Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்த சு.க.வில் உள்ளாரென கூறுவதற்கு நான் முட்டாள் அல்ல ;மனம் திறந்தார் துமிந்த

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்த சு.க.வில் உள்ளாரென கூறுவதற்கு நான் முட்டாள் அல்ல ;மனம் திறந்தார் துமிந்த

 

மஹிந்த ராஜபக்ஷவுடன், ஜனாதிபதி மைத்திரிபால ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் மஹிந்த தரப்பினரின் பாராளுமன்ற உறுப்புரிமையை பாதுகாக்கும் முகமாகவே எழுத்துமூலமான அறிவிப்பு வழங்கப்பட்டது. 

IMG_9997.JPG

தவிரவும் எழுத்துமூல அறிவிப்பு நேர்மையாக மேற்கொள்ளப்பட்ட விடயமொன்றல்ல. தனிப்பட்ட ரீதியில் சு.கவில் மஹிந்த அணியினர் தற்போதும் உள்ளனர் என வலியுறுத்திக் குறிப்பிட்டு தான் முட்டாளாக முடியாதென ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான துமிந்த திஸாநாயக்க வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே இவ்வாறு தெரிவித்தார். 

அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,

கேள்வி:- ஒக்டோபர் 26 ஆம் திகதி உங்களது கட்சித்தலைவரும், ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன எடுத்த முடிவை பற்றிக் கூறுங்கள்?

பதில்:- கட்சி ரீதியான முடிவைக் கேட்கிறீர்களா? இல்லை தனிப்பட்ட ரீதியில் கேட்கிறீர்களா?

கேள்வி:- நான் உங்களுடைய கருத்துப் பற்றியே கேட்டேன்?

பதில்:- தனிப்பட்ட ரீதியில் அந்த தீர்மானத்தினை நான் விரும்பவில்லை. மேலும் 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் நாட்டிற்கு வழங்கிய வாக்குறுதிகளின் பிரகாரமும் ஜனாதிபதியுடன் இணைந்து அன்று நான் எடுத்த தீர்மானத்தின் பிரகாரமும் மேற்படி தீர்மானத்தினை ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.

கேள்வி:- இவ்வாறான தீர்மானம் எடுத்தமை தொடர்பில் நீங்கள் ஜனாதிபதி மைத்திரியுடன் கலந்துரையாடினீர்களா?

பதில்:- ஆம், கலந்துரையாடினேன்.

கேள்வி:- அவ்வாறு கலந்துரையாடும் போது என்ன கூறினார்?

பதில்:- ஐக்கிய தேசியக் கட்சியுடன் அவருக்கு காணப்பட்ட முரண்பாடுகள் மற்றும் ஐ.தே.க.வினால் ஏற்படுத்தப்பட்ட பிரச்சினைகள் ஆகியவற்றால் செய்வதற்கு வேறு வழியின்றியே அம்முடிவை எடுத்ததாகவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தரப்பினருடன் புதிய பயணத்தினை மேற்கொள்வோம் என்றும் கூறினார்.

கேள்வி:- கூட்டு அரசாங்கத்தில் கடந்த மூன்றரை வருடங்களாக தாங்களும் இருந்துள்ள நிலையில் ஐ.தே.க.வுடன் இணைந்து பயணிக்க முடியாது என்பதை உணர்ந்தீர்களா?

பதில்:- இரண்டு பிரதான கட்சிகளும் கூட்டிணைந்து முதற்தடவையாக ஆட்சிப்பொறுப்பில் அமர்ந்திருந்தோம். சில தருணங்கள் இருவேறு நிலைப்பாடுகள் ஏற்பட்டுள்ளன. முரண்பாடுகளும் ஏற்பட்டுள்ளன. எவ்வாறாயினும் இரண்டு கட்சிகளும் இணைந்து நாட்டினை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டிருந்தது. அதனை தவற விடமுடியாதல்லவா?

