Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்புடன் அரசாங்கம் இருதரப்பு பேச்சு நடத்துமா?

Featured Replies

கூட்டமைப்புடன் அரசாங்கம் இருதரப்பு பேச்சு நடத்துமா?

 

புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகள் பாரிய சவால்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த விடயத்தில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுகின்றது. அதாவது புதிய அரசியலமைப்பு வருமா? அதில் தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு உள்ளடக்கப்படுமா? தேர்தல் முறைகள் மாற்றப்படுமா? நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்படுமா போன்ற கேள்விகள் அனைவர் மத்தியிலும் எழுகின்றன. காரணம் இந்த விடயங்களை முன்னெடுப்பதாக கூறியே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தது. ஆனால் தற்போதைய நிலைமையை பார்க்கும்போதும் அரசியல் நகர்வுகளையும் போக்குகளையும் அவதானிக்கும்போதும் இவை எதுவுமே நடைபெறாது விடுமோ என்ற சந்தேகம் அனைவர் மத்தியிலும் ஏற்படுகின்றது.

நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியல் தீர்வுடன் கூடிய புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. அதற்கான நடவடிக்கைகள் அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் இவ்வருடம் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பின்னர் அனைத்து விடயங்களும் தலைகீழாக மாறிவிட்டன.

தேர்தலில் அரசியலமைப்புப் பணிகளை எதிர்த்த கட்சி வெற்றியீட்டியமையே இவ்வாறு புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகள் ஸ்தம்பிதமடைய காரணமாக இருந்தன. இந்த நிலையில் அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வி எழுகின்றது. இதற்கு முன்னைய அரசாங்கங்கள் இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தை முன்னெடுக்க முயற்சிக்கும்போது தமிழ்பேசும் மக்களின் பிரதான கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் நேரடியாக இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தன. அந்தப் பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை என்றாலும் அரசாங்கமும் தமிழ் தரப்பும் பேச்சு நடத்த வேண்டுமென்ற தேவைப்பாடு கடந்த காலங்களில் உணரப்பட்டது.

ஆனால் தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் ஆளும்தரப்பு உத்தியோகபூர்வமான இருதரப்பு நேரடிப்பேச்சுவார்த்தைகளை நடத்தவில்லை என்றே தெரிகிறது. மாறாக 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்ததன் பின்னர் என்ன நடந்தது என்பதை பார்க்க வேண்டியது அவசியமாகின்றது. 2015 ஆம் ஆண்டு அதிகாரத்திற்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் நாட்டு மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. குறிப்பாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றும் அதனை உள்ளடக்கிய புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் என்றும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை மாற்றப்படும் என்றும், புதிய தேர்தல்முறைமை அறிமுகப்படுத்தப்படும் என்றும் வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.

 அந்தவகையில் அரசாங்கத்தின் இந்த வாக்குறுதிகள் தொடர்பில் தமிழ் பேசும் மக்களும் பெரும்பான்மையின மக்களும் நம்பிக்கை வைத்தனர். இந்நிலையில் புதிய அரசியலமைப்பை தயாரிக்கும்நோக்கில் பாராளுமன்றம் அரசியலமைப்பு நிர்ணய சபையாக மாற்றப்பட்டது. அந்த அரசியலமைப்பு நிர்ணய சபையானது அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகளை முன்னெடுக்க பிரதான வழிநடத்தல் குழுவை நியமித்தது. குறித்த பிரதான வழிநடத்தல் குழுவில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து கட்சிகளினதும் 21 பிரதிநிதிகள் அங்கத்துவம் வகிக்கின்றனர். அந்தக்குழுவின் தலைவராக பிரதமர் ரணில்விக்கிரமசிங்க செயற்படுகின்றார். அதேபோன்று பிரதான வழிநடத்தல் குழுவானது அதன் கீழ் 6 உபகுழுக்களை நியமித்து பல்வேறுபட்ட விடயங்களை ஆராய்வதற்கான அதிகாரத்தை வழங்கியது. பிரதான வழிநடத்தல் குழுவானது 3 முக்கிய விடயங்கள் குறித்து ஆராய்ந்தது. ஜனாதிபதி முறைமையில் மாற்றம், அதிகாரப்பகிர்வு மற்றும் தேர்தல்முறை மாற்றம் ஆகிய முக்கிய 3 விடயங்கள் தொடர்பிலேயே இந்த பிரதான வழிநடத்தல் குழு ஆராய்ந்து வந்தது.

இந்த சூழலில் புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கான பணிகளில் அரசியலமைப்பு நிர்ணய சபை பிரதான வழிநடத்தல் குழு மற்றும் 6 உபகுழுக்கள் ஆகியன மிக அர்ப்பணிப்புடனேயே செயற்பட்டு வந்தன. இவற்றுக்கு மேலதிகமாக மக்கள் கருத்தறியும் குழுவொன்றும் நியமிக்கப்பட்டது. அந்தக்குழுவும் தமது அறிக்கையை பிரதான வழிநடத்தல் குழுவிற்கு சமர்ப்பித்திருந்தது. அதேபோன்று 6 உபகுழுக்களும் தமக்கு வழங்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கையை தயாரித்து பிரதான வழிநடத்தல் குழுவிற்கு வழங்கியிருந்தன.

