Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறக்கவும் மன்னிக்கவும் பொருத்தமான புறச்சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மறக்கவும் மன்னிக்கவும் பொருத்தமான புறச்சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும்

ranil-wickramasinghe.jpg

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் பலதரப்பட்டவர்களும் இன்று கருத்துக்களை முன்வைத்துவருகின்றனர். அதாவது அண்மையில் யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் தமது உரைகளில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற போர்க்குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் ‘மறப்போம் மன்னிப்போம்’ என்று கூறியிருந்தார்கள்.

‘மறப்போம் மன்னிப்போம்’ என்ற வார்த்தை மனித குலத்தின் ஐக்கியத்திற்கும், சமாதானத்திற்கும் அடித்தளமாக அமைகின்ற மிகப்பெரிய வார்த்தையாகும். மனிதன் தனக்கும், தன்னைச் சுற்றியும் நடைபெற்ற பல சம்பவங்களை மறக்கவும், அதனோடு தொடர்புபட்டவர்களை மன்னிக்கவும் முன்வராவிட்டால் சக மனிதர்களுடன் இந்த பூமியில் வாழவே முடியாது.

இவ்விடயம் குறித்து யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, ‘மறப்போம் மன்னிப்போம்’ என்பது அரச தரப்பிலிருந்து வெறும் வார்த்தையாக கூறப்படுவதை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

தமிழ் மக்கள் அவர்களுக்கு எதிராக நேரடியாகவும் மறைமுகமாகவும் நடைபெற்ற பல சம்பவங்களை மறக்கவும், தம்மை சமரசம் செய்துகொள்ளவும் வேண்டுமாக இருந்தால், அதற்கான புறச்சூழல் தோற்றுவிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

டக்ளஸ் தேவானந்தா குறிப்பிடும் புறச்சூழல் என்பது எவ்வாறானதாக இருக்க முடியும் என்பதை அரசாங்கம் ஆராயவேண்டும். அது தொடர்பில் தமிழ் மக்களின் அரசியல் விவகாரங்களுடன் தொடர்புபட்ட அனைத்து தமிழ் தலைமைகளுடனும் கலந்துரையாடி புறச்சூழலின் உள்ளடக்கத்தை தெரிந்துகொள்ள வேண்டும்.

தமிழ் மக்கள் அரசாங்கத்தை நம்பும் அல்லது தமக்கு எதிராக நடத்தப்பட்ட கொலைகளையும், வன்முறைகளையும் அதனால் தாம் இழந்தவற்றையும் ‘மறப்போம் மன்னிப்போம்’ என்ற வார்த்தைக்கு ஏற்ப தமக்கிடையே ஒரு சமரசத்தை ஏற்படுத்திக் கொண்டு எதிர்காலத்திற்காக அரசு முன்வைக்கும் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதற்கும் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வு கிடைக்கச் செய்யப்படவேண்டும். இராணுவம் இன்னும் அபகரித்து வைத்துள்ள தமிழருக்குச் சொந்தமான காணி நிலங்களை விடுவித்து உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். சிறைகளில் பல ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை நியாயமான விசாரணைப்பொறிமுறை ஒன்றின் ஊடாக விசாரித்து அதற்கான பரிகாரம் காணப்பட வேண்டும்.

இவை தவிரவும் அர்த்தமுள்ள மீள்குடியேற்றங்களையும், அபிவிருத்திகளையும், வறுமையை போக்கி ஒவ்வொருவரும் உழைத்துச் சாப்பிடும் பொருளாதார மற்றும் தொழில்வாய்ப்புக் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும். குடும்பத் தலைவிகளான பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், விதவைகள், அநாதைகள், அங்கவீனர்கள், முன்னாள் இயக்கப் போராளிகள், வயோதிபர்கள், உறவுகளை, உடன் பிறப்புக்களை யுத்தத்தில் பலிகொடுத்து ஒற்றை இரட்டையாக சமூகத்தில் தனித்துவிடப்பட்டவர்களாகவும், எதிர்காலம் குறித்த நம்பிக்கையற்றவர்களாகவும் வாழ்ந்து கொண்டிருப்போர், யுத்த வடுக்களை சுமந்து கொண்டு வாழ்வுக்கும் சாவுக்குமிடையே இன்னும் போராடிக்கொண்டு இருப்போர் என இன்னும் வடக்கு கிழக்கில் வாழ்ந்து கொண்டிருப்போரின் மீள் வாழ்வுக்கான திட்டங்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.

