Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சட்டப்படி…

Featured Replies

சட்டப்படி…

 
g-g.jpg

இக்கட்டுரை விக்னேஸ்வரன் எதிர் டெனீஸ்வரன் வழக்கைப் பற்றியது அல்ல. மணிவண்ணனுக்கு எதிரான வழக்கைப் பற்றியதும் அல்ல.

அதே சமயம் இவ்விரு வழக்குகளின் பின்னணியில் இரு தரப்பு ஆதரவாளர்களும் முகநூலில் மோதிக் கொள்வதைப் பார்க்கும் போது தமிழ் அரசியலரங்கு ஒரு வழக்காடு மன்றமாக மாறி வருகிறதா? என்று கேட்கத் தோன்றுகிறது.

இதில் உச்சக்கட்ட சுவாரசியம் எதுவெனில் சட்டத்தரணி சயந்தன் தனது முகநூல் பதிவொன்றில் டெனீஸ்வரனிடம் இலவச சட்டவகுப்பு எடுக்க விரும்பியவர்கள் வரலாம் என்ற தொனிப்பட எழுதியிருப்பதுதான்.

அதேசமயம் மணிவண்ணனுக்கு ஆதரவாக முகநூலில் யாழ் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறைத் தலைவரான குருபரன் எழுதியிருக்கிறார். அதில் அவர் அப்புக்காத்து அரசியலை விமர்சித்திருந்தார்.

அப்புக்காத்து அரசியல் அல்லது கறுப்புக்கோட்டு அரசியல் என்ற பதம் எங்கிருந்து தொடங்கியது?

ஆயுதப் போராட்டத்திற்கு முந்திய மிதவாத அரசியலைக் குறிப்பதற்கே இச்சொற்றொடர்கள் பயன்படுத்தப்பட்டன. ஆயுதப் போராட்டத்திற்கு முந்திய தமிழ் மிதவாத அரசியல் பாரம்பரியத்தில் பெரும்பாலான தலைவர்கள் சட்டத்தரணிகளாகவே காணப்பட்டார்கள். மிகச் சிலரே சட்டத்துறைக்கு வெளியில் இருந்து வந்தார்கள்.

 amir-428x244.jpg

ஏன் அப்படி சட்டத்தரணிகளே அரசியலில் அதிகம் அக்கறை காட்டினார்கள்? ஏனைய துறைசார் நிபுணர்கள் ஏன் அந்தப்பக்கம் வரவில்லை? தமிழ் அரசியலை கூடிய பட்சம் சட்டக்கண் கொண்டு பார்க்கும் அப்பாரம்பரியம் எதிலிருந்து தொடங்கியது? இது தொடர்பில் ஈழத் தமிழர்கள் மத்தியில் விரிவான ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்.

அரசியல் எனப்படுவது நாடாளுமன்றத்தில் வாதத் திறமையால் எதிர்த்தரப்பை ஜெயிப்பதுதான் என்ற ஒரு கண்ணோட்டம்தான் மேற்படி போக்கிற்கு காரணமா? வாதத் திறமை இருந்தால் அவர் தலைவராக வரலாம் என்று நம்பப்பட்டதா?

எதிரியை வெல்வதற்குரிய ஒரே களம் வாதாட்டக்களம்தான் என்று நம்பியதன் விளைவா அது? இந்தப் பாரம்பரியத்தின் ஒரு கிளையோட்டமாக இலக்கியத்திலும், பட்டிமன்றங்களும், வழக்காடு மன்றங்களும், சுழலும் சொற்போர் அரங்குகளும் திறக்கப்பட்டனவா? இப்பொழுதும் நல்லூரில் துர்க்கா மணி மண்டபத்தில் நடக்கும் வழக்காடு மன்றங்களை ரசிப்பதற்கு படித்த தமிழ் நடுத்தர வர்க்கத்தினர் தொகையாக வருவது எதைக் காட்டுகிறது?