கேள்வி:- முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டதை முன்கூட்டியே அறிந்திருந்தீர்களா? 

புதில்:- இல்லை

கேள்வி:- அந்த நிகழ்வில் தாங்களும் பங்கேற்றிருந்தீர்களே?

பதில்:- அன்றையதினம் நானும், மஹிந்த அமரவீரவும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடலுக்காகச் சென்றிருந்தோம். அச்சமயத்தில் தான் பதவிப்பிரமாண விடயத்தினை அறிந்துகொண்டோம். அதனையடுத்து அந்நிகழ்வில் பங்கேற்க வேண்டியதாயிற்று.

கேள்வி:- முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடன் இணைந்து பயணிப்பது பற்றி?

பதில்:- ஆரம்பமே தோல்வியடைந்து விட்டது.

கேள்வி:- ஆரம்பம் தோல்வியடைந்தாலும் சுதந்திரக்கட்சியும், பொதுஜன முன்னணியும் கூட்டிணைவதென தீர்மானிக்கப்பட்டுள்ளதே?

பதில்:- இருதரப்பினரும் இணைவது பற்றிய விடயம் தற்போது வரையில் கலந்துரையாடலில் தான் உள்ளது.

கேள்வி:- நீங்கள் இவ்வாறு கூறினாலும் சுதந்திரக்கட்சியும், பொதுஜன முன்னணியும் இணைந்து பரந்துபட்ட கூட்டணியொன்று அமைப்பதென தலைமைகளால் இறுதி செய்யப்பட்டுள்ளதே?

பதில்:- அவ்வாறில்லை. உங்களுக்கு முக்கியமானதொரு விடயத்தினைக் கூற விழைகின்றேன். ஒக்டோபர் 26ஆம் திகதி வரையில் அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் சுதந்திரக்கட்சி தலைமையிலான கூட்டணியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே வேட்பாளராக களமிறங்க வேண்டும் என்பதை நானே பகிரங்கமாக அதிகளவில் வலியுறுத்தி வந்திருந்தேன். ஆனால், தற்போது பொதுஜன முன்னணியுடன் கைகோர்த்த பின்னர் அதற்கான எதிர்க்கருத்துக்கள் பொதுஜன முன்னணி தரப்பிலிருந்தே வெளிப்பட ஆரம்பித்துள்ளன. ஆகவே எதிர்காலத்தில் அவ்விடயம் எந்த தரப்பினரின் பக்கம் திரும்பும் என்பதை தற்போது கூறமுடியாது.

கேள்வி:- சுதந்திரக்கட்சி பொதுஜன முன்னணியுடன் கூட்டிணைந்தால் என்னவாகும்?

பதில்:- சுதந்திரக்கட்சியை பாதுகாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் நாம் இருக்கின்றோம். சுதந்திரக்கட்சி அரசாங்கத்தில் பங்கேற்றபோது அதற்கு எதிர்ப்புத்தெரிவித்து வெளியேறி பொதுஜன முன்னணியாக செயற்பட்ட தரப்பினருக்கு எதிராக கிராம மட்டத்திலிந்து கட்சியின்  உயர்மட்டத்தரப்பினர் வரையிலானவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும்.

அதனடிப்படையிலேயே செயற்பாடுகளை முன்னெடுக்கின்றோம். இதற்கான கலந்துரையாடல் சுமுகமாக நிறைவடையும் வரையில் பொறுமை காத்தமையால் தான் நான் இறுதியாக அமைச்சுப்பதவியை பொறுப்பெடுப்பதில் கூட காலதாமதம் ஏற்பட்டது.

கேள்வி:- ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு ஆதரவாக இறுதிவரையில் இருந்த 21 உறுப்பினர்களும் சுயாதீனமாக செயற்படுவதாக பேசப்படுகின்றதே?

