Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடுமியைத் தில்லிக்குக் கொடுத்துவிட்ட முதல்வர் கருணாநிதியால் எதைத்தான் சாதிக்க முடியும்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குடுமியைத் தில்லிக்குக் கொடுத்துவிட்ட முதல்வர் கருணாநிதியால் எதைத்தான் சாதிக்க முடியும்?

கொக்கு தலையில் வெண்ணெய் வைத்து அதைப் பிடிக்க நினைத்த புத்திசாலி போல தமிழக மீனவர்களை ஸ்ரீலங்கா கடற்படை தாக்கிக் கொல்வதில் இருந்து காப்பாற்ற தமிழ்நாட்டில் ஆளுக்கு ஆள் யோசனை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

சென்னையில் ஸ்ரீலங்கா தூதுவரது அலுவலகத்துக்கு முன்பாக தமிழக மீனவர்கள் மீது ஸ்ரீலங்கா கடற்படை நடத்தும் தாக்குதல்களைக் கண்டித்து ஆளும் கட்சியான திமுக மார்ச்சு 12 ஆம் நாள் ஒரு கண்டன ஊர்வலத்தை நடத்தியது. இந்தியா மற்றும் இலங்கைக் கிடையிலான கடற்பரப்பில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது ஸ்ரீலங்கா கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதைக் கண்டித்தும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுதல் கொல்லப்படுதல் தொடர்வதை இனியும் அனுமதிக்க முடியாது என்றும் ஊர்வலத்தில் வந்தவர்கள் முழக்கங்களை எழுப்பினார்கள்.

ஊர்வலத்திற்கு தமிழ்நாட்டின் மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி தலைமை தாங்கினார். தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் மகனும் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலின் உட்பட தமிழக அமைச்சர்கள் பெரும்பாலானவர்கள் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். திமுக மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி ஸ்ரீலங்கா துணைத் தூதுவர் அம்சாவிடம் ஒரு விண்ணப்பத்தைக் கையளித்தார். அதனை வாங்கிக் கொண்ட துணைத் தூதுவர் தமிழக மீனவர்களை ஸ்ரீலங்கா கடற்படை தாக்கியதாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டுக்களை வன்மையாக மறுத்தார். ஸ்ரீலங்கா கடற்படை இந்திய கடல் எல்லைக்குள் நுழைவது கிடையாது என்று அடித்துச் சொன்னார்.

இந்த அம்சாதான் முல்லைத்தீவு செஞ்சோலை வளாகம் மீது ஸ்ரீலங்கா விமானக் குண்டுவீச்சில் 56 பள்ளிமாணவர்கள் இறந்த போதும் மறுத்தவர். குண்டு வீசப்பட்டது வி.புலிகளின் பயிற்சி முகாம் என்றும் இறந்தது வி.புலிகள் என்றும் வாய்கூசாமல் கூறினார். ஒரு சிங்களத் தூதுவர் பொய் சொல்வதைவிட ஒரு முஸ்லிம் பொய் சொன்னால் அது எடுபடும் என்ற நினைப்பில்தான் அம்சா என்பவரை சிங்கள அரசு துணைத்தூதுவராக நியமித்துள்ளது.

ஸ்ரீலங்கா துணைத் தூதுவரோடான சந்திப்பை அடுத்து மீனவர்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்க சிறிலங்கா அரசு தனது கடற்கலங்களில் இந்தியப் படையினரையும் இணைத்து காவல் நடவடிக்கையில் ஈடுபட சம்மதித்துள்ளதாக தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்ததார். பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் இராமதாஸ் கச்சதீவை இந்தியா திரும்பப் பெற வேண்டும் என்று சொன்னார்.

விடுதலைச் சிறுத்தைகளது பொதுச் செயலாளர் திரு. தொல். திருமாவளவன் மார்ச்சு 6 ஆம் நாள் நடத்திய கண்டனக் கூட்டத்தில் பேசும் போது தமிழக மீனவர்கள் ஸ்ரீலங்கா கடற்படையால் தாக்கப்படுவதை இந்திய நடுவண் அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டார்.

