Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரட்டைச் சுமையுடன் மக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரட்டைச் சுமையுடன் மக்கள்

[21 - April - 2007] [Font Size

* மனித உரிமைகள் சிக்கலில் அரசு

கடந்த வாரம் தமிழ், சிங்கள புத்தாண்டு பிறந்தது. பெரிய இடங்களின் மனிதர்கள் எனப்படுவோருக்கும் வசதிகள் வாய்ப்புகள் உடையோருக்கும் புத்தாண்டு அர்த்தமுடையதாகவும் முழுமை கொண்டதாகவும் அமைந்திருந்தது. ஆனால், வாழ்க்கை நெருக்கடிகளையும் துன்பங்களையும் சோகங்களாகவும் சுமைகளாகவும் தாங்கி நிற்கும் ஏகப்பெருவாரியான மக்களுக்கு புத்தாண்டு வெறுமை கொண்டதாகவே அமைந்திருந்தது.

ஜனாதிபதி பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் சொற்சிலம்பம் நிறைந்த வாழ்த்துச் செய்திகள் வெளியிட்டிருந்தனர். புத்தாண்டில் மக்களுக்கு புதிய ஒளி பிறக்கட்டும் சமாதானம் மலரட்டும். மக்களுக்கு நல்வாழ்வு கிடைக்கட்டும் என்றெல்லாம் வாழ்த்துரைகளில் குறிப்பிடப்பட்டிருந்தன. ஆனால், இவையெல்லாம் வெறும் பம்மாத்து வசனங்களேயாகும். ஏனெனில், ஒளியிழந்து இருள் சூழ்ந்திருப்பதற்கும் சமாதானம் இன்றி யுத்த சூழல் தொடர்வதற்கும் மக்களின் நல்வாழ்வு நாசமடைந்து செல்வதற்கும் யார் காரண கர்த்தாக்களாக இருந்து வருகின்றார்கள் என்பது கண்டுபிடிக்க முடியாத இரகசியங்கள் அல்ல.

புத்தாண்டு காலத்தில் மட்டுமன்றி அன்றாட வாழ்வில் மக்கள் பாரிய இரட்டைச் சுமைகளைச் சுமந்து வருகின்றார்கள். ஒன்று யுத்தச் சுமை. அடுத்தது பொருளாதார நெருக்கடிச் சுமை. இவை இரண்டிலிருந்தும் மக்களுக்கு ஆறுதல் தருவதற்கு பொறுப்புதாரிகளான ஆளுவோர் தயாராக இல்லை. மேலும் மேலும் இவ் விரண்டு சுமைகளையும் மக்கள் மீது ஏற்றிய வண்ணமே உள்ளனர்.

வடக்கு கிழக்கில் யுத்த சூழலின் கீழ் மக்கள் படும் அவலங்கள் விபரிக்க முடியாதவைகளாகும். நாளாந்தம் தாக்குதல்கள் எதிர் தாக்குதல்கள், என நடைபெறும் அதே வேளை, கொலைகள் ஆட் கடத்தல்கள் காணாமல் போதல் எவ்வகையிலும் குறைவதாக இல்லை. இடம்பெயர்ந்த மக்கள் அனுபவிக்கும் துயரங்களுக்கு எல்லைகள் அற்றுக் காணப்படுகின்றன. கிழக்கிலே சுமார் இரண்டு இலட்சம் மக்கள் இடப்பெயர்வின் கோரப் பிடிக்குள் சிக்க வைக்கப்பட்டுள்ளனர். உணவு உடுதுணி மட்டுமன்றி பசிக் களைக்குப் படுத்துறங்க இடமின்றி மக்கள் பரிதவிக்கின்றனர். இந் நிலையைத் தோற்றுவித்துள்ள யுத்தத்திற்குப் பெயர் மக்களை விடுவிக்கும் தாக்குதல்கள் என்பதாகும். யுத்த நிறுத்த ஒப்பந்தமானது இதுவரை வாபஸ் பெறப்பட்ட ஒன்றாக இல்லை. சர்வதேச சமூகத்தின் கண்டனங்களுக்கு ஆளாகாமல் இருப்பதற்காகவே அது இன்றும் உத்தியோகபூர்வமாக நிராகரிக்கப்படாமல் இருக்கிறது. ஆனால், அவ்வொப்பந்தம் யுத்தம் செய்வதற்கு எவ்வித இடையூறாகவும் இருக்கவில்லை என்று கூறிக் கொண்டே யுத்தம் முன்னெடுக்கப்படுகிறது.

