Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

டட்லி - செல்வா ஒப்பந்தம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டட்லி - செல்வா ஒப்பந்தம் -(கவீரன்)

[15 - April - 2007]

ஸ்ரீமாவோ அம்மையாரின் முதல் ஆட்சிக் காலம் இன்னுமொரு கைங்கரியத்தையுஞ் செய்தது. அது தமிழ் மக்களுக்கு ஒருவிதத்தில் பாதிப்பையே ஏற்படுத்துவதாக அமைந்தது. அக்கால கட்டத்தில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடியிருந்த அறிவில் சிறந்த சிரேஷ்ட இடதுசாரித் தலைவர்கள் பலர் அரசியலில் இருந்தார்கள். லங்கா சமசமாஜக் கட்சி (LSSP), பொல்ஷெவிக்- லெனினிஸ்ட்கட்சி (BLP), கம்யூனிஸ்ட் கட்சி (CP) ஆகியன 1947 ஆம் ஆண்டுத் தேர்தலில் 21 சதவீத ஆசனங்களைப் பெற்றிருந்தன. அவர்களின் தேர்தல் வெற்றிகள் நாடு சுதந்திரம் அடைந்தபின் படிப்படியாகக் குறைந்து வந்தன. 1956 இல் பண்டாரநாயக்கா இடதுசாரிக் கொள்கைகளை அண்மிப்பதாகத் தனது நோக்குகளை முன்வைத்ததால் பல இடதுசாரி வாக்காளர்கள் பண்டாரநாயக்காவின் கட்சிக்கு ஆதரவு அளித்ததால் 1956 ஆம் ஆண்டுத் தேர்தலில் 15 சதவீத ஆசனங்களையே இடதுசாரிகள் பெற்றனர். 1960 இல் இது மேலும் குறைந்தது. 10 சதவிகித இடதுசாரிகளே மக்களால் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டனர்.

1964 ஆம் ஆண்டில் மே தினமன்று (01.05.1964) ஸ்ரீமாவோ அம்மையார் தமது கட்சிக்கும் இடதுசாரிகளுக்கும் இடையில் ஐக்கியம் அவசியம் என்றார். லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர்கள் தமது முதுமையை நெருங்கிக் கொண்டிருந்தனர். அதனாலோ என்னவோ அரசாங்கத்தில் சேர்ந்து மக்களுக்கு நன்மை செய்ய ஸ்ரீமாவோவின் ஐக்கியப்பாட்டுக் கோரிக்கைக்குச் சாதகமாகப் பதில் அளிக்க வேண்டும் என்றுகூறி அவருடன் சேரத் தமது கட்சியை தயார்படுத்திக் கொண்டனர். அம்மையாருடன் சேருவதானால் தமது அரச மொழி நிலைப்பாட்டில் மாற்றங்கள் செய்யவருமே என்பதை பெரிதாக அவர்கள் சிந்திக்கவில்லை. காரணம் அவர்களைக் கண்டிக்கக்கூடிய அளவு தமிழ் வாக்காளர்கள் அவர்கள் பக்கம் இருந்ததில்லை. "சிங்களம் மட்டும்" சட்டம் வந்தபோது "ஒரு மொழி இரு நாடுகள், இரு மொழிகள் ஒரு நாடு" என்று கூறி உள்ளூர் மொழிகள் இரண்டுக்கும் சம உரிமை அளிக்க வேண்டும் என்று வாதிட்ட சமசமாஜத் தலைவர்கள் அம்மையாரின் மொழி நிலைப்பாட்டை அதாவது "சிங்களம் மட்டும்" என்ற நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டனர். தமிழ்ப் பேசும் மக்கள் பெருவாரியாகத் தமக்கு ஆதரவு தரவில்லைத்தானே என்று யோசித்தே அவர்கள் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டனர் என்பது என் கருத்து.

இதனால் கட்சியில் பிளவு ஏற்பட்டது. எட்மன்ட் சமரக்கொடி, தற்பொழுதும் வாழும் முதிர்ந்த தொழிற்சங்கவாதி பாலா தம்பு ஆகியோர் கட்சியை விட்டு வெளியேறினர். "கொள்கையே முக்கியம். ஒரு சில மந்திரிப் பதவிகள் அல்ல" என்றனர் அவர்கள்.

