Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்காலில் தரித்து நிற்கும் தமிழர் அரசியல்

Featured Replies

முள்ளிவாய்க்காலில் தரித்து நிற்கும் தமிழர் அரசியல்
 
 

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டானைச் சேர்ந்த முன்னாள் போராளியொருவர், புற்றுநோய்த் தாக்கத்துக்குள்ளாகி, நேற்று முன்தினம் திங்கட்கிழமை உயிரிழந்திருக்கின்றார்.   

 கடந்த காலத்தில், பெரும் கவனத்தைப் பெற்றிருந்த முன்னாள் போராளிகளின் தொடர் மரணங்கள், இன்றைக்குப் பெட்டிச் செய்திகளாகச் சுருங்கிவிட்டன. பரபரப்புக்காக மாத்திரம், முன்னாள் போராளிகளின் பிரச்சினைகளைக் கையிலெடுக்கும் தரப்புகளும் அந்தப் பரபரப்பு அடங்கியதும், அவர்களை அப்படியே கைவிட்டு, இன்னொரு பரபரப்பைத் தேடிச் சென்றுவிடுகின்றன.  

 மாய்மாலங்களைத் தாண்டிப் பேசினால், முன்னாள் போராளிகள் தொடர்பிலான உரையாடல் வெளி, தமிழ்ச் சூழலில் இருந்து அகற்றப்பட்டுவிட்டது என்பதுதான், உறைக்கும் உண்மை.   

முள்ளிவாய்க்கால் கோரங்கள் நிகழ்ந்து, ஒன்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. நாம் மீண்டுமொரு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மாதத்தில் நிற்கிறோம்.     

முப்பது ஆண்டுகளாக நீடித்த போராட்ட வடிவமொன்று, சமூகத்துக்குள் ஏற்படுத்திச் செல்கின்ற தாக்கம் மிகப்பெரியது. அப்படித்தான், ஆயுதப் போராட்ட வடிவமும் வெற்றிகளோடு, மிகப்பெரிய சமூக, பொருளாதார நெருக்கடிகளையும் ஏற்படுத்திச் சென்றிருக்கின்றது.   

போராட்டங்களின் உண்மையான வெற்றி என்பது, அந்தப் போராட்டங்களுக்கான உண்மையான அர்ப்பணிப்பு மற்றும் வெற்றியைத் தக்க வைப்பதற்கான உத்திகளிலேயே தங்கியிருக்கின்றது. அத்தோடு, வெளிப்பூச்சுகளுக்கு அப்பாலான வெற்றியின் உண்மையான கனதி, என்ன என்பதும் உணரப்பட்டிருக்க வேண்டும்.   

 தமிழ்த் தேசியப் போராட்ட வரலாற்றில், தமிழீழ விடுதலைப் புலிகள் அளவுக்கு அர்ப்பணிப்பைக் காட்டிய தரப்புகள் ஏதும் இல்லை. யாருமே எதிர்பார்க்காத தியாகங்களின் வழியேதான், புலிகள் மேலெழுந்து வந்தார்கள். மக்களுக்காக, எந்த எல்லைக்கும் போவதற்கும் அவர்கள் துணிந்தார்கள். ஆனால், வெற்றி அடையாளங்களோடு மாத்திரம் மக்களை அடைந்தால் போதுமென்கிற அவர்களின் மனநிலை, அதிக தருணங்களில் இன்னொரு பக்க உண்மைகளைத் தவிர்க்கச் செய்தது. அது, “பெடியள் வெண்டு தருவாங்கள்” என்கிற உணர்நிலையை மக்கள் மத்தியில் விதைத்தது. மக்களின் பொறுப்புகளை அகற்றியது. அது, இன்றைக்கும் தொடர்வதுதான், பெரும் பிரச்சினையாக நீடிக்கின்றது.   

முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னர், தமிழ்த் தேசியப் போராட்டங்களை யார் வழிநடத்துவது என்கிற குழப்பமும், குடுமிப்பிடிச் சண்டையும் குறிப்பிட்டளவு நீடித்தன. தாயகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தேர்தல் வழி அரசியலுக்காகத் தமிழ் மக்கள் முன்மொழிந்தார்கள்.   

புலம்பெயர் சூழலோ, ‘நாடு கடந்த தமிழீழம்’ உள்ளிட்ட பல அமைப்புகளாகப் பிளவுகண்டு நின்றது. அதிக தருணங்களில், புலிகளின் வகிபாகத்தை முழுமையாக யார் எடுத்துக் கொள்வது என்பது சார்ந்தே குழப்பங்கள் நீடித்தன.   

முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னரான, தாயகத்திலுள்ள மக்களின் மனநிலை என்பது, பெரும்பாலும் சூனியமானது. அடுத்தது என்ன, என்கிற சிந்தனைகளே எழுந்திருக்கவில்லை. கிட்டத்தட்ட உறைந்திருந்தார்கள்.   

