Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுமைகளை மறந்து வேற்றுமைகளை பெரிதுபடுத்தினால் பிரிவினை கோஷத்தை தவிர்க்க முடியாது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொதுமைகளை மறந்து வேற்றுமைகளை பெரிதுபடுத்தினால் பிரிவினை கோஷத்தை தவிர்க்க முடியாது-(பீஷ்மர்)

[15 - April - 2007]

ஜனவரி முதலாம் திகதி எத்தனை சர்வதேச முக்கியத்துவம் பெற்றிருந்தாலும் இலங்கையிலுள்ள தமிழர்கள், சிங்களவர்களுக்கு நமது வருடம் தான் வருடப்பிறப்பு, அதுதான் எங்கள் பண்பாட்டுத் திருவிழா. சிங்கள, தமிழ் மக்களுக்கு பொதுவாக அமையும் புதுவருடப் பிறப்பும் வைபவங்களும் பற்றிச் சிந்திக்கும் போது இலங்கை பற்றிய சில முக்கிய மத, சமூகவியல், அரசியல் உண்மைகள் புலனாகின்றன.

இலங்கை நிலையில் வாழ்கின்ற எல்லோருமே முஸ்லிம்கள் உட்பட ஒரு உறவு முறையை கொண்டவர்கள் அதாவது எங்களுடைய சமூகங்களின் ஒழுங்கமைப்பு முறையில் அடிப்படையான ஒருமைப்பாடு உண்டு. மானிடவியல் துறையில் சமூக ஒழுங்கமைப்பில் உறவு முறையையும் திருமணங்களையும் மிக முக்கிய சமூக நிறுவனங்களாக எடுத்துக் கூறுகின்றனர்.

இலங்கையில் சிங்கள தமிழ் மக்களை பொறுத்தவரையில் மொழி வேறுபாட்டாலும் சமூக ஒழுங்கமைப்பு நிலையில் உறவுகள் (உறவுப் பெயர்கள்) திருமண ஒழுங்கமைப்பு முறைமை (மச்சான் - மச்சாள் விவாகம்) பொதுவான அம்சங்களாகும்.

இந்தியாவின் எல்லா இந்து மதத்தினரிடையேயும் இத்தகைய பொதுமையில்லை. விளையாட்டுகள் வைபவங்களைப் பொறுத்தவரையிலும் இந்த உண்மை புலப்படும். புதுவருடப்பிறப்பு ஒரு நல்ல உதாரணம். பொதுவான சிங்கள உற்சவங்கள், வைபவங்கள் பௌத்த நிலைப்பட்டவை. வருடப்பிறப்பு அப்படியானதொன்றல்ல. இது உண்மையில் புவியியல் நிலைப்பட்டது. தென்னிந்திய பிரதேசத்திலும் இது தமிழ்நாட்டுப் பிரதேசத்துக்கே சிறப்பானது. அதாவது, உலகப் புவியியல் அமைப்பில் சூரிய சஞ்சாரம் மேடத்துக்கு வருவதையே இந்த புதுவருடப் பிறப்பு குறிக்கின்றது. வட இந்தியாவுக்கு இது பொருந்தாது.

கடந்த இரண்டு வாரங்களாக சிங்கள - தமிழ் வருடப் பிறப்பின் ஒற்றுமைப்பாடு எவ்வாறு வந்ததென்றே சில சிங்கள இதழியலாளர்கள் என்னை வாய்விட்டுக் கேட்டுள்ளனர். இதுபற்றி சிந்திக்கும் போதுதான் தங்கள் பொதுமைகளை மறந்து வேற்றுமைகளையே பெரிதுபடுத்துகின்றனர் என்பது தெரியவருகின்றது.

20 ஆம் நூற்றாண்டு வரலாற்றை மீள நோக்கும் பொழுது சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளையும் தேச நிலைப்பட முக்கியத்துவப்படுத்த வேண்டும் என்ற கொள்கையை முதன்முதலில் ஓர் இயக்கக் கோஷமாக ஆக்கியது யாழ்ப்பாண மாணவர் காங்கிரசே. ஆனால், அவ்வாறு தொடங்கிய மொழி நிலை நீட்சி நடவடிக்கைகள் இலங்கையை ஏறத்தாழ இருவேறு கூறுகளாக ஆக்கியுள்ளது. இந்தப் போக்கு எவ்வாறு வந்தது? இந்த அம்சத்தைப் பற்றிய வரலாற்று அறிவு இல்லாமலே போய்விட்டது.

