழுந்தன.

எதற்காக அடித்தார்கள் தெரியுமா? இந்த பெல்ட் பாமுக்குள்ளும் ஒரு கதை இருக்கிறது என்பதால்தான்!

 

 

“பெல்ட் பாம் செய்தது நான்தான் என்று தலையில் கட்டப் பார்த்தார்கள்!”

தடா ரவி வாக்குமூலம்

 

ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி 27 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் இரா.பொ. இரவிச்சந்திரன் எழுதிய ‘சிவராசன் டாப் சீக்ரெட்’ என்ற புத்தகத்தைப் பத்திரிகையாளர் பா.ஏகலைவன் தொகுத்துள்ளார். கடந்த இரண்டு ஜூ.வி இதழ்களில் வெளியானதன் தொடர்ச்சியாக, அந்த நூலிலிருந்து சில பகுதிகள்...

p28a_1515745490.jpg

புலிகள் தயாரித்த பெல்ட் பாமைக் கண்டுபிடித்துவிட்ட பெருமிதத்துடன் சி.பி.ஐ அதிகாரிகள் காணப்பட்டார்கள். ஆனால், ‘‘இது பெல்ட் பாம் அல்ல, ஜாக்கெட் ஹோல்ஸ்டர்’’ என்று நான் சொன்னதும் என்னை அவர்கள் அடித்தார்கள்.

புலிகளின் சிறப்புப் படைப்பிரிவு போராளிகள், ‘நடந்து செல்லும் வழியில் நிறையப் பொதிகளைச் சுமக்க வசதியாக இருக்கும்’ என்பதற்காக ‘ஜாக்கெட் ஹோல்ஸ்டர்’ அணிந்தார்கள். இது சாதாரண ஒன்றுதான். ஆனால், ஏதோ முதன்முதலாக ‘ஸ்ரீபெரும்புதூர் நடவடிக்கைக்காக’ என்றே இந்த ஜாக்கெட்டை வடிவமைத்தார்கள் என்பது போல் சி.பி.ஐ சிறப்புப் புலனாய்வுக்குழு ஒரு ‘கதை’யைக்கட்டியது. இதை நான் மறுத்து உண்மையைச் சொன்னதுதான் அவர்களது கோபத்துக்குக் காரணம்.

அவர்கள் கையிலிருந்த புகைப்படத்தைக் காட்டி, ‘‘பெல்ட் பாம் இப்படித்தான் செய்யப்பட்டது. இல்லையா?’’ என்றார்கள்.

‘‘தெரியாது. நான் எந்த பெல்ட் பாமையும் பார்த்ததில்லை’’ என்றேன்.

‘‘சரி, உனக்குத் தெரியாதென்றே வைத்துக்கொள்வோம். இந்தப் படத்தில் உள்ளவாறு வெடிகுண்டு செய்ய முடியுமா, முடியாதா?’’

‘‘ம்... தியரிப்படி செய்ய முடியும்!’’

ஒரு வெள்ளைத்தாளை என்னிடம் நீட்டி, ‘‘எங்கே... இதில் படம் வரைந்து காட்டு’’ என்றார்கள். வரைந்து கொடுத்தேன். அதை எடுத்துக்கொண்டு தியாகராஜனைப் பார்க்கச் சென்றார்கள்.

நீண்ட ஆலோசனைக்குப் பிறகு இரு அதிகாரிகளும் திரும்பி வந்தார்கள். கூடவே பென்சில், பேப்பர், ஸ்கேல், ரப்பர் ஆகியவற்றைக் கொண்டுவந்தார்கள். அவற்றைக் கொடுத்து, ‘‘முன்பு பேனாவால் வரைந்ததையே இன்னும் தெளிவாக, அழகாக வரைந்து பாகங்களைக் குறித்து வை. திரும்ப வருகிறோம்’’ என்று சொல்லிவிட்டுப் போனார்கள்.