இவ்வாறு நாடாளுமன்றத்திலும் தேர்தல் மேடைகளிலும் எதிர்த்தரப்பை தர்க்கத்தால் ஜெயிப்பது ஒரு அடிப்படைத் தகைமையாகக் கருதப்பட்டது. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் போதும் இவ்வாறான ஒரு விவாதக்களம் திறக்கப்படுவதுண்டு. ஆனால் அது ஒப்பீட்டளவில் உயர்வானது நாகரீகமானது.நாட்டின் எதிர்காலத்தை முன்வைத்து நிகழ்த்தப்படுவது.

தர்க்கத்தின் மெய்யான நோக்கம் உண்மையைக் கண்டு பிடிப்பதே. எதிரியைத் தோற்கடிப்பது அல்ல என்று ஒரு மேற்கோள் உண்டு. குறைந்தபட்சம் அவ்வாறு தர்க்கத்தால் எதிரியை வெல்ல முடிந்திருந்தால் ஆயுதப் போராட்டத்திற்கான ஒரு தேவையும் இருந்திருக்காது.

நாடாளுமன்றம் என்ற களத்தில் தமிழ் அப்புக்காத்துமார் வழக்காடி வென்றிருந்தால் பிந்திய தசாப்தங்களில் தமிழ் இளைஞர்கள் சமர்க்களங்களைத் திறக்க வேண்டி வந்திருக்காது. ஆனால் சிங்கள அப்புக்காத்துமார் தமிழ் அப்புக்காத்துக்களை விடவும் கெட்டிக்காரர்களாக இருந்தார்கள்.

சட்டங்களை எழுதும் பொழுதும், யாப்பைத் திருத்தும் பொழுதும் அல்லது யாப்பை மாற்றி எழுதும் பொழுதும் அவர்களுடைய கெட்டித்தனம் வெளிப்பட்டது. அவர்கள் எப்பொழுதும் தமது இனத்திற்கு விசுவாசமாக இருந்தார்கள். தமது கெட்டித்தனம் அனைத்தையும் தமது இனத்தின் வெற்றிக்காகவே பிரயோகித்தார்கள்.

இதுவிடயத்தில் தமக்கு விசுவாசமாக இருந்த கெட்டிக்காரர்களான தமிழ் அப்புக்காத்துமார்களையும் அவர்கள் தந்திரமாக பயன்படுத்தினார்கள். இன்றுவரை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் நாடாளுமன்றத்தில் தமிழ் அப்புக்காத்துமார்களால் தமது மக்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியாது போயிற்று.

suma-428x279.jpg

இதனால் ஏற்பட்ட விரக்தி, வெறுப்பு, என்பவற்றின் விளைவாக ஆயுதப் போராட்டம் தொடங்கியது. ஆயுதப் போராட்ட இயக்கங்கள் தங்களைச் செயல்வீரர்கள் என்று நம்பினார்கள். அதே சமயம் உரிமைகளை வென்றெடுக்கத் தவறிய அப்புக்காத்து அரசியல்வாதிகளை வாய்ச்சொல் வீரர்கள் என்று இகழ்ந்தார்கள். அதுமட்டுமல்ல செயலுக்குப் போகாமல் அரசியல் விவாதங்களில் அதிகம் ஈடுபட்டவர்களை அவர்கள் ‘கதைகாரர்கள்’ என்று இகழ்ந்தார்கள்.

களத்தில் அதிகம் தாக்குதல்களைப் புரிந்த இயக்கங்கள் மத்தியில் அரசியல் பிரிவு எனப்படுவது தாக்குதல் பிரிவை விடவும் கீழானதாகவே காணப்பட்டது.

அரசியல் பிரிவினருக்கு ‘லோலோ பிரிவு’ என்றும் ஒரு பெயர் வைக்கப்பட்டது. வாயாலே ‘லோ லோ லோ’ என்று கத்துபவர்கள் என்று அதற்குப் பெயர். புலிகள் இயக்கத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த திலீபனுக்கு ‘அப்பாப்பிள்ளை’ என்ற ஒரு செல்லப் பெயர் இருந்தது. அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் என்பதன் சுருக்கமே இது. அதாவது அரசியல் பிரிவின் வேலை எனப்படுவது அமிர்தலிங்கம் செய்ததைப் போன்ற ஒன்றுதான் என்ற பொருள் படவே அப்படி அழைக்கப்பட்டது.

