Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம் சமூகமும் உணர்ச்சி அரசியலும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் சமூகமும் உணர்ச்சி அரசியலும்

முகம்மது தம்பி மரைக்கார் / 2019 ஜனவரி 15 செவ்வாய்க்கிழமை, பி.ப. 04:17

அரசியல் என்பது விஞ்ஞானமாகும். அதனால், அது அறிவுபூர்மாக அணுக வேண்டிய விவகாரமாகவுள்ளது. மறுபுறம், அரசியலை கலை என்றும் சில அறிஞர்கள் கூறுகின்றனர். சிலருக்கு அரசியல் வியாபாரமாகும். சிலருக்கு அதுவே முழுநேரத் தொழிலாகவும் இருக்கிறது. அரசியலை விஞ்ஞானபூர்வமானதொரு விடயமாக விளங்கிக் கொண்டவர்கள், அதை அறிவு ரீதியாக அணுகுவார்கள். அரசியலை உணர்வுபூர்வமான விடயமாக மட்டுமே புரிந்து வைத்திருப்பவர்களுக்கு, அவர்களின் விருப்பத்துக்குரிய கட்சி, “மதம்” போல் இருக்கும்.  

அரசியலை முற்றுமுழுதாகவே, உணர்வுபூர்வமாக அணுகும் சமூகம், தனக்கான விடிவைப் பெற்றுக் கொள்வது சாத்தியமில்லை. “எனது கட்சியும், தலைவனும் என்ன தவறு செய்தாலும் என்ன துரோகம் செய்தாலும், நான் எதிர்க்க மாட்டேன்” எனும் மனநிலையைக் கொண்டவர்களையுடைய சமூகம், மந்த நிலையைத் தாண்டிச் செல்லப் போவதில்லை. இலங்கையில், ஒப்பீட்டு ரீதியாக முஸ்லிம்களை விடவும் தமிழர்கள் அரசியலை அறிவு ரீதியாகப் புரிந்து வைத்திருக்கின்றார்கள். தமிழர்களுக்குள் உருவான ஆயுதப் போராட்டமானது, அரசியலை அறிவுபூர்வமாகப் பார்க்கும் பக்குவத்தைத் தமிழர்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறது.   

ஆனால், அதையும் தாண்டி ஆயுத இயக்கங்களையும் அரசியல் கட்சிகளையும் உணர்வுபூர்வமாக அணுகும் “பக்தவாத” சிந்தனையும் தமிழர்களுக்குள் புகுந்திருக்கின்றது. அதனால்தான், யுத்த காலத்தில் ஆயுத இயக்கங்கள் நடத்திய மனிதப் படுகொலைகளைக் கூட, அந்த சமூகத்திலுள்ள சில படித்தவர்கள் கூட நியாயப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.  

எவ்வாறாயினும், அரசியலை உணர்வுபூர்மாக அணுகும் மனநிலையானது, முஸ்லிம் சமூகத்துக்குள் மிக அதிகளவில் உள்ளது. தேர்தலொன்றில் தாங்கள் ஆதரிக்கும் அரசியல் கட்சி சார்பில் யார் களமிறக்கப்பட்டாலும் கண்ணை மூடிக்கொண்டு வாக்களிப்போர், முஸ்லிம் சமூகத்துக்குள் பெரும்பான்மையாக இருக்கின்றார்கள் என்பது கசப்பான உண்மையாகும்.    

முஸ்லிம்களில் பெரும்பான்மையானோர் ஒரு காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரித்து வந்தனர். “எங்கள் உடலை வெட்டினாலும், எங்கள் இரத்தம் பச்சையாகவே ஓடும்” என்று கூறும் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் அப்போது அதிகமாக இருந்தனர். முஸ்லிம்களுக்கும் பச்சை நிறத்துக்கும் கலாசார ரீதியிலான தொடர்பொன்று உள்ளது. அந்தத் தொடர்பு - சமய ரீதியான செயற்பாடுகளின் போதும் வெளிப்படுவதுண்டு. முஸ்லிம்களின் சமய மற்றும் கலாசார நிகழ்வுகளில் அலங்காரத்துக்காகக் கட்டப்படும் கொடிகள், பச்சை நிறம் கொண்டவையாக இருப்பதைக் காணலாம்.

பச்சை நிறம் மீதுள்ள உணர்வுபூர்வமான இந்தப் பிடிப்பினால்தான், பச்சையைக் கட்சிக் கொடியின் நிறமாகக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியையும் முஸ்லிம்கள் ஒரு காலத்தில் கணிசமானளவில் ஆதரித்து வந்தனர்.  

