Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புறவழிச்சாலைப் புண்ணியங்கள்

Featured Replies

புறவழிச்சாலைப் புண்ணியங்கள்

 

 

 
k6

காலை மணி ஒன்பதரை. காசி விஸ்வநாதனுக்கு அன்றைய காலைக் கடமைகள் முடிந்தன. ஐந்தரை மணிக்கு எழுதல். பயோரியா பற்பொடியில் பல் துலக்குதல். மனைவி கற்பகம் கையால் தரப்படும் காபியை ருசித்துக் குடித்தல். அரை கிலோ மீட்டர் தொலைவு வியர்வை அரும்ப நடைப்பயிற்சி. நடைப்பயிற்சி முடித்து வந்து குளிர்ந்த நீரில் குளித்தல். அடுத்து தமது குடும்பத்திற்குச் சொந்தமான விநாயகர் கோயில் பூஜை. பூஜை முடிந்து கற்பகத்துடன் சேர்ந்து காலைச் சிற்றுண்டியைச் சாப்பிட்டு விட்டு கடிகாரம் பார்த்தால்... அது மணி ஒன்பதரையைக் காட்டும். அதன் பிறகு அன்றையச் செய்தித் தாளை வரி விடாமல் வாசிக்கத் தொடங்குவார் காசி விஸ்வநாதன். வேலையில் இருந்து ஓய்வு பெற்ற, இந்த நான்காண்டுகளில் கொஞ்சமும் மாறாமல் அவர் கடைப் பிடிக்கும் நிகழ்ச்சி நிரல் இது.
கடந்த ஒரு மாதமாக செய்தித்தாளை வாசிப்பதற்கு முன்பு மீண்டும் விநாயகர் கோயிலுக்குப் போகின்றார்.
"வண்டிகள கோயிலுக்கு முன்னாடி நிறுத்தாதிங்க.. வேற பக்கம் போய் நிப்பாட்டுங்க... ஒங்களுக்கு டுவீலர் நிறுத்தவா இந்த இடத்த சுத்தம் பண்ணி வச்சிருக்கோம்''
கோயிலுக்கு முன்புள்ள காலி இடத்தில் நிறுத்த வருகிற இருசக்கர வாகனத்தாருக்குத் தடை போடுகிறார்.
இன்றும் அப்படித்தான்... சட்டையை மாட்டியவாறு வாசற்படியில் கால் வைத்தார். அப்போது கற்பகத்தின் குரல் ஓங்கி ஒலித்தது.

 


"ஏங்க கோயிலுக்கு முன்னாடி பைக் நிறுத்துறவுங்க கிட்ட சண்ட போடத்தானே போறீங்க... ஒங்களுக்கு எதுக்கு இந்த வம்பு... நிறுத்தினா நிறுத்திட்டு போறாங்க... அதனால நமக்கு என்ன எடஞ்சல்? பிறத்தியாருக்கு ஒதவுற உபகாரமாக் கூட எடுத்துக்கிடக் கூடாதா..? அந்தக் காலத்தில ராத்திரியாகிட்டா வழிப் போக்கர் தங்கி படுத்து எந்திரிச்சுப் போக வீடுகள்ல திண்ண கட்டி வச்ச பூமிங்க... நீங்க என்னடான்னா, படிக்க வர்ற பசங்க வண்டிகள வைக்கிறதுக்கு கூச்சல் போடுறிங்க... பேசாமா உள்ளே வாங்க''
கற்பகத்தின் குரலை காசி விஸ்வநாதன் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அவர்பாட்டுக்கு தெருவில் இறங்கி கோயிலை நோக்கி நடந்தார்.
நந்தவனம் தெரு. ஐம்பது வீடுகளை உள்ளடக்கிய பழமையான தெரு. தெருவின் இடது வரிசையின் நடுப்பகுதியில் காசி விஸ்வநாதன் வீடு இருக்கிறது. தெருவின் ஆரம்பத்தில் விநாயகர் கோயில் ஒன்று உள்ளது. இந்தக் கோயில் காசி விஸ்வநாதன் குடும்பத்திற்குப் பாத்தியமானது. அவர்களின் முன்னோர்களால் கட்டப்பட்டது. கோயிலுக்கு முன்பு சதுரமான காலி இடம் இருக்கிறது. மார்கழி மாதம் மற்றும் விநாயகர் சதுர்த்தி நாட்களில் மட்டும் இங்கு பந்தல் போடப்படும். மற்றைய தினங்களில் அது வெட்டவெளியாகத்தான் காட்சி தரும்.