மகிந்த சிந்தனை அரசாங்கம் யுத்த நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களுக்கு பதில் கூறிக் கொண்டிருக்கும் அதேவேளை சிங்கள மக்கள் மத்தியில் யுத்தத்தின் மூலம் தேசிய இனப் பிரச்சினைக்குள் தீர்வு கண்டு விடலாம் என்ற நம்பிக்கையை மாயத்திரையாகவும் காட்டி வருகின்றது. கிழக்கின் தொண்ணூறு வீத பிரதேசங்களை விடுதலைப்புலிகளின் பிடியில் இருந்து விடுவித்து விட்டதாகவும் அரசாங்கம் கூறி வருகின்றது. இதன் காரணமாகவே அண்மையில் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் என்ற அமைப்பு சிங்கள மக்களின் ஒரு சாரார் மத்தியில் எடுத்த கருத்துக் கணிப்பில் 59.2 வீதமான மக்கள் இராணுவத் தீர்வை விரும்புகிறார்கள் என்ற தகவலை வெளியிட்டுள்ளது. இவ்வாறான கருத்துக் கணிப்புகளின் நம்பகத்தன்மை கேள்விக்குரியவையாக இருப்பினும், சிங்கள மக்கள் மத்தியில் ஒரு வகையான யுத்த மனப்பான்மை கட்டியெழுப்பப்பட்டு வந்திருப்பதை நிராகரிக்க முடியாது. இதே சிங்கள மக்கள் மத்தியில் சில வருடங்களுக்கு முன்பு யுத்த நிறுத்தத்திற்கும் சமாதானத்திற்குமாக 74 வீதமானோர் கருத்துடையோராக இருந்தனர் என்பதையும் மறந்து விட முடியாது. அன்று யுத்தத்திற்கு எதிரான சக்திகளின் பிரசாரத்தளம் பலமுடையதாக இருந்த சூழலில் அத்தகைய கருத்தை சிங்கள மக்கள் கொண்டிருந்தனர். ஆனால், இன்று சமாதான விரும்பிகளின் குரல் வளைகள் இறுக்கப்பட்டு யுத்தப் பேரிகை முழங்குவோரின் குரல்கள் ஓங்கி ஒலிக்கும் சூழலில் யுத்தத்தின் மூலம் தீர்வு காண விகிதாசாரம் கூடியிருப்பது புதுமையல்ல.

இவ்வாறான யுத்த மனோநிலையைக் கட்டியெழுப்பி அதனைத் தொடர வைப்பதில் ஜே.வி.பி.யும், ஹெல உறுமயவும் மற்றும் சிங்கள தீவிர இனவாத சக்திகளும் முன்னணியில் இருந்து வருகின்றன. தமது நிலைக்கு வலுச் சேர்ப்பதற்கு நீதித்துறையிடம் இருந்து அவ்வப்போது தீர்ப்புகளை வாங்கி அவற்றை வெகுசனப்படுத்திக் கொள்ளும் பிரசாரங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளன. அந்த வகையில் ஏற்கனவே சந்திரிகா அம்மையார் காலத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேறிய சுனாமிக் கட்டமைப்புக்கான சட்டவாக்கத்தை நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் முடக்கினார்கள். பின்பு ஜே.ஆரின் காலத்திலிருந்து நடைமுறையில் இருந்து வந்த வடக்கு கிழக்கு இணைப்பை இல்லாமல் செய்யும் நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்றுக் கொண்டார்கள். அதன் மூலம் வடக்கு கிழக்கு தனித்தனி நிர்வாக அலகுகளாக மாற்றப்பட்டது.

இப்போது ரணில் பிரபா கையொப்பம் இட்டு நடைமுறைக்கு வந்து ஐந்து வருடங்களாகிக் கொண்ட புரிந்துணர்வு யுத்தநிறுத்த ஒப்பந்தத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதே ஒப்பந்தத்திற்கு எதிராக ஏற்கனவே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு அந்த மனு நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறு நீதிமன்றத் தீர்ப்புகளை பேரினவாத சக்திகள் பெற்றுக் கொள்வதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று அவ்வாறான தீர்ப்புகள் மூலம