இவ்வாறானதொரு பின்புலத்தில்தான், தற்போது இலங்கையில் புதிய அரசமைப்பொன்றை உருவாக்குவதற்கான முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. இனப் பிரச்சினைக்கான தீர்வாகவும், புதிய அரமைப்பு அமையும் என்று கூறப்படுகிறது. அதிகாரப் பகிர்வை வழங்குவதுதான், புதிய அரசமைப்பின் பிரதான நோக்கம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய நாடாளுமன்றில் எந்தவொரு தரப்பும், தமக்கு ஆதரவாக, மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்வதென்பது முடியாத காரியமாக இருக்கும் நிலையில், புதிய அரசமைப்பொன்றைக் கொண்டு வந்து, நிறைவேற்ற முடியுமா என்பது கேள்விக்குரியதாகும்.  

அதேவேளை, “நாட்டுக்குப் புதிய அரசமைப்பொன்று தேவையில்லை’ என்று, அஸ்கிரிய மகாநாயக பீடத்தைச் சேர்ந்த தேரர் ஒருவர் கூறியுள்ளார். “அரசமைப்பில் மேற்கொள்ளப்பட்ட தேர்தல் சட்டத் திருத்தம், இப்போதைக்குப் போதுமானதாகும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை அரசியலில், மகாநாயக பீடங்களைப் பகைத்துக் கொண்டு, இலங்கையின் பேரின அரசியல்வாதிகள் எவரும், தமது கால்களை முன்வைப்பார்கள் என்று நம்புவது, நமது புரிதலிலுள்ள கோளாறாகவே அமையும்.  

அப்படியென்றால், புதிய அரசமைப்பொன்று உருவாக்கப்படுவதற்கு சாத்தியமில்லை எனும் முடிவுக்கு நாம் வர முடியும் அல்லது புதிதாக உருவாக்கப்படும் அரசமைப்பானது, மகாநாயகப் பீடங்களை அதிருப்திக்குள்ளாக்கும் வகையில் அமையாததாக இருக்கும். இவை இரண்டுக்கும் அப்பால், சிறுபான்மை சமூகங்களுக்கு அதிகாரங்களை உச்சபட்சமாகவும் நேர்மையாகவும் பகிரும் வகையில், புதியதோர் அரசமைப்பு உருவாக்கப்படுமானால், அது, அரசியல் அதிசயமாகவே அமையும்.  

அப்படியோர் “அதிசயம்” நடக்காது என்று, “அபசகுணமாக” இங்கு நாம் கூறி, யாரின் “சாபங்களை” உம் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை. இது இவ்வாறிருக்க புதிய அரசமைப்புப் பற்றிய வாதப் பிரதிவாதங்கள் தொடங்கி விட்டன. புதிய அரசமைப்புக்கான உத்தேச வரைவில், இலங்கை பற்றிய அறிமுகமே தர்க்கத்துக்குள்ளாகியுள்ளது. “ஏக்கிய ராஜ்ஜிய” என்று சிங்களத்திலும் “ஒருமித்த நாடு” என்று தமிழிலும் குறிப்பிடப்பட்டுள்ள சொற்பதங்கள் சர்ச்சைக்குள்ளாகியுள்ளன. “ஒருமித்த நாடு” என்றால், அது சமஷ்டி அமைப்பைக் கொண்ட நாடு என்று அர்த்தமாகும் என, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறுகின்றார். இது, சிங்களப் பெரும்பான்மைக்குள் சலசலப்பை ஏற்படுத்தி விட, “அப்படியெல்லாம் ஒன்றுமில்லை; ஒருமித்த நாடு என்றால், ‘ஒற்றையாட்சி நாடு’ என்றுதான் அர்த்தம்” என, ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்திருக்கிறது. அப்படியென்றால், ஒற்றையாட்சி முறைமையை, தமிழர் தரப்பு ஏற்றுக் கொள்ளுமா எனும் கேள்வி இங்கு எழுகிறது.   

இந்தத் தடைகளையெல்லாம் தாண்டி, புதிய அரசமைப்பொன்று உருவாக்கப்படுமாயின், அதில், சிறுபான்மை சமூகங்கள் தமக்கான தேவைகளை உள்ளடக்க வேண்டியமை அவசியமாகும். அந்த வகையில், தமிழர் சமூகம் சார்பாக, அவர்களின் அரசியல் பிரதிநிதிகள் இதற்காக முழு மூச்சுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றமையைக் காண முடிகிறது. குறிப்பாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் அந்தக் கட்சியிலுள்ள சுமந்திரன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழர்களுக்கு அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளும் வகையிலான அரசமைப்பொன்றைப் பெற்றுக் கொள்வதில் கடுமையாக உழைக்கின்றனர்.  