மதியம் இரண்டு மணி வாக்கில் திரும்பி வந்தார்கள். ரமேஷ் கையில் ஒரு மினி டேப் ரெக்கார்டர். தன்மையாக என்னிடம், ‘‘இந்த பெல்ட் பாமை எப்படிச் செய்வதுன்னு நீ சொன்னது சரியா விளங்கல. அதனால, தெளிவா நிறுத்தி நிதானமாச் சொல்லு. கேட்டுத் தெரிந்து கொள்கிறோம்’’ என நீட்டினார்கள்.

‘ஓ... கடைசியில் இதுதான் திட்டமா? நான்தான் இதைச் செய்ததாக ஒப்புக்கொள்ள வைக்க நினைக்கிறீர்களா? இதற்குத்தான் இத்தனை சித்ரவதைகளா?’

p28b_1515745529.jpg

பட்டென்று புரிந்து போனது அவர்களின் திட்டம். இலங்கை, தெற்காசிய நாடுகள், வளைகுடா நாடுகள், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா என உலகின் பல நாடுகளுக்கும் சென்று கண்டுபிடிக்கத் தவறிய ‘பெல்ட் பாம்’ விஷயத்தை இப்போது என் தலையில் கட்டப் பார்க்கிறார்கள்.

என்ன செய்ய முடியும்? கோடியக்கரை சண்முகம் தூக்கில் தொங்கி இறந்ததற்குப் பிறகு நான் முரண்டு பிடித்துக் கொண்டிருக்க முடியாது என்பதே உண்மை. தவிர, அப்போது எஞ்சியிருந்த என் ‘மனநிலையே’ வேறு. படுத்துத் தூங்க வேண்டும்; அல்லது, இறந்துபோய்விட வேண்டும். இரண்டுமற்ற போதை நிலையில் பிதற்றிக் கொண்டிருந்தேன். அதனால் ‘விட்டால் போதும்’ என்ற முடிவுக்கு வந்து நின்றேன்.

அவர்கள் கேட்டபடி வரைந்து கொடுத்து, டேப் ரெக்கார்டரிலும் பேசிக் கொடுத்து விட்டேன். ‘எனக்கான தூக்குக் கயிற்றை நானே மாட்டிக்கொண்டேன்’ என்பது தெரியாமலேயே!

KP என்கிற குமரன் பத்மநாபன், விடுதலைப் புலிகளின் படைக்கலக் கொள்முதல் பிரிவுப் பொறுப்பாளர். உலகம் சுற்றிக் கொண்டிருந்தவர். 2002-ம் ஆண்டு வாக்கில் அவர்மீதான ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. அதனால் ‘பொறுப்பை’ பறித்து, புலிகள் கட்டமைப்பிலிருந்து அவரை ஓரம்கட்டியிருந்தார்கள்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இந்த KP-யும் முக்கியக் குற்றவாளி என்றது சி.பி.ஐ. அவர்தான் பெல்ட் பாமை அனுப்பியிருக்க வேண்டும், அல்லது இந்தியாவுக்கே கொண்டு வந்து கொடுத்துவிட்டுப் போயிருக்க வேண்டும் என்று சந்தேகித்தார்கள். இதனால், ‘இந்தியாவால் தேடப்படும் முக்கியக் குற்றவாளி’ எனச் சர்வதேச காவல்துறை (இன்டர்போல்) அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் ‘KP’ அகப்படவேயில்லை!

2009 மே 18 அன்று முள்ளிவாய்க்கால் இறுதிச் சண்டையில், ‘விடுதலைப் புலிகளின் தலைமை’ ஏறக்குறைய வீழ்ந்து மறைந்து போனது. அதன்பிறகு ‘KP’ தன்னை விடுதலைப் புலிகளின் புதிய தலைவராக அறிவித்துக்கொண்டார். ஆனால், அப்போது அவர் ‘இந்திய-இலங்கை’ உளவுப் படைகளின் ‘முகவராக’ (Agent) இருந்தார் என்பதே உண்மை.