இவ்வாறு சட்டத்தரணிகளின் அரசியல் எனப்படுவது வாயால் வெடி கொழுத்திப் போடும் ஒன்றுதான். என்று நம்பிய இயக்கங்கள் நிஜமாகவே வெடிகுண்டுகளைக் கொழுத்திப் போட்டன. இதனால் சட்டத்தரணிகளின் அரசியல் பின்னரங்கிற்குத் தள்ளப்பட்டது.

ஆனால் 2009 மே மாதத்தோடு ஆயுத மோதல்கள் முடிவிற்கு வந்த பின் மறுபடியும் அப்புக்காத்துமார்களின் அரசியல் மேலோங்கத் தொடங்கியது. கூட்டமைப்பானது அது உருவாகிய தடத்திலிருந்து விலகி வரத் தொடங்கி விட்டது என்ற தொனிப்பட சுமார் ஐந்தாண்டுகளுக்கு முன் நானெழுதிய கட்டுரைகளில் அப்புக்காத்து அரசியலைக் குறித்து விமர்சனங்களை வைத்திருக்கிறேன். விக்னேஸ்வரனை சம்பந்தர் அறிமுகப்படுத்திய போதும் அப்புக்காத்து அரசியலைக் குறித்து எழுதியிருக்கிறேன்.

கடந்த ஒன்பதாண்டுகளுக்கும் மேலான மிதவாத அரசியலில் ஏற்பட்டிருக்கக் கூடிய தேக்கம், தோல்வி, சறுக்கல் போன்றவற்றிற்கு அப்புக்காத்து மனோநிலையும் ஒரு காரணம்தான்.

அரசியல் எனப்படுவது சமூகத்தில் எல்லாத் துறைகளும் சங்கமிக்கும் ஓர் இடம். அது ஒரு பல்துறை ஒழுக்கம். தனிய சட்டக்கண்ணால் மட்டும் எல்லாவற்றையும் விளங்கிக் கொள்ள முடியாது. அப்படி சட்டக்கண்ணால் பார்ப்பது என்பது இலங்கைத் தீவின் அரசியல் பின்புலத்தில் தமிழ்த் தரப்பிற்கு ஆபத்தானது.

ஏனெனில் இலங்கைத்தீவின் நீதிபரிபாலனப் பாரம்பரியம் எனப்படுவதே தமக்கு எதிரானதுதான் என்று தமிழ் மக்கள் நம்புகிறார்கள். சில கெட்டிக்காரச் சட்டத்தரணிகள் தமது வாதத் திறமையால் ஒரு தொகுதி அரசியல்கைதிகளை விடுதலை செய்திருக்கிறார்கள் என்பது உண்மைதான். சில துணிச்சலான தமிழ் நீதிபதிகள் விதிவிலக்காண தீர்ப்புக்களை வழங்கியிருக்கிறார்கள் என்பதும் உண்மைதான்.ஆனால் ஒட்டு மொத்தத் தமிழ் மக்களை விடுதலை செய்வதற்கு அந்த சட்ட நுணுக்கங்கள் மட்டும் போதாது.

குறிப்பாக பயங்கரவாதத் தடைச்சட்டத்தைத் தன்னுள் கொண்டிருக்கும் ஒரு நீதிபரிபாலனக் கட்டமைப்புக்குள் நின்றுகொண்டு ஒரு இனம் என்ற அடிப்படையில் தமிழ் மக்களை விடுதலை செய்ய முடியாது. பயங்கரவாதத் தடைச்சட்டமானது தமிழ் மக்களின் அரசியலைப் பயங்கரவாதமாக முத்திரை குத்தத் தேவையான ஏற்பாடுகளைக் கொண்டிருக்கிறது.

இவ்வாறானதோர் பின்னணிக்குள் தனிய சட்டப்பரப்பிற்குள் நின்றுகொண்டு மட்டும் தமிழ் மக்களை அரசியல் ரீதியாக விடுதலை செய்ய முடியாது. இனப் பிரச்சினை எனப்படுவது சாராம்சத்தில் ஒரு சட்டப்பிரச்சினையல்ல. அது ஒர் அரசியல் பிரச்சினை. தமிழ் மக்களின் போராட்டத்தைப் பயங்கரவாதமாகப் பார்ப்பது என்பது ஓர் அரசியல் தீர்மானம்தான்.