திமுக, பாமக, மற்றும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழக மீனவர்கள் மீது ஸ்ரீலங்கா கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு ஸ்ரீலங்கா கடற்படை அத்து மீறுவதைத் தடுத்து நிறுத்த தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி; 5 பக்க முறைப்பாடு ஒன்றினை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் (மார்ச்சு 12) கொடுத்தனர்.

"தமிழக மீனவர்களை காப்பாற்ற, கச்சத்தீவை மீட்பது தான் ஒரே வழி' என்று மக்களவையில் பாமக நாடாளுமன்ற உறுப்பினர் (புதுச்சேரி) வலியுறுத்தினார். "விடுதலைப் புலிகள் மீதுள்ள கோபத்தை இலங்கை அரசு தமிழக மீனவர்கள் மீது காட்டுவதைப் போலத் தோன்றுகிறது. இந்தப் பிரச்னையை தீர்ப்பதற்கு ஒரே வழி கச்சதீவை மீட்பது தான். இதுதான் தமிழக மீனவர்களை காப்பாற்றுவதற்கு ஒரு நிரந்தர தீர்வாக இருக்க முடியும். இலங்கைக்கு நல்லெண்ண அடிப்படையில் தான் கச்சதீவை இந்தியா கொடுத்தது” என்றார்.

தமிழக மீனவர்களைக் காக்கக் கடலில் கூட்டுக் காவல் என்ற சதித் திட்டத்தை இலங்கை அரசு முன்வைத்துள்ளது. இதை முளையிலேயே கிள்ளி எறிய முதல்வர் கருணாநிதி முனைய வேண்டும் எனத் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கூறினார்.

“இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதைத் தடுக்க இந்தியா மற்றும் இலங்கை கடற்படைகள் இணைந்து கூட்டு ரோந்து செல்லலாம், இது தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் என முதல்வர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார். இலங்கையின் வட கடல் பகுதியில் விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. இதை இலங்கை கடற்படையால் வெல்ல முடியவில்லை. எனவேதான் இந்திய கடற்படையை, விடுதலைப் புலிகளுடன் மோத விட்டு ஸ்ரீலங்கா அரசு நழுவிக் கொள்ள முயலுகிறது. இலங்கை அரசின் இந்த சதித் திட்டத்தை முளையிலேயே கிள்ளி எறிய முனையாமல், அதற்கு ஆதரவு தரும் போக்கினை முதல்வர் கருணாநிதி கைவிட வேண்டும்” என்று கூறினார்.

தமிழகத்தில் தற்போது 45 ஆயிரம் கட்டுமரங்களும், 7 ஆயிரம் இயந்திரப் படகுகளும் பயனில் உள்ளன. இந்தப் படகுகள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லும்போது பல்வேறு சிக்கல்களைச் சந்திக்கின்றன.

புயல், சூறாவளி போன்ற இயற்கைச் சீற்றங்களாலும் எல்லை தாண்டிச் செல்லும் போது இலங்கை கடற்படையினரிடம் சிக்கி விடும் அபாயத்தையும் மீனவர்கள் சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. இதற்குத் தீர்வு காணும் வகையில் தமிழக மீனவர்களின் படகுகளில் 70 கோடி ரூபா செலவில் தந்தியில்லா (Wireless) கருவிகளைப் பொருத்த தமிழக அரசால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் இந்திய எல்லையைத் தாண்டிச் செல்ல நேரிடும்போது அதுகுறித்து மீனவர்களை எச்சரிக்கவும் இந்த வசதி உதவும்.

“தமிழக மீனவர்களை ஸ்ரீலங்கா கடற்படை சுட்டால் இந்திய கடற்படை திருப்பிச் சுடவேண்டும்” என்கிறார் திராவிட இயக்கப் பேரவையின் தலைவர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன். இதனை வலியுறுத்தி நாளை (வெள்ளிக்கிழமை) வள்ளுவர் கோட்டம் அருகே ஒரு ஆர்ப்பாட்ட பேரணி நடத்துகிறார்.