புதில்:- 21 உறுப்பினர்களும் ஒன்றாக இருப்பதென்றே தீர்மானித்தோம் 

கேள்வி:- சிலர் ஆளும் ஐ.தே.மு. அரசுக்கு ஆதரவளித்துள்ளார்களே?

பதில்:- ஆம், 21உறுப்பினர்களும் ஒன்றாக இருக்கும் தீர்மானத்தினை முழுமையாக்க முடியாது போய்விட்டது. உறுப்பினர்கள் சிலர் உடனடியாக தமது நிலைப்பாடுகளை மாற்றி பகிரங்கப்படுத்திவிட்டனர். அதற்காக அவர்கள் அரசாங்கத்தில் இணைந்து கொண்டுள்ளார்கள் என்று கூறமுடியாது. விஜிதமுனி சொய்ஸா போன்றவர்கள் பண்டாரநாயக்கவின் நினைவுதினத்திற்கு வருகை தந்திருந்தார்கள். அவர்கள் கட்சி மாறவில்லை. ஆனால், தற்போதுள்ள நிலைப்பாட்டினையே எதிர்க்கின்றார்கள்.

கேள்வி:- தங்கள் தலைமையிலான குழுவொன்று அரசாங்கத்தில் இணைவதாக பேசப்படுகின்றதே?

பதில்:- நாங்கள் 21பேரும் ஆளும் தரப்புடன் இணைந்துகொள்வது என்ற நிலைப்பாட்டின் ஆரம்பத்தில் தான் உள்ளோம்.

கேள்வி:- அதற்கான காரணம் என்ன?

பதில்:- சு.க, பொ.ஜ.மு. ஆகியன இணைந்து செயற்படுவதென உயர்மட்டத்தில் தீர்மானிக்கப்பட்டாலும் பொ.ஜ.மு.வின் செயற்பாடுகள் அத்தீர்மானம் கீழ்மட்டம் வரை பொருத்தமாகின்றதா என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.

கேள்வி:- முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளீர்களா?

பதில்:- சந்திரிகா பண்டராநயக்கவுடன் விசேட கலந்துரையாடல்கள் எவையும் இடம்பெறவில்லை. சுதந்திரக்கட்சியின் ஆலோசகர் என்ற அடிப்படையில் கலந்துரையாடுகின்றோம். அதனாலேயே சிலர் குழப்பமடைகின்றனர். அதனைவிடுத்து அவருடன் வேறாக செல்லும் நோக்கம் எதுவும் கிடையாது.

கேள்வி:- சுதந்திரக்கட்சி பொதுஜன முன்னணியுடன் இணைந்தால் அதனை விரும்பாத நீங்கள் உள்ளிட்டவர்கள் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் அமையும் கூட்டணியில் இணைவதற்கு வாய்ப்புண்டா?

பதில்:- அதுபற்றி தீர்மானிக்கவில்லை.

கேள்வி:- உங்களுடைய தலைமையில் சு.க. குழுவொன்று தொடர்ச்சியான கலந்துரையாடலில் ஈடுபட்டு வருகின்றமை உண்மையா?

பதில்:- 21உறுப்பினர்களையும், கட்சியையும் பாதுகாப்பது குறித்த கலந்துரையாடல்கள் மட்டுமே இடம்பெறுகின்றன. மேலும் இதற்கு ஜனாதிபதி மைத்திரிபாலவை மத்தியஸ்தம் வகிக்கச் செய்வது தொடர்பிலும் ஆலோசிக்கப்படுகின்றது. மாறாக கட்சித்தலைவரான ஜனாதிபதிக்கு எதிராக எவ்விதமான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை.

கேள்வி:- சுதந்திரக்கட்சி தலைமையில் பரந்துபட்ட கூட்டணி அமைப்பது தொடர்பில் உங்களுடைய மத்திய குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்த நிலைமைகள் எவ்வாறு உள்ளன?

