Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘அம்மா’வுக்கும் பெப்பே... அ.தி.மு.க-வுக்கும் பெப்பே!

Featured Replies

‘அம்மா’வுக்கும் பெப்பே... அ.தி.மு.க-வுக்கும் பெப்பே!

 
 

 

டந்த ஆண்டு, புகைப்படத்தோடு எளிமையாக முடிந்தது ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம். இந்த ஆண்டு அவருடைய உருவச்சிலை திறப்பு, அவர் பெயரில் புதிய நாளிதழ்... என எல்லாமே சர்ச்சையில் முடிந்துள்ளன. ‘‘ஜெயலலிதாவின் சிலையை யார் மாதிரியோ வைத்து ‘அம்மா’வுக்கு பெப்பே காட்டிவிட்டனர். கட்சிக்காக என்று சொல்லி வெளியிட்ட நாளிதழுக்கும் கட்சிக்கும் சம்பந்தமே இல்லை என்பதால், அ.தி.மு.க-வுக்கும் பெப்பே காட்டிவிட்டனர்’’ என வருந்துகிறார்கள் ஜெ. விசுவாசிகள்.

சிக்கலை உண்டாக்கிய சிலை!

ஜெயலலிதாவின் சிலையை நிறுவிய சாதனையைத் தங்களுக்குச் சொந்தமாக்க நினைத்த எடப்பாடி - பன்னீர் கூட்டணி, அந்தச் சிலையால் இவ்வளவு விமர்சனங்களை எதிர்கொள்வோம் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. வெண்கல சிலையை, ஜெ. பிறந்த நாளுக்கு இரண்டு நாள்கள் முன்னதாக தலைமைக் கழகத்தில் துணியால் மூடிய நிலையில் வைத்தனர். ஆந்திராவில் செய்யப்பட்ட சிலை, சில தினங்களுக்கு முன்பே சென்னை கொண்டு வரப்பட்டு, கண் பகுதி சரியில்லை என்று மீண்டும் எடுத்துச்சென்று மாற்றப்பட்டது தனிக்கதை. அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஏற்பாட்டில்தான் சிலை செய்யப்பட்டது. ஏற்கெனவே, கோவையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின்போது வைக்கப்பட்ட ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் சிலைகளை இதே சிற்பி பிரசாத் செய்திருந்தார். இவர், விஜயவாடா அருகே சாய்பாபா சிற்பக் கலைக்கூடத்தை நடத்தி வருகிறார். கோவையில் வைக்கப்பட்ட சிலை மாடலிலேயே தலைமைக் கழகத்திலும் ஜெயலலிதாவின் சிலையை வைக்க, வேலுமணிக்கு நெருக்கமான எம்.எல்.ஏ ஒருவர்தான் ஆந்திரா சென்று ஆர்டர் கொடுத்துள்ளார்.

p4_1519716213.jpg

இரண்டு ரிமோட்களில் ஒன்று டம்மி!

ஜெ. பிறந்த நாளில், தலைமைக் கழக வளாகம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டிருக்க, சிலைக்கு எதிரே மேடை அமைக்கப்பட்டு, மேடையில் இருந்த முதல்வர் பழனிசாமியிடமும், துணை முதல்வர் பன்னீர்செல்வத்திடமும் ரிமோட்கள் கொடுக்கப்பட்டன. இருவரும் ரிமோட் பட்டனை அமுக்கி சிலையைத் திறந்து வைத்தனர். ‘‘சிலையைத் திறப்பதற்கான சென்சர் கருவியை ஒரு ரிமோட்டில்தான் வைக்க முடியும். இரண்டு பேரில் ஒருவர் வைத்திருந்தது டம்மி ரிமோட் என்பது அதை இயக்கியவருக்கும் தெரியாது’’ என்கிறார்கள். ‘யார் அந்த டம்மி?’ எனக் கிசுகிசுக்கிறது கோட்டை வட்டாரம்.