இதற்கிடையில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் தயாராகி இவ்வருடம் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி தேர்தல் நடைபெற்றது. அதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் மஹிந்த ராஜபக் ்ஷ தரப்பு வெற்றியீட்டியது. இதனையடுத்து அரசாங்கத்திற்குள் பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டன. பிரதமரை பதவியிலிருந்து விலகுமாறு கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன. ஒருகட்டத்தில் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைகூட முன்வைக்கப்பட்டது. எனினும் அவற்றைக் கடந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த இழுபறியிலிருந்து மீண்டுவந்தார். அப்படியிருந்தும் முழுவீச்சில் முன்னெடுக்கப்பட்ட அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகள் ஸ்தம்பிதமடைந்தன. அதன் பின்னர் அண்மைய வாரங்களில் சில தடவைகள் பிரதான வழிநடத்தல் குழு கூடியபோதிலும் எந்தவொரு இணக்கப்பாட்டிற்கும் வரமுடியவில்லை. அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகள் முற்றுமுழுதாக நின்றுவிடுமோ என்று மக்கள் சந்தேகம் கொள்ளும் வகையிலேயே போக்குகள் அமைந்திருந்தன.

குறிப்பாக இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் தொடர்பிலேயே பிரதான வழிநடத்தல் குழுவிற்குள் பாரிய முரண்பாடுகளும் நெருக்கடிகளும் தோன்றின. ஜனாதிபதி முறைமாற்றம் தொடர்பில் நெருக்கடிகள் இருந்தபோதிலும் அதிகாரப்பகிர்வு விடயமே பல சிக்கல்களை தோற்றுவிப்பதாக அமைந்திருந்தது. இந்த இடத்தில் நாம் முக்கியமாக ஆராயவேண்டிய விடயம் என்னவெனில், பிரதான வழிநடத்தல் குழுவில் அதிகாரப்பகிர்வு முறைமை ஆராயப்பட்டதே தவிர இந்த விடயம் குறித்து அரசாங்கமும் தமிழ் தேசியக்கூட்டமைப்பும் நேரடியாக இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தனவா என்பதாகும். இனப்பிரச்சினை தீர்வானது நேரடியாக தமிழ்பேசும் மக்களுடன் சம்பந்தப்பட்ட விடயமாகும். எனவே இதுதொடர்பில் முதலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பும் அரசாங்கமும் தமது பிரதிநிதிகளை நியமித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும். உத்தியோகபூர்வமற்ற முறையில் இவ்வாறான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதா என்பதை அறியமுடியவில்லை. ஆனால் இரண்டு தரப்பினதும் பிரதிநிதிகள் உத்தியோகபூர்வமான முறையில் பேச்சு நடத்தவில்லை என்றே தெரிகின்றது. எனினும் இவ்வாறு கூட்டமைப்பினதும் அரசாங்கத்தினதும் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி அந்த பேச்சுவார்த்தையில் எட்டப்படும் இணக்கப்பாட்டை பிரதான வழிநடத்தல் குழுவிற்கு சமர்ப்பித்திருக்கலாம். அப்போது ஏதாவது நெருக்கடிகள் ஏற்பட்டிருந்தால் அதுதொடர்பில் ஆராய்ந்திருக்கலாம். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை.

தற்போதைய அரசியல் சூழலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பினதும் அரசாங்கத்தினதும் பிரதிநிதிகள் இவ்வாறு இருதரப்பு பேச்சுவார்த்தை களை நடத்துவதும் சவாலானதுதான். காரணம் இவ்வாறு பேச்சுவார்த்தை நடைபெற்றால் அதனை எதிர்க் கட்சிகள் வேறுகோணத்தில் அர்த்தப்படுத்திவிடும். தற்போது இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படாமலேயே அனைத்து கட்சிகளிலும் இடம்பெறுகின்ற பிரதான வழிநடத்தல் குழுவில் எட்டப்படுகின்ற தீர்மானங்கள்கூட நெருக்கடிக்கு உள்ளாகின்றன. அவ்வாறு இருக்கும்போது தமிழ் தேசியக்கூட்டமைப்பினதும் அரசாங்கத்தினதும் பிரதிநிதிகள் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தால் அது தென்னிலங்கையில் மாறுபட்ட அரசியல் அர்த்தத்தை வழங்கியிருக்கும் என்பதையும் நாம் மறுப்பதற்கில்லை. எப்படியிருப்பினும் இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டமானது தொடர்ந்தும் தாமதிக்கப்பட முடியாது. 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தேர்தலில் இரண்டு பிரதான கட்சிகளுக்குமே பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. அப்போது இனப்பிரச்சினைக்கான தீர்வு புதிய அரசாங்கத்தில் சாத்தியமாகுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் ஏற்பட்டது. ஆனால் இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்க தீர்மானித்தபோது இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான சாத்தியம் அதிகரித்தது. காரணம் கடந்த காலங்களில் ஒருகட்சி ஆட்சியிலிருந்து இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கி பயணிக்கும்போது மற்றைய கட்சி அதனை எதிர்க்கும். மாறிமாறி ஆட்சிக்கு வந்துகொண்டிருந்த 2 பிரதான கட்சிகளும் இந்த நிலைமையையே எதிர்கொண்டிருந்தன. ஆனால் இரண்டு பிரதான கட்சிகளும் இனப்பிரச்சினைக்கு சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை வழங்க வேண்டும் என்பதை கொள்கை அடிப்படையில் ஏற்றுக்கொண்டிருந்தன. எனினும் வரலாற்றில் எந்தவொரு கட்டத்திலும் சாத்தியமான தீர்வுத்திட்டத்தை அடையமுடியவில்லை. பாரிய நெருக்கடிகளுக்கு மத்தியில் 1987ஆம் ஆண்டு இந்தியாவின் தலையீட்டுடன் இலங்கை– இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அதனூடாக இலங்கையில் அரசியலமைப்பில் 13ஆவது திருத்தச்சட்டம் உள்ளடக்கப்பட்டு மாகாண சபை முறைமை கொண்டுவரப்பட்டது.

