Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலக்கு வைக்கப்படும் போர்க்குற்றவாளிகள்

Featured Replies

இலக்கு வைக்கப்படும் போர்க்குற்றவாளிகள்

 

 
 

இலக்கு வைக்கப்படும் போர்க்குற்றவாளிகள்

நிர்மானுசன் பாலசுந்தரம்

சிறீலங்காவின் சுதந்திர தினத்தை 118 நாடுகளில் சிறப்பாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்டிருந்தது. அதில், பிரித்தானிய போன்ற நாடுகளில் இடம்பெறும் நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது.

அதேவேளை, நீதிக்கான போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழர்கள் கடந்த ஆண்டுகளைப் போல, இம்முறையும் சிறீலங்கா உயர் ஸ்தானிகர் காரியாலயத்துக்கு முன்னால் ஒன்றுகூடி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சனநாயக விழுமியங்களுக்கு அமைவாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழர்களோடு, சிறீலங்கா உயர் ஸ்தானிகர் காரியாலயத்தில் அமைச்சர் ஆலோசகராக (பாதுகாப்பு) பணிபுரியும் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ ஆரம்பத்தில் சிவில் உடையில் நின்று முரண்பட்டார்.

பின்னர் சிறீலங்கா உயர் ஸ்தானிகர் காரியாலயத்துக்குள் சென்ற பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, சிறீலங்கா இராணுவ உடையில் வெளியே வந்து, எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களுக்கு தொண்டையை வெட்டுவேன் என சைகை மூலம் கொலை அச்சுறுத்தல் விடுத்தார்.

இவருடைய செய்கைகள் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களால் கானொலி மூலம் பதிவு செய்யப்பட்டது. தொண்டையை வெட்டுவேன் என சைகை மூலம் கொலை அச்சுறுத்தல விடுத்த கானொலி சமூக வலைத் தளங்களில் வேகமாகப் பரவ, சிறீலங்கா அரசாங்கத்துக்கு பல்வேறு பக்கங்களிலிருந்தும் நெருக்கடிகள் தோற்றம் பெற்றது.

ஒருபுறம் இலங்கையில் சனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பும், அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டமும் இணைந்து பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவின் பின்னணி தொடர்பாக விரைந்து வெளியிட்ட ஆவணம், பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ ஒரு போர்க்குற்றவாளி என வெளிப்படுத்தியது. மறுபுறம், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஊடகங்களும் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவின் செயற்பாட்டை வன்மையாக கண்டித்தன.

இதேவேளை, பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ பிரித்தானிய சட்டத்தை மீறிவிட்டார் என்ற கருத்துக்களும் மேலெளுந்தன. ஆயினும், தண்டனைகளிலிருந்து விதிவிலக்களிக்கும் அவருக்கான இராசதந்திர தகுதிநிலை அவரை தண்டனைகளிலிருந்து பாதுகாத்தது. சமதருணத்தில், அவரது இராசதந்திர தகுதிநிலையை நீக்கி அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் வேரூன்றியுள்ளது.

Uthayankara

சிறீலங்காவுக்கான அழுத்தங்களும் அவமானமும் தீவிரமடைந்ததால், பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவர் வகித்த பதவியிலிருந்து இடைநிறுத்துவதற்கான அறிவுறுத்தல், இலண்டனில் உள்ள சிறீலங்கா உயர் ஸ்தானிகர் காரியாலயத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டது.

ஆயினும், சிறீலங்கா சனாதிபதியின் தலையீட்டையடுத்து, 24 மணித்தியாலத்துக்குள்ளேயே பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ அவர் வகித்த பதவியில் மீளவும் நியமிக்கப்பட்டார். இதேவேளை, பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ விடுத்த கொலை அச்சுறுத்தல் தொடர்பான ஆதாரத்தை நிராகரித்த சிறீலங்கா இராணுவம், அவர் இராணுவத்துக்கு ஆற்றிய சேவைகளுக்காகவும் போரியல் சாதனைகளுக்காகவும் தண்டிக்கப்படமாட்டார் என்ற தொனியில் தமது கருத்தினை வெளிப்படுத்தியது.