சிலை திறப்பு விழா முடிந்தவுடன், எடப்பாடி பழனிசாமி முதலில் உரையாற்றினார். அதன்பிறகே பன்னீர்செல்வம் உரையாற்றினார். பன்னீர்செல்வம் கையோடு எடுத்த வந்த பேப்பரை வைத்துக்கொண்டு பேச்சைத் தொடங்கினார். அந்தப் பேப்பரைப் பார்த்து முதல்வர் பெயருக்கு அடுத்து வரிசையாகத் தன் ஆதரவாளர்கள் அனைவரின் பெயரையும் வாசித்தார். ஆனால், மேடையில் அமர்ந்திருந்த மூத்த அமைச்சர்களின் பெயர்களைக்கூட பன்னீர் சொல்லவில்லை. அதை எடப்பாடி ஆதரவாளர்கள் ரசிக்கவில்லை; புகைச்சலில் இருந்த பன்னீர் ஆதரவாளர்களுக்கோ பரம திருப்தி.

இந்த நிலையில்,சிலையைப் பார்த்த தொண்டர்களுக்கு அதிர்ச்சி. பெருத்த உடல் அமைப்புடன், ஜெயலலிதாவின் முகச்சாயலுக்குச் சம்பந்தமே இல்லாமல் இருந்தது. தலைமைக் கழகத்திலேயே இதுகுறித்து சர்ச்சை எழுந்தது. ஆனால், எடப்பாடியும் பன்னீரும் அலட்டிக் கொள்ளவில்லை. சிலையை வடித்த சிற்பிக்கு மோதிரம் அணிவித்து, சால்வை போர்த்தி மரியாதை செய்தனர். சிலைத் திறப்பு முடிந்த சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனங்கள் எழுந்தன. உடனே அமைச்சர் ஜெயக்குமார், “ஜெயலலிதாவின் சிலையைப் பற்றி விமர்சிப்பவர்கள் மனச்சாட்சியற்றவர்கள்” என்று குற்றம்சாட்டினார். ஆனால், அவரே மறுநாள், ‘‘ஜெயலலிதாவின் சிலையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று பல்டியும் அடித்தார். இந்த நிலையில், ‘தலைமைக் கழகத்தில் வைக்கப்படும் சிலைபோல தமிழகம் முழுக்க நிறுவப்படும்’ என்றெல்லாம் முன்பு பேசிக் கொண்டிருந்தார்கள்.

சிற்பி பிரசாத்திடம் பேசினோம். “ஏழு லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சிலை செய்யப்பட்டது. 15 நாள்களில் செய்து முடித்தோம். இளமையும் முதுமையும் கலந்தது போன்ற தோற்றத்தில் ஜெயலலிதா இருக்க வேண்டும் என்று கேட்டதால், அதன்படி வடிவமைத்தோம். ஆனால், இவ்வளவு விமர்சனங்கள் வரும் என்று நாங்கள் எதிர்பார்க்க வில்லை. மாடலுக்காக இன்டர்நெட்டில்தான் ஜெயலலிதா படங்களை எடுத்தோம். சிலையில் முகம் சரியில்லை என்று புகார் வந்ததால், 20 நாள்களில் சிலையின் முகத்தை நாங்களே மாற்றியமைக்க உள்ளோம்” என்றார்.

p4b_1519716236.jpg

‘நமது அம்மா’வும் ஆசிரியர் சிக்கலும்!

சசிகலா குடும்பத்தை அ.தி.மு.க-விலிருந்து ஒதுக்கி வைத்தபிறகு ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழ், அவர்கள் குடும்பத்தின் கைக்குப் போய், ஆட்சிக்கு எதிராக மாறிவிட்டது. ஆளும்கட்சிக்கு என்று தனியாக நாளிதழ் இல்லாத குறையைப் போக்கும் விதமாக ‘நமது புரட்சித் தலைவி அம்மா’ நாளிதழை எடப்பாடியும் பன்னீரும் வெளியிட்டனர். இந்த நாளிதழுக்கும் அ.தி.மு.க-வுக்கும் நேரடித் தொடர்பு இல்லை. அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான சந்திரசேகர் என்பவரின் ‘Two Leaf Mediaa’ என்ற நிறுவனமே இதை நடத்துகிறது.

‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழில் சித்திரகுப்தன் என்ற பெயரில் எழுதிவந்த மருது அழகுராஜ் இதன் ஆசிரியராகப் பொறுப்பேற்று, இதில் சித்திரகுப்தன் என்ற பெயரில் மீண்டும் எழுதத் தொடங்கியுள்ளார்.  ‘நமது எம்.ஜி.ஆர்’ பாணியில், கட்சியின் அறிக்கைகள், பொதுக்கூட்ட விவரங்கள் போன்றவை இந்த நாளிதழில் வெளியாகின்றன. ‘நமது எம்.ஜி.ஆர்’ ஆசிரியர் பதவியிலிருந்து தினகரனால் நீக்கப்பட்டவர் மருது அழகுராஜ். அவரை நீக்கியபிறகும் ‘ஆசிரியர் மருது அழகுராஜ்’ என்றே ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழில் குறிப்பிடப்பட்டது. சில நாள்களுக்கு முன்பு அந்தப் பெயர் நீக்கப்பட்டது. ‘நமது புரட்சித் தலைவி அம்மா’ நாளிதழில் மருது அழகுராஜ் பெயர், ஆசிரியர் என வந்தது. அதன் மறுதினம் வெளியான ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழில் மருது அழகுராஜ் பெயர் மீண்டும் போடப்பட்டிருந்தது. இரண்டு நாளிதழ்களுக்கும் ஒரே ஆசிரியரா எனக் குழம்பிப் போயிருக்கிறார்கள் அ.தி.மு.க-வினர்.

மோடியும் ஸ்கூட்டியும்!

கடந்த மாதமே, மானிய விலை இருசக்கர வாகனத்துக்கான விண்ணப்பங்கள் தமிழகம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டன. சென்னையில் முதல்கட்டமாக ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் ஓகே செய்யப்பட்டு, அவர்களுக்கு மானியத் தொகை ரூ.25 ஆயிரம் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. 19-ம் தேதியிலிருந்தே பலருக்கும் வாகனங்கள் டெலிவரி ஆகிவிட்டன. இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைக்க பிரதமர் மோடி வருவது உறுதியானதும், ஸ்கூட்டி வாங்கிய அனைவருக்கும் மாநகராட்சி அலுவலகத்திலிருந்து போன் செய்தனர். ‘‘நீங்கள் வாங்கிய வண்டியை கலைவாணர் அரங்கத்துக்கு வியாழக்கிழமை கொண்டுவந்து விடுங்கள்” என்று சொன்னார்கள். வந்த வண்டிகளில் பல, அதற்குள் அழுக்காகியிருந்தன. அதன்பிறகு, வியாழக்கிழமையன்று ஷோரூமில் டெலிவரி எடுத்த ஐந்து பேரின் வண்டிகளை, அதிகாரிகள் நேரடியாக கலைவாணர் அரங்கம் கொண்டுவந்து வைத்தனர். அந்த ஐந்து பேருக்கும்தான் மோடியின் கையால் சாவிகளை வழங்கச் செய்தனர். விழாவில் பேசிய மோடி, மத்திய அரசின் திட்டங்களைப் புகழ்ந்து பேசினாரே தவிர, மறந்தும் தமிழக அரசின் செயல்பாடுகளைப் பற்றியோ, ஜெயலலிதா பற்றியோ எதுவும் கூறவில்லை.

விழா மேடையின் பின்புறம் வைக்கப்பட்ட பேனரில் பிரதமர், ஆளுநர், முதல்வர் ஆகிய மூவரின் புகைப்படங்களும் பெயர்களும் மட்டுமே இருந்தன. துணை முதல்வர் பன்னீரின் பெயரோ, படமோ இல்லை. கட்சி அலுவலகத்தில் சிலை திறப்பு விழாவுக்கும், மோடி நிகழ்ச்சிக்கும் கூட்டத்தைக் கூட்டிவரும் பொறுப்பு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இரண்டு நிகழ்ச்சிக்கும் தனித் தனியாக ஆட்களை வண்டியில் ஏற்றிவருவதற்குள் படாதபாடு பட்டுவிட்டார்கள் அவர்கள்.

p4a_1519716309.jpg

தினகரன் எங்கே?

