Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேகப்பந்துவீச்சாளர்களின் தொடர் உபாதையும், ஹத்துருசிங்கவின் புதிய வியூகமும்

Featured Replies

வேகப்பந்துவீச்சாளர்களின் தொடர் உபாதையும், ஹத்துருசிங்கவின் புதிய வியூகமும்

26047241_1821296107943946_82913650046842
 

சுமார் ஒன்றரை வருடங்களாக தொடர் தோல்விகளை சந்தித்து வந்த இலங்கை அணி, இவ்வருடம் முதல் புதிய பயிற்றுவிப்பாளரான சந்திக்க ஹத்துருசிங்கவின் பயிற்றுவிப்பின் கீழ் சிறப்பாகச் செயற்பட்டு தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து வெற்றிகளைப் பெற்றுக்கொண்டது. எனினும், இலங்கை வீரர்களின் தொடர் உபாதைகள் இலங்கை அணியின் வெற்றிக்கும், எதிர்கால வியூகத்துக்கும் மிகப் பெரிய தடங்கலாக இருந்து வருகின்றமை அனைவரும் அறிந்த உண்மை.

இந்நிலையில், சுமார் 2 மாதகால ஓய்வின் பிறகு இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதற்கான 17 பேர் கொண்ட இலங்கை குழாம் கடந்த 11ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.

 

இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடருக்காக தெரிவு செய்யப்பட்டிருந்த இலங்கைக் குழாமானது  கண்டி பல்லேகலை சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகின்ற எட்டு நாட்கள் பயிற்சி முகாமில் பங்கேற்று வருகின்றது.

இதில் இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்கவின் வேண்டுகோளுக்கு இணங்க, சுழல் பந்துவீச்சாளர்களுக்கு 2 வார பயிற்சி முகாமொன்றை நடத்துவதற்காக அவுஸ்திரேலிய முன்னாள் சுழல் பந்துவீச்சாளரான பீட்டர்ஸ் ஸ்லிப் இலங்கைக்கு வருகை தந்து சுழல் பந்துவீச்சு தொடர்பான பயிற்சி முகாம்களை நடாத்தி வருகின்றார்.

இதேநேரம், இலங்கை அணியின் குறுகிய கால வேகப்பந்து ஆலோசகராக அவுஸ்திரேலியாவின் விக்டோரியா கிரிக்கெட் சங்கத்தின் உயர் செயல்திறன் முகாமையாளரான டிம் மெக்கஸ்கில் செயற்பட்டு வருகின்றார்.

இதன்படி, இலங்கை டெஸ்ட் அணியுடன் தற்போது இணைந்துகொண்டுள்ள அவர், வேகப்பந்துவீச்சாளர்களுக்கான பயிற்சிகளையும், ஆலோசனைகளையும் வழங்கி வருகின்ற அதேநேரம், உபாதைகளிலிருந்து எவ்வாறு வீரர்கள் தம்மை பாதுகாத்துக் கொள்வது தொடர்பிலான யுக்திகளையும் வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே இலங்கை அணி வேகப்பந்துவீச்சாளர்கள் நீண்டகாலமாக முகங்கொடுத்து வருகின்ற உபாதைகள் தொடர்பிலான பிரச்சினைகளுக்கு இவருடைய ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்கள் மூலம் தீர்வு கிடைக்கும் என நம்பப்படுகின்றது.

அதுமாத்திரமின்றி, டிம் மெக்கஸ்கில்லினால் வழங்கப்படுகின்ற இந்தப் பயிற்சிகள், எதிர்காலத்தில் சந்திக்க ஹத்துருசிங்கவினால் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்களுக்கு உதவியாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

 

 

இந்நிலையில், குறித்த பயிற்சி முகாமிற்குப் பிறகு இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க இந்தியாவின் க்ரிக்பஸ் (Cricbuzz) இணையத்தளத்துக்கு வழங்கிய விசேட செவ்வியில்,

“டிம் மெக்கஸ்கில்லின் நிபுணத்துவத்தை எமது வீரர்களுக்கு பெற்றுக் கொடுக்கும் நோக்கில் அவரை நாம் ஒரு சில வாரங்களுக்கு ஆலோசகராக ஒப்பந்தம் செய்தோம். அவர் வேகப்பந்துவீச்சு தொடர்பான இயந்திரவியல் நிபுணர் ஆவார். பயிற்சிகளின் போது அவர் எமது பந்துவீச்சாளர்களின் நுட்பங்களை இயந்திரங்கள் மூலம் நன்கு அவதானித்தார். அதிலும் குறிப்பாக அவர் அனைத்து பந்து வீச்சாளர்கள் தொடர்பிலும் தனித்தனியாக அவதானம் செலுத்தியிருந்தார். அதுமாத்திரமின்றி அவர் இலங்கைக்கு வருகை தருவதற்கு முன் எமது பந்துவீச்சாளர்களின் ஓட்டம், பந்துவீசும் முறை என்பது தொடர்பில் நன்கு ஆய்வு செய்துவிட்டு வருகை தந்திருந்தார்.