ஆனால், முஸ்லிம் அரசியல் தலைமைகள் இந்த விடயத்தில் என்ன செய்கின்றனர் எனத் தெரியவில்லை. முஸ்லிம் அரசியல் தலைவர்கள், வழமைபோல் அரசியல் செய்து கொண்டிருப்பதையே காண முடிகிறது. வடக்கும் கிழக்கும் இணைந்த மாநிலத்தை, புதிய அரசமைப்பினூடாக, தமிழர்கள் கோருகின்றனர். அதேவேளை, தமிழர்களின் அபிலாசைகளுக்குக் குறிக்கே நிற்கப் போவதில்லை என்று, மு.காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்திருக்கின்றார். அப்படியென்றால், வடக்கு - கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்குமா என்று பலரும் கேட்கின்றனர். இதற்குரிய பதிலை, மு.காங்கிரஸ் தலைவர் இன்னும் கூறவில்லை.  

மறுபுறம், முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணம் கிடைக்கப் பெறும் போதுதான், அதிகாரப் பரவலாக்கல் அர்த்தமுள்ளதாக அமையும் என்று, மூத்த அரசியல்வாதியும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமுமான எம்.ரி. ஹசன் அலி கூறியிருக்கின்றார். மறைந்த தலைவர் அஷ்ரப்பின் கோரிக்கையும் அதுவாகவே இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  

“அப்படியென்றால், கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள்தானே இப்போது பெரும்பான்மையாக இருக்கின்றனர் புதிதாக, முஸ்லிம் பெரும்பான்மை மாகாணம் எதற்கு” என ஹசன் அலியிடம் கேட்டோம். அதற்கு அவர், “கிழக்கு என்பது - முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற மாகாணமே தவிர, முஸ்லிம்களின் மாகாணமல்ல. கிழக்கு மாகாணத்தில், தனி இனமாக முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள போதும், அங்குள்ள ஏனைய இனத்தவர்களை மொத்தமாகச் சேர்த்தால், அவர்களின் எண்ணிக்கை முஸ்லிம்களை விடவும் பெரும்பான்மையாக அமைந்து விடும். எனவேதான், ஏனைய சமூகங்களை விடவும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும், நிலத் தொடர்பற்ற ஒரு முஸ்லிம் மாகாணம் வழங்கப்பட வேண்டும்” எனக் கூறினார்.   

எது எவ்வாறாயினும், தமிழர்கள் தமக்குரிய தாயக நிலமாக வடக்குக் கிழக்கு மாகாணங்களை இணைத்துக் கேட்கின்றமை போல், முஸ்லிம்களுக்குரிய நிலமாக முஸ்லிம் அரசியல் தலைவர்கள், இதுவரை எதையும் கோரவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.   

முஸ்லிம் தலைவர்களின் இந்த அலட்சிய அரசியலுக்கு எதிராக, முஸ்லிம் சமூகத்தினுள்ளிருந்து எத்தனை எதிர்க் குரல்கள் எழும் எனத் தெரியவில்லை. அரசியலை உணர்வுபூர்மாக அணுகும் ஒரு சமூகத்திலிருந்து, ஒரு திரட்சியான எதிர்ப்பை, அத்தனை இலகுவில் எதிர்பார்க்கவும் முடியாது.  

நிலத் தொடர்பற்ற முஸ்லிம் மாகாணம்

முஸ்லிம் பெரும்பான்மை மாகாணமொன்று கிழக்கில் நிலத்தொடர்பற்ற முறையில் கிடைத்தால் மட்டுமே, அதிகாரப் பரவலாக்கல் என்பது அர்த்தமுள்ளதாக இருக்கும் என, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹசன் அலி தெரிவித்தார்.   

நிலத் தொடர்பற்ற வகையில் இந்தியாவிலுள்ள பாண்டிச்சேரி மானில அமைப்பை ஒத்ததாக, முஸ்லிம்களுக்குரிய பெரும்பான்மை அமைய வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.  
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,   

“முஸ்லிம்களுக்கு நிலத்தொடர்பற்ற பெரும்பான்மை மாகாணமொன்று கிடைக்க வேண்டும். இதைத்தான் முஸ்லிம் பெரும்பான்மை மாகாணம் வேண்டும் என்ற கோரிக்கையில், மறைந்த தலைவர் அஷ்ரப் தெளிவுபடுத்தியிருந்தார்.   