எனினும் மாகாண சபை முறைமையானது தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை முழுமையாக பூர்த்தி செய்ததா என்பது கேள்விக்குறியாகி விட்டது. அதுமட்டுமின்றி 13ஆவது திருத்தச்சட்டமும் இன்னமும் முழுமையாக அமுல்படுத்தப்படாத சூழலே காணப்படுகின்றது. எனவே ஒரு புதிய அரசியல் தீர்வுத்திட்டம் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக முன்வைக்கப்பட வேண்டியது அவசியமாகின்றது.

அதனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் தமிழ் பேசும் மக்களின் அரசியல் பிரச்சினையை தீர்த்துவைக்கும் விடயத்தில் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டியது அவசியமாகின்றது. இந்த விடயத்தில் தமிழ்பேசும் மக்களின் பிரதான கட்சியான தமிழ்தேசியக் கூட்டமைப்புடன் நேரடிப்பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும். அவ்வாறு பேச்சு நடத்தி தீர்வுத்திட்டம் தொடர்பில் ஒரு இணக்கப்பாட்டிற்கு வரவேண்டும். ஒரு ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வுத்திட்டத்தை பெற்றுக்கொள்ளக்கூடியதாக தற்போதைய நிலைமையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு பாரிய அர்ப்பணிப்புக்களை செய்து வருகின்றது. பிரதான எதிர்க்கட்சியாக இருந்தபோதிலும்கூட தமிழ் தேசியக்கூட்டமைப்பானது நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் போக்கையே கடைப்பிடித்து வருகின்றது. ஒரு நியாயமான தீர்வுத்திட்டத்தை பெறுவதற்காகவே சம்பந்தன் தலைமையிலான தமிழ்தேசியக்கூட்டமைப்பு இவ்வாறு ஆதரவு வழங்கி வருகிறது. இதன் காரணமாக அக்கட்சியானது சில நெருக்கடிகளை சந்தித்திருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் இந்த விட்டுக்கொடுப்புக்கூட தற்போதைய சூழலில் கானல் நீராகிவிடுமோ என்ற சந்தேகம் ஏற்படுகின்றது.

2 பிரதான கட்சிகளும் இணைந்து ஆட்சி நடத்திவருகின்ற இந்த சூழலில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான சாதகசூழல் அதிகமாகவே இருக்கின்றது. ஆனால் அதனை பதவியிலிருக்கின்ற அரசாங்கம் எவ்வாறு பயன்படுத்தப்போகின்றது என்பதே தீர்க்கமான விடயமாக உள்ளது. சுதந்திரக்கட்சியும் ஐக்கிய தேசியக்கட்சியும் இணைந்து ஒரு பிரதிநிதி குழுவை நியமித்து அக்குழு தமிழ்த்தேசியக்கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கப்பாட்டை எட்ட முடியுமானால் அது இனப்பிரச்சினை தீர்வுப்பயணத்தில் மிகப்பெரிய மைல்கல்லாக இருக்கும். ஆனால் அதற்கு அதிகாரத்தில் இருப்போர் தயாரா என்பது கேள்விக்குறியாகும்.

இந்த இடத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு தீர்வுகாண அழுத்தங்களைப் பிரயோகிக்க மேலும் முயற்சிக்க வேண்டும். அதேபோன்று அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 2 பிரதான கட்சிகளும் இந்த தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான அர்ப்பணிப்பை நேர்மையான முறையில் வெளிக்காட்ட வேண்டியது அவசியமாகும்.

தீர்வுத்திட்டம் கிடைக்கும் என்ற நம்பிக்கை தமிழ் மக்களிடம் இன்னும் குறிப்பிடத்தக்க அளவில் இருந்துகொண்டுதான் இருக்கின்றது என்ற விடயத்தை இந்த நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் புரிந்துகொள்ள வேண்டும். 

ரொபட் அன்டனி

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-08-04#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.