Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அர்த்தநாரிஸ்வரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சிறுகதை / நன்றி காணிநிலம் காலாண்டிதழ்
iru%2B1.jpg
 
அர்த்தநாரிஸ்வரி
எஸ். சங்கரநாராயணன்
 
டது மார்பில் லேசாய் ஒரு கல் தன்மை இருந்தது போல் தோன்றியது பார்வதிக்கு. உடம்பில் நரம்புகள் முறுக்கி முடிச்சிட்டுக் கொண்டு சில இடங்களில் இரத்தம் சீராகப் பாயாமல் சதை இறுகிப் போவது உண்டு. அவளுக்குத் தொடையில் அப்படி ஒர் சதைக்கட்டி இருக்கிறது. மருத்துவரிடம் காட்டியபோது, கொழுப்பு அப்படிச் சேர்ந்து கொள்கிறது, அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம், என்றுவிட்டதில் அவளும் அதை அலட்சியப் படுத்தி விட்டாள். குளிக்கும்போது சோப்பு தேய்க்கையில் இப்போது இதை கவனித்தாள். இடது மார்பின் சதைத் திரளில் அவள் கைக்கு சற்று அந்தக் கல், நெகிழ்ந்து கொடுக்காத களிமண்ணாய் நிரடியது.
எழுந்த ஜோரில் குதிரையின் வேகம் பெறுகிறார்கள் பெண்கள். இப்பவாவது பரவாயில்லை, ஷில்பா வளர்ந்து விட்டது. தன் காரியம் தானே பார்த்துக் கொள்ள துப்பு வந்தாச்சி. இல்லாவிட்டால் காலையில் அவளை எழுப்பி பல் தேய்த்து விடுவது முதல் அம்மா கூடநிற்க வேண்டும். இப்போது ஷில்பா ஏழாவது படிக்கிறாள். பதின்வயதுப் பருவம். மெல்ல மொட்டு ஒன்று விரிவதை உணர்கிற பருவம் அது. காலையில் ஷில்பாவை இன்னும் அம்மாதான் எழுப்பி விட வேண்டியிருக்கிறது. லேட்டானால் அம்மாவிடம், “ஏம்மா என்னை எழுப்பல? நேத்தே சொன்னேனே?” என்று முகத்தைச் சுருக்கும். காலம், பிள்ளைகளுக்கு பயப்படுகிற காலம் ஆயிற்று.
 
இரண்டு பர்னர் அடுப்பில், காபி, குழம்பு, குக்கர், டிபன்… என, மியூசிகல் சேர் போல, பரபரக்கும். சமையல் அறையிலேயே, பலசரக்கு வைக்கிற அலமாரியில் தனி தட்டு ஒன்றில் மீனாட்சி படம். பிள்ளையார், முருகர் எனப் படங்கள். இரண்டு பக்கத்திலும் சின்ன குத்துவிளக்கு இருக்கும். வெள்ளிகளில் தவிர மற்ற நாட்களில் நேரம் இருந்தால், கடவுள்களுக்குக் கொடுப்பினை இருந்தால், விளக்கேற்றுவாள். வெள்ளிக் கிழமை ஏற்ற என்றே விளக்கும் வெள்ளியில் வைத்திருப்பதாகத் தோணும்.
 
தோளில் துண்டை உருவிக்கொண்டபடி குளிக்க ஓடுகையில், முதல் நாள் அந்தக் கட்டியை கவனித்தாலும் ச் என அலட்சியப் படுத்தினாள். ரெண்டாம் நாள் வாக்கில் டாக்டரிடம் போக வேண்டும் என்று நினைத்துக் கொண்டபடியே சோப்பு தேய்த்துக் கொண்டாள். விசுவிடம் சொல்ல அதன் பிறகும் நாலைந்து நாள் ஆகிவிட்டது. இராத்திரி அவன் நேரங் கழித்து வருவான். சாப்பிடுகையில் டிவியில் செய்தி பார்ப்பான். அப்போது பார்த்து, கூட வீட்டுச் செய்திகளையும் பரிமாற வேண்டியிருக்கும். விட்டால், சாப்பிட்ட ஜோரில், அவள் இரவின் கடைசிகட்ட வீட்டு வேலைகளை முடித்துவிட்டு வருவதற்குள், ஷில்பா பக்கத்தில் போய்ப் படுத்து நிமிஷமாய்த் தூங்கி விடுவான். அத்தனைக்கு வேலை என அலுவலகத்தில அவனைப் பிழிந்தெடுத்தார்கள். அப்படியே ஒருவாரம் அந்தச் சேதி பரிமாற விட்டுவிட்டது.
 