1964 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11 ஆம் திகதி ஸ்ரீமாவோவின் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்தது லங்கா சமசமாஜகட்சி. அக்கட்சியில் இருந்த மூன்று பேருக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டன. காரசாரமாக அவர்கள் எதிர்த்த "சிங்களம் மட்டும்" சட்டத்தை இப்பொழுது நடைமுறைப்படுத்தும் பொறுப்பு லங்கா சமசமாஜக் கட்சிக்கு ஏற்பட்டது. "மதம் மக்களின் அபின்" என்ற இக்கட்சி பௌத்தத்திற்கு முக்கிய இடம் வழங்கவேண்டுமென்ற கொள்கையை ஏற்றது. பதவி ஆசை யாரைத்தான் விட்டது? அப்போதைக்கு கம்யூனிஸ்ட் கட்சி சேராதிருந்தது. இதற்குக் காரணம் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி சோவியத் யூனியனுக்கு அண்மித்த ஒரு கட்சி. ஷ்ரீமாவோ மற்றைய கம்யூனிச நாடான சீனாவுடன் கூடிய நல்லுறவு வைத்திருந்தார்.

இடதுசாரியினர் உள்ளே நுழைய ஸ்ரீமாவோவின் கட்சியின் வலதுசாரியினர் மனவெறுப்படைந்தனர். பாராளுமன்ற அரச சபைத் தலைவர் சி.பீ.டி சில்வாவுடன் சேர்ந்த 17 பேர் அரசாங்கத்தைவிட்டு வெளியேறி அரசாங்கத்திற்கெதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை ஆதரித்தனர். அரசாங்கம் ஒரு மேலதிக வாக்கினால் கவிழ்ந்தது.

1965 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் ஐ.தே.கட்சி 66 ஆசனங்களையும் ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 41 ஆசனங்களையும் தமிழரசுக் கட்சி 14 ஆசனங்களையும் ல.ச.ச. கட்சி 10 ஆசனங்களையும் கைப்பற்றின. மற்றைய கட்சிகள் 20 ஆசனங்கள் பெற்றன. இந்தத் தேர்தலின்போது வாக்குரிமை 21 வயதில் இருந்து 18 க்கு இறங்கியது. சுமார் பத்து இலட்சம் இளைஞர்கள் இத்தேர்தலின்போது முதன்முதலில் வாக்களித்தனர்.

151 ஆசனங்களில் 76 ஆசனங்கள் இருந்தால்தான் அரசாங்கத்தை நடத்த முடியும். மிகுதி ஆசனங்களுக்கு மற்றக் கட்சிகளின் ஆதரவைத்தேட வேண்டியிருந்தது. ஐ.தே.கட்சிக்கு அரசமைக்கும் பங்காளியாக தமிழரசுக் கட்சி முன்வந்தது.

1965 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி டட்லி சேனாநாயக்காவுக்கும் செல்வநாயகத்திற்கும் இடையில் உடன்பாடு ஒன்று ஏற்பட்டது. அதுதான் டட்லி- செல்வா ஒப்பந்தம். அதன்படி

(i) வடக்கு- கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழியே நிர்வாக மொழியாகவும் ஆவணங்கள் பதிவு செய்யும் மொழியாகவும் ஏற்கப்பட்டது.

(ii) வடக்கு- கிழக்கு நீதிமன்றங்களில் தமிழ் மொழி பாவிக்கப்பட உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவாதம் தரப்பட்டது.

(iii) பிரதேச ஆட்சிமுறை மன்றங்கள் தாபிக்கப்பட வேண்டும் என்று ஏற்கப்பட்டது. அவற்றிற்கடங்கலான விடயங்கள் இரு தலைவர்களாலும் பின்னர் நிர்ணயிக்கப்படவிருந்தது.

(iv) காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழ் காணிப்பங்கீடு சம்பந்தமாகப் பின்வரும் விடயங்கள் முக்கியமாகக் கருத்துக்கெடுக்க உடன்பாடு ஏற்பட்டது.

அவையாவன-

(i) வடக்கு- கிழக்கு மாகாணங்களில் இருக்கும் அரசாங்க நிலங்கள் முதற்கண் அப்பிரதேசக் காணியில்லா குடியானவர்களுக்கே ஒதுக்கப்பட வேண்டும்.

(ii) இரண்டாவதாக அவ்வாறு காணிபெற ஏற்றவர்கள் இல்லாத பட்சத்தில் வடக்கு- கிழக்கு வாழ் மக்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.

