Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாணக்கியபுரியாக மாறிய தமிழகம்! – தேவிபாரதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சாணக்கியபுரியாக மாறிய தமிழகம்! – தேவிபாரதி

12.jpg

மக்களவைத் தேர்தல் கூட்டணிகளின் உண்மையான இலக்கு என்ன?

வருகிற மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான கூட்டணிகளை அமைப்பதில் தமிழகக் கட்சிகள் மற்ற மாநிலங்களை முந்திக்கொண்டிருக்கின்றன. அதிமுக, பாஜக, பாமக இடையே ஏற்பட்டுள்ள கூட்டணி குறித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் தேர்தலைச் சந்திக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது அதிமுக கூட்டணி.

மக்களவைத் தேர்தலோடு தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் நடைபெறுவதற்கு வாய்ப்பிருப்பதால் அதிமுகவுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இது முக்கியமான தேர்தல். குறைந்தபட்சம் எட்டு சட்டமன்றத் தொகுதிகளையாவது கைப்பற்றாவிட்டால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு பெரும்பான்மையை இழக்கும் அபாயம் இருக்கிறது. கையில் வைத்துக்கொண்டிருக்கும் ஆட்சியதிகாரத்தை இன்னும் இரண்டரையாண்டுகளுக்குத் தக்கவைத்துக் கொள்வதற்கான முன்னெடுப்புகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் அதிமுக, இந்தக் கூட்டணியின் மூலம் நம்பிக்கையுடன் தேர்தலை எதிர்கொள்வதற்கான வாய்ப்புகள் கூடியிருக்கின்றன.

12a.jpg

‘மோடியா, லேடியா?’ எனச் சவால்விட்டுக் கடந்த மக்களவைத் தேர்தலைத் தனித்து நின்று எதிர்கொண்ட ஜெயலலிதா இல்லாத நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ, அதிமுகவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமோ அவரைப் போல யாருடனும் சவால்விட்டுக் கொண்டிருக்க முடியாது அல்லவா? கட்சியில் ஏற்பட்ட பிளவுகளையும் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தினகரனிடம் தங்கள் அம்மாவின் தொகுதியைப் பறிகொடுத்ததையும் கெட்ட கனவாக நினைத்துக்கொண்டு தேர்தலைச் சந்திக்கத் தயாராகிக் கொண்டிருக்கும் அதிமுக, கடந்த இரண்டாண்டுகளில் தங்களுக்கு ஆதரவாக இருந்துவந்த பாஜகவுடன் கைகோக்காமல் வேறு என்ன செய்ய முடியும்?

தேர்தலை எதிர்கொள்வது கொள்கைகளோடு சம்பந்தப்பட்ட விஷயமல்ல. அன்புமணி ராமதாஸ் சொன்னது போல சாணக்கியத்தனமே வெற்றிக்குக் கை கொடுக்கும் என்பதை முதல்வரும் துணை முதல்வரும் தம் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்டிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கடந்த இரண்டாண்டுகளாகவே ஒருங்கிணைந்து செயல்பட்டுவரும் நிலையில் கொள்கைகளின் கடிவாளத்தில் சிக்கிக்கொள்வது ஆபத்தானது என்பதைத் தமது முன்னோடிகளான எம்ஜிஆரிடமிருந்தும் ஜெயலலிதாவிடமிருந்தும் இருவரும் கற்றுக்கொண்டிருக்க வேண்டும். அரசியல் சாணக்கியர் எனப் போற்றப்பட்ட மறைந்த திமுக தலைவர் கருணாநிதியிடமிருந்துகூட அவர்களால் கற்றுக்கொள்ள முடியும். மக்களவைத் தேர்தல்களை எதிர்கொள்வதில் அதிமுகவும் திமுகவும் எப்போதுமே எதிரெதிரான நிலைபாடுகளை எடுத்து வந்திருப்பவை. தேர்தல் கூட்டணிகளை அமைப்பதில் உத்திகளை வகுப்பதில் இரண்டு கட்சிகளுமே அரசியல் பார்வையாளர்களை ஆச்சரியத்திலாழ்த்தும், கட்சிகளிடையே குழப்பங்களை உருவாக்கும் முடிவுகளை எடுத்திருக்கின்றன.

1977, 1984, 1989, 1991, 1996 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸுடன் இயற்கையான, கொள்கை சார்ந்த கூட்டணியை அமைத்த அதிமுக, பிறகு கொள்கைகளை மாற்றிக்கொள்ளாமலேயே அவர்களுடனான அரசியல் கூட்டணியை முறித்துக்கொண்டது, 1998இல் காங்கிரஸுக்கு எதிராக பாஜகவுடன் அணி சேர்ந்தது. அதிமுகவுடனான உறவை முறித்துக்கொண்டவுடன் காங்கிரஸுடன் கொள்கை ரீதியில் உறவை ஏற்படுத்திக்கொண்டது திமுக. அதே கொள்கை சார்ந்த தேர்தல் கூட்டணியை பாஜகவுடன் ஏற்படுத்திக்கொள்ள திமுகவும் தயங்கவில்லை. கொள்கை சார்ந்த கூட்டணிகளுக்கு நியாயம் கற்பிக்கவும் கோட்பாட்டு ரீதியான விளக்கங்களை அளிக்கவும் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் உருவாக்கிய அரசியல் சொல்லாடல்களுக்குக் கணக்கே இல்லை. அவர்கள் உருவாக்கிய சொல்லாடல்களுக்குக் கொள்கை விளக்கங்களை அளிப்பதன் மூலம் கூட்டணிக் கட்சிகள் தம் இருப்பைத் தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன.