வெளியே பார்க்க வித்தியாசமாய்த் தெரிகிறதா, என்று கண்ணாடி வைத்துக்கொண்டு பார்த்தாள். தெரியவில்லை. அழுத்தினால் பால்கொழுக்கட்டை போல உள்ளே. ஒரு கோலிகுண்டாய் சதைத் திரட்சி. ஒண்ணும் விசேஷமா பயப்படறா மாதிரி இருக்காது, என்று சொல்லிக் கொண்டபடியே துண்டால் துடைத்துக்கொள்ள ஆரம்பித்தாள். துதிப்போர்க்கு வல்வினை போம். துன்பம் போம். இந்தக் கட்டியும் போம்… சிரிக்காதே. நேரமாகிவிட்டது. வெளியே வந்தபோது விசு கண்டுபிடித்து விட்டான். முழுக்கைச் சட்டை மணிக்கட்டு பட்டனை மாட்டிக்கொண்டபடியே “என்ன சிரிச்சிக்கிட்டே வெளியே வரே?” என்றான். வெட்கமாய்ப் போயிற்று.
 
பார்வதிக்கு எடுப்பான மார்புகள். சிறுத்த இடையின் எழுச்சிகள் என தனித்து கொடியில் (காமக்கொடி) மொட்டாய்க் காணும். தன் அழகையிட்டு பார்வதிக்கு கல்லூரிக் காலத்தில் இருந்தே சிறு பெருமை உண்டு. அவளுக்கு ஆப்த தோழி சியாமளாவுக்கு அவளைப் பார்க்கப் பொறாமை. அவளது மார்புகள் சிறியவை. ஸ்வாமிக்கு என தனியே கொஞ்சூண்டு எடுத்துக் காட்டிய நைவேத்தியம் போல. (அவள் கணவன் பேரே ஸ்வாமிநாதன்.) ஆனால் பிற்காலத்தில் அவளுக்குக் கல்யாணமாகி குழந்தை பிறந்தபோது அவளிடம் தான் அதிகம் பால் சுரந்தது. பாருவுக்கு நாலைந்து மாதத்திலேயே பால் சத்து வறண்டு விட்டது. “பார் என்னைப் பார்”ன்றா மாதிரியே இருக்கியேடி, என்று சியாமளா அவளைப் பார்த்துப் பெருமூச்சு விடுவாள். உன்னைக் கட்டிக்கப்போறவன் அதிர்ஷ்டக்காரன், என்றுகூடச் சொல்வாள். சியாமளாவின் குழந்தை என் குழந்தையை விட அதிர்ஷ்டம் செய்தது, என நினைத்துக் கொண்டாள் பார்வதி. எப்ப சென்னை வந்தாலும் சியாமளா அவளை வந்து பார்க்காமல் போக மாட்டாள்.
 
அன்றைக்குப் பார்த்தாள், இந்தக் குட்டி ஷில்பா, சின்னப்பெண் என்றல்லவா இவளை நினைத்துக் கொண்டிருந்தேன். குளித்துவிட்டு ஷிம்மிசில் வந்தது. கண்ணாடி முன்னால் நின்று என்ன தோணியதோ நெஞ்சை உற்றுப் பார்க்கிறது. உடம்பின் புதிய திரட்சியும் மேடு பள்ளங்களுமாக காலம் அவளை வளர்த்தெடுத்துக் கொண்டிருப்பதை ஒரு பரவசத்துடன் கவனிக்கிற சூட்சுமம் ஷில்பாவுக்கு வந்து விட்டாப் போலிருந்தது. இனி அவளிடம் நாம், பெரியவர்கள் சொல்லிக் கொடுத்ததாக அல்லாமல், தன்பாவனைகள், அபிப்ராயங்கள் வளர ஆரம்பிக்கும் என்று இருந்தது. தானே தன் கனவு வலையைப் பரத்தி மீன் பிடித்தல்.
 
