Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீங்கான முன்மாதிரியை வகுக்க ஜனாதிபதி சிறிசேனவுக்கு ஊக்கமளிக்கக்கூடாது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தீங்கான முன்மாதிரியை வகுக்க ஜனாதிபதி சிறிசேனவுக்கு ஊக்கமளிக்கக்கூடாது

 

 கலாநிதி ஜெகான் பெரேரா

அரசியலமைப்பை அடிப்படையாகக் கொண்ட ஜனநாயகமொன்றில் அரசியலமைப்பு என்பது மீஉயர் சட்டமாகும். அதில் ஆட்சிமுறை என்பது எவரினதும் தனிப்பட்ட எண்ணங்களினதோ அல்லது விருப்பு வெறுப்புக்களின் அடிப்படையில் அமையமுடியாது. 

2015_May_Day_Rallies_in_Colombo__20_.jpg

அரசியலமைப்பின் நோக்கம் அரசாங்கத்துக்கு உறுதிப்பாட்டையும் செயல் இலக்கையும் கொடுப்பதற்காக தனியாளுக்குரிய புலத்திற்கு வெளியே அரசியல் தீர்மானம் மேற்கொள்ளும் செயன்முறைகளை வைத்துக்கொள்வதாகும்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு வேறு தெரிவு இல்லை எனக்கூறிக்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் அவரது அரசாங்கத்தையும் பதவி நீக்கிவிட்டு தன்னிச்சையாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை புதிய பிரதமராக நியமித்ததை அடுத்து நாடு அரசியலமைப்பு மற்றும் அரசியல் நெருக்கடிக்குள் தள்ளப்பட்ட அக்டோபர் 26 கறுப்பு வெள்ளிக்கிழமைக்குப் பிறகு இப்போது ஒரு மாதம் கடந்துவிட்டது.

விக்கிரமசிங்கவை எந்தச் சூழ்நிலையின் கீழும் மீண்டும் பிரதமராக நியமனம் செய்யப்போவதில்லை என்று சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி சிறிசேன சர்வதேச மற்றும் உள்நாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். பிரதமர் பதவிக்கு தான் நியமிக்க விரும்பாதவர்களின் பட்டியலில் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவையும் கூட ஜனாதிபதி சேர்த்திருக்கிறார்.அரசியலமைப்பினால் தனக்கு வழங்கப்பட்டிருக்கும் பாத்திரத்தைப் பற்றிய அவரின் விளக்கப்பாடு மிகவும் தனிப்பட்ட ரீதியான ஒன்றாக இருக்கிறது.அதாவது ஜனாதிபதி என்றவகையிலான தனது அந்தஸ்து அரசியலமைப்பின் ஏற்பாட்டின் பின்புலத்தில் தனக்கு தனிப்பட்ட உரிமைகளைத் தருகிறது என்றும் அதில் தனது தனிப்பட்ட முற்சாய்வு அபிப்பிராயங்கள் முதலிடம் பெறமுடியும் என்றும் அவர் கருதுவதாகவே தோன்றுகிறது.விக்கிரமசிங்கவை பதவி நீக்கியதற்கு பெருவாரியான காரணங்களை ஜனாதிபதி அந்த விதிவசமான அக்டோபர் 26 க்கு பின்னரான நாட்களில் ஜனாதிபதி எடுத்துக்கூறியிருக்கிறார்.ஊழல், தன்னைக் கொலைசெய்வதற்கு மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சதிமுயற்சி, தகவல்களை தன்னுடன் விக்கிரமசிங்க பகிர்ந்துகொள்ளாதமை என்பனவும் அவற்றில் அடங்கும்.