அந்தக் கொள்கைகள்தாம் அரசியல் பார்வையாளர்களாலும் ஊடகவியலாளர்களாலும் சமூக ஊடகங்களின் பதிவர்களாலும் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன, கேலி செய்யப்படுகின்றன, கடும் விமர்சனங்களுக்குள்ளாக்கப்படுகின்றன.

ஆனால், தமிழக அரசியல் கட்சிகள் ஒருபோதும் அந்தக் கேள்விகளைப் பொருட்படுத்தியதில்லை. இப்போதும் பொருட்படுத்தப்போவதில்லை. அவர்கள் தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள், கூட்டணிக் கட்சிகளுடன் பேரம் பேசிக் கொண்டிருக்கிறார்கள், வாக்கு வங்கி சார்ந்த கணக்குகளையும் சாதி சார்ந்த கணக்குகளையும் மண்டையைக் குழப்பிக்கொள்ளாமல் போட்டுப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வாக்குறுதிகளை அழிப்பதையும் தேர்தல் அறிக்கைகளைத் தயாரிப்பதைப் பற்றியும்கூட இப்போது யோசிக்க முடியாது. அது தேர்தலை ஒட்டிய சடங்கு. வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கும் காரணி அல்ல. கொள்கைகளின் அடிப்படையில் உருவான கூட்டணிகள் என்பதால் யாரும் வாக்காளர்களுக்குக் கையூட்டுத் தருவதை அலட்சியப்படுத்திவிட முடியாது.

12b.jpg

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் ஒரு கெட்ட கனவு என்பதில் சந்தேகமில்லை.

எம்ஜிஆரின் இரட்டை இலைச் சின்னத்துடன் தேர்தலைச் சந்தித்த ஆளும் அதிமுகவைப் பின்னுக்குத் தள்ளி, கருணாநிதியின் தலைமையிலான திமுகவைக் கட்டுத் தொகையைக்கூடத் திரும்பப் பெற முடியாமல் செய்த தினகரனிடம் அப்போது என்ன இருந்தது? தினகரன் மீதும் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரச் சிறையில் இருந்த அவருடைய சின்னம்மா சசிகலா மீதும் அரசியல் ரீதியில் என்ன விதமான மதிப்பு இருந்தது? தனது கொள்கையாக எதை முன்வைத்தார் தினகரன்? வாக்காளர்களுக்கு அவர் அளித்த வாக்குறுதிகள் என்ன? இதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாமல் போனால் நீங்கள் அரசியல் ரீதியில் வேதாளத்திடம் சிக்கிக்கொண்ட விக்கிரமாதித்தன் என்றுதான் சொல்ல முடியும்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு பொறுப்பேற்றுக்கொண்ட அம்மாவின் ஆட்சியைத் தொடர, அவரது கனவுகளை நிறைவேற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் படாதபாடு படுகிறார்கள். திமுகவை எதிர்கொள்வதைவிட தினகரனை எதிர்கொள்வதுதான் அவர்களுக்குச் சிக்கலானதாக மாறிக்கொண்டிருக்கிறது. தாங்கள்தான் ஜெயலலிதாவின் உண்மையான அரசியல் வாரிசுகள் என நிறுவிக்கொள்ள முற்படுகிறார்கள். ஜெயலலிதாவின் வழியில் நலத்திட்ட உதவிகளை வழங்குவது தவிர அரசு மக்களுக்கு ரொக்கமாகப் பணம் கொடுத்திருக்கிறது. பொங்கல் பரிசாக அரசு வழங்கிய 1,000 ரூபாய் தவிர வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பவர்களுக்குத் தலா 2,000 ரூபாய் சிறப்பு நிதியுதவி. யாராலும் அரசின் நடவடிக்கைகளை நேரடியாக எதிர்க்க முடியவில்லை. அரசின் கருவூலத்திலிருந்து வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதாகக் குற்றம் சுமத்தக்கூட முடியாது. அப்படி யாராவது சொன்னால், அரசின் அந்தத் திட்டம் தடைப்படுமானால் மக்களின் கோபத்திற்குள்ளாக வேண்டியிருக்கும் என்னும் அச்சம் கட்சிகளுக்கு இருக்கக்கூடும்.

12c.jpg

அதிமுகவுக்கு மாற்றாக இருப்பது என்றால் என்ன?

