Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜசுந்தரராஜனின் 'நாடோடித்தடம்'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராஜசுந்தரராஜனின் 'நாடோடித்தடம்'

இளங்கோ-டிசே

டந்த நான்கு நாட்களாக ராஜசுந்தரராஜனின் 'நாடோடித்தடத்தை' வாசித்துக்கொண்டிருந்தேன். இவ்வாசிப்பிற்கிடையில் வேறு ஒரு படைப்பை வாசித்து தலையில் முட்டி, எதையாவது அதுகுறித்து எழுதித்தொலைத்துவிடுவேனோ என்ற பதற்றத்தை விலத்தி, தன் தடத்தில் சுவாரசியமாகத் தொடர்ந்து கொண்டு சென்றதற்கு ராஜசுந்தரராஜனுக்கு முதலில் நன்றி சொல்லவேண்டும்.

நமது முன்னோடிகளிடம், ஒரு நல்ல படைப்பை எப்படி எழுதுவது என்பது கற்றுக்கொள்வதற்கு மட்டுமின்றி, ஒரு மோசமான படைப்பை எவ்வாறு எழுதாமல் தவிர்ப்பது என்பதற்கும் அவர்களிடமே செல்லவேண்டியிருக்கின்றது. அவ்வாறு சமகாலத்தில் எழுதுபவர்களுக்கு பரவலாக வாசிக்கும் ஒரு அரியபழக்கம் இருக்குமாயின்,, எத்தனையோ ஆக்கங்களை வாசித்து நாமும் மன அழுத்ததிற்குள் போகாது தப்பியிருக்கலாம் தப்பியிருந்திருக்கலாம்.
 

11.jpg

இந்தத் தொகுப்பிலிருக்கும் 21 ஆக்கங்களிலும் எடுத்துக்கொள்ளும் விடயங்கள் -முக்கியமாய் தமிழ்ச்சூழலில்- சிக்கலானதும், அதேசமயம் எளிதில் உணர்ச்சிவசப்பட்டு தமக்கான தீர்ப்புக்களைச் சொல்லக்கூடியதுமான விடயங்கள்தான்.  எனினும், எவ்வளவு நளினமாகவும், தன்னையொரு புனிதமானவனாகவும் இதில் இட்டுக்கட்டாததுமாதிரி, மற்றவர்களையும் எந்த ஒருபொழுதிலும் இழித்துக்காட்டாததுமாக ராஜசுந்தரராஜன் எழுதியிருப்பது குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது. சார்ள்ஸ் ப்யூகோவ்ஸ்கியின் 'பெண்கள்' (Women) நாவலை வாசிக்கும்போது ஏற்பட்ட உணர்வைப் போன்றே நாடோடித்தடத்திலும் பெண்களே எல்லாப் பதிவுகளிலும் (சிலவேளைகளில் போதும் போதுமென்ற அளவுக்கும்) வருகின்றனர். ப்யூகோவ்ஸ்கி,  தனது alter  egoவாய்,  ஒரு ஹென்றி சின்னாஸ்கியை உருவாக்கியதைப் போல எல்லாம் கஷ்டப்படாது, ராஜசுந்தரராஜன்  நான் என்கின்ற தன்னிலையாலே எல்லாக் கதைகளையும் எவ்வித ஒளித்தல் மறைத்தலின்றிச் சொல்லிப்போகின்றார்.

ராஜசுந்தரராஜனின் 'நான்', தான் காதலித்த பெண்களிலிருந்து, தேடித்தேடிப்போன பாலியல் தொழிலாளர்களை வரை எவ்வித ஏற்றந்தாழ்வுகளின்றி  அப்படியே காட்சிப்படுத்துகின்றனர். இவையெல்லாம் ராஜசுந்தரராஜனின் வேலை நிமித்தம் ஏற்படுகின்ற இடமாற்றங்களால் அன்றி, அவருக்குள்ளே இருக்கும் ஒரு விட்டேந்தியான  ஒரு நாடோடியினாலே சாத்தியமாகியிருக்கின்றது என்பதை வாசிக்கும் எவரும் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

தேசாந்திரிகளாகவும், இந்திய மரபை அறிந்துகொள்வதற்காகவும் பயணப்பட்டோம் என்று சொல்லி தமிழில் எழுதப்பட்டவற்றை வாசித்தவர்க்கு, இந்த நாடோடித்தனம் ஒருவகையில் அதிர்ச்சியையே கொடுக்கும். இது இந்தியாவில் என்றில்லை, எந்த ஒரு நாட்டின் மக்களோடும் அவர்களின் கலாசாரத்திற்குள் 'அந்நியராக' இல்லாது ஒன்றாகக் கலக்கத்துடிக்கும் எந்த மானிடர்க்கும் வாய்க்கக்கூடியதே.