சுமார் இரண்டு மாதங்களுக்குப்பின் மலேசியாவில் ‘கைது நாடகம்’ ஒன்று அரங்கேற்றப்பட்டு, KP கொழும்பு அழைத்துச் செல்லப்பட்டார். இலங்கை அரசின் விருந்தினர் மாளிகை ஒன்றில் ‘வீட்டுக் காவல்’ என்ற போர்வையில் வைக்கப்பட்டார். ஆனால், இலங்கை பாதுகாப்பு அமைச்சர் கோத்தபய ராஜபக்‌ஷேவின் சிறப்பு விருந்தினராகவே இருந்தார். அங்கிருந்தவாறே விடுதலைப்புலிகளின் அயல்நாட்டுக் கட்டமைப்பை உடைத்தெறியும் வேலையை இந்திய - இலங்கை உளவு நிறுவனங்களோடு சேர்ந்து ஒருங்கிணைத்தார்.

அந்தப் பின்னணியில் 2012-ம் ஆண்டு நவம்பர் 17-ம் தேதி, கொழும்பிலிருந்து வெளியாகும் ‘டெய்லி மிர்ரர்’ என்ற ஆங்கில நாளிதழுக்கு KP ஒரு பேட்டியளித்தார். அதில் ராஜீவ் காந்தி கொலை விவகாரம் தொடர்பான சில தகவல்களையும் வெளியிட்டிருந்தார். அதன் சாரம்...

‘‘இந்திய அதிகாரிகள் என்னை 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் இரண்டு முறை சந்தித்துப் பேசினார்கள். ராஜீவ் காந்தி கொலைச் சதி குறித்து விசாரிக்க சி.பி.ஐ தலைமையில் அமைக்கப்பட்ட பல்நோக்கு கண்காணிப்புக் குழு (MDMA) அதிகாரிகள், 2010-ல் என்னைச் சந்தித்தனர். அது ஒரு ‘நேர்காணல்’தான். விசாரணை அல்ல! இலங்கை பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் அப்போது உடனிருந்தார்கள். ஆனால் அவர்கள் வெறும் ‘பார்வையாளர்கள்’ மட்டுமே.

இந்தியக் குழு முதலில் தெரிந்துகொள்ள விரும்பியது, ‘ராஜீவ் காந்தி கொலை பற்றி முன்கூட்டியே எனக்குத் தெரியுமா?’ என்பது. எனக்குத்  தெரியாதென்றும், சம்பவம் நடந்தபோது நான் இந்தியாவில் இல்லை என்றும் பதிலளித்தேன். அடுத்ததாக, ‘அந்த நடவடிக்கைக்கு நான் நிதி வழங்கினேனா?’ என்பது. அதையும் மறுத்தேன்.

கடைசியில், பெல்ட் பாம் மற்றும் சிவராசன் வைத்திருந்த துப்பாக்கி குறித்துக் கேட்டனர். ‘இரண்டையும் நான் வாங்கித் தந்தேனா?’ என்பது கேள்வி.

நான் ‘இல்லை’ என்றேன். ‘RDX வெடிமருந்தை இந்தியாவிலேயே வாங்க முடியும். எனக்குத் தெரிந்தவரை பெல்ட் பாம் வெளிநாட்டில் வாங்கப்படவில்லை. அது ஓர் உள்ளூர்த் தயாரிப்பு’ என்றேன். என் கருத்தை அவர்களும் ஆமோதித்தார்கள் என்றே சொல்லலாம்.

2011-ல் நடந்த இரண்டாவது சந்திப்பின்போது,சி.பி.ஐ அதிகாரிகள் வரவில்லை. வேறு துறை அதிகாரிகள் வந்திருந்தனர்.அது ஒரு கலந்தாலோசனை!’’