முள்ளிவாய்க்காலில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை ஏற்றுக்கொள்வதையோ இல்லை இனஅழிப்புக்குள்ளான தமிழர்களுக்கு நீதி வழங்குவதையோ சிங்கள தேசம் இயதசுத்தியுடன் செய்யப் போவதில்லையென்பதை, இலண்டன் நகரில் நூற்றுக்கணக்கானவர்கள் பார்த்திருக்க, கனொலிகள் பதிவு செய்ய விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தலை மறுதலித்ததுடன் ஊடாக சிங்கள தேசம் மீண்டும் ஒரு தடவை உறுதியாக பதிவுசெய்துள்ளது.

சிறீலங்கா சனாதிபதியின் செயற்பாடும், சிறீலங்கா இராணுவத்தின் கருத்துக்களும் உள்நாட்டுப் பொறிமுறை மூலம் தமிழர்களுக்கு நீதி கிடைக்காது என்பதை மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டுகிறது.

கடந்த காலங்களிலும்,  சிறீலங்காப் படைகள் மேற்கொண்ட இனஅழிப்பு மற்றும் போர்க்குற்றங்களை வெளிப்படுத்தும் நிர்வாணமாக்கப்பட்டு கைகளும் கண்களும் கட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட இளைஞர்கள், இசைப்பிரியாவுக்கு இழைக்கப்பட்ட அநீதி மற்றும் பாலச்சந்திரன் படுகொலை போன்ற முக்கியமான ஆதாரங்கள் வெளிவந்த போது, அவற்றை சிறீலங்கா ஆட்சிபீடம் நிராகரித்தது.

பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவின் பின்னணி

நான்காம் கட்ட ஈழப்போர் உக்கிரமாக இடம்பெற்ற 2008 – 2009 காலப்பகுதியில் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ முல்லைத்தீவு மாவட்ட இராணுவ முன்னரங்கில் பணியாற்றினார். ஏப்ரல் 2008 ல் சிறீலங்கா இராணுவத்தின் 59 ஆவது படைப்பிரிவின் அங்கமான 11 ஆவது கெமுனு காவற் படையணியில் மணலாறு பிரதேசத்தில் போரிட்டுள்ளார். 20 ஒகஸ்ட் 2009 இவருக்கு பதவியுயர்வு கிடைத்தது. 1 ஒகஸ்ட் 2009 – 25 பெப்ரவரி 2010 மற்றும் 23 ஒக்டோபர் 2014 – 21 சனவரி 2016 வரை கிளிநொச்சியில் அமைந்துள்ள 651 ஆவது படையணியின் கட்டளை அதிகாரியாக பணியாற்றினார். 2010-2013 வரை கெமுனு காவற் படைத்தளத்தின் கட்டளையதிகாரியாக பணியாற்றினார். ஒக்டோபர் 2016 இந்தியாவுடனான கூட்டு இராணுவ பயிற்சி நடவடிக்கையை நெறிப்படுத்தினார். 2017 ஆம் ஆண்டு பிரித்தானியாவுக்கான சிறீலங்கா தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரியாக இணைந்தார்.

2018_02_04_brigadier_api_fernando_3

போர்க்குற்றம்

இவர் முக்கிய பங்காற்றிய 59 ஆவது படையணி முல்லைத்தீவை நோக்கி நகரும் போது, முல்லைத்தீவு மருத்துவமனை மீது பலதடவைகள் எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டது. இதனை இலங்கைத் தீவு தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் பணியக அறிகையும் உறுதிசெய்துள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 30 / 1 ன் பிரகாரம், பின்புல பரிசோதனைகளுக்கு பின்னரே சிறீலங்காவின் பொது அதிகாரிகள் மற்றும் ஆயுதப் படையினர் வெளிநாடுகளுக்கு, குறிப்பாக இராசதந்திர பதவிகளுக்கு நியமிக்கப்பட வேண்டும். ஆயினும், பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியது போல இதனையும் சிறீலங்கா அரசாங்கம் செய்யவில்லை.