அண்மையில் ஒருவர் இங்கிலாந்திற்கு 'பப்'ற்குள் போக எனக்கு விருப்பமில்லை என்று தன் பயண அனுபவங்களில் எழுதியதை வாசித்தபோது, இவர்கள் ஏற்கனவே தீர்மானித்துவிட்ட தம் பயணங்களைச் செய்கின்றார்களே தவிர ஒரு உண்மையான பயணத்திற்குள் ஒருபோதும் உள்நுழைந்துவிடமுடியாது என்றே நினைத்தேன். ஒரு சமூகத்தின் கலாசாரத்தின்/பண்பாட்டுப்பின்புலத்திற்கு நம்மை நெருக்கமாக்கவேண்டுமென்றால் அந்தச் சமூகத்தில் கப் 'காபி' குடிப்பது ஒரு பண்பாடாக இருந்தால் என்ன, கஞ்சா அடிப்பது கூட அவர்களின் பண்பாடு என்றால் அதற்குள் நுழையாமல்விடின் நீங்கள் ஒரு கலாசாரத்தின் சிறுதுளியையும் தீண்டமுடியாது. ஆனால் நம் பலரின் பயணங்கள் அவ்வாறிருப்பதில்லை என்பதுதான் துயரமானது.


நாடோடித்தடத்தில் பெண்களைப் பற்றி இல்லாத எந்தப் பதிவும் இல்லையெனவே சொல்லலாம்,  இருப்பினும், ராஜசுந்தரராஜன் அதற்கூடாக அவரது பயணங்கள் நடக்கும் நிலப்பரப்பு,  அம் மக்களின் வாழ்க்கைமுறை, மொழிகளின் சிக்கல்கள் போன்றவற்றின் குறுக்குவெட்டுமுகங்களை நமக்கு  முன்வைக்கின்றார் (வெவ்வேறு புதிய மொழிகளை எப்படிக் கற்றார் என ஒரு பதிவில் சொல்லும் இடம் மிகுந்த சுவையானது, அவ்வாறே அவர் ஜோதிடம் கற்கும் இடமும்). மேலும் தனது 'நானுக்குள்' அவ்வப்போது அவிழ்ந்துவிடும் தரிசனங்களையும் அதன் பின்னணியோடு முன்வைக்கின்றார். மீனா (என்று உளவியல் சிக்கலுள்ள பெண்), அவருக்கு முன் ஆடைகளை அவிழ்த்து தன்னைக் கொடுக்க முனைவதும், பிறகு அந்தப் பெண் இறந்தபின், ஒரு வேட்டைக்களத்தில் பலநூறு மின்மினிப்பூச்சிகள் பறக்கும்போது அந்த மீனாவின் தரிசனம் கிடைப்பதும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒன்று. 
 

22.jpg

அதைவிடச் சுவாரசியமாக அவர் எத்தனையோ வருடங்களின் முன் சந்தித்த பல மனிதர்களைத் திருப்பிச் சந்திக்கின்றார். இடைப்பட்ட காலங்களில் நமக்குத் தெரியாத அவர்களின் வாழ்க்கை நமக்குக் கிறுக்கியகோடுகளாக தெளிவும்/தெளிவுமின்றித் தெரிகின்றன. அதேவேளை மனிதர்களை அரிதாகவே மீண்டும் நம் வாழ்வில் சந்திப்போம், அப்படி அவர்களை மீண்டும் ஏதோ ஒரு வட்டத்தில் வைத்து சந்திக்கின்றோம் என்றால் அவர்களோடு நமக்கு கடந்தகாலத்திலோ, எதிர்காலத்திலோ (சிலவேளைகளில் பிறப்புக்கு முன்/பின் கூட) ஏதோ ஒருவகையில் தொடர்புஇருக்கலாம். ஆகவே அவர்களுக்கு கவனம் கொடுங்கள், அவர்களை மதிக்கக் கற்றுக்கொடுங்கள் என (ஒரு மேடையில்) உரையாற்றுகிறார். இவ்வாறு இரண்டையும் இணைத்துப் பார்த்தல் சுவாரசியமான முடிச்சு.

இந்த நாடோடித்தடத்தில் வரும் தன்னிலையின் வாழ்வு அவ்வளவு எளிதில் புரிந்துகொள்ள முடியாதது. திருமணம் வேண்டாம் என்கின்ற நினைப்போடு பரத்தைகளோடு தனது காமத்தைப் பகிர்ந்துகொள்ளும் இந்த 'நான்' என்கின்ற தன்னிலை, இறுதியில் தனது அக்கா மகளையே மணஞ்செய்கின்றது. தொழிலின் நிமித்தம் நகரங்கள் எங்கும் அலையும்போது, அந்தப் பெண்ணுக்கு வேறொரு ஆணோடு தொடர்பு(?) ஏற்பட்டுக் குழந்தையும் பிறக்கின்றது. அந்தத் துயர் - ஏன் இப்படி எனக்கு ஏற்பட்டது என்பதைத் தேடுவதற்கான தன்னையே கிடத்தி ஒரு மரணப்பரிசோதனை செய்கின்றமாதிரியான ஒரு தொகுப்பாகவே இதைக் கொள்ளலாம்.