- KP என்கிற குமரன் பத்மநாபன் இப்படிப் பேட்டி அளித்திருந்தார்.

p28_1515745454.jpg

இந்த KP-க்காகத்தான், நான் உள்பட இன்னும் பல பேரை சி.பி.ஐ கொடூரமாக சித்ரவதை செய்தது. ஆனால் அவர் இலங்கையால் கைது செய்யப்பட்ட பிறகு, முறைப்படி அவரை இந்தியாவுக்குக் கொண்டுவந்து விசாரிக்க வேண்டும் என்று முனைப்புக் காட்டவில்லை. ஏன்? இத்தனைக்கும் KP-யைக் காவலில் எடுக்க இந்தியாவுக்குத்தான் முதல் உரிமை உண்டு. சர்வதேச அரங்கில் ‘இன்டர்போல்’ சிவப்பு எச்சரிக்கையை இந்தியாதான் முதலில் அறிவித்தது. மலேசியாவில் அவர் பிடிபட்ட தகவல் அறிந்த உடனேயே, இந்தியா அவரைத் தங்களிடம் ஒப்படைக்கக் கேட்டிருக்க வேண்டும்.

ஆனால் நடந்ததென்னவோ வேறு. கொழும்பு விருந்தினர் மாளிகையில், ஒய்யாரமாக அவரோடு உட்கார்ந்து டீயும் வடையும் சாப்பிட்டபடி ‘பேட்டி’ கண்டு திரும்பியிருக்கிறது இந்த பாரத தேசத்தின் சி.பி.ஐ. ராஜீவ் கொலை வழக்கு விசாரணைக்குச் செய்யும் பெரும் துரோகம் இது!

அது மட்டுமல்ல... நாட்டின் முன்னாள் பிரதமர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளியான KP-யைச் சந்தித்துப் பேசிய விஷயத்தைக்கூட இரு நாட்டு மக்களிடமும் மறைத்திருக்கிறது சி.பி.ஐ. என்ன ஒரு கள்ள மௌனம்? இரண்டாண்டுகள் கழித்து KP-யே பேட்டி கொடுத்த பிறகுதான் விஷயம் வெளியே தெரிந்தது என்றால் என்ன அர்த்தம்? அப்போது, இன்றைய பிரதமர் நரேந்திர மோடி கசப்பாக உதிர்த்த வார்த்தைப்படி ‘மா-பேட்டா’ (அம்மா-பிள்ளை) ஆட்சிதான் மத்தியில் இருந்தது.

சுமார் 10 ஆண்டுகள், வானளாவிய அதிகாரங்களைக் கை கொண்டிருந்த அந்த ஆட்சி, உண்மைச் சதியாளர்களைக் கண்டுபிடிக்க சிறு துரும்பையும் அசைக்கவில்லை, ஏன்? சி.பி.ஐ விட்ட ஓட்டைகளை இன்னும் கண்டுபிடிக்க வில்லை, ஏன்?

‘ஜெயின் கமிஷன்’ இறுதி அறிக்கை எழுப்பிய வினாக்களுக்கு இன்னமும் விடை தேடவில்லையே, ஏன்?

 

 

 

விடைதெரியாத வெள்ளை கார் ரகசியம்!

 
 

தடா ரவி வாக்குமூலம்

 

ராஜீவ் கொலை வழக்கில் 26 ஆண்டுகளைத்தாண்டி சிறையில் இருக்கும் இரா.பொ.இரவிச்சந்திரன் எழுதியுள்ள ‘சிவராசன் டாப் சீக்ரெட்’ என்ற புத்தகம், இந்த வழக்கு பற்றி அவிழ்க்கப்படாத பல முடிச்சுகளைக் கண்முன் நிறுத்துகிறது. வழக்கறிஞர் திருமுருகனிடம் ரவிச்சந்திரன் கூறியதைப் பத்திரிகையாளர் பா.ஏகலைவன் புத்தகம் ஆக்கியுள்ளார். கடந்த மூன்று இதழ்களில் வெளியானதன் தொடர்ச்சியாக, அந்தப் புத்தகத்தில் உள்ள மர்மங்கள் சில...