இந்த நிலையில் மீனவர் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தை தமிழக கூடுதல் டிஜிபி ஜெகன் மோகன் சேஷாத்ரி உள்ளிட்ட அதிகாரிகள் குழு மார்ச்சு 13 ஆம் நாள் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தியது. மார்ச்சு 14 ஆம் நாள் காலை இராமேஸ்வரம் மீனவர்களுடன் ஜெகன்மோகன் சேஷாத்ரி ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் சேஷாத்ரி பேசுகையில், தமிழக மீனவர்களின் படகுகளை எளிதில் அடையாளம் காண வசதியாக அனைத்துப் படகுகளுக்கும் ஒரே மாதிரியான வண்ணம் கொடுக்க முடிவு செய்யப்பட்டதாக அறிவித்தார். மேலும், கடலில் மீன் பிடிக்கச் செல்லும்போது தங்களது அடையாள அட்டை, படகுகளின் உரிமம் ஆகியவற்றை மீனவர்கள் தவறாமல் எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

நாகபட்டினம், இராமேஸ்வரம், இராமநாதபுரம் போன்ற இடங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த சில நாள்களாக பணிமறுப்புப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். எண்பது ஊர்களைச் சேர்ந்த மீனவர்கள் இந்தப் போராட்டத்தில் குதித்துள்ளார்கள். கிட்டத்தட்ட 9,000 மீன்பிடிப் படகுகள் முடங்கிக் கிடக்கின்றன.

“ஸ்ரீலங்கா கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் தமிழக மீனவர்களின் கைகள் வெறுமனே மீன்கள் மட்டும் பிடித்துக் கொண்டிருக்காது' என முதல்வர் கருணாநிதி கடுமையாக எச்சரித்து (மார்ச்சு 5) ஒருகிழமை கூட ஆகாத நிலையில் கச்சதீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது ஸ்ரீலங்கா கடற்படையினர் மார்ச்சு 9 ஆம் நாள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பாம்பனைச் சேர்ந்த கிறிஸ்தோபர் (35) குண்டு பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இருவர் காயமடைந்தனர்.

இது ஒட்டக்கூத்தன் (முதல்வர் கருணாநிதி) பாட்டுக்கு ஸ்ரீலங்கா சிங்கள அரசு இரட்டைத் தாழ்பாள் போட்டது போலாகிவிட்டது!

ஸ்ரீலங்கா மற்றம் இந்தியக் கடற்படைகளின் கூட்டுக் கண்காணிப்பை முதலில் வரவேற்ற தமிழக முதல்வர் இரண்டு நாள் கழித்து தனது முடிவை மாற்றிக் கொண்டார். “கூட்டு ரோந்து என்பது கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், நாம் நினைத்துப் பார்க்கும் சாதகமான விஷயத்தை விட பாதகம்தான் அதிகம் இருக்கும் என்று அனுபவ ரீதியாக உணரப்படுகிறது. எனவே தவளையும், எலியும் கூட்டுச் சேர்ந்து கால்களைக் கட்டிக் கொண்ட கதையாகி விடக்கூடாதே என்ற கவலையுடன் பலரும் இதை கருதுகிறார்கள்” என்றார். இந்த எதிர்ப்பையடுத்து "கூட்டு ரோந்து' திட்டம் வெளிவந்த இரண்டு நாட்களுக்குள் மூடுவிழா கண்டு விட்டது.

இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் சண்டையிட்ட பட்டறிவு இருப்பதால், இந்தக் கருத்தையும் புறந்தள்ள முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, ஆளும் கட்சி உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் கூட்டுக் கண்காணிப்புக்குத் தெரிவித்த ஆதரவை விலக்கிக் கொண்டனர். முதல்வர் கருணாநிதியும் தனது கருத்தை மாற்றிக் கொண்டார்.

ஆனால் முதல்வர் கருணாநிதிக்கு மேலும் சங்கடத்தைக் கொடுக்க விரும்பாத ஸ்ரீலங்கா அரசு கூட்டுக் கண்காணிப்புப் பற்றி அவர் கூறியது முற்றிலும் பொய்யானது என ஒரேயடியாகச் சொல்லிவிட்டது!