இலங்கை முழுவதையும் தன்னாட்சிக்குள் அடக்கிய பிரித்தானிய காலனித்துவம், தனது காலனித்துவ நியமங்களின் அடிப்படையில் அத்தேவைகளுக்காக இலங்கையை நிர்வாக ரீதியாக ஒன்றிணைக்க முயன்ற பொழுது இலங்கையின் இனங் குழுமங்களின் பதிற்குறி தத்தம் மதத்தையும் மதம் சார்ந்த மொழியையும் அடையாளமாக வற்புறுத்தியமையாகும். சைவம் - தமிழ், இஸ்லாம் - அரபு, பௌத்தம் - சிங்களம் என்று அது சென்றது. இதிலொரு சுவாரஸ்யம் என்னவென்றால் இந்தக் குரல் முதலிலே தமிழரிடத்தையே கிளம்பியது. (ஆறுமுக நாவலர்)

அடுத்து முஸ்லிம்களிடையே (சித்தி லெவ்வை) அதன் பின்னரே சிங்களவரிடையேயும் வந்தது. (அநகாரிக தர்மபால) அதிர்ஷ்டவசமாக மிசனறி முக்கியத்துவம் காரணமாக சைவ - தமிழ் அழுத்தம் ஒரு மட்டத்துக்கு மேலே செல்லவில்லை.

இந்த இனக்குழும நிலைப்பாட்டில் சிங்கள - பௌத்தம், பௌத்தத்தை முதன்மைப்படுத்தி அதனை வலுவானதொரு அரசியல் இயக்கம் ஆக்கிற்று.

இது ஒரு புறமாக, இன்னொரு புறத்தில் இலங்கையின் ஆட்சி யாப்பு வளர்ச்சியில் ஜனநாயக பிரதிநிதித்துவ கோட்பாடு இனக்குழும அடிப்படையிலேயே தொடங்கப்பெற்றது. முதலில் நடந்த நியமனங்கள் சிங்களவர், தமிழர், பறங்கியர் என்ற அடிப்படையிலேயே சென்றது.

மொழி அடிப்படையில் முஸ்லிம்களையும் தமிழர்களாக காட்டி முஸ்லிம்களுக்குள்ள அரசியற் பிரதிநிதித்துவத்தை தமிழர்கள் கெடுக்கப் பார்க்கின்றனர். (சேர் பொன். இராமநாதன்) என்ற கோஷத்தின் பெயரிலேயே ஐ.எல்.எம். அப்துல் அஸீஸ் போன்றவர்கள் இலங்கையில் முஸ்லிம்களின் தனித்துவத்தைக் கோரினர்.

இந்தப் போக்கு காரணமாக புவியியல் பிரதேசத்தொகுதிவாரியான பிரதிநிதித்துவ முறை வந்தபொழுது, இனக்குழும அடிப்படையே முக்கியமாக தொழிற்படத் தொடங்கிற்று. தென், கிழக்கு மட்டக்களப்பை கல்லோயாத் திட்டம் மூலம் டி.எஸ். சேனநாயக்கா இவ்விடயமாக முக்கிய பங்களிப்புச் செய்தார் என்று அறிகின்றோம்.

இலங்கையின் அவலம் ஒருபுறத்தில் ஒருமைப்பாடு எடுத்துக் கூறப்பட மறுபுறத்தில் அந்தப் பொதுமைப்பாடு மறுதலிக்கப்பட்டமையாகும். இந்த விடயத்தில் சுதந்திரம் கிடைத்த வருடத்திலேயே (1948) இந்திய வம்சாவளியினர் பிரஜாவுரிமைகள் அற்றவர்களாக ஆக்கப்பட்டமை ஒரு முக்கிய வரலாற்று உண்மையாகும். இதற்கான பதிற்குறிதான் இலங்கை தமிழரசுக் கட்சியும் அதன் சமஷ்டிக் கோரிக்கையும். இலங்கை முழுவதிலும் படிப்படியாக வளர்ந்து வரும் தமிழ் விரோத போக்கைக் கண்டித்து எஸ்.ஜே.வி. செல்வநாயகம் சமஷ்டியை வற்புறுத்தினார். அவருடைய கோரிக்கையில் 2 அம்சங்களிருந்தன. ஒன்று, வடகிழக்குப் பிரதேசத்தை தமிழைத் தாய்மொழியாக கொண்டவர்களின் பாரம்பரிய பிரதேசமென கூறியதாகும். இரண்டு, முஸ்லிம்களையும், தமிழர்களையும் இணைத்து தமிழ்பேசும் மக்கள் என்ற அரசியற் கோட்பாட்டைக் கொண்டு வந்ததாகும். இவற்றில் 2 ஆவது தோற்றுப் போய்விட்டது. முஸ்லிம்கள் தங்கள் அடையாளத்தை தமிழர்களோடு இணைத்துக்கொள்ள விரும்பவில்லை. ஆனால், வடகிழக்கு என்ற புவியியல் அலகு பிரகடனம் அடுத்து வந்த காலத்தில் அரசியல் போக்கையே நிர்ணயிப்பதாக அமைந்தது.