மதச்சார்பின்மை, மாநில உரிமைகள், அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாத்தல் போன்ற தனது பாரம்பரியமான கொள்கைகளை முன்னிறுத்துவதன் மூலம் அதிமுகவின் வெகுஜன அரசியலுக்கு மாற்றாகத் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள முற்பட்டிருக்கிறது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக. பழனிசாமி அரசை மோடியின் தலைமையிலான பாஜகவின் பினாமி அரசு என விமர்சிப்பது, ஆளுநரின் சுற்றுப்பயணங்களுக்கெதிரான போராட்டங்கள், பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா வருகைக்கு எதிர்ப்பு தவிர தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டங்களுக்கு ஆதரவளிப்பது என திமுக தமிழகத்தின் மதச்சார்பற்ற சக்திகளோடும் இடதுசாரிகளோடும் தலித் அமைப்புகளோடும் இணைந்து செயல்பட்டுவருகிறது.

ஆனால், இதுபோன்ற கொள்கை சார்ந்த செயல்பாடுகளால் தேர்தல்களில் வெற்றி பெற்றுவிட முடியும் என நம்பும் அளவுக்கு திமுக அப்பாவித்தனமான கட்சி அல்ல. பாமகவைக் கூட்டணிக்குள் கொண்டுவர முடியாமல் போனது குறித்த பதற்றம் திமுக தலைமைக்கு ஏற்பட்டிருக்கலாம். வடமாவட்டங்களில் கணிசமான ஓட்டு வங்கியைக் கொண்டிருக்கும் பாமகவைக் கூட்டுச் சேர்த்துக்கொள்வது வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்கக்கூடிய ஓர் உத்தி. அந்த உத்தியைத்தான் திமுகவிடமிருந்து அதிமுக தட்டிப் பறித்திருக்கிறது.

மதில் மேல் பூனையாக இருக்கும் தேமுதிகவை என்ன செய்வது? என்னதான் அரசியல் ரீதியில் தேமுதிகவை அரசியல் ரீதியாகக் கேலி செய்தாலும் அதன் வாக்கு வங்கியைப் புறக்கணித்துவிட முடியாது அல்லவா? திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே அந்தக் கணக்கைத்தான் போட்டுக்கொண்டிருக்கின்றன. தேமுதிக தவிர ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ், சீமானின் நாம் தமிழர் கட்சி, வேல்முருகன், கொங்கு நாடு மக்கள் கட்சி, வெவ்வேறு பெயர்களில் இயங்கிக்கொண்டிருக்கும் முக்குலத்தோர் புலிப்படைகளும் யானைப்படைகளும் எனத் தனித்தனிக் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் கண்ட இயக்கங்களும் கட்சிகளும்கூட தமிழக அரசியலில் தமக்கான இடத்தைப் பிடிக்க முண்டியடித்துக்கொண்டிருக்கின்றன.

தனித்துக் களம் காணத் தயாராகிக்கொண்டிருக்கும் கமலைவிட, வ.கௌதமன் அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கிவிட்டார் எனச் சற்றுமுன் வந்த ஒரு செய்திதான் அதிர்ச்சியளிக்கிறது. அவர் கட்சிக்கு ஒரு மக்களவைத் தொகுதியும் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளையும் ஒதுக்குமாறு கேட்டால் மு.க.ஸ்டாலினும் ஓ.பன்னீர்செல்வமும் அதை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதைக் கற்பனை செய்யக்கூட முடியவில்லை.

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்குமான யுத்தம் தொடங்கிவிட்டது. இந்த யுத்தத்தில் அனைவருமே இருமுனை வியூகம் அமைத்துக் களம் இறங்கியிருக்கிறார்கள். ஒன்று, 21 சட்டமன்றத் தொகுதிகளில் அதிகபட்ச இடங்களைப் பெற்று மாநில அரசின் தலையெழுத்தை மாற்றி எழுதுவது. இதில் அதிமுக, அமமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு ஆளுக்கொரு கணக்கு இருக்கிறது.

வியூகத்தின் அடுத்த முனையில் வேறொரு கணக்கு இருக்கிறது. மக்களவையில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காது என்பது நாளுக்கு நாள் உறுதியாகிவரும் நிலையில் ஒரு சில மக்களவை உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளும்கூட ஆட்சியில் பங்கு வகித்துவிட முடியும்.

மத்திய மாநில அரசுகளில் ஏதேனும் ஒரு வகையில் பங்கு வகிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும்போது அதை முன்னிறுத்திக் கூட்டணி அமைத்துக் கொள்வதுதானே சாணக்கியம்? அதைத்தானே பல கட்சிகளும் செவ்வனே கற்றுச் செயல்படுத்தி வருகின்றன?

தமிழகமே சாணக்கியபுரியாக மாறியிருக்கிறது என்பதை நினைத்தால் பூரிப்பாக இருக்கிறது.

 

https://minnambalam.com/k/2019/02/25/12

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.