       ஜனாதிபதி சிறிசேன தனது விரக்தியையும் நோக்கங்களையும் ஊடகங்களுக்கு வெளிப்படுத்திக்கொண்டிருந்த வேளையில் நான் அவரின் சொந்த மாவட்டத்துக்கு அடுத்ததான அநுராதபுரத்தில் இருந்தேன். அங்கு நான் தங்கியிருந்த ஹோட்டலின் ஊழியர்களுடன் உரையாடியபோது ஜனாதிபதியின் சர்ச்சைக்குரிய கூற்றுக்களின் பின்னணியில் உள்ள அரசியலமைப்புப் பிரச்சினைகளைப் பற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பதைப் புரிந்துகொண்டேன். அவர்கள் வேறு ஒரு காரணத்தினால் நம்பிக்கை இழந்தவர்களாகக் காணப்பட்டார்கள்.இன்னொரு சுற்றுலாப் பயணிகள் குழு அதுவும் 40 பேரைக்கொண்ட வெளிநாட்டவர்கள் குழு தங்களது வருகையை ரத்துச் செய்திருப்பதாக ஹோட்டலுக்கு அப்போதுதான் அறிவிக்கப்பட்டிருந்தது. தங்களுக்குள் மோதிக்கொண்டிருக்கும் அரசியல் தலைவர்கள் இதை விளங்கிக்கொள்ளப்போவதில்லை. சுற்றுலாப் பயணிகளின் பதிவுகள் இரத்துச் செய்யப்படுவதால் இந்த வருட இறுதியில் ஹோட்டல் முகாமைத்துவம் தங்களுக்கு போனஸைத் தரும் சாத்தியப்பாடு குறையக்கூடும் என்றும் அதனால் தங்கள் குடும்பத்தவர்களை மகிழ்ச்சிப்படுத்த முடியாமல்போகக்கூடும் என்றும் அந்த ஊழியர்கள் கவலைப்படுகிறார்கள்.

இந்த ஊழியர்களை விடவும் அவர்களின் முகாமையாளர் தங்களது வருவாயைப் பாதித்திருக்கின்ற தற்போதைய அரசியல் நெருக்கடி குறித்து தனது கருத்துக்களை வெளிப்படுத்த முன்வந்தார்.பாராளுமன்றத்தில் உள்ள அரசியல்வாதிகள் ஒரு ஓநாய்க்கூட்டத்தை விடவும் ஒன்றும் வேறுபட்டவர்கள் இல்லை என்பது அவரது அபிப்பிராயமாக இருந்தது.அதைச் சொன்ன அவர் ஓநாய்களுக்குள்ளும் சில ஓநாய்களை விரும்புபவராகக் காணப்பட்டார்.தற்போதைய நிலைவரம் குறித்தும் அரசியல் நெருக்கடி குறித்தும் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று அவரிடம் கேட்டேன்.அதற்கு பதிலளித்த அவர் பிரதமர் பதவியில் இருந்து விக்கிரமசிங்க நீக்கப்பட்டதையிட்டு மக்கள் சந்தோசப்படுகிறார்கள் என்றும் அவரின் இடத்துக்கு முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ச நியமிக்கப்பட்டதையடுத்து மக்கள் திருப்தியடைந்திருக்கிறார்கள் என்றும் சொன்னார்.

படுபாதாளமான படிப்பு வாசனை

பிரதமர் விக்கிரமசிங்க பதவிநீக்கப்பட்டு அவரின் இடத்துக்கு முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ச நியமிக்கப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருக்கும் சட்ட மற்றும் அரசியலமைப்புப் பிரச்சினைகளைப் பற்றி அந்த ஹோட்டலின் ஊழியர்களும் முகாமையாளரும் தெரிந்திருக்வில்லை.இரு அரசியல் அணிகளுக்கிடையில் அதுவும் குறிப்பாக அந்த அணிகளின் இரு தலைவர்களுக்கிடையில் அதிகாரத்துக்காக நடைபெறுகின்ற சண்டை என்பதாகவே இன்றைய அரசியல் நெருக்கடியை அவர்கள் பார்த்தார்கள். அதற்கு முதல் நாள் ஒரு மதத்தலைவர் என்னிடம் " 45 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை மாத்திரம் வைத்துக்கொண்டு விக்கிரமசிங்க தன்னை மீண்டும் பிரதமர் பதவியில் அமர்த்தவேண்டும் என்று ஏன் நினைக்கிறார்" என்று கேட்டார்.நாட்டில் பரவலாக இருக்கின்ற படுபாதாளமான அரசியல் படிப்பு வாசனையை இது வெளிக்காட்டுகிறது.