ஆங்கிலத்தில் சமஷ்டிக் கட்சியென தன்னைக் கூறிக்கொண்ட கட்சி தமிழில் தன்னை இலங்கைத் தமிழரசுக் கட்சியென்றே தன்னை அடையாளம் இட்டுக்கொண்டது. பலன் சிங்கள அகராதியில் சமஷ்டி என்றால் பிரிவினை என்ற கருத்தாகிவிட்டது.

1948 இற்குப் பின்வந்த 1956 ஐக் கூட (தனிச் சிங்களம்) தாங்குவதற்கான ஒரு வாய்ப்பிருந்தது. ஏனெனில், இடதுசாரிகள் அப்பொது தமிழுக்காக நின்றனர். 1964 இல் பிரதான இடதுசாரிக் கட்சிகள் சுதந்திரக் கட்சியோடு சேர்ந்ததுடன் தமிழ் மொழிக்கான போராட்டம் தமிழரசுக் கட்சியிடம் மாத்திரமே சென்றது. போதும் போதாததற்கு தனிச் சிங்களத்துக்குள் தமிழுக்குள்ள நியாயமான இடம் பற்றிய ஒரு வரைவிலக்கணத்தைச் செய்ய இடதுசாரிகள் வெற்றிபெறவேயில்லை. இந்தப் பிரதான இடதுசாரிகளின் நகர்வும் 1972 இன் குடியரசு ஆட்சியாப்பும் தமிழரிடையே இளைஞர் தீவிரவாதம் மேற்கிளம்புவதைத் தவிர்க்க முடியாது போய்விட்டது. பல வருடங்களாக பாராளுமன்ற இணக்கங்களுக்கே வரமறுத்த அரசாங்கம், 1981 இலிருந்து இலங்கைப் பாராளுமன்றத்தில் தமிழ்ப் பிரதிநிதிகளுக்கு இடமளிக்காத அரசாங்கம், தீவிரவாத இளைஞர்களுடன் பேச்சு நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. இலங்கையின் போக்கு இனக்குழும நிலையில் இது துருவப்படுவதை தவிர்க்க முடியாததாகிவிட்டது.

இன்றுள்ள பிரச்சினை என்னவென்றால்? தமிழர் உரிமைக்கான இப்பொழுதுள்ள கோரிக்கை நிராகரிக்கப்படுமானால் தமிழர்களின் நிலைப்பாடு யாது என்பதாகும்.

இதைச் சொன்னாலே பலருக்கு கோபம் வருகின்றது. மறை முகமாகவும் நேரடியாகவும் தாக்கத் தொடங்கி விடுகின்றார்கள்.ஆனால், பிரச்சினை இது தான். விடுதலைப் புலிகளின் இருப்பு இல்லையெனில் இலங்கைத் தமிழர்களின் அரசியல் உரிமைக்கான குரல் எங்கிருக்கின்றது?

இந்திய சமாதான பேணுகை இராணுவம் சம்பந்தமாக இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் பேசிக் கொண்டதாக அப்பொழுது பேசினார்கள். ரணில்- ராஜபக்ஷ தேர்தல் காலத்தில் கூட பேச்சுகள் நடந்ததாக ஷ்ரீபதி சூரியாராச்சி தலையில் அடித்துக் கூறுகின்றார்.

யாரை நம்புவது? யாரை விடுவது? ஆனால், சிங்கள நிலைப்பாட்டை வற்புறுத்த விரும்பும் சக்திகள் பயங்கரவாதம் என்ற சுலோகத்தைப் பயன்படுத்தி தமிழர் பிரச்சினைக்கு உரிய முறையில் முகங் கொடுக்காவிட்டால் நாட்டைப் பிளப்பதற்கான உந்துதல் சிங்கள நிலைப்பாட்டினரிடமிருந்தே வரும் - வருகின்றது. இந்த சோகமான உண்மையை சிங்கள மக்கள் எப்பொழுது உணருவார்கள்?

மூலம் - தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.