ரலாறு போர்களால் மட்டுமல்ல, படுகொலைகளாலும் நிரம்பியது. அதிலும், ‘அரண்மனைச் சதி’ எனப்படும் உட்பூசல்களும் துரோகங்களும் ஏராளம். சுதந்திர இந்தியாவில் மூன்று பெரிய படுகொலைகள் நடந்துள்ளன. மகாத்மா காந்தி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகிய மூவரின் படுகொலைகளுக்குப் பின்னுள்ள உண்மையான சதியையும் அதற்கான காரணத்தையும் இந்த நாட்டு மக்கள் இன்னும் முழுமையாக அறியவில்லை. இம்மாதிரியான மூடிமறைப்பு நடவடிக்கைகள் வரலாறு முழுக்கவே நடந்துள்ளன.

‘பாவம் ஓரிடம், பழி ஓரிடம்’ என்பார்கள். ராஜீவ் காந்தி படுகொலை எனும் பாவத்தைப் புரிந்தவர்கள் அதிகாரத்தின் பலனைச் சுவைக்க, புலிகள் இயக்கமும் அதன் ஆதரவாளர்களும் பழியைச் சுமந்தார்கள்; இன்னும் சுமந்துகொண்டி ருக்கிறார்கள். ராஜீவ் படுகொலையில் குற்றச் சாட்டுக்குள்ளான விடுதலைப் புலிகள் இயக்கத் தலைமையும் கைதான 26 தமிழர்களும் இந்தியத் துணைக்கண்ட அரசியல் சதுரங்கத்தில் பலியிடப் பட்ட வெட்டுக்காய்கள் என்பதை இன்று உலகம் அறிந்திருக்கிறது. குண்டு வெடித்த நேரத்தில் வெள்ளை நிற அம்பாசிடர் கார் ஒன்று சம்பவ இடத்திலிருந்து விரைந்து தப்பிச்சென்றது. ‘அதில் இருந்தவர்கள் யார், என்ன செய்தார்கள், அதில் என்ன இருந்தது’ என இன்றுவரை இந்தியப் புலனாய்வுப் பிரிவுகளோ, உளவுப் பிரிவுகளோ விடை சொல்லவில்லை.

p28a_1516095452.jpg

ராஜீவ் படுகொலை நிகழ்ந்து 26 ஆண்டுகள் கழிந்துவிட்டபோதும், அந்தச் சதித்திட்டத்தின் பின்னணி என்ன, உண்மைச் சூத்திரதாரிகள் யாவர், ராஜீவைக் கொல்லப் பயன்பட்ட வெடிகுண்டு எது, திட்டத்தை நிறைவேற்ற உதவிய நிதியாதாரம் எங்கிருந்து எப்படி எவரிடமிருந்து வந்தது என்பதற்கெல்லாம் இன்னமும் விடை இல்லை. சி.பி.ஐ வசமிருந்த முக்கிய ஆதாரமான 7.5.91 தேதி வயர்லெஸ் செய்தியைப் புறந்தள்ளிவிட்டு, சம்பந்தமில்லாத அப்பாவிகள் 26 பேர்மீது சதிப்பழி சுமத்திவிட்டு, உண்மைச் சதிகாரர்களைத் தப்பவிட்டார்கள்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை எனது சொந்த ஊர். ஈழத்தமிழர் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டு அங்கு சென்றேன். புலிகள் அமைப்பில் சேர்ந்தேன். பயிற்சி பெற்றேன். களங்களில் பங்கெடுத்தேன். தமிழகத்தில் செயல்பட வேண்டும் என்பதால், இயக்கத்திலிருந்து விலகி இங்கே வந்தேன். புலிகளின் உளவுப்பிரிவுத் தலைவர் பொட்டம்மானிடம் சொல்லிவிட்டுத்தான் வந்தேன். சி.பி.ஐ குற்றச்சாட்டு தொடர்பாக ஆய்ந்து, உச்ச நீதிமன்றம் வெளியிட்ட என்மீதான தீர்ப்புரை ‘பதினாறாவது குற்றவாளியாகிய ரவிச்சந்திரன் ஓர் இலங்கை குடிமகன்’ எனத் தொடங்குகிறது. அது, சி.பி.ஐ செய்த போலி ஆவணங்கள் தயாரிப்பில் ஒரு சிறுதுளியின் வெளிப்பாடு.