மாலியில் சமாதானப் படைகளாக சென்ற இராணுவத்தினர் ஐ.நா மனித உரிமைகள் பேரவையால் பின்புல பரிசோதனைகளுக்குப் பின்னரே குறித்த பொறுப்புக்கு நியமிக்கப்பட்டனர். 2008 – 2009 வரையான காலப்பகுதியில் வட போர்முனை முன்னரங்கில் பணியாற்றிய சிறீலங்காப் படையினர் மாலிக்கான சமாதானப் படைகளில் உள்வாங்கப்படவில்லை. அதனை கருத்தில் கொண்டாவது பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை இராசதந்திர பதவிக்கு சிறீலங்கா அரசாங்கம் நியமித்திருக்கக் கூடாது.

போர்க்குற்றவாளிகளை போரின் கதாநாயகர்களாக கொண்டாடும் சிறீலங்காவும், எந்த கட்டத்திலும் போரில் ஈடுபட்ட படையினர் தண்டிக்கப்பட அனுமதிக்கப் போவதில்லையென்ற என்ற சிங்கள தேச ஆட்சி பீட மனோபாவமும் மாறவுமில்லை மாறப்போவதுமில்லை என்பதன் எடுத்துக்காட்டே பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை பிரித்தானியாவுக்கான சிறீலங்கா உயர் ஸ்தானிகர் காரியாலயத்துக்கு நியமித்தமை வெளிப்படுத்துகிறது.

முள்ளிவாய்க்கால் இனஅழிப்பில் ஈடுபட்ட சிறீலங்காவின் ஆயுதப்படையின் கட்டளை அதிகாரிகளை, சிறீலங்காவின் இராசதந்திர சேவைக்கு நியமிக்கும் வழக்கம் மகிந்த இராஜபக்ச காலத்தில் தொடங்கி தற்போதும் தொடர்கிறது. தண்டனைகளிலிருந்து விலக்களிக்கும் இராசதந்திர தகுதிநிலை சிறீலங்காவின் இராணுவ கட்டளை அதிகரிகளை காப்பாற்றும் என்ற உபாயமாக இந்த நகர்வு இருக்கலாம். ஆயினும், இதனை முறியடிக்கும் நகர்வுகளை நீதிக்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழர் அல்லாத முற்போக்கு சக்திகளும், புலம்பெயர் தேசங்களில் செயற்படும் தமிழ் செயற்பாட்டாளர்களும் முன்னெடுத்து வருகின்றனர்.

இலக்கு வைக்கப்படும் போர்க்குற்றவாளிகள்

இறுதிப் போரின் போது 59 ஆவது படையணியின் பொறுப்பதிகாரியான சார்லி காலகே, மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்கு பொறுப்பதிகாரியாக 2010ல் பிரித்தானியாவுக்கு வந்தார். இவரை கைதுசெய்வதற்கான நகர்வுகளில் புலம்பெயர் தமிழர்கள் ஈடுபட்ட போது, பிரித்தானியாவை விட்டு அவசரமாக வெளியேறினார்.

மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் 57 படைப்பிரிவின் பொறுப்பதிகாரியாக விளங்கியவர். இவர் ஜேர்மனி, சுவிற்சிலாந்து மற்றும் வத்திக்கானுக்கான துணைத் தூதுவராக 2010 ல் நியமிக்கப்பட்டார். பின்னர் இவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றச்சாட்டின் அடிப்படையில், 2011ல் சிறீலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். இதன் பிற்பாடு மேற்குலக நாடுகளுக்கு இவர் பயணம் செய்ய முற்பட்ட போது இவருக்கான நுழைவு அனுமதி மறுக்கப்பட்டது.