முள்ளிவாய்க்கால் கோரங்களைச் சந்தித்து நின்ற மக்களையும் முன்னாள் போராளிகளையும் எவ்வாறு எதிர்கொள்வது என்பதே யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. கூட்டமைப்புக்கு, மஹிந்த ராஜபக்ஷவோடு அல்லாடிக் கொள்வதற்கும், பிராந்திய வல்லரசின் ஆணைகளுக்கு அசைவதற்குமே நேரம் போதுமாக இருந்தது. சூனிய வெளியிலிருந்து மீள்வதற்கான யோசனைகள், திட்டங்களை யாருமே கொண்டிருக்கவில்லை. அவ்வாறான சிறிய முயற்சிகளும் எந்தவித ஒத்துழைப்புமின்றிக் கைவிடப்பட்டன.   
 இறுதி மோதல்களுக்குள் சிக்கிய மக்களை அரவணைத்துக் கொள்வதற்கே, முள்ளிவாய்க்கால் கோரங்களை நேரடியாகச் சந்திக்காத மக்களுக்குக் காலம் எடுத்தது. பாதுகாப்புத் தரப்பினரின் கெடுபிடிகள், கடத்தல்கள், காணாமற்போதல்கள் என்று மக்கள், இறுக்கத்துக்குள்ளேயே வைக்கப்பட்டார்கள்.  

 யார் மீதும் யாரும் நம்பிக்கை கொள்வதற்கான கட்டங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டன. ஒவ்வொரு தமிழரும் தனித் தனித் தீவுகளாகப் பிரித்து வைக்கப்பட்டார்கள். அவர்கள், மற்றவரை நம்புவதற்கும், ஒருங்கிணைவதற்கான வாய்ப்புகளும் அகற்றப்பட்டிருந்தன.   

அது, அனைவரையும் சந்தேகக் கண்களோடு பார்க்கவும் வைத்திருந்தது. ஒன்பது ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், அந்த நிலை குறிப்பிட்டளவு தொடரவே செய்கின்றது.   

 கல்வி, பொருளாதாரம், சமூக அபிவிருத்தி என்று அனைத்துக் கட்டங்களிலும் பின்னடைவைச் சந்தித்து நிற்கின்ற சமூகமொன்று, முன்னோக்கிப் பயணிப்பதற்குத் திட்டமிடலும், அர்ப்பணிப்பும், ஒழுங்கும் அவசியம்.   

ஆனால், அது நிலைப்பாடு படுத்தப்படவில்லை. வடக்கு மாகாண சபையின் வருகையை, சிறியதொரு நம்பிக்கையாக மக்கள் எதிர்கொண்டாலும், தென்னிலங்கை அதற்கான வாய்ப்புகளை அடைத்தது. அது மாத்திரமல்லாமல், வடக்கு மாகாண சபைக்குச் சென்றவர்களும் கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் வீணடித்தார்கள். வடக்கு மாகாண சபைக் ஊடாகவோ அல்லது வெளியிலேயே கூட, நிதியங்களை அமைப்பதற்கான கட்டங்களை அடையவில்லை. முதலமைச்சர் நிதியத்துக்கான குரலை, மத்திய அரசாங்கத்திடம் சி.வி.விக்னேஸ்வரன் உயர்த்தினாலும், அதன் அடுத்த கட்டங்கள் அடையப்படவேயில்லை. முதலமைச்சர் நிதியத்துக்கூடாக மாத்திரமே விடயங்களைக் கையாள முடியும் என்கிற உணர்திறனோடு, விடயங்கள் கைகழுவப்பட்டு விட்டன.   

 புலம்பெயர் தேசங்கள் பூராவும் பறந்து திரிந்து கட்சிகளுக்கும், தாம் சார் அமைப்புகளுக்கும் நிதியைப் புரட்ட முடிந்தவர்களால், முன்னாள் போராளிகளுக்கான வேலைத்திட்டங்களுக்கான நிதியைத் திரட்ட முடியவில்லை.  முயலாமை என்கிற வியாதி, தமிழ் அரசியல்வாதிகளிடம் மாத்திரமல்ல, செயற்பாட்டாளர்கள், புலமையாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பிடமும் ஓங்கியிருக்கின்றது.  
 கிட்டத்தட்ட தமிழ்த் தேசிய அரசியல் என்பது, சமூக - பொருளாதார விடயங்களை மறந்து, தேர்தல் அரசியல் என்கிற ஒற்றை வழியில் பயணிக்க ஆரம்பித்து விட்டது.   

 புலிகள், வெற்றி அடையாளங்களோடு மேலெழுந்து வந்தாலும், சமூக- பொருளாதாரக் கட்டமைப்பில் தம்மால் முடிந்தளவுக்கான கட்டங்களைக் கட்டியிருந்தார்கள். அரசாங்கத்தின் பொருளாதாரத் தடைக்கு மத்தியிலும் பொருண்மிய மேம்பாட்டுத் திட்டங்களைத் திறம்படச் செய்தார்கள்.   