ஷில்பா இப்போது குளிப்பாட்டி விட அம்மாவைக் கூப்பிடுவதையே நிறுத்தியாகி விட்டது. உடல் தன் சொத்தாகி விட்டது அதற்கு. அதை மற்றவர் பார்க்க வெட்கப் பட்டாப் போல. அதன் அந்தரங்கம் ஒரு பூ போல மலர, கண்ணுக்குத் தெரியாமல் நாசிக்கு வாசனை தட்டுகிறாப் போன்று மற்றவர் அதை ரசிக்கிற பருவம். தன்னைப் பற்றி தனக்கு மாத்திரமே சில விஷயங்கள் புரிகிற பாவனை அது. பருவம் மாயக் கதவுகளைத் திறந்து இன்னொரு இடத்துக்கு அவளை அழைத்துச் செல்கிறது. தலைக்கு ஷாம்ப்பூ கூட தானே தேய்த்துக் கொள்கிறாள். தனியே ஒரு பூரிப்பு அவளிடம் வந்திருந்தது இப்போது. கன்னங்களில் சிவப்பு ஏறி சிரிப்பே அவ்வளவு ஒளிர்ந்தது. குதிரைவால் அசைய துள்ளலான அவள் நடை. பார்வதிக்கு தன் பால்ய காலங்கள் நினைவுக்கு வந்தன. உலகம் பெண்களால் அழகு பெறுகிறது. ஏ ஆண்களே, வேடிக்கை பாருங்கள்.
 
அதன்பின்னான நாலாம் நாள் விசுவே கேட்டான். “இன்னும் போகல்ல,” என்றாள். அலட்சியம் பண்ணக்கூடாது. டாக்டர் கிட்டக் காட்டிறணும், என்றான் விசு. என்றாலும் அவனால் கூடவர முடியவில்லை. அடுத்த ரெண்டாவது நாளில் அவள் குளிக்கிற போது அந்தக் கட்டியை நிரடிப் பார்த்தாள். வலித்தது. இதுவரை வலிக்கவில்லை. இப்போது தொட்டால் வலித்தது. டாக்டரிடம் போகாமல் முடியாது போலிருந்தது. அவள் டாக்டரிடம் போனால் துணைக்கு என்று எப்பவும் அவளது அலுவலக சிநேகிதி சந்திரா தான் வருவாள். ரெண்டு மூணு நாளா அவளுக்கு வர ஒழியவில்லை. வேலைகளை அன்று பார்வதி விறுவிறுவென்று முடித்தாள். நாலரை மணிக்கு மேனேஜர் வெளியே கிளம்ப வேண்டியிருந்தது, என்று அவரது கடிதங்களை விரைந்து அடித்துக் கொடுத்தாள். அதைத் திருத்தி அவர் கையெழுத்து இட்டுவிட்டுக் கிளம்பிப் போனதும் அவளுக்கு வேலையே இல்லாமல் ஆயிற்று. சரி என்று ஹெட் கிளார்க்கிடம் சொல்லிவிட்டு வீட்டுக்குக் கிளம்பினாள். பஸ் வர காத்திருக்கும் போது சட்டென்று யோசனை. மணி பார்த்தாள். நாலு ஐம்பது. புரசைவாக்கம் போகலாமா? டாக்டர் நளினி ஆறு ஆறரைக்கு வருவாள். ஷில்பா பிறந்தபோது பிரசவம் பார்த்தவள் அவளே. எப்படியும் இங்கேயிருந்து போக முக்கால், ஒருமணி நேரம் எடுக்கும். எங்காவது ஹோட்டலில் காபி சாப்பிட்டுவிட்டுப் போனால், அதிகம் காத்திருக்காமல் அவளைப் பார்த்து விடலாம். ஐந்தரையில் இருந்தே ஒரு உதவியாளினி டோக்கன்கள் வழங்க ஆரம்பித்து விடுவாள்.
 