அது மட்டுமல்ல ஸ்ரீலங்கா கடற்படை எந்தக் காலத்திலும் எந்தக் கட்டத்திலும் இந்தியக் கடல் எல்லையைக் கடந்த தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியது கிடையாது என்றும் கச்சதீவை அண்டி எந்தக் கடற்படைக் கப்பலும் சென்றது கிடையாது எனவும் சொல்லியது. மேலும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களை விடுதலைப் புலிகள்தான் செய்திருக்க வேண்டும் என்று சொல்லியது. அது தொடர்பாக நடத்தப்படும் எந்த விசாரணையிலும் தில்லி அரசோடு ஸ்ரீலங்கா ஒத்துழைக்கத் தயார் என்றும் தெரிவித்தது.

நல்லகாலமாக குறிப்பிட்ட மீனவர்கள் தாமாகவே தற்கொலை செய்து கொண்டார்கள் என்று ஸ்ரீலங்கா அரசு சொல்லாமல் விட்டு விட்டது! அதுவரை ஆறுதல் அடையலாம்.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படும் நிகழ்வுகள் தொடர்கதை போல் தொடர்வதையிட்டு மக்களவையில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்துப் பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரும் கேரளாவைச் சேர்ந்தவருமான ஏ.கே.அந்தோணி “இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையே நல்லுறவு நிலவுகிறது. எனவே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை சுட வேண்டிய காரணமோ, அவசியமோ இல்லை” என்று ஸ்ரீலங்கா அரசுக்கு ஆதரவாகப் பேசினார்.

மேலும் பேசுகையில் “இது குறித்து ஸ்ரீலங்கா அரசுடன் மத்திய அரசு பேசியது. இதை மத்திய அரசு தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. கொழும்பில் உள்ள இந்தியத் தூதரக அலுவலகத்திற்கு இலங்கை பாதுகாப்பு அமைச்சர் இதுகுறித்து விவாதித்துள்ளார். இலங்கை அரசுக்குக் கிடைத்துள்ள தகவலின்படி அந்நாட்டு கடற்படை வீரர்கள் தமிழக மீனவர்களை சுடவில்லை என்று ஸ்ரீலங்கா அரசு கூறுகிறது. அது மட்டுமல்லாமல் விடுதலைப் புலிகள்தான் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஸ்ரீலங்கா அரசு கூறுகிறது. தமிழக மீனவர்களின் நலனைக் காக்க மத்திய அரசு தனது அதிகாரத்திற்குட்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்” எனப் பறைந்தார்.

இந்தியக் கடலில் தமிழக மீனவர்கள் மீது ஸ்ரீலங்கா படையினர் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த போது இலங்கைக்கான இந்திய தூதுவர் கொழும்பில் கிறிக்கட் ஆடிக் கொண்டிருந்தார் என்பது வேறு கதை.

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது பற்றி மட்டும் அல்ல தமிழக உயர்நீதி மன்றத்தில் ஆங்கிலத்தோடு தமிழ்மொழி பயன்படுத்துவதற்கு ஒப்புதல் கேட்டு திமுக அரசு நடுவண் அரசுக்கு விடுத்த வேண்டுகோள் புறக்கணிக்கப்படடு விட்டது. இந்திய மாநிலங்களான பீகார், உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம் மற்றும் இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இந்தி நீதிமன்ற மொழியாக இருக்கும் போது தமிழகத்தில் தமிழ்மொழி பயன்பாட்டுக்கு காங்கிரஸ் அரசு கைவிரித்திருப்பது வியப்பாக இருக்கிறது. வழக்கம் போல் முதல்வர் கருணாநிதி முடிவை மறு ஆய்வு செய்யுமாறு கடிதம் எழுதியுள்ளார். இந்திய அரச மொழிகள் சட்டத்தின் விதி 7 இன் கீழ் ஒரு மாநிலத்தின் ஆளுநர் ஆங்கிலத்தோடு இந்தி அல்லது அந்த மாநிலத்தின் அரசமொழி பயன்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மார்ச்சு மாதம் 13 ஆம் நாள் சென்னையில் கடல் சார் பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான சட்டவரைவை மக்களவையில் கப்பல்துறை அமைச்சர் டி.ஆர். பாலு கொண்டுவர முயன்றபோது அதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சண்டையில் ஈடுபட்டனர். அமைச்சர் பாலுவை நோக்கிப் பாய்ந்த அவர்கள் அவரது கையில் இருந்த சட்டவரைவைப் பறித்துக் கிழிக்க முயன்றனர். இதையடுத்து திமுக மற்றும் தமிழகத்தைகச் சேர்ந்த நா.உறுப்பினர்கள் திரண்டு வந்து மார்க்சிஸ்ட் தோழர்களைத் தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே பெரும் தள்ளுமுள்ளும், அடிதடியும் நடந்தது. இந்த நிகழ்வால் 6 முறை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