1991 மே 21-ம் தேதி ராஜீவ் படுகொலை நடந்தது. 24-ம் தேதி என்னைத் தேடி வந்தார் சிவராசன். அங்கே இருக்கும்போதே எனக்குச் சிவராசனைத் தெரியும்.

‘‘ஏதாவது பிரச்னையா?’’ என்றேன்.

‘‘ஆமாம்’’ என்றார். ‘‘ஒரே போலீஸ் தொல்லையாக இருக்கிறது. எனக்குத் தெரிந்த இயக்கப் பெண் ஒருவரை உங்களுக்குத் தெரிந்தவர் வீட்டில் வைத்துப் பாதுகாக்க முடியுமா?’’ என்றார்.

அவர்தான் சுபா. ஈழத்திலிருந்து கிளம்பும்போது, ‘‘இயக்க வேலைகளில் நீ தலையிடக் கூடாது’’ என்று சொல்லிப் பொட்டம்மான் அனுப்பி வைத்தார். அதைமீறி என்னிடம் உதவி கேட்டார் சிவராசன். இதுவே முரணானது. அன்றைய தினம்தான் தனு படம் நாளிதழ்களில் வெளியாகியிருந்தது. சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்வதற்கு முன்னதாகப் பத்திரிகைகளில் போட்டோ வெளியாகும் அளவுக்குத் தமிழ்நாட்டு போலீஸின் லட்சணம் இருந்தது. இதை அவர்களுக்குக் கொடுத்த அதிகாரி, துறைரீதியான விசாரணையிலிருந்து தான் தப்புவதற்காக சி.பி.ஐ சொன்னதையெல்லாம் ஆதாரபூர்வமாக நிரூபிக்கும் வேலைகளில் கடைசிவரை இருந்தார்.

‘தேவையில்லாத பிரச்னைகளில் சிக்கிக் கொண்டோம். கண்ணாடியை யார் போட்டோ எடுக்கச் சொன்னது. எத்தனை பிரச்னை தெரியுமா?’ என்று சுபா கோபம் கொண்டார். இங்கிருந்து தப்பி நாட்டுக்குச் செல்ல வேண்டும் என்பதில் சிவராசன் ஆர்வம் காட்டவில்லை. பிறகு அவர் எங்கோ சென்று தலைமறைவாகிவிட்டார். பொட்டம்மான் கட்டுப்பாட்டில் சிவராசன் இல்லை என்பதைப் பின்னர் உணர்ந்தேன். கட்டுப்பாட்டில் இருந்திருந்தால் மே 24-ம் தேதியே அவர் ஈழம் சென்றிருப்பார். அவர் யாருடைய கட்டுப்பாட்டிலோ இருந்து, இந்தக் காரியங்களைச் செய்துள்ளார். இந்த நடவடிக்கைகளை அறிய சி.பி.ஐ முயற்சி செய்யவில்லை. கைதுசெய்யப்பட்ட அப்பாவிகள்மீது கற்பனையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, போலியான ஆதாரங்களை உருவாக்கினார்கள். மல்லிகை அலுவலகத்தில் நடந்த சித்ரவதைகள் மூலமாக இந்தக் குற்றச்சாட்டுகளை அனைவரும் ஒப்புக்கொண்டதுபோல எழுதிக்கொண்டார்கள். இதற்கு, தியாகராஜன் இப்போது கொடுத்துவரும் பேட்டிகளே சாட்சிகள்.