விக்னேஸ்வரனுக்கும் அவருக்கு எதிரான அணிக்கும் இடையிலான மோதல் எனப்படுவது ஒரு சட்டப்பிரச்சினையல்ல. அது இரு வேறு அரசியல் செய்முறைகளுக்கிடையிலான மோதல். அதை ஒரு சட்ட விவகாரமாக குறுக்க முடியாது.

ஆனால் விக்னேஸ்வரன் மாகாணசபையை ஒரு நீதிமன்றமாக மாற்றினார். அதன் தர்க்கபூர்வ விளைவாக அவர் தனக்குப் பாதகமான ஓர் ஆடுகளத்திற்கு இழுத்துக் கொண்டு வரப்பட்டிருக்கிறார். இப்பொழுது தவராசாவிற்கும், டெனீஸ்வரனுக்கும் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார்.

அவருக்கு ஆதரவான மாகாணசபை உறுப்பினர்களின் மீது முன்வைக்கப்படும் எல்லாக் குற்றச்சாட்டுக்களின் பின்னணியிலும் அரசியல்தான் உண்டு. அவை சட்ட ரீதியிலான குற்றச்சாட்டுக்களாகத் தோன்றலாம். ஆனால் அக்குற்றச்சாட்டுக்களின் இறுதி இலக்கு எனப்படுவது விக்னேஸ்வரன் முன்னெடுக்கும் எதிர்ப்பு அரசியலை முறியடிப்பதுதான். ஆனால் வெளித்தோற்றத்திற்கு அது ஒரு சட்ட விவகாரமாகக் காட்டப்படுகிறது.

ஆனால் விக்னேஸ்வரனுக்கு வந்திருக்கும் பிரச்சினைகளோ அல்லது அரசியல் கைதிகளின் விவகாரமோ அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரமோ அல்லது காணிப்பிரச்சினையோ தனிய சட்டப்பிரச்சினைகள் அல்ல. அவற்றுக்கு சட்டத்தீர்வு மட்டும் காணவும் முடியாது. மாறாக அரசியல் தீர்வே காணப்பட வேண்டும் – காணப்படும் அரசியல் தீர்வானது பின்னர் சட்டமாக்கப்பட வேண்டும்.

மாகாண சபைக்குள்ள அதிகாரங்களும் தனிய சட்டப்பிரச்சினைகள் மட்டுமல்ல. அவற்றிற்கு சட்டத்தீர்வை மட்டும் கண்டுவிட முடியாது. வடக்கு கிழக்கு இணைந்த மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சராகவிருந்த வரதராஜப்பெருமாள் இது தொடர்பில் ஒரு விடயத்தை அடிக்கடி கூறி வருகிறார்.

மாகாண சபையானது சட்டவாக்க வலுவுடைய ஒரு சபையாகும். இந்திய மாநிலங்களுக்கு உள்ள அதிகாரங்களைப் போல மாகாணசபைகளுக்கும் அதிகாரங்கள் உண்டு. ஆனால் அவற்றை ஆட்சி நடைமுறைக்கூடாகவே ஓர் அரசியல் யதார்த்தமாக மாற்ற வேண்டி இருக்கிறது. இது தொடர்பில் இயற்றப்பட வேண்டிய நியதிச்சட்டங்களை இயற்றி தேவைப்பட்டால் நீதிமன்றத்தின் உதவியைப் பெற்று மாகாணசபைக்குள்ள அதிகாரங்களை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற தொனிப்பட அவர் கருத்துத் தெரிவிப்பது உண்டு.