பஸ் நிறுத்தத்தில் பூக்காரி புன்னகைத்தாள். கெட்டியாய்த் தொடுத்த மல்லிகை. ஒருமுழம் வாங்கி பார்வதி சூடிக் கொண்டாள். வேலை முடிந்து சீக்கிரம் கிளம்ப முடிகிற நாட்கள் அற்புதமானவை. அதிகம் தாமதிக்காமல் புரசை பஸ் வந்தது. ஏறிக்கொண்டாள். கிளம்பு முன் முகம் கழுவி திரும்ப ஸ்டிக்கர் பொட்டு புதிதாய் வைத்துக் கொண்டிருந்தாள். எப்பவும் கைப்பையில் சிறு பௌடர் டின்னும் இருக்கும். பூ வேறு இன்றைக்கு. அவளுக்கே தன்னையிட்டு திருப்தி. வேலைக்குச் சென்று திரும்பும் அந்த அலுப்பு சாராத முகம். ஆண்கள் அவளைப் பார்த்த பார்வையில் ஒரு ஈர்ப்பு இருந்தது. எனக்கு ஏழாவது படிக்கிற பெண் இருக்கிறாள், என்று சொல்லி விடலாமா, சிரிச்சிறாதே சனியனே.
 
டோக்கன் வாங்கிக்கொண்டு பிறகு வெளியே காபி சாப்பிடப் போகலாமா என்று கூடத் தோன்றியது. அவள் போகவும் டாக்டர் நளினி அப்பதான் உள்ளே நுழைகிறாள். அவளது மாலை வணக்கத்தை தலையாட்டி ஏற்றுக்கொண்டபடி உள்ளே மருத்துவசோதனை அறைக்குப் போனாள். டாக்டர் வந்ததில், காத்திருந்த இரண்டு பேர் எழுந்து நின்றார்கள். வேறு டாக்டர் யாராவது இந்த டாக்டரைப் பார்க்கச் சொல்லி பரிந்துரை செய்திருந்தால் டாக்டர் நளினி சீக்கிரம் வருவது உண்டு.
 
அதிகம் காத்திருக்க நேரவில்லை. அவள் முறை பத்தே நிமிடத்தில் வந்தது. டாக்டர் அவள் உள்ளாடையைக் கழற்றச் சொன்னாள். வலிக்குதா? வலிக்குதா, என்றபடி டாக்டர் அவளது திரட்சியை அமுக்கி அமுக்கிக் கொடுத்தாள். எந்தப் பக்கம்? “இடது பக்கம் டாக்டர்.” ம். இங்கதான். இல்லியா?... என்று கண்டுகொண்டாள். வலி இருக்கா? “லேசா…” எப்பலேர்ந்து இது? “தெரியல டாக்டர். ஒரு பதினஞ்சு இருபது நாளா…” அடாடா. உடனே வர்றதில்லையா?... என்றாள் டாக்டர். போய்க் கையைக் கழுவிக் கொண்டாள். அதுவரை உள்ளாடையை மீண்டும் அணியாமல் பார்வதி காத்திருந்தாள். டாக்டர் திரும்பிப் பார்த்து விட்டு போட்டுக்கலாம், என்றாள். “தொடையில் இப்பிடி ஒரு கொழுப்புக் கட்டி… நீங்க கூட…” அது வேற. இது வேறம்மா. சில டெஸ்ட்டும் பண்ணிப் பாத்திருவம், சரியா? கவலைப்படாதீங்க. டாக்டர் விறுவிறுவென்று சீட்டில் சில மருந்துகள் எழுதினாள். சோதனைகளுக்கும் தனியே எழுதித் தந்தாள். கால தாமதம் செய்ய வேண்டாம். ஒரு வாரத்ல திரும்ப வந்தா நல்லது. “எது கட்டியா?” குட் ஜோக்.
ஷில்பா வீட்டுப்பாடம் எல்லாம் முடித்துவிட்டு டிவி பார்த்துக் கொண்டிருந்தது. சோபாவின் முதுகுப்பக்கம் மீறி அவள் தலை தெரிந்தது. உயரத்தில் அவள் தன் அப்பாவைக் கொள்வாள் போலிருந்தது. பள்ளிக்குப் போட்டுக்கொண்டு போன இரட்டைப் பின்னலைத் தானே தளர்த்தி பரத்தி விட்டிருந்தாள். கருத்த கேசப் பின்னணியில் முகம் தனிக் களையாய் இருந்தது. பருவ வயதில் இந்தச் சிறுமிகள் என்னமாய் ஜ்வலிக்கிறார்கள்.
 