போரின் இறுதிக்கட்டங்களில் 58 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, நியுயோர்க்கில் அமைந்துள்ள ஐ.நாவுக்கான சிறீலங்காவுக்கான துணைத் தூதுவராக நியமிக்கப்பட்டார். அதன் பிற்பாடு, இவர் மீதான போர்க் குற்றசாட்டுகள் காரணமாக, ஐ.நாவின் சமாதானப் படைகளுக்கு சிறப்பு ஆலோசனைகளை வழங்கும் குழுவுக்கு பொருத்தமற்றவர் என்ற அடிப்படையில் 2012 பெப்ரவரியில் வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து 2012 மார்ச்சில் இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் நிகழ்வுக்கு, நியுயோர்க்கில் அமைந்துள்ள ஐ.நாவுக்கான பிரித்தானிய தூதரகம் சவேந்திர சில்வாவை அழைப்பதில்லையென்ற முடிவையெடுத்தது.

shavendra_silva

இலத்தின் அமெரிக்காவின் முக்கியமான நாடுகளுக்கு தூதுவராக நியமிக்கப்பட்ட சிறீலங்காவின் முன்னால் இராணுவத் தளபதியான லெப்டினட் ஜெனரல் ஜகத் ஜயசூரியாவுக்கு எதிராக, 2017 ஒகஸ்ட்டில் பிரேசில், பெரு, சிலி மற்றும் கொலம்பியவில் அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் குற்றவியல் முறைப்பாட்டை பதிவுசெய்தது. போர்க்குற்றச்சாட்டுகள் அடிப்படையிலான இந்த முறைப்பாடு தனக்கு ஏற்படுத்தக்கூடிய நெருக்கடிகளை முன்னுணர்ந்த ஜகத் ஜயசூரியா பிரேசிலை விட்டுத் தப்பியோடினார்.

2009 ற்குப் பிறது சிறீலங்கா இராணுவ உயர் மட்ட கட்டளைத் தளபதிகளுக்கு சர்வதேச ரீதியிலும் இராசதந்திர ரீதியாகவும் ஏற்பட்ட மற்றுமொரு பாரிய பின்னடைவாக தற்போது பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்குக்கு எதிரான நகர்வு வியாபித்துள்ளது. சிறீலங்கா 118 நாடுகளில் மேற்கொண்ட சுதந்திர தினம் பெற்ற கவனத்தை விட, புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் ஒரு இடத்தில் மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கை அதிகமான கவனத்தை ஈர்ந்துள்ளது. தமிழர்கள் அல்லாத முற்போக்கு சக்திகளும் தமிழர்களும் இணைந்து மேற்கொண்ட இந்த வெற்றிகர நகர்வானது, தமிழர் தேசத்துக்கு எதிராக முள்ளிவாய்க்கால் இனஅழிப்போடு திணிக்கப்பட்டுள்ள தோல்விமனப்பாங்கை மெதுமெதுவாக தகர்த்து வெற்றி மனப்பாங்கை நோக்கி நகர்த்துகிறது.

தமிழர்களின் நீதிக்கான போராட்டம் ஆக்கபூர்வமான திட்டமிடலுடன், இலக்கு சார் ஒற்றுமையுடன் புலம்பெயர் தளத்தில் முன்னெடுக்கப்படுமாக இருந்தால், சிறீலங்கா இராணுவத்தை சார்ந்த பல்வேறு போர்க்குற்றவாளிகளையும் நெருக்கடிக்குள் தள்ளுவதோடு நீதிக்கான போராட்டத்தில் முன்னோக்கி நகர முடியும்.

முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் பத்தாவது ஆண்டு நினைவேந்தல் அடுத்த ஆண்டு இடம்பெறும் முன்னர், உணர்வோடு மட்டுமின்றி ஆக்கபூர்வமான செயற்திட்டத்தோடு தமிழர்கள் இலக்கினால் ஒருங்கிணைவதே முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்தவர்களுக்கு செய்யும் அர்த்தம் பொதிந்த வலுவான நினைவேந்தலாகும்.

http://www.samakalam.com/blog/இலக்கு-வைக்கப்படும்-போர்/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.