இது தொடர்பாக ஒரு மூத்த சிவில் அதிகாரி சொன்னார் “வரதராஜப்பெருமாள் கூறுவது போல வடமாகாணசபை நியதிச்சட்டங்களை இயற்றி மத்திய அரசாங்கத்தோடு மோதலாம். இது விடயத்தில் நீதிமன்றத்திற்குப் போய் ஒன்றில் இலங்கை அரசாங்கத்தை அம்பலப்படுத்தலாம். அல்லது நீதி பரிபாலனக் கட்டமைப்பை அம்பலப்படுத்தலாம்” என்று. ஆனால் இதிலுள்ள நடைமுறைக் கேள்வி என்னவெனில் நீதி பரிபாலனக் கட்டமைப்பை யாருக்காக அம்பலப்படுத்த வேண்டும்? என்பதுதான். அனைத்துலக சமூகத்தின் கவனத்திற்குள் கொண்டு வருவதற்குத்தானே.

ஆனால் இவையெல்லாம் அனைத்துலக சமூகத்திற்;கு ஏற்கெனவே தெரியாதா? சில மாதங்களுக்கு முன்பு கொழும்பிற்கு வந்து போன ஐ.நாவிக் சிறப்புத் தூதுவரான பென் எமேர்சன் இலங்கைத் தீவின் நீதிபரிபாலனக் கட்டமைப்பைக் குறித்து தனது அறிக்கையில் என்ன கூறியிருக்கிறார்? ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் அறிக்கைகளிலும் அதையொத்த கருத்துக்கள் உண்டு.

எனவே அனைத்துலக சமூகத்திற்கு இலங்கைத்தீவின் நீதிபரிபாலனக் கட்டமைப்பைப் பற்றித் தெரியும். ஈழத் தமிழர்கள் நீதிமன்றத்திற்குப் போய் வழக்காடித்தான் அதை நிரூபிக்க வேண்டும் என்றில்லை.

ஆனால் இங்கு பிரச்சினை என்னவெற்றால் எல்லா உண்மைகளையும் விளங்கிக் கொண்ட பின்னரும். ஐ.நாவும் மேற்கு நாடுகளும் ரணில் – மைத்திரி அரசாங்கத்தை நெருக்கடிக்கு உள்ளாக்க மாட்டார்கள் என்பதுதான். அவர்கள் இதை ஒரு சட்டப்பிரச்சினையாகப் பார்க்க மாட்டார்கள். மாறாக பிராந்திய மற்றும் பூகோள நலன்களுக்கூடாகவே பார்ப்பார்கள்.

இதுதான் நடப்பு நிலமை. ஒரு விவகாரத்தை சட்டப்பிரச்சினையாகப் பார்ப்பதா? அல்லது அரசியலாகப் பார்ப்பதா என்பது அவரவர் நலன்சார் நோக்கு நிலைகளிலிருந்தே தீர்மானிக்கப்படுகிறது.

தமிழ் பேச்சு வழக்கில் அண்மைய காலமாக ஒரு பொருளின் பண்பைக் குறிப்பதற்காக பண்படுத்தப் படும் ஒரு சொற்தொடர் ‘சட்டப்படி’ என்பதாகும்.

குறிப்பிட்ட பொருள் செம்மையாக சிறப்பாக அம்சமாக இருக்கிறது என்பதை அது குறிக்கும். ஆனால் இனப்பிரச்சினையைப் பொறுத்தவரை சட்டப்படி என்பதற்கு அதுவா பொருள்?

இது தொடர்பில் ஓர் ஆங்கில மேற்கோளை இங்கு காட்டலாம். அது கறுப்பினப் போராளியாகிய மல்க்கம் எக்ஸ் கூறியது என்று ஒரு ஞாபகம். “யூதர்களுக்கு எதிரான இனப்படுகொலை சட்டப்படியே மேற்கொள்ளப்பட்டது. அடிமை வாணிபம் சட்டப்படியே மேற்கொள்ளப்பட்டது. கொலனி ஆதிக்கம் சட்டப்படியே மேற்கொள்ளப்பட்டது. சட்டவலிதுடமை(சட்டப்படி) எனப்படுவது நீதியின் பாற்பட்ட ஒரு விவகாரம் அல்ல. அது அதிகாரத்தின் பாற்பட்ட ஒரு விவகாரம்”.


 நிலாந்தன்

http://athavannews.com/category/weekly/அரசியல்-கட்டுரைகள்/

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.