எங்களது பந்து வீச்சாளர்கள் என்ன செய்ய வேண்டும் எனவும், அவர்கள் எதை மாற்றம் செய்ய வேண்டும் எனவும் அவருடன் ஆலோசித்தோம். அத்துடன், அவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் எதனை மாற்றம் செய்ய வேண்டும் அல்லது அவ்வாறு எம்மால் மாற்றம் செய்ய முடியாது போனால், நாம் பலப்படுத்த வேண்டிய பகுதிகள் என்ன என்று அவரிடம் கேட்டிருந்தோம்.

அதுமாத்திரமின்றி எமது பந்துவீச்சாளர்களுக்கு வழங்கப்படுகின்ற பயிற்சிகளில் எவ்வாறான மாற்றங்கள் செய்ய வேண்டும். எவ்வாறான சீரமைப்புகளை செய்ய வேண்டும் என்பது பற்றி கேட்டுள்ளோம். அவருடைய அறிவுரைகள் எமது பந்துவீச்சாளர்களுக்கு வெற்றிகரமான ஆரம்பத்தைப் பெற்றுக்கொடுக்கும்.

எனவே நாங்கள் கொழும்புக்குத் திரும்பிய பிறகு, டிம் எங்கள் மருத்துவ அதிகாரிகளுடன் உட்கார்ந்து, இதுபற்றிய விடயங்களைப் பற்றி விவாதிக்கவுள்ளதாகவும்” ஹத்துருசிங்க தெரிவித்தார்.

”அத்துடன், எமது வேகபந்துவீச்சாளர்களும், வேகப்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர்களும் பல்வேறு முறைகளில் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும். இதைத்தான் நாம் ஒரு பந்துவீச்சாளரிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம். எனவே இந்த அனுபவங்களை டிம் கொழும்புக்குச் சென்று அங்குள்ள எமது உள்ளுர் பயிற்றுவிப்பாளர்களுக்காக நடத்தப்படவுள்ள விசேட கருத்தரங்கில் தெளிவுபடுத்தவுள்ளார்.

இது எமக்கு மிகப் பெரிய ஊக்கத்தை கொடுக்கும் என நம்புகிறேன். அத்துடன் எமது வீரர்கள் பெற்றுக்கொண்ட இந்த அனுபவங்களை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவும் எதிர்பார்த்துள்ளோம். அதிலும் குறிப்பாக, மேற்கிந்திய டெஸ்ட் தொடரை சிறந்த முறையில் முகங்கொடுக்க தயாராகி வருகின்றோம்.

 

 

எனினும் போட்டியின் முடிவுகள் எவ்வாறு அமையும் என்பதை யாராலும் கூறமுடியாது. ஆனால் நாம் எதைச் செய்ய வேண்டும் என்பதை அங்குள்ள நிலைமைகளை விரைவில் அறிந்துகொள்ள வேண்டும். அவ்வாறு விளையாடினால் நிச்சயம் எதிரணியின் சவாலை எம்மால் சமாளிக்க முடியும்” என ஹத்துருசிங்க மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, பயிற்சிகளின் பின்னர் இலங்கை அணி இந்த மாதம் 25ஆம் திகதி மேற்கிந்திய தீவுகள் நோக்கி பயணமாகின்றது. இலங்கை அணி அங்கு சென்று பயிற்சிப் போட்டியொன்றில் விளையாடவுள்ளது. அதன் பின்னர், ஜூன் மாதம் 6 ஆம் திகதி போர்ட் ஒப் ஸ்பெய்ன் நகரில் இடம்பெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகளுடன் மோதவுள்ளது.

கடந்த பத்து வருடங்களில் இலங்கை அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடர் ஒன்றில் விளையாடுவது இதுவே முதல் தடவையாகும். அத்தோடு, இதுவரையில் இலங்கை அணி மேற்கிந்திய தீவுகளில் வைத்து டெஸ்ட் தொடரொன்றை கைப்பற்றவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற பங்களாதேஷ் அணியுடனான கிரிக்கெட் தொடரின் போது பின்தொடை பகுதிகளில் உபாதைகளுக்கு உள்ளாகியிருந்த வேகப்பந்துவீச்சாளர்களான ஷெஹான் மதுசங்க மற்றும் நுவன் பிரதீப் ஆகியோர் பூரணமாக குணமடையாத காரணத்தால் மேற்கிந்திய தொடரில் இடம்பெறவில்லை.

 

 

அதேநேரம், அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளரான சுரங்க லக்மால் (விலா எலும்பு முறிவு) மற்றும் இலங்கை அணியின் முன்னாள் அணித் தலைவரான அஞ்செலோ மெதிவ்ஸ் (முழங்கால் தசைப்பிடிப்பு) ஆகிய இருவரும் காயங்களில் இருந்து குணமடைந்து முழு உடற்தகுதியுடன் இருக்கின்றதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

எனவே, இரண்டு மாதங்களுக்கு முன்னர் தமது இறுதி டெஸ்ட் தொடரை 1-0 என பங்களாதேஷில் வைத்துக் கைப்பற்றிய தினேஷ் சந்திமால் தலைமையிலான இலங்கை அணி, டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் தற்போது ஆறாம் இடத்தில் காணப்படுகின்றது. எனினும், டெஸ்ட் தரப்படுத்தலில் 9ஆவது இடத்தில் உள்ள மேற்கிந்திய தீவுகளை அதன் சொந்த மண்ணில் வைத்து தோற்கடிப்பது இலகுவான விடயம் அல்ல என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

http://www.thepapare.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.