“எதும் குடிச்சியாடி?” என்று கேட்டபடியே உள்ளே வந்தாள் அம்மா. இல்லம்மா. நீ ஏன் இன்னிக்கு லேட்டு, என்றாள் ஷில்பா. “டாக்…” என ஆரம்பித்தவள், “ஆபிஸ்ல கொஞ்சம் வேலை” என மாற்றிக் கொண்டாள். குழந்தையை பயமுறுத்த வேண்டியது இல்லை. ஃப்ரிஜ்ஜில் இருந்து எடுத்து பாலைக் காய்ச்சினாள் பார்வதி. என்ன தோணியதோ. பால் காயுமுன் திரும்பி ஸ்வாமி முன்னால் கை குவித்தாள். வெள்ளி விளக்கை ஏற்றினாள்.
 
டிவியில் எதையோ பார்த்து கெக் கெக் என்று ஷில்பா சிரிக்கும் சத்தம். டாக்டரிடம் அவர்கள் யாரும் அதிகம் போனது கிடையாது. சின்ன ஜுரம் தலைவலி என்றால் மருந்தே இல்லாத ஓய்வு. சில சமயம் மருந்துக் கடையில் சொல்லி மருந்து வாங்கி ஒரு ரெண்டு நாளில் அதுவே குணமாகிவிடும். இப்போது மருத்துவரிடம் போய்க் காட்ட வேண்டியதாகி விட்டது. மருந்துக் கடைக்காரனிடம் காட்டி மருந்து கேட்பதா? நாம் காட்டாமலேயே இந்த ஆண்கள்… உனக்கு ரொம்பதான் திமிராயிட்டதுடி, என தன்னையே அதட்டிக் கொண்டாள். டாக்டர் பயமுறுத்துகிறாளோ, என்ற யோசனைக்கு மாற்று வேண்டியிருந்தது.
 
விசு வந்ததும் அவன் சட்டையைக் கழற்றுமுன் டாக்டரைப் பார்த்துவிட்டு வந்த விவரம் சொன்னாள். ம், என தலையாட்டினான். டெஸ்ட் எதும் எழுதித் தந்தா எடுத்திரு. பாத்துக்கலாம். ராத்திரிக்கு என்ன? “தோசை. இப்பவே வார்க்கட்டுமா?” என்றாள். போயி முகம் கழுவிட்டு வந்திர்றேன். சாப்பிட்டிர்லாம். மணி எட்டாச்சே, என்றான். ஷில்பா அப்போது தான் வீடடுப்பாடம் முடித்துவிட்டு எழுந்து நின்று சோம்பல் முறித்தது. இந்த தூரத்தில் இருந்து குழல்விளக்கு வெளிச்சத்தில் அதன் வெள்ளை ஷிம்மிசின் உள்புறம் தெரிந்தது. உள்ளாடைகள் தேவைப்படும் அளவு அவள் வளர்ந்து வருகிறாள். அவள் பார்ப்பதை விசுவும் கவனித்து விட்டான். புன்னகை செய்தான். பெரியவளாயிருவா சீக்கிரம். பட்டுப்பாவாடை எடுக்க காசு எடுத்து வைக்கணும், என்றான். அவள் அவன் மூக்கைத் திருகினாள். “இதெல்லாம் கவனிக்க உங்களுக்கு நேரம் இருக்கா. ஆம்பளைக்கு இதெல்லாம் தெரியாதுன்னு நினைச்சேன்.”
 