கடந்த ஆண்டு, ஜெயலலிதா பிறந்த நாள் அன்று தலைமைக் கழகத்தில் நடைபெற்ற விழாவில், கழகத் துணைப் பொதுச்செயலாளர் என்ற அந்தஸ்துடன் தினகரன் கலந்து கொண்டார். ஜெயலலிதா பிறந்த நாள் சிறப்பு மலரையும் அவர் வெளியிட்டார். அப்போது ஓ.பி.எஸ் வெளியில் இருந்தார். ஒரே ஆண்டில் நிலைமை மாறி, ஓ.பி.எஸ் - இ்.பி.எஸ். இணைந்து பிறந்த நாள் விழாவைத் தலைமைக் கழகத்தில் கொண்டாட, தினகரனோ கன்னியாகுமரியில் ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவிக்கொண்டி ருந்தார்.

- அ.சையது அபுதாஹிர், எம்.புண்ணியமூர்த்தி
படங்கள்: தி.விஜய், கே.ஜெரோம், வி.ஸ்ரீனிவாசுலு


பப்ளிஷர் ஆன பார்ட்னர்!

‘ந
மது புரட்சித் தலைவி அம்மா’ நாளிதழில் ‘நிறுவனர்கள்’ என்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என இருவரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. ஆனாலும், இவர்கள் இருவருக்குமே அதில் நேரடிக் கட்டுப்பாடு கிடையாது. இதுதொடர்பாக உள்விவரம் அறிந்த சிலரிடம் விசாரித்தோம். ‘‘எடப்பாடி பழனிசாமி சொல்லி, எஸ்.பி.வேலுமணியோட மாஸ்டர் பிளான்லதான் எல்லாமே நடக்குது. பத்திரிகை துவக்க விழாவின்போது, எடப்பாடி பழனிசாமிக்கு ஒருவர் பொக்கே கொடுத்து வரவேற்றதை டி.வி-யில பார்த்திருப்பீங்க. அவர்தான் இந்தப் பத்திரிகைக்கு ‘ஆல்-இன்-ஆல்’. அவர்தான் பதிப்பாளர். சென்னை ஆழ்வார்பேட்டையில் பத்திரிகை அலுவலகம் அமைந்துள்ள கட்டடமே அவருக்குச் சொந்தமானதுதான். பத்திரிகையின் லோகோ, விளம்பர டிஸைனெல்லாம் கோயம்புத்தூரில் அவர் மேற்பார்வையில்தான் ரெடியாகின’’ என்று சொல்லி அதிரவைக்கிறார்கள்.

p4d_1519716268.jpg

யார் அவர்? ‘‘அவர் பெயர் சந்திரசேகர். கோயம்புத்தூரை அடுத்த வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர். எஸ்.பி.வேலுமணி கான்ட்ராக்டராக இருந்தபோது, கோயம்புத்தூர் நகராட்சியில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட்டாக இருந்தார் சந்திரசேகர். அப்போது, வேலுமணிக்கு வேண்டிய உதவிகளையெல்லாம் செவ்வனே செய்தது அவர்தான். அந்த விசுவாசம்தான் சந்திரசேகரை வேலுமணியுடன் இணைத்தது. ஆரம்பத்தில் வேலுமணியின் சீக்ரெட் பார்ட்னராக இருந்து கான்ட்ராக்ட் பிசினஸ்களைக் கவனித்துக்கொண்ட சந்திரசேகர், அதன்பின் அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்தார். தான் முதன்முதலில் வகித்த, மாவட்ட மாணவரணிச் செயலாளர் பதவியை அவருக்குத் தூக்கிக்கொடுத்து அழகு பார்த்தார் வேலுமணி. அப்போதிலிருந்தே வேலுமணியின் மறுஉருவமாக மாறிவிட்டார் சந்திரசேகர். அமைச்சரிடம் ‘காரியம்’ ஆக வேண்டுமென்றால் சந்திரசேகரைப் பிடித்தால்தான் நடக்கும் என்கிற அளவுக்கு அவர் வேலுமணிக்கு நெருக்கம். ‘‘இப்போது கோவை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணிச் செயலாளராக இருக்கும் சந்திரசேகர், தமிழ்நாடு முழுக்க உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் மிகப்பெரிய கான்ட்ராக்ட் பணிகளை ‘ஒதுக்கும்’ இடத்தில் இருக்கிறார்’’ என்கிறார்கள் வேலுமணிக்கு நெருங்கிய வட்டத்தில் உள்ளவர்கள்.