யுத்தத்திற்கு முன்னரும், யுத்தத்தின் போதும், யுத்தத்தின் பின்னரும் தமிழர் தாயகப்பிரதேசங்களில் தொல்பொருள் திணைக்களத்தினாலும், வனஇலாகாவினராலும் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்ற காணி அபகரிப்புகளும், சுவீகரிப்புகளும், அத்துமீறிய திட்டமிட்ட குடியேற்றங்களும் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

இந்த நடவடிக்கைகள் பூர்வீகமான அல்லது பழைய நிலைக்கு கொண்டுவரப்பட வேண்டும். இவற்றையெல்லாம் செய்வதற்கு இலங்கை அரசுக்கு யுத்தம் முடிவுக்கு வந்த கடந்த 10ஆண்டுகள் என்பது போதுமான காலப்பகுதியாகும். ஆனால் மஹிந்த ராஜபக்ஷ அரசோ, ரணில், மைத்திரி அரசோ அதைச் செய்ய முன்வரவில்லை.

அவ்வாறான விருப்பத்தையும் இதுவரை எவரும் வெளிப்படுத்தவும் இல்லை. ஆனால் தமிழ் மக்கள் அரசியல் தீர்வு கேட்பதில் நியாயம் இருக்கின்றது என்றும், யுத்தப் பாதிப்புக்களுக்கு முகம்கொடுத்த பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்றும், இலங்கையில் அனைவரும் சமமாக சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும் என்றும் அரசு தலைமைகள் கூறிவந்துள்ளனர்.

ஆனால் மஹிந்த காலத்திலும், மைத்திரி, ரணில் காலத்திலும் கொழும்பில் இவர்கள் கூறுவது அமிர்த வாக்குகளாகவும், வடக்கு கிழக்கில் பௌத்த சின்னங்களை வலிந்து நிறுவுவது, தமிழரின் காணிகளை அபகரிப்பது, வளங்களை அபகரிப்பது, போன்ற காரியங்கள் விசமாகவும் தொடர்ந்து நடந்து கொண்டே இருப்பதால் அரசுகள் கூறும் வார்த்தை ஜாலங்களையும், விசம்தடவிய வாக்குறுதிகளையும் நம்புவதற்கு தமிழர்கள் தயாராக இல்லை.

இலங்கையில் நடைமுறை யதார்த்தமானது அரசு கூறுவது ஒன்றாகவும், வடக்கு, கிழக்கில் படையினரும், திணைக்களங்களும் செயற்படுவது வேறொன்றாகவும் இருக்கின்ற நிலைமையேயாகும். அரசுக்கும், படையினருக்கும், தொல்பொருள் மற்றும் வன இலாகா திணைக்களம் போன்றோருக்கும் தொடர்பற்ற நடவடிக்கைகளே தொடர்கின்றது.

இதுதவிர தமிழ் மக்களின் முக்கிய கோரிக்கைகளை அரசும் கண்டுகொள்ளவில்லை. தமிழ் அரசியல் தலைமைகளும் கண்டுகொள்வதாக இல்லை. தமிழ் மக்கள் தமது கோரிக்கைகளுடன் ஒரு பக்கமாக போராடிக்கொண்டு இருப்பதும், தமிழ் தலைமைகளோ கொழும்பில் அரசுடன் இணக்க அரசியல் நடத்திக்கொண்டும், வடக்கு கிழக்கில் அரசு நிகழ்ச்சி நிரல்களில் கலந்துகொண்டு பொன்னாடையும், மாலையும் தமக்கே போடப்பட வேண்டும் அதுதான் தமிழருக்கு கௌரவம் என்றும் செயற்படுகின்றனர்.