குழந்தை சீக்கிரம் தூங்கிட்டா நல்லது, என்று சிரிக்கிற கணவனை ஆச்சர்யமாய்ப் பார்த்தாள். அவன் கூடவே ஷில்பாவும் சாப்பிட உட்கார்ந்தது. அப்பவே அதற்குக் கண்ணை சொக்கியது. ஓஹ், என சிறு கொட்டாவியும் விட்டது. நல்ல சகுனம், என்றான் அவன் அவளுக்கு மாத்திரம் புரியும்படி. “அடுப்படில வேலை கெடக்கு. ஒரு மணி ஆகும். கிரைண்டர் போடணும். அரிசி உளுந்து ஊற வெச்சிருக்கேன்.” ஐயோ அவ்ள நேரம் ஆகுமா? தூக்க மாத்திரை போல, முழிச்சிட்டிருக்கவும் எதாவது மாத்திரை இருக்கா, என்று கேட்டான் அவன்.
 
எங்க காட்டு. காட்டினாள். பாத்தா தெரியலியே? “ம்” என்றாள். பெரிசா ஒண்ணும் இராது, என்று ஆறுதலாக அவள் நெற்றியில் முத்தம் இட்டான். என்ன இன்னிக்கு பூ அமர்க்களம், என்றான் இருட்டில்.
 
டெஸ்ட்டுகள் இரண்டு மூன்று இருந்தன. முன்பே பதிவு செய்து குறிப்பிட்ட நேரத்தில் போய் அவற்றை மேற்கொள்ள வேண்டும். நிறையப் பேர் வந்தார்கள். இத்தனை பேருக்குமா கட்டி, என்று தோணியது. அவரவர் பிரச்னை அவரவர்க்கு. தவிரவும் இப்பவெல்லாம் மருத்துவர்கள் இப்படி சோதனைக் கூடங்களோடு கைகுலுக்கி எல்லாரையுமே எதாவது சோதனை என்று அனுப்பி வைப்பது சகஜமாகித்தான் விட்டது. டாக்டர் சோதனை செய்யச் சொல்லி சொல்லிவிட்டால், வேண்டாம் என தவிர்க்கவோ அதை மறுக்கவோ எப்படி முடியும். மாலையில் வந்து ரிசல்ட் வாங்கிக் கொள்ளச் சொன்னார்கள்.
 
மேமோகிராஃபி மற்றும் ஸ்கேன் என எல்லாமே ஆயிரக் கணக்கில் தான். கடைசியில் ஒண்ணுமில்லை, என்று வீட்டுக்கு அனுப்பி விடுகிறார்கள். மாலை ரிசல்ட் வாங்கிக்கொண்டு டாக்டர் நளினியைப் பார்க்கலாம் என அலைபேசியில் அழைத்தாள். டாக்டர் ரிப்போர்ட்டுகளை வாங்கிப் பார்த்தபோது, தலையாட்டிக் கொண்டாள். நல்ல சேதி சொல்லுங்க டாக்டர். அவளைப் பார்த்தபடி, மருந்து எழுதித் தந்ததை விடாமல் சாப்ட்டீங்களா, என்றாள். பார்வதி தலையாட்டினாள். இப்ப எப்பிடி இருக்கு உங்களுக்கு? “வலி அப்பிடியேதான் இருக்கு டாக்டர். இன் ஃபாக்ட்…” யுவார் ரைட், என்றாள் நளினி. இன்னொரு பெரிய டாக்டருக்கு ரெஃபர் பண்றேன். அவங்க ஒருதரம் உங்களைப் பார்த்திறட்டும்.
 