அந்த இடத்தை ஒட்டி தெருவின் பாதை. அதற்கு எதிர்ப் பக்கம் பெரிய வீடு. இங்கு "செல்வம் கோச்சிங் சென்டர்' என்ற பெயரில் பயிற்றுவிப்பு மையம் ஆரம்பித்திருக்கிறார்கள். ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர்கள் இதனை நடத்துகிறார்கள். சர்வீஸ் கமிசன், காவலர் தேர்வு, வங்கி வேலைக்கான பரீட்சை, நீட் தேர்வு முதலியனவற்றிற்கு இங்கு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த ஊரில் இது மாதிரி கோச்சிங் சென்டர் இது வரை இல்லை. எனவே ஏராளமான இளைஞர்கள் தங்களைத் தேர்விற்குத் தயார் படுத்திக் கொள்வதற்காக சென்டரில் சேர்ந்திருக்கிறார்கள். அவர்கள் வரும் இருசக்கர வாகனங்களை நிறுத்தும் இடமாக பிள்ளையார் கோயில் மைதானம் மாறியது. இங்கு வாகனங்கள் நிறுத்தப்படுவது காசி விஸ்வநாதனுக்குப் பிடிக்கவில்லை.
காலை பத்து மணி முதல் ஒரு மணி வரை, மீண்டும் மாலை மூன்று மணி முதல் ஆறு மணி வரை வகுப்புகள் நடத்தப்படுகின்றன. காசி விஸ்வநாதன் காலை ஒன்பதரைக்கு வந்து காலி இடத்தில் வாகனங்கள் நிறுத்தப்படுவதற்கு ஆட்சேபம் தெரிவிப்பார். அவரது ஆட்சேபணைகளை யாரும் கண்டு கொள்வதில்லை. சிறிது நேரம் வேறு இடத்தில் நிறுத்துவது மாதிரி போக்கு காட்டுவார்கள். காசி விஸ்வநாதன் போனதும், வண்டிகள் மீண்டும் அங்கேயே நிறுத்தி விட்டு கிளாசுக்கு ஓடிவிடுவார்கள். இன்றைய இளைஞர்களுக்கு இப்படிப்பட்ட யுக்திகளைச் சொல்லியா தர வேண்டும்?
இந்த விஷயம் அறிந்ததும், காசி விஸ்வநாதன் டென்சன் ஆவார்.


"எதுக்கு கோபப்பட்டு ஒடம்பக் கெடுத்துக்கிடுறீங்க... கோயில் முன்னாடி குப்ப கூளத்தக் கொட்டினா கோபப்படலாம். வண்டிய பூப்போல வச்சுட்டு எடுத்திட்டு போற பசங்கள எதுக்கு ஏசுறிங்க..?''
""நாளைக்கி வண்டி ஏதாவது திருடு போச்சுன்னா போலீஸ்காரன் நம்மயுமில்ல கேள்வி கேப்பான் ?''
"பட்டப் பகல்ல பூட்டி வைக்கிற வண்டிய யாரு திருடிட்டு போகப் போறா?''
வண்டி காணாமல் போனால் காவல் துறையினர் காசி விஸ்வநாதனை கேள்வி கேட்க முடியாது. இந்த சங்கதி அவருக்கு தெளிவாகத் தெரியும். இருந்தாலும் அர்த்தமற்ற காரணங்களைச் சொல்லி கற்பகத்தை பயமுறுத்த முயன்றார்.
"இது பொது இடம்; அல்ல. இங்கு யாரும் வாகனங்களை நிறுத்தக் கூடாது' பெரிய அறிவிப்பு பலகை ஒன்றை ஊன்றினார். பார்க்க அழகாக தோன்றியதே தவிர பலன் எதுவும் கிட்டவில்லை.
"போலீஸ்ல போய் புகார் கொடுக்க வேண்டியதுதான்'


"வயசான காலத்தில போலீஸ் ஸ்டேசனெல்லாம் போய் அலைய வேண்டாம். பேசாம அந்த சென்டர் நடத்திறவுகளப் போய்ப் பாருங்க... ஒங்க கிட்ட படிக்க வர்ற பையன்களுக்கு வண்டிகள நிறுத்த எடம் ஏற்பாடு செஞ்சு கொடுங்கன்னு சொல்லுங்க''
கற்பகம் சொன்ன யோசனை, காசி விஸ்வநாதனுக்கு அற்புதமானதாகப் பட்டது. அன்று மாலையே வகுப்புகள் முடிந்த பிறகு கோச்சிங் சென்டர் பொறுப்பாளரைப் பார்க்கப் புறப்பட்டார். கறாராகப் பேசி விநாயகர் கோயில் காலி இடத்தில் வாகனங்கள் நிறுத்துவதை தடுத்து விட வேண்டும் என்கிற உறுதியுடன் சென்றார்.
""நான் காசி விஸ்வநாதன் ரிடையர்டு கோர்ட்டு ஹெட்கிளார்க்''
""வாங்க வணக்கம்... உட்காருங்க''