ஆனால், என்ன, அந்தத் திட்டங்களின் முழுமையான ஆளுமையும் பங்களிப்பும் அவர்கள் சார்ந்தே இருந்ததால், புலிகள் தவிர்ந்த, வெளியிலிருந்த புலமைத்தரப்பினர், எந்தவித சிந்தையுமின்றிச் சோம்போறிகளாகினர்.   அந்தச் சோம்போறித்தனமான- மந்த நிலைதான், இன்றும் அறைகளுக்குள் இருந்துகொண்டு, கருத்துகளை மாத்திரம் கூறிவிட்டு, ஒதுங்கிவிட வைத்திருக்கின்றது. விடயமொன்று பரபரப்பாக மேலெழும் போது மாத்திரம், செயற்படுவது மாதிரியான போக்குக் காட்டப்படுகின்றது.   

 முன்னாள் போராளிகள் விடயத்தில் இது, பலமுறை நிகழ்ந்திருக்கின்றது. முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டது என்ற குற்றச்சாட்டுகள்  மேலெழும் போது, அதைப் பரபரப்புக்காகவே பல தரப்புகள் கையாண்டன.  

 சமூகத்தால் ஒட்டுமொத்தமாகக் கைவிடப்பட்ட நிலையில், இராணுவப் பண்ணைகளில் வேலைக்குச் செல்லும் நிலை, முன்னாள் போராளிகளுக்கு ஏற்பட்ட போதும், அவர்களை நோக்கி ‘துரோகி’ பட்டங்களை கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்தநிலை ஏன் உருவானது என்று யாரும் சிந்திக்கவில்லை.   

 புலம்பெயர் தேசங்களில் புலிகள் இருந்த காலத்தில் எவ்வளவு நிதி சேகரிக்கப்பட்டதோ, அதற்குச் சற்றும் குறையாமல் தற்போதும் பல தரப்புகளினாலும் நிதி சேகரிக்கப்படுகின்றது. அந்த நிதியின் போக்கிடம் எது என்று யாருமே ஆராய்வதில்லை.   

இலண்டனில் மாவீரர் துயிலும் இல்லம் கட்டுவதற்கும், தமிழகத்தில் சீமான் கட்சி நடத்துவதற்கும் புலம்பெயர் தேசங்களில் நிதி சேகரிக்கப்படுகின்றது. இப்படி பல்வேறு வடிவங்களில் தமிழ் மக்களின் நிதி வீணடிக்கப்படுகின்றது. 

 சீமான் போன்றவர்களை புலிகளின் தலைவர் பிரபாகரனோடு ஒப்பிட்டு, புளகாங்கிதம் அடையும் ஒரு வகையிலான உளவியல் சிக்கல், புலம்பெயர் தேசங்களில் மெல்ல மெல்லக் கட்டமைக்கப்படுகின்றது. அது, தாயகத்திலுள்ள மக்களின் தேவைகளைக் கவனத்தில் கொள்ள முடியாதளவுக்கு, புலம்பெயர் தேசங்களிலுள்ள பல அமைப்புகளையும் மாற்றிவிட்டிருக்கின்றது.   

 மிகவும் தெளிவான- புரிந்துணர்வுடனான வேலைத்திட்டமொன்று தாயகத்துக்கும்- புலம்பெயர் சூழலுக்கும் இடையில் நிகழ வேண்டியிருக்கின்றது. அவ்வாறான சூழலொன்று உருவாவதை இலங்கை அரசாங்கமும், புலம்பெயர் தேசத்தில் பணம் பறிக்கும் கும்பல்களும் விரும்பாது.   

ஆனாலும், தடைகளையும் சதிகளையும் முறியடித்து, சமூக - பொருளாதார - அபிவிருத்திக்கான கட்டமொன்று தாயக - புலம்பெயர் சூழலுக்கிடையில் உருவாக்கப்பட வேண்டும். அது, ஊழல், மோசடிகளற்ற வெளிப்படையான தன்மையோடு உருவாக வேண்டும்.   

அந்த முயற்சி இலகுவானதல்ல; ஆனால், முடியாத ஒன்றல்ல. திட்டமிட்டு, சரியாக இணைந்தால், அதைச் செயற்படுத்த முடியும். அது, பாரிய முன்னோக்கிய கட்டங்களை அடைய உதவும். இவற்றையெல்லாம் விட்டுவிட்டு, முள்ளிவாய்க்காலில் மலர் தூவுவதால் மாத்திரம், எந்தப் பயனும் இல்லை; வரலாறும் மன்னிக்காது.     

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/முள்ளிவாய்க்காலில்-தரித்து-நிற்கும்-தமிழர்-அரசியல்/91-215285

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.