முதன் முறையாக பயம் வந்தது. “எனிதிங் சீரியஸ் டாக்டர்?” பார்க்கலாம். டாக்டர் நளினி சீதாலெட்சுமி என்ற மருத்துவருக்குப் பரிந்துரை எழுதித் தந்தாள். வயதான பெரிய மருத்துவர் சீதாலெட்சுமி. அவளே தனி ஆஸ்பத்திரி வைத்திருந்தாள். மத்த பெரிய டாக்டர்களும், ஸ்பெஷலிஸ்டுகளும் அவள் வரவழைத்தாள் அங்கே. அவளைச் சந்திக்கவும் முன்பதிவு வேண்டியிருந்தது. கிளினிக் வாசலிலேயே பெரிய சாய்பாபா படம். ஊதுபத்தி கமழ்ந்தது. நிறைய வயதான பெண்களே காத்திருந்தார்கள். எனக்கு வயதாகி விட்டதா? நாற்பத்தி ரெண்டு, மூணு அவ்வளவுதான். அங்கே இருந்தவர்களில் ஆக இளையவள் அவள் தான். மற்றவர்கள் மாமிகள். அவளும் மாமி தான். ஆனால் என்னை அக்கா என அழைத்தால் சந்தோஷப்படும் மாமி நான். இந்த மாமிகளே தலைக்கு டை அடிக்கிறார்கள். மாமி என இல்லாமல் அக்கா, என்றால் அவர்களும் சந்தோஷப்படக் கூடும்.
 
பாரு?... என்று சத்தமாய்க் குரல். முதுகில் ஒரு அடி விழுந்தது. திரும்பிப் பார்த்தால். சியாமளா. அதானே, அவளிடம் இப்படியொரு நட்பு பாராட்ட வேறு யாரால் முடியும்? “என்னடி நீ இங்க?” என்னோட நாத்தனாருக்கு பீரியட்ஸ் பிராப்ளம். சின்ன விஷயம் தான். கூட வரச் சொன்னா. வந்தேன். “அவ என்ன வேலை பாக்கறா?” ஸ்கூல் டீச்சர். ஏன்? “அப்ப அவளால பசங்களுக்கும் பீரியட்ஸ் பிராப்ளம். இல்லியா?” நீ இன்னும் அப்பிடியே இருக்கியேடி, பேச்சும் மாறல்ல. ஆளும் அதே கும்ம், என சியாமளா அவள் கையைக் கிள்ளினாள்.. “இன்னும் எத்தனை நாள் சென்னைவாசம்?” ரெண்டு மூணு நாள் இருப்பேன். என் பையன் எம். எஸ். பண்ண அமெரிக்கா போனான். நேத்தி ஃப்ளைட் ஏத்திவிட்டுட்டு வந்தேன், என்றாள். “வெரி குட். கங்கிராட்ஸ்” என்றாள் பார்வதி.
 
உனக்கென்னடி பிரச்னை. பார்வதி வாயைத் திறக்குமுன் உள்ளே அழைத்தார்கள். “இரு. வரேன்” என உள்ளே போனாள் பார்வதி. உள்ளேயும் சாய்பாபா படம், சந்தன மாலை ஆடிக் கொண்டிருந்தது. ரெண்டு கையும் ஓங்கி ஆசி வழங்கும் பாபா. டாக்டர் நளினி அனுப்பினாங்களா? குட், வாங்க உட்காருங்க. என்ன விஷயம்? அவள் பேசப் பேச டாக்டர் தலையாட்டி கேட்டுக் கொண்டாள். இப்பல்லாம் நிறையப் பேருக்கு இந்த மாதிரி ஆயிருது. பாக்கலாம். டெஸ்ட் ரிசல்ட் எல்லாம்… “கொண்டு வந்திருக்கேன் டாக்டர்” என்று எடுத்துக் கொடுத்தாள். தனியாத்தான் வந்திருக்கீங்களா? “ஆமாம் டாக்டர்…” பக்கம் பக்கமாக எல்லாம் பார்த்தாள். ஸ்கேன் படங்களை எடுத்துப் பார்த்தபடியே சொன்னாள். “சில சமயம் இந்த மாதிரி லேட்டாக் காமிக்கும்… என்றாள் டாக்டர். “என்ன டாக்டர்?”
 