இந்திராகாந்தி மறைவுக்குப் பிறகு, ராஜீவ் காந்தி பிரதமராகப் பதவியேற்று ஓராண்டு கடந்திருக்கும். அப்போதே அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ., ‘ராஜீவ் படுகொலை செய்யப்படுவார்’ எனத் துல்லியமாகக் கணக்கு போட்டு அறிக்கை தயாரித்தது. 1986 மார்ச் மாதத் திலேயே, ‘ராஜீவுக்குப் பிந்தைய இந்தியா’ எனும் தலைப்பிட்டு 23 பக்க ரகசிய அறிக்கை ஒன்றைத் தயாரித்து, அமெரிக்காவின் முக்கியக் கொள்கை வகுப்பாளர்களிடம் சி.ஐ.ஏ கொடுத்தது. அதில், ‘சீக்கியத் தீவிரவாதிகள் அந்தப் படுகொலையை நடத்தக்கூடும்’ எனக் கணித்திருந்தது. ‘அப்படிக் கொல்லப்பட்ட பிறகு ராஜீவின் இடத்தை பி.வி.நரசிம்மராவ் அல்லது பிரணாப் முகர்ஜி ஆகிய இருவரில் யாரேனும் ஒருவர் நிரப்புவார்கள். விரைவிலேயே அந்தச் சம்பவம் நடந்தேறும்’ என சி.ஐ.ஏ தன் அறிக்கையில் உறுதியாகக் கூறியிருந்தது. ‘ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி கொல்லப் படுவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே சி.ஐ.ஏ இப்படி முடிவு செய்தது ஏன்? எதன் அடிப்படையில்?’ எனும் நியாயமான கேள்விகள் எழும். இதற்கான விடை, ஒருவேளை அந்த சி.ஐ.ஏ-வின் ரகசிய அறிக்கையிலேயேகூட இருக்கலாம். ஆனால், அந்த ரகசிய அறிக்கை 30 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியானபோதுகூட அதிலிருந்த தகவல்கள் மறைக்கப்பட்டு, தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருந்ததுதான் வேதனை!

p28b_1516095484.jpg

டெல்லியிலிருந்த தன் தூதர்மூலமாக யாசர் அராபத் ஒரு செய்தியை அனுப்பினார். ராஜீவ் காந்தியைக் கொல்ல மிகப்பெரிய சதி நடப்பதாக அராபத் சொல்லி அனுப்பினார். தனிப்பட்ட முறையிலும் ராஜீவிடம் அவர் இதைச் சொன்னார். அந்தச் சதியின் வேர், இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாத்திடமோ, அமெரிக்க சி.ஐ.ஏ-விடமோதான் செல்லும். இந்த இரண்டு நாடுகளும் ராஜீவ்மீது அதிருப்தியில் இருந்தவை. சந்திராசாமி, கே.பி., சிவராசன் என்ற முக்கோண விசாரணையில் பல மர்மங்கள் உள்ளன. ‘இவை விசாரிக்கப்பட வேண்டும்’ என்று நீதிபதி ஜெயின்கூடச் சொன்னார்.

என்னைப் பொறுத்தவரை, ராஜீவ் கொலை வழக்கு அதன் இறுதிநிலையை எட்டவில்லை; சொல்லப் போனால், அதன் துவக்கத்தையே இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லை. எங்களோடு முடிக்க நினைக்கிறார்கள். ஆனால், முடிக்கப்பட வேண்டிய வர்கள் வெளியில் இருக்கிறார்கள்.

(முற்றும்)

 

https://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.