(iii) மூன்றாவதாக நாட்டின் மற்றைய குடிமக்களுக்கு ஒதுக்கப்படலாம். ஆனால், முன்னுரித்து நாட்டில் வாழ் தமிழ் பேசும் மக்களுக்கே வழங்கப்பட வேண்டும்.

கிட்டத்தட்ட பண்டா- செல்வா உடன்பாட்டில் இடம்பெற்ற ஷரத்துகளே வேறுவிதமாக இந்த உடன்பாட்டில் உட்புகுத்தப்பட்டன. முன்னைய உடன்பாட்டில் பிரதேச சபைகள் உருவாக்கப்படல், வடகிழக்கில் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தல், தமிழ் மொழி உத்தியோகபூர்வ மொழியாக அங்கீகாரம் பெறல், வடகிழக்கின் மாகாண மொழியாகத் தமிழ் மொழி ஏற்றுக் கொள்ளப்படல் மேலும் நாட்டின் எப்பாகத்தில் இருக்குந் தமிழர்களும் தமது குழந்தைகளைத் தமிழில் பயிற்றுவிக்கவும், தமிழ் பண்பாட்டில் வளர்த்தெடுக்கவும் இருந்த உரித்து பாதுகாக்கப்படல் போன்ற விடயங்கள் இடம்பெற்றன.

ஆக மொத்தம் இக்காலகட்டத்தில் வடகிழக்கில் திட்டமிட்ட அரசாங்கக் குடியேற்றமும் தமிழ் மொழிப் புறக்கணிப்புமே தமிழர்களின் முக்கிய பிரச்சினைகளாக இருந்து வந்தன என்பதை காணக்கூடியதாக இருக்கின்றது. தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் திட்டமிட்டு தமிழர்கள் காலாதிகாலமாக வாழ்ந்து வந்த இடங்களைச் சிங்களக் குடியேற்றவாசிகளுக்குக் கொடுக்க முன்வந்தமையும், சிங்களம் மட்டுஞ் சட்டத்தால் வடக்கு, கிழக்கில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதுமே இப்பேர்ப்பட்ட உடன்பாடொன்றிற்கு வழிகோலியது. இந்த இரண்டு காரணங்களுமே நியாயமற்ற காரியங்கள். உள்ளூர்வாசிகள் எமக்கு வேண்டாம் என்று கூறும்போது வெளியூர்வாசிகளைக் கொண்டு வந்து குடியேற்றலாம். ஆனால், வேண்டுமென்றே தொடர்ந்துவந்த அரசாங்கங்கள் வடகிழக்கு மாகாண நிலங்களை ஆக்கிரமிக்கும் விதத்தில் வெளியூர் வாசிகளைக் கொண்டு வந்து வடகிழக்கு மாகாணங்களில் குடியமர்த்தினர்.

தமிழர் செறிந்து வாழும் இடங்களில் தமிழ் மொழி பாவிப்பு மொழியாக ஏற்கப்படாமல் பிறிதொரு மொழியை அங்கு உட்புகுத்தலும் நியாயமற்ற செயலே. ஆகவே, நியாயமற்ற செயல்களில் தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் ஈடுபட்டதாலேயே இப்பேர்ப்பட்ட ஒப்பந்தங்களினூடு அப்பிழையான செயல்களைத் தடுத்து நிறுத்த நேர்ந்தது. ஆனால், பல சிங்களவர்கள் அவ்வாறு நினைக்கவில்லை. இன்றும் நினைப்பதில்லை.

"இலங்கை எங்கள் நாடு; தமிழர்கள் கள்ளத் தோணியில் வந்து அண்மையில் இறங்கியவர்களே. அவர்களுக்கு நாம் கொடுக்கும் சலுகைகள் எவையோ அதை மட்டுமே அவர்கள் பெற உரித்துடையவர்கள். அதற்கு மேல் அவர்களுக்கு எதுவுமே கொடுக்கவிடமாட்டோம்" என்றே எண்ணுகிறார்கள். இதற்கேற்றாற்போல் கடந்த சில தசாப்தங்களாக சரித்திரத்தையே மாற்றி எழுதிவருகிறார்கள். இதுபற்றி முன்னர் குறிப்பிட்டுள்ளேன்.

உடன்பாட்டைத் தொடர்ந்து மூன்றாந் தடவையாக டட்லி பிரதமர் ஆனார். பின்னர் நடந்தவற்றை அடுத்தவாரம் பார்ப்போம்.

மூலம் - தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.