"எதுத்தாப்பில இருக்கிற காலி இடம்... பிள்ளையார் கோயில் எங்க பூர்வீகச் சொத்து...''
"அப்பிடியா ? வாகனங்கள நிறுத்தக் கூடாதுன்னு வச்சிருக்கிற போர்டைப் பாத்தேன் ... படிக்க வர்ற பசங்களும் சொன்னாங்க... வண்டிகள நிறுத்தக் கூடாதுன்னு நீங்க சொல்றதா... வண்டிகள நிறுத்தக் கூடாதுன்னு சொல்றதுக்கு ஒங்களுக்கு உரிமை இருக்கு... வண்டி நிறுத்த இங்க வேற எடமும் இல்ல... அதனால ஒங்க இடத்தில வண்டிய நிறுத்துறதுக்கு சென்டர்ல இருந்தே மாதம் ஆயிரம் ருபாய் வாடகை தந்திடுறோம்... ஒரு மாத அட்வான்சும் வாங்கிக்கிடுங்க''
வார்த்தைகளை வளர்க்காமல் சொல்ல வேண்டியதை மட்டும் சுருக்கமாகச் சொல்லி பிரச்னைக்கு பெரிய முற்றுப் புள்ளி வைத்தார் சென்டர் நிர்வாகி.
சண்டை போட வந்தவருக்கு சர்க்கரை பொங்கல் கொடுத்து உபசரித்தது போன்று இருந்தது. சம்மதத்தை தெரிவித்து விட்டு, அகமும் முகமும் மலர வெற்றிக் களிப்புடன் அங்கிருந்து வெளியேறினார் காசி விஸ்வநாதன்.


""யேய் கற்பகம்.. வண்டி நிறுத்துறவுங்க கிட்ட வாக்கு வாதம் பண்றேண்ணு சொன்ன... அந்த வாக்கு வாதத்தால மாதம் ஆயிரம் ருபா கெடைக்கப் போகுது தெரியமா? ஆமா.. வண்டி நிறுத்துறதுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வாடகை தர்றதா கோச்சிங் சென்டர்ல ஒத்துக்கிட்டாங்க''
"கை நிறைய பென்சன் வாங்குறீங்க... பையனும் சென்னையில நல்ல இடத்தில வேல பாக்குறான்...அவசரச் செலவு... ஆஸ்பத்திரி செலவு வந்தா... பணம் அனுப்பி வைக்கிறான்... அப்பறமும் ஒங்களுக்கு இந்த பணத்தாச போகல... ஆயிரம் வரப் போகுதுன்னு துள்ளிக் குதிக்கிறீங்க... வண்டி எதுவும் திருடு போனா இப்ப மட்டும் போலீஸ் நம்மள கேள்வி கேக்காதா? சும்மா வண்டிகள நிறுத்த எடம் கொடுத்தா... புண்ணியமாவது கெடச்சிருக்கும். அதக் கெடுத்துப்பிட்டீங்க''
"நீ எப்பவும் அப்படித்தான்... நாஞ் செய்ற காரியங்களுக்கு நேர் எதிராத்தான் பேசுவ... சரி மணி அஞ்சாச்சு... காப்பியக் கொடு வெளில போகணும்''
சாயங்காலம் ஐந்து மணிக்கு காப்பி சாப்பிடுவார். அப்படியே காலார நடந்து ஐந்தரைக்கு நூலகத்திற்குள் நுழைவார். ஆறரை மணிக்கு நூலகம் விட்டு வெளியேறி ஆனந்தவல்லி கோயிலுக்குப் போய் சாமி கும்பிட்டு விட்டு, ஏழரை மணி வாக்கில் இல்லம் திரும்புவார். இது காசி விஸ்வநாதனின் அன்றாட மாலை நேரத்து நிகழ்வுகள் ஆகும்.


"ஆயிரம் ருபாய் வாங்கி நமக்காக எதுவும் செலவழிக்க வேணாம்... பொங்கலோ... புளியோதரையோ தயாரிச்சு.. சாயங்காலம் நம்ம பிள்ளையார் கோயில்ல நைவேத்தியம் பண்ணி வர்றவுங்களுக்கு வினியோகம் செஞ்சிடலாம்... கோயிலுக்கு முன்னாடியுள்ள இடத்தில சும்மா வண்டிகள நிறுத்த விட்டிருந்தா புண்ணியம் கெடச்சிருக்கும்... இந்த மனுசர் கெடுத்துப்பிட்டாரு... இப்ப ஒண்ணும் கெட்டுப் போகல.. நேர் ரோடு வழியா வர முடியாத புண்ணியத்த இப்படிச் செஞ்சு நாம பைபாஸ் ரோடு வழியா வரவச்சிட்டாப் போச்சு'' என்கிற ரீதியில் தனக்குத்தானே பேசிக் கொண்டாள் கற்பகம்.

http://www.dinamani.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.