பதில்:- பரந்து பட்ட கூட்டணி அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. அதேநேரம் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாஸ நியமிக்கப்பட்ட போது, சுதந்திரக்கட்சியை மறுசீரமைக்க வேண்டும் என்று கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால குறிப்பிட்டிருந்தார். அதன் நீட்சியான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. தொகுதி அமைப்பாளர்கள், நிருவாக உறுப்பினர்கள் உள்ளிட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கேள்வி:- சுதந்திரக்கட்சியிலிருந்து பொதுஜன முன்னணிக்கு சென்றவர்களை மீண்டும் சுதந்திரக்கட்சியுடனும், பங்காளித் தரப்புக்களை ஐ.ம.சு.முன்னணியிலும் மீண்டும் இணைப்பது தொடர்பில் பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றனவா?

பதில்:- உறுப்பினர்களையும், கட்சிகளையும்; சுதந்திரக்கட்சியுடன் மீண்டும் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைவதை விடவும் புதிய கூட்டணியொன்றை ஆரம்பிப்பது பற்றியே பொதுஜன முன்னணியின் தரப்பினரால் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து ஐ.ம.சு.மு. இணைந்துகொள்ளுமாறு கோரியபோதும் அவர்கள் புதிய கூட்டொன்றையே  விரும்புகின்றார்கள். மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான தரப்பினர், சுயாதீன அணியினர் ஆகியோர் தாங்கள் இழைத்த தவறினை உணர்ந்து மீண்டும் சு.க.வில் இணைந்தால் அதனை நாம் வரவேற்போம்.

கேள்வி:- பொதுஜன முன்னணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான தரப்பினர் உறுப்புரிமையை பெற்றுள்ளமை தொடர்பில் கட்சிக்கு அறிவித்தலேதும் அவிடுக்கப்பட்டுள்ளதா?

பதில்:- தேசிய அரசாங்கம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து பொதுஜன முன்னணியில் அவர்(மஹிந்த) உறுப்புரிமையை பெற்றமையை முழு நாடுமே அறியும். அவருடன் இருந்த ஒருசிலரைத் தவிர ஏனையவர்கள் உறுப்புரிமையை பெற்றுள்ளனர். அவர்கள் அவ்வாறு உறுப்புரிமையை பெறவில்லை என்று கூறுவதானது நகைப்புக்குரிய விடயமொன்றாகும்.

கேள்வி:- நீங்கள் கூறுவதுபோன்று அவர்கள் அவ்வாறு பிறிதொரு கட்சியில்  உறுப்புரிமையை பெற்றிருந்தால் கட்சி ரீதியில் நடவடிக்கை எடுக்காதது ஏன்?

பதில்:- மத்திய குழு கூட்டமொன்றின்போது, தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள மூவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று முன்மொழியப்பட்டபோது, அரசாங்கத்துக்கு ஆதரவளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென்றால் பொதுஜன முன்னணியில்  ணைந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நானே வலியுறுத்தியிருந்தேன். அச்சயமத்தில் தான் ஜனாதிபதி மைத்திரி, இருதரப்பிற்கும் ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்காது விடுவோம் என்று கூறினார். 

கேள்வி:- மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினர் பொதுஜனமுன்னணிக்குச் சென்றுவிட்டதாக நீங்கள் கூறுகின்றபோதும், எதிர்க்கட்சித்தலைவர் நியமனத்தின்போது எழுந்த சர்ச்சைகளை அடுத்து அவர் ஐ.ம.சு.மு.இல் நீடிப்பதாக அல்லவா செயலாளர் மஹிந்த அமரவீரவால் எழுத்துமூல அறிவிப்பு சபாநாயகருக்கு வழங்கப்பட்டுள்ளது?

பதில்:- முழு நாடுமே கண்ணால் கண்ட உண்மை நாம் மறைக்க முடியாது. மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டவர்கள் சு.கவில் இருக்கின்றார்கள் என்று கூறி நாம் முட்டாள்களாக முடியாது. மனச்சாட்சிக்கு விரோதமாக எங்களால் எப்படி அவர்கள் சு.க.வைச் சேர்ந்தவர்கள் என்று எவ்வாறு கூற முடியும்.