இத்தொகுப்பில் குறிப்பிட வேண்டிய இன்னொன்று, பொறியியல் விடயங்கள் அழகாக விபரிக்கப்பட்டுள்ளதோடு, பொறியியல் சொற்களுக்கு உரித்தான தமிழ்ச்சொற்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதேபோன்று திருக்குறள்/சங்கப்பாடல்கள்/நவீன கவிதைகள்/மேற்கத்தைய இலக்கியங்களில் இருந்து, பொருத்தமான பகுதிகள் பாவிக்கப்பட்டிருப்பதை வாசகராக எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்திருந்தது. ஏதோ ஒரு நேர்காணலில் பேட்டி கேட்பவரை சிவசங்கரி seagullற்கு தமிழில் சொல் இருக்கிறதா எனச் சற்றுத்திமிருடன் கேட்பதைப் பார்க்கும்போது, ஒரு தமிழ்நாட்டுக்கரையில் சிறுவன் ஒருவன் அதே பறவையைச் சுட்டிக்காட்டி 'கடல்புள்ளு' என்று சொன்னதை  ஓரிடத்தில் நினைவுகூர்கிறார்.

அதேமாதிரி ஒரு கவிஞர் நுங்கம்பாக்கம் வந்து பூனைமாதிரி நெடுக்கும் குறுக்குமாய் நடக்கும்போது, அதைக்கண்டு பஸ்ஸிலிருந்து இறங்கும் இந்த 'நான்', விடயத்தை அறிந்தபின், இந்தப்பக்கம் இல்லை மற்றப்பக்கம் பூக்கடைப் பக்கம் நின்றால் நீங்கள் தேடியது கிடைக்கும் என்று  கூறுவது நமது இலக்கியமும்/இலக்கியவாதிகளும் அதேதான், புனிதப்படுத்தல்கள் எல்லாம் போலித்தனமானது  என்பது நமக்குப் புரியும்.


வ்வாறாகப் பற்றியெரியும் பாலியல் வேட்கையை அவ்வளவு எளிதில் தமிழில் எழுதிவிடமுடியாது. வேண்டுமெனில் கலைத்துவம் இல்லாது, எங்களை மன அழுத்ததிற்குள்ளாகும் 'ஆபாசமாக' (நிர்வாணத்தை இங்கே குறிப்பிடவில்லை) எழுதுவதற்கு பலர் இருக்கின்றார்கள். ஆனால் பெண் உடல் மீதான பித்தைக் கைவிடமுடியாதும், அதேவேளை அந்தப்பெண்களை எங்கேயும் கீழிறக்கிவிடாதும் எழுதுதல் எல்லோர்க்கும் வாய்க்காது. கயிற்றைக் கட்டிவிட்டு அதன்மேல் நடந்துபார்க்கும் வித்தைதான் இது. தனது மனைவிதான், ஆனால் அதே மனைவிக்கு இன்னொருவருக்குப் பிறந்த ஒரு குழந்தைக்கு, பிறகு ஒரு 'ஆயனாக' மாறுவதென்பது எல்லோராலும் முடிவதன்று.

ஒருவகையில் பார்த்தால் நாடோடித்தடங்கள்  பலதிசைகளிலும் அலைவுற்றாலும், 'கடவுச்சொல்'லில் ராஜசுந்தரராஜன் கூறும் 'என் காதலி இன்னொருவனுக்கு மனைவியாகிப் போனாள் என்பதைக் காட்டிலும், என் மனைவி இன்னொருவனுக்கு காதலியாகிப் போனாள் என்பதில் மிகுந்த துயரம் எங்கிருந்து வருகிறது' என்பதையே, இந்தத் தொகுப்பின் ஒவ்வொரு ஆக்கங்களும் தம்மளவில் பதில்களைத் தேடுகின்ற நுண்ணிழைகளைக் கொண்டிருப்பதை நாம் புரிந்துகொள்ள முடியும்.

தமிழ்ச் சூழலில் ஒருபக்கத்தில் பயணங்களைப் பற்றிச் சொல்லிக்கொண்டு,  மறுபுறத்தில் சிக்கலான ஒரு மனிதனின் இருப்பை இந்தளவுக்கு ஆழமாகப் பார்க்கத் துணிந்த இன்னொரு தொகுப்பை அவ்வளவு எளிதில் உதாரணமாகச் சொல்லமுடியாது என்பதே 'நாடோடித்தடத்தின்'  சிறப்பாகும்.

(செப் 04, 2018)

 

 

http://djthamilan.blogspot.com/2018/10/blog-post.html?m=1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.