“இக்காலகட்டத்தில் தமிழர் தரப்பு தங்களது உரிமைகள் பற்றி மிகவும் லாவகமாக தைரியத்துடன் காய்களை நகர்த்திக் கொண்டு போராடி வருகின்றனர். அதேநேரம் முஸ்லிம் தரப்புகள் தங்களுக்குக்கிடைத்த அமைச்சுப் பவிகளைக் கொண்டாடுவதிலும் அபிவிருத்திப்பணிகளை முடுக்கி விடுவதிலும் வாக்குறுதிகளைத் தாறுமாறாக வழங்கி மக்களைத் திசை திருப்பி- இலவசங்களுக்கு ஏங்கும் ஏமாளிகளாக மாற்றி வருவதனையும் காணக்கிடைக்கிறது.   

“அரசியல் யாப்பு விவகாரத்தில் முஸ்லிம்களுக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என்றவாறு, நாடாளுமன்றிலுள்ள முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் நடந்து கொள்கின்றனர். உச்சக்கட்ட அதிகாரப்பகிர்வு, மாகாணங்களுக்குக் கிடைக்கும் போது, அங்கு வாழும் சமூகங்கள் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய அனுகூலங்களை நியாயமான முறையில் பகிர்ந்து கொள்ளும் பொறிமுறையையும் சமூகம் சார்ந்த விடயங்களில் பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். 

“நாட்டிலுள்ள 09 மாகாணங்களிலும் சிறுபான்மையினருக்குரிய சகலவிதமான பங்கீடுகளும் பாதுகாப்பும் - யாப்புரீதியில் உறுதிப்படுத்தப்படாதவரை, எமக்கு பாகுபாடுகள் ஏற்படும்போது, நீதிமன்றங்களுக்குச் சென்றும் கூட, எமக்குரிய உத்தரவாதங்களை நிலைநிறுத்திக் கொள்ள முடியாது போகும்.   

“வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை தமிழ் சமூகம் எப்போதும் அரசியல் அதிகாரங்களைத் தங்களது ஒற்றுமையின் காரணமாக மிகவும் உறுதியாக தக்கவைத்துக்கொன்டு வருகின்றனர். தமிழர் தலைமைகள் அமைச்சுப்பதவிகளுக்கும் அபிவிருத்தி என்ற மாயைக்கும் மயங்கி பெரும்பான்மைக் கட்சிகளுடன் இணைந்து தம்மை மலினப்படுத்திக்கொள்வதில்லை.  

“எனினும் அவர்களது பிரதேசங்களில் சிறந்த முறையில் அபிவிருத்தி வேலைகளும் மற்றும் அரச பணிகளும் அப்பழுக்கில்லாமல் நடைபெற்றும் வருகின்றன. பட்டம் பதவிகளைக் காட்டி, யாரும் அவர்களை விலைபேச முடியாதவாறு, தங்களது தலைவர்களையும் வழிநடத்துபவர்களாக வாக்காளர்கள் மாறியுள்ளார்கள்.  

“ஆனால், முஸ்லிம்கள் மிகவும் செறிந்து வாழும் ஒரேயொரு மாகாணமாகிய கிழக்கிலும் கூட, முஸ்லிம்களாகிய நாம் - நமது நிலைமையை மிகவும் பரிதாபகரமாக மாற்றிக்கொண்டுள்ளோம். முஸ்லிம்கள் மாகாண மட்டத்தில் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு கிழக்கில் நிலத்தொடர்பற்ற வகையில் முஸ்லிம் பிரதேசங்களை ஒன்றிணைத்து ஒரு மாகாணத்தைப் பெற்றுக்கொள்ளும் யோசனையை தலைவர் அஷ்ரப் முன்வைத்தார்.  

“அந்த யோசனைகள் பற்றி எவரும் கரிசனை கொள்வதாகத் தெரியவில்லை. தலைவர் இந்தக் கோரிக்கைக்கு உயிர்கொடுத்தால் மட்டும்தான், வடக்கு - கிழக்கில் தமிழ்பேசும் முஸ்லிம்களும் தமிழர்களும் பரஸ்பரம் பலமான ஓர் அரசியல் பிராந்தியத்தைப் பெற்றுக்கொண்டு நிம்மதியாக வாழ முடியும்.   
“எனவேதான் அரசமைப்பு விவகாரம் பற்றிய யோசனைகள் ஆராயப்படும் இக்காலகட்டத்தில், அரசமைப்பில் முஸ்லிம் பெரும்பான்மை மாகாணக் கோரிக்கை உள்ளடக்கப்படுவதற்கு எமது தரப்பு குரல்கொடுக்க வேண்டும். இவ்விடயம் முதன்மைப்படுத்தப்படாமல் வெறுமனே அதிகாரப்பரவலாக்கலைக் கோருவதில் எவ்வித அர்த்தமும் இல்லை” என்று கூறினார்.   

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/முஸ்லிம்-சமூகமும்-உணர்ச்சி-அரசியலும்/91-228057

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.