இத்ததைய ஒரு பின்னணியிலேயே முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ச பொதுத்தேர்தலை விரைவில் சாத்தியமானளவு நடத்துவதற்கு மக்களின் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சிகளை ஆரம்பித்திருக்கிறார்.அவரது பிரசாரத்தில் ஒரு அர்த்தம் இருக்கவே செய்கிறது.பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தனது அரசாங்கம் தோல்வியைச் சந்தித்ததை அவர் ஏற்றுக்கொள்கிறார் என்பதே அது.பணமாகவும் பதவியாகவும் பல சலுகைகளைத் தருவதாக ஆசைகாட்டியும் கூட முன்னாள் ஜனாதிபதியாலும் அவரது நேச அணிகளினாலும் பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள இயலாமல் போய்விட்டது.இந்த காரணத்தினால்தான் அரசாங்கத்தில் முட்டுக்கட்டை நிலை ஏற்பட்டிருக்கிறது.

வாக்காளர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி நேரடியாக விடுக்கும் வேண்டுகோள் ஜனாதிபதி சிறிசேனவினால் தனக்கு வழங்கப்பட்ட பிரதமர் பதவியை கைவிடும் எண்ணம் இப்போது அவருக்கு இல்லை என்பதன் அறிகுறியாகும்.பிரதமர் பதவி பாராளுமன்றத்தின் நம்பிக்கையைப் பெறக்கூடிய வாய்ப்பைப் பெருமளவுக்குக் கொண்டவருக்கு அல்லது பாராளுமன்றத்தில் தனியாகக் கூடுதல் ஆசனத்தைக்கொண்ட கட்சியின் தலைவருக்கு கொடுக்கப்படவேண்டும் என்ற ஜனநாய நியமத்துக்கு முரணாக ஜனாதிபதியினால் தன்னிச்சையாகவே ராஜபக்சவுக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டது.கூட்டரசாங்கம் கலைக்கப்பட்ட நேரத்தில் பிரதமர் விக்கிரமசிங்கவின் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியே பாராளுமன்றத்தில் கூடுதல் ஆசனங்களைக்கொண்ட தனிக்கட்சியாக விளங்கியது. 

பாராளுமன்ற ஜனநாயக நியமங்களைப் பின்பற்றி, சபையில் பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கையைப்பெறும்  வாய்ப்பைப் பெரும்பாலும் கொண்டிருக்கக்கூடியவரை பிரதமராக நியமிக்கும் நோக்கத்தை ஜனாதிபதி சிறிசேன இதுவரையில் காண்பிக்கவில்லை.இற்த விடயத்தில் விடுக்கப்பட்டுவருகின்ற அரசியல் வேண்டுகோள்களுக்கு விட்டுக்கொடுக்கக்கூடிய ஒருவராகவும் அவர் தன்னைக் காண்பிப்பதாக இல்லை. தன்னால் அடாத்தாக நியமிக்கப்பட்ட பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது இரு தடவைகள் நடத்தப்பட்ட வாக்கெடுப்புகளை ஜனாதிபதி அலட்சியம்செய்திருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது.அரசியல் மற்றும் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களும் பொதுமக்களுமாக ஆயிரக்கணக்கில் அணிதிரண்டு நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணிகளையோ அல்லது சர்வதேச சமூகத்தின் நெருக்குதல்களையோ அவர் கணக்கில் எடுக்கவில்லை.

நீதித்துறையின்  இரட்சிப்பு

மறுபுறத்திலே, ஜனாதிபதி சிறிசேன மதிப்பளிப்பதற்குத் தயாராயிருப்பதாக தோன்றுகின்ற நிறுவனம் என்றால் அது நீதித்துறையே. அவர் தனது பதவிக்காலத்தை ஒரு வருடத்தினால் நீடிக்க விரும்பியபோது உச்சநீதிமன்றத்தின் ஆலோசனை அபிப்பிராயத்தை நாடினார்.அரசியலமைப்புக்கான 19 வது திருத்தத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் பதவிக்காலம் 6 வருடங்கள் அல்ல, ஐந்து வருடங்களே என்று கூறிய நீதிபதிகள் குறித்து அவர் குறைகூறவில்லை அல்லது அவர்களைப் பதவி நீக்கவில்லை.பிரதயமரைப் பதவி நீக்கிய பிறகு ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைக்கத் தீர்மானத்தபோது உச்சநீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத்தடையை அவர் எதிர்க்கவில்லை.அது குறித்துக் குறைகூறவில்லை. நிறைவேற்று அதிகாரத்துக்கும் பாராளுமன்றத்துக்கும் இடையேயான மோதலில் மத்தியஸ்தராக வெளிக்கிளம்பியிருக்கும் நீதித்துறையை மதிப்பதற்கு அவர் கொண்டிருக்கும் விருப்பார்வம் வரவேற்கப்படவேண்டியதாகும்.