பிரஸ்ட் கான்சர் மாறி இருக்கு, என்றாள் டாக்டர் சலனம் இல்லாமல். தூக்கிவாரிப் போட்டது. கவலைப் படாதீங்க. உயிருக்கு ஆபத்து இருக்காது, என்றாள் டாக்டர். ரேடியம் ட்ரீட்மென்ட் குடுத்துப் பாக்கலாம். கடைசியா வேற வழி இல்லைன்னா, பிரஸ்ட்டை ரிமூவ் பண்ணிறலாம்… எச்சில் கூட்டி முழுங்கியபடி தலையாட்டினாள் பார்வதி. லேசாய் கண் இருட்டியது. வெளியே சியாமளா அவளுக்காகக் காத்திருந்தாள். கடவுளே, நான் எப்படிச் சமாளிக்கப் போகிறேன் என்று இருந்தது. ஒருபக்க மார்பு இல்லாமல் இப்பவெல்லாம் நிறையப் பேர் இருக்கிறார்கள். கர்ப்பப் பையை எடுத்துவிட்டு இருக்கிறார்கள். ஸ்பாஞ்சு பிரா அணிந்து கொள்ளலாம். பார்க்க வித்தியாசமாத் தெரியாது. அந்த சியாமளா நல்லா இருந்த நாளிலேயே ஸ்பாஞ்சு பிரா தான்.
டாக்டரிடம் உடம்பைக் காட்டியபோது என்னென்னவோ யோசனைகள். இந்த மார்பு அடுத்த தடவை அமுக்க முடியாது. புல்லுத்தரையில் நடுவே களிமண் பாதை போல கெட்டியான உடம்பில் தழும்பு ஒன்று அடையாளம். அவ்வளவே. இனி நான் என்னை முழு பெண்ணாக உணர முடியுமா? என் கணவன்… அவனுக்கு இந்த அனுபவம் எப்பிடி இருக்கப் போகிறது? அடி உசிர் முக்கியம் இல்லியா? பாப்பம். ரேடியேஷன் கொடுக்கலாம். அதுலயே சரியாப் போகவும் வாய்ப்பு இருக்கு. “ஆனா அதெல்லாம் ஆரம்பித்தால் உடம்பு தகதகன்னு எரியும்பாங்க. தலைமுடில்லாம் கொட்டிரும்…” தபார், என்பான் அவன். ஒரு பிரச்னைன்னு ஆரம்பிக்கு முன்னமே கற்பனைக்குப் போயிறக் கூடாது. எதுன்னாலும், வரட்டும். அதை அவாய்ட் பண்ண முடியாதுன்னால், லெட் அஸ் ஃபேஸ் இட். அப்படித்தான் சொல்லுவான். நல்ல ஆறுதலான கணவன் தான். எனினும் நான் மேலே போகும் ராக்கெட் ஒண்ணொண்ணா உதிர்த்துப் போடுவதைப் போல என் அழகைக் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கப் போகிறேன்…மேலே எங்க போகிறேன் நான்? ஒரேடியா மேல போவேண்டிதான்… என்ன ஒரு செய்தியில் இத்தனை கலவரப் பட்டுவிட்டேன்.. அவளுக்கு வெட்கமாக இருந்தது.
 
பிரா போட்டுக்கோம்மா, என்றாள் டாக்டர். இனி இதுக்கே வேலை இராது போலுக்கே. விடாமல மாத்திரை சாப்பிடு. இப்ப இதெல்லாம் சகஜமாயிட்டது. என்ன பண்றது? நாங்க தான் பாக்கறோமே. வர்ற வெள்ளிக்கிழமை வரியா? “எதுக்கு டாக்டர்?” ரேடியேஷன். “சரி” என சொல்ல முடியாமல் குரல் இழுத்துக் கொண்டது. நல்லாதான் பேர் வைத்திருக்கிறார்கள். பார்வதி. மதுரை மீனாட்சிக்கு, வீர தீர பராக்கிரம மீனாட்சிக்கு மூன்று முலைகள் இருந்தனவாம். சிவபெருமானைக் கண்டதும் காதல் கொண்டு பெண்மையின் கிளர்ச்சியில் மூணாம் முலை கரைந்து அவள் பெண்மைச் சாயல் கொண்டாளாம். ஹா, நான் எனது இரண்டாவது முலையை இழக்கிறேன்.
 
இழந்து அர்த்தநாரிஸ்வரி ஆகிறேனா? சிரிப்பு வந்தது. சிரிக்கிறேனா அழுகிறேனா அவளுக்கே குழப்பமாய் இருந்தது. மருத்துவர் அறையை விட்டு வெளியே வந்தாள்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.