கொல்கத்தாவில் கடல் சார் பொறியியல் மற்றும் ஆய்வு நிலையம் தற்போது உள்ளது. இந்த நிலையில் கடல்சார் பல்கலைக்கழகம் ஒன்றை தமிழகத்தில் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதைத்தான் இந்திய தேசியம் அல்ல உலகளாவிய தேசியம் பேசும் தோழர்கள் எதிர்த்தார்கள்! கடலில் மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் கொல்லப்படுகிறார்கள். அப்படிக் கொல்லும் ஸ்ரீலங்கா கடற்படைக்கு அரசுக்கு இந்தியா போர்க்கப்பலை அன்பளிப்பாகக் கொடுக்கிறது. வி.புலிகளைக் கண்காணிக்க படைத்துறை இரடார் கருவிகளை அன்பளிப்பாகக் கொடுக்கிறது. ஸ்ரீலங்கா வான்கடைக்கு பயிற்சி அளிக்கிறது.

கன்னடத்தில் தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள். கேரளத்தில் தமிழர்கள் உதைக்கப்படுகிறார்கள். வங்காளிகள் தமிழ் அமைச்சரை அடிக்கப் பாய்கிறார்கள். தமிழ்மொழியை நீதிமன்ற மொழியாக ஏற்றுக் கொள்ள இந்திக்காரன் மறுக்கிறான்.

இப்படி உதைப்பந்து போல் எல்லோரும் தமிழர்களை உதைக்கிறார்கள். என்ன காரணம்? இந்திய அரசு இயந்திரம் இந்தி மொழி பேசுகின்ற உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், இராஜஸ்தான், பீகார், அரியாணா போன்ற அரசியல்வாதிகளது கையிலேயே இருக்கிறது. அவர்கள் இந்தியா என்றால் இந்திஸ்தான் என்றே நினைக்கிறார்கள். தமிழர்கள் தாக்கப்படுவது பற்றியோ கொல்லப்படுவது பற்றியோ அவர்களுக்குக் கவலை கிஞ்சி;த்தும் கிடையாது.

போதாக் குறைக்கு திராவிட நாடு கேட்டுப் போராடிய முதல்வர் கருணாநிதி “இந்திய நாட்டின் நலனைப் புறக்கணித்து விட்டு இலங்கைத் தமிழர் பிரச்சினையில், தமிழக அரசு நேரடியாக தலையிடாது. தேசப் பாதுகாப்பை விட்டு விட்டு, புறக்கணித்து விட்டு இலங்கைப் பிரச்சினையில் தமிழகம் நேரடியாகத் தலையிடும் என யாரும் கனவு கூட காண வேண்டாம்” என இந்திய தேசியம் பேசுகிறார்.

குடுமியை தில்லிக்குக் கொடுத்துவிட்ட முதல்வர் கருணாநிதியால் எதைத்தான் சாதிக்க முடியும் எனத் தமிழக மக்கள் நினைக்கிறார்கள்?

- நக்கீரன்

தமிழ்கனேடியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐhதிகளாளும் மதங்களாளும் நாங்கள் பிரிக்கப்பட்டிருக்கிறோம்

போட்டி பொறாமையாள் கடைந்தெடுக்கப்பட்டிருக்கிற

ஆடை பிடித்து ஓநாயிடம் கொடுத்திட்டு சந்தோசத்தில்மிதக்கும் கிழட்டு குள்ள நரியே கலைஞர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.