இதுவரை தன் பார்ட்னராக இருந்த சந்திரசேகரை, பத்திரிகையின் பப்ளிஷராக ஆக்கியதில் வேலுமணியின் தனிப்பட்ட தந்திரமும் இருக்கிறது. ‘‘அ.தி.மு.க-வில் எதிர்காலத்தில் டி.டி.வி.தினகரன் கை ஓங்கி, எல்லோரும் ஒன்று சேர்ந்துவிட்டால், நிச்சயம் தன்னை காலி செய்துவிடுவார் என்று வேலுமணிக்குத் தெரியும். தினகரனுடைய ஒட்டுமொத்த கோபமும் வேலுமணி மேல்தான் இருக்கிறது. அப்படி நடந்தால், தான் அரசியல் செய்ய ஒரு துருப்புச்சீட்டாக இந்தப் பத்திரிகை இருக்கும் என்பதுதான் எஸ்.பி.வேலுமணியின் பிளான்’’ என்கிறார்கள்.

‘மக்களுக்காக நான்; மக்களுக்காகவே நான்’ என்கிற வாசகத்தைத் தாங்கி வரும் ‘நமது புரட்சித் தலைவி அம்மா’ நாளிதழ் யாருக்காக ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது என்பதே இப்போதைய கேள்வி.


p4c_1519716283.jpg‘‘டைம் இல்லைன்னு சொல்றது பொய்!’’

ஜெ
யலலிதாவின் சிலை குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துவரும் சூழலில், பல ஆண்டுகளாக எம்.ஜி.ஆர் சிலைகளைச் செய்துவரும் சேலம் ஆத்தூரைச் சேர்ந்த சிற்பி வரதராஜன் ஒரு குபீர் குற்றச்சாட்டை முன்வைக்கிறார். அவரிடம் பேசினோம். ‘‘கிட்டத்தட்ட 30 வருஷமா சிலை செஞ்சுக்கிட்டு இருக்கேங்க. தமிழ்நாடு முழுக்க 400-க்கும் மேற்பட்ட எம்.ஜி.ஆர் சிலைகளை செஞ்சு கொடுத்திருக்கேன். சிமென்ட், ஃபைபர், வெண்கலம்னு எல்லாத்திலும் எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் தத்ரூபமா சிலை செய்திடுவேன். ஜெயலலிதா அம்மா இறந்த பிறகு, அவங்களோட 40 சிலைகளைச் செய்து கொடுத்தி ருக்கேன்.  எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவையில சிலை வைக்கற ஏற்பாடுகள் நடக்கும்போது அமைச்சர் வேலுமணியைச் சந்திச்சு, ‘எனக்கு வாய்ப்பு கொடுங்க’னு கேட்டேன். ‘இதெல்லாம் பெரிய இடத்து சமாசாரம்ப்பா’ன்னு சொல்லி அனுப்பிட்டார்.   

பிறகு, ஒரு நிகழ்ச்சிக்காக எங்க ஊருக்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நான் செஞ்ச சிலைகளைப் பார்த்துட்டு ‘பிரமாதமா இருக்கு’ன்னார். அவர்கிட்டயும் மனு கொடுத்தேன். ஓ.பி.எஸ்-கிட்டேயும் மனு கொடுத்தேன். யாருமே என்னைக் கண்டுக்கல. ஆந்திராவுக்கு ஆர்டரைத் தூக்கிக் கொடுத்துட்டாங்க. டைம் இல்லைன்னு அவங்க சொல்றது சுத்தப் பொய். ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே அவங்க சிலை செய்ய ஆரம்பிச்சிட்டாங்க. தமிழ்நாட்டுல மிகச்சிறந்த சிற்பிகள் இருக்காங்க. அவங்க யாரும் அமைச்சர்கள் கண்ணுக்குத் தெரியாமல் போச்சா?’’ என்று ஆதங்கப்படுகிறார் வரதராஜன்.

https://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.