இந்த நிலையில் தமிழ்மக்கள் சார்ந்த அத்தனை பிரச்சினைகளும் அவ்வாறே 10 வருடங்களாகத் தொடர்கின்ற நிலையில் தமிழ் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தாமலும், சமரசத்திற்கான புறச்சூழலை தோற்றுவிக்காமலும் வெறுமனே அரசு தலைவர்களும், அரசியல் கட்சிப் பிரமுகர்களும் 10 வருடங்கள் கோமாவிலிருந்து சுய நினைவுக்குத் திரும்பியவர்கள்போல் ‘மறப்போம் மன்னிப்போம்’ என்று கூறினால் அதைத் தமிழர்கள் எவ்விதம் ஏற்றுக்கொள்வது.

ஆனால் ‘மறப்போம் மன்னிப்போம்’ என்று கூறியவர்களும் சரி, போர்க்குற்றங்களை விசாரணைக்கு உட்படுத்தக் கூடாது என்போரும் சரி, போர்க்குற்றத்தை விசாரிக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது அவ்வாறான நடவடிக்கையின் பேரால் அரசு எமது போர் வீரர்களையும், அவர்கள் தாய் நாட்டுக்காக செய்த அர்ப்பணிப்புக்களையும் காட்டிக்கொடுக்கின்றார்கள் என்று கூறுவோரும் சரி, எந்தச் சந்தர்ப்பத்திலும் படையினரை குற்றவாளிக் கூண்டில் ஏற்றவோ, அவர்களைத் தண்டிக்கவோ ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்று கூறுவோரும் சரி, தம்மை அறியாமலே போர்க்குற்றங்கள் நடந்துள்ளது என்பதையும், அது சுயாதீனமாக விசாரிக்கப்பட்டால், தமிழர்களுக்கு எதிராக நடந்த பல குற்றங்கள் வெளிச்சத்திற்கு வரும் என்றும் அஞ்சுகின்றார்கள் என்பது புலனாகின்றது.

ஆகவேதான் தமிழ் மக்கள் இன்னும் போர்க்குற்றங்கள் சர்வதேச நீதிப்பொறிமுறை ஒன்றின் ஊடாக விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும், அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நிலைமாறுகால நீதி கிடைக்கச் செய்யப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார்கள்.

எனவே நீதி கேட்டும், உரிமைகேட்டும் தமிழ் மக்கள் சர்வதேசத்தை நாடி நிற்பதற்கு தமிழர்களை ஒடுக்கும் மனோ நிலைகொண்ட தென்னிலங்கை ஆட்சியாளர்களே காரணமானவர்கள்.

இலங்கை ஆட்சியாளர்கள் கடந்த கால தவறுகளை ஒரு படிப்பினையாகக் கொண்டு, தமிழ் மக்களுக்கு கிடைக்கவேண்டிய நியாயத்தையும், தீர்வுகளையும் வழங்குவார்களேயானால், தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கும் விதமாக ஆட்சியை நடத்துவார்களானால், தமிழ் மக்கள் சர்வதேசத்தை நம்பிக்கொண்டு காத்திருக்கவோ, அழுத்தங்களை ஏற்படுத்தவோ போவதில்லை.

எங்கே உரிமையும், நீதியும் மறுக்கப்பட்டதோ அங்கேதான் அதைப் பெற்றுக்கொள்ளவும் வேண்டும் என்பதை தமிழ்மக்கள் அறிவார்கள். ஆனால் மாறி மாறிவந்த தென்னிலங்கை ஆட்சியாளர்களே தமிழ் மக்களை ஒடுக்கும் செயற்பாடுகளுடனும், பேரினவாத மனோ நிலையுடனும் நடத்தி நிலைமையை சீர்குழைத்தவர்கள்.

தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தியதற்கும், இன்று சர்வதேசத்தின் அழுத்தம் தேவை என்று ஒருமித்து குரல் கொடுத்து நிற்பதற்கும் காரணமானவர்கள், தென் இலங்கை ஆட்சியாளர்களே தவிர வேறுயாருமல்லர் என்பதைப் புரிந்து கொண்டு ‘மறப்போம் மன்னிப்போம்’ என்ற வார்த்தைக்கு பொருத்தமான புறச்சூழலை அரசு ஏற்படுத்த வேண்டும்.

ஈழத்துக்கதிரவன்

 

http://athavannews.com/மறக்கவும்-மன்னிக்கவும்-2/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.