அரசியலமைப்புக்கான 19 வது திருத்தம் வரையப்பட்டபோது அதைப்பாராளுமன்றத்தில நிறைவேற்றுவதற்கு தலைமைத்துவத்தைக் கொடுத்தவர் ஜனாதிபதி சிறிசேனவே.அதன்துடன் அத்திருத்தத்தின் மூலமாக ஜனாதிபதியின் அதிகாரங்கள் கட்டுப்படுத்தப்பட்டதற்கான பெருமைக்கு பெரிதும்  உரிமையையும் அவரே கொண்டாடினார் என்பதும் கவனிக்கத்தக்கது. இந்த மேன்மையான சட்டம் 2015 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தில் ஒரேயொரு உறுப்பினரைத் தவிர ஏனைய சகலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.ஆனால், ஜனாதிபதிக்கும் அரசியல் சமுதாயத்துக்கும் பொது மக்களுக்கும் 19 வது திருத்தத்தின் அர்த்தத்தை இப்போது போதிக்வேண்டியது அவசியம் போலத்தோன்றுகிறது. அத்திருத்தம் ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்து அரசாங்கத்தின் இந்தக் கிளையை பாராளுமன்றத்துக்கும் நீதித்துறைக்கும் சமமானமாக்கியது.

       19 வது திருத்தத்தின் இந்தச் செய்தி கலந்துரையாடலில் நான் பங்கேற்ற ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மாணவர்களினால் விளங்கிக்கொள்ளப்பட்டது. மேற்குறிப்பிட்ட ஹோட்டலின் முகாமையாளரும் ஊழியர்களும் கூட கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தால் அதை விளங்கிக்கொண்டிருக்கக்கூடும்.தனது விருப்பங்கள் நிறைவேற்றப்படவேண்டும் என்று உத்தியோகப்பற்றற்ற முறையில் வேண்டுமானால் ஜனாதிபதி விரும்பியிருக்கலாம்.ஆனால், தனது தப்பெண்ணங்கள் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்று உத்தியோகபூர்வமாக அவர் வற்புறுத்தமுடியாது. நாட்டின் எதிர்காலம் ஜனதிபதியின் தனிப்பட்ட விருப்பு வெறுபபுகளினால் தீர்மானிக்கப்பட முடியாது. அவரது தனிப்பட்ட விருப்பத்தெரிவுக்கு ஆட்பட்டதாக எதிர்காலப் பிரதமர், அரசாங்கம் , அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் பொருளாதார நிலை எல்லாம் நிர்ணயிக்கப்படமுடியாது.

          இன்றைய நெருக்கடியில் கூட்டாகத் தீர்மானிக்கப்படுகின்ற பாதையே எதிர்காலத்தில் நடைபெறப்போவதை நிர்ணயிக்கும். தற்போது ஜனாதிபதியின் தன்னிச்சையான போக்குகளுக்கும் அடாத்தான செயல்களுக்கும் கொடுக்கப்படுகின்ற வாய்ப்பு அரசியல் அரங்கில் தலைமைப்பொறுப்புகளுக்கு வரக்கூடிய -- பல்வகைப்பட்ட குணவியல்புகளைக்கொண்ட பேர்வழிகளின் எதிர்கால அடாவடித்தனங்களுக்கு வாய்பபை ஏற்படுத்திக்கொடு்க்கும்.இத்தகைய பேர்வழிகள் குறுகியகாலத்துக்குப் பதவியில் இருந்தாலும் கூட நீண்டகாலத்துக்கு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய முடிவுகளை எடுக்கக்கூடிய ஆபத்து இருக்கிறது.இன்று மேற்கொள்ளப்படுகின்ற தீர்மானங்கள் நாளை நாடு எவ்வாறு ஆட்சி செய்யப்படும் என்பதைத் தீர்மானிக்கும். எதிர்கால ஜனாதிபதியொருவரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் எதிர்காலப் பிரதமர் அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் பொருளாதார நிலை ஆகியவற்றை தீர்மானிக்க வழிவகுக்கக்கூடியதாக முன்மாதிரியை வகுப்பதற்கு ஜனாதிபதி சிறிசேனவுக்கு உற்சாகமளிக்கப்படக்கூடாது.

 

http://www.virakesari.lk/article/45261

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.