கேள்வி:- அப்படியென்றால் சபாநாயகருக்கு வழங்கப்பட்ட எழுத்துமூல அறிவிப்பும் உண்மையான நிலைமையும் பரஸ்பரம் முரண்படுகின்றதே?

பதில்:- பொதுஜன முன்னணியுடன் மற்றும் மஹிந்த ராஜபக்ஷவுடன், ஜனாதிபதி மைத்திரிபால ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் அவர்களின் பாராளுமன்ற உறுப்புரிமையை பாதுகாக்கும் முகமாகவே அவ்வாறு எழுத்துமூலமான அறிவிப்பு வழங்கப்பட்டது. தவிரவும் எழுத்துமூல அறிவிப்பு நேர்மையாக மேற்கொள்ளப்பட்ட விடயமொன்றல்ல. கட்சி அடிப்படையில் பொதுவாக எடுத்த தீர்மானம் என்ற அடிப்படையில் குறித்த விடயத்தினை ஏற்றுக்கொண்டாலும் தனிப்பட்ட ரீதியில் அதனை வலியுறுத்திக் குறிப்பிட்டு நான் முட்டாளாக முடியாது.

கேள்வி:- உறுப்புரிமையை பாதுகாப்பதற்காக அவ்வாறு எழுத்துமூலமான உறுதிப்படுத்தல் வழங்கப்பட்டிருப்பதாக நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள். அவ்வாறாயின் எதிர்கட்சித்தலைவர் பதவி அவ்வாறான ஒருவருக்கு வழங்கப்பட வேண்டுமென எவ்வாறு தீர்மானிக்கப்பட்டது? 

பதில்:- பெரும்பான்மை உறுப்பினர்கள் அவர்களுக்கு காணப்பட்டாலும் பொதுஜன முன்னணியில் உறுப்புரிமை பெற்றிருப்பதால் எதிர்க்கட்சித்தலைவர் பதவியை அவர்களுக்கு வழங்காது, சுதந்திரக்கட்சியில் உள்ள 21பேர் கொண்ட அணிக்கே வழங்கப்பட வேண்டுமெனக் கோரியிருந்தோம். ஜனாதிபதி மைத்திரிபாலவும், அதனை ஏற்றுக்கொண்டிருந்தார். அதனடிப்படையில் நிமல் சிறிபால டி சில்வாவை நியமிக்க வேண்டும் என்றே ஏகோபித்து முன்மொழிந்திருந்தோம். அதுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கேள்வி:- ஏகோபித்த முடிவு பின்னர் எவ்வாறு மாற்றியமைக்கப்பட்டது என்பது பற்றி நீங்கள் அறிந்துள்ளீர்களா?

பதில்:- எவ்வாறு அந்த முடிவு மாற்றப்பட்டது என்பதை தான் நாங்களும் தற்போது வரையில் சிந்திக்கின்றோம்.

கேள்வி:- உங்களுடன் சிறுகட்சிகள் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகின்றதே?

பதில்:- ஆம், தற்போதுள்ள அரசியல் நிலைமைகளின் பிரகாரம் அத்தகைய தரப்புக்கள்  கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றன. குழப்பங்கள், பிரச்சினைகள் உள்ள தரப்புக்கள் எல்லாம் இருக்கின்றன. அவர்களுக்கு தெளிவுபடுத்தல்களைச் செய்து எம்முடன் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் உள்ளது. ஆகவே, சு.கவினை பலப்படுத்தும் வகையிலேயே அந்தக்கலந்துரையாடல்கள் தொடர்கின்றன.

கேள்வி:- சு.க.வினை பலப்படுத்தும் செயற்பாட்டில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவும் பங்கெடுத்துள்ளாரா?

புதில்:- அவ்வாறான செயற்பாட்டில் பங்கெடுக்கப் போவதில்லை என்று அவர் எங்கும் குறிப்பிடவில்லையே. கட்சியன் ஆலோசகர்களாக முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தி.மு.ஜெயரட்ண ஆகியோர் இருக்கின்றனர். மஹிந்த ராஜபக்ஷ சு.க.வில் இருக்கின்றாரா இல்லையா என்பது தான் பிரச்சினையாக உள்ளதே தவிரவும் ஏனைய ஆலோசகர்கள் சு.க.வினை பாதுகாக்கும் செயற்பாடுகளுக்கு பங்களிப்பதற்கு தயாராகவே உள்ளனர்.

கேள்வி:- மீண்டும் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி வேட்பளராக களமிறங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தற்போதும் உள்ளீர்களா?

பதில்:- சுதந்திரக் கட்சியின் சார்பில் அவர் மீண்டும் களமிறங்க வேண்டும் என்பதில் எவ்விதமான பிரச்சினையும் இல்லை. ஆனால், அவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் மேற்கொண்டுள்ள இணக்கப்பாட்டினை ஏற்படுத்தியுள்ளார். ஆகவே, பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ தரப்பினரே தற்போது வேட்பாளர் யார் என்பதை தீர்மானிக்கும் நிலைமை உருவாகியுள்ளது. ஆனாலும் அத்தரப்பினர் வேட்பாளர் குறித்து தெளிவான கருத்துக்களை கூறுவதாய் இல்லை. குமார வெல்கம போன்றவர்கள் ஜனாதிபதி மைத்திரி எவ்வளவு காலம் எங்களுடன் இருப்பாரோ என்ற தொனியில் சந்தேகக் கருத்துக்களை முன்வைப்பதானது அவரை வேட்பாளராக முன்மொழிவார்களா என்ற கேள்வியை உருவாக்கியுள்ளது.

கேள்வி:- நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பில் உங்களின் கருத்து என்ன?

பதில்:- நிறைவேற்று அதிகாரத்தினை ஒழித்து பாராளுமன்றத்திற்கு முழுமையான அதிகாரங்களை வழங்குவதானது ஜனநாயக ரீதியில் சிறந்ததாக இருந்தாலும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இருக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும்.

கேள்வி:- ஏன் அவ்வாறான நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கின்றீர்கள்?

பதில்:- பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்கள் தெரிவு செய்யும் முறை கருத்தில்கொள்ள வேண்டும். பிரதான கட்சிகள் கூட முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றுவதென்றால் அக்கட்சிகளுக்கு பெரும்பான்மை இன்மையால் சிறு கட்சிகளின் ஆதரவை நாடவேண்டிய நிலைமை ஏற்படுகின்றது. அவ்வாறு நாடுகின்றபோது அக்கட்சிகளை மகிழ்ச்சிப்படுத்தினால் மத்திரமே நிறைவேற்ற முடியும். அவ்வாறு இல்லாதுவிட்டால் நாட்டுக்கு அவசியமான தீர்மானம் என்றால் கூட நிறைவேற்ற முடியாத நிலைமை ஏற்படுகின்றது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி மக்களால் தெரிவு செய்யப்படுகின்றபோது மக்களின் ஆணைக்கு அமையே தெரிவு இடம்பெறுகின்றது. ஆகவே, நாடு சார்ந்த தீர்மானங்களை எடுக்காதவர்களை மக்கள் அங்கீகரிக்க மாட்டார்கள் அல்லவா. நாட்டிற்கு பாதகத்தினை ஏற்படுத்தக்கூடிய வகையில் நிறைவேற்று அதிகாரத்தில் உள்ள விடயங்களை அகற்ற வேண்டும் என்பதில் எவ்விதமான பிரச்சினையும் இல்லை.

 

http://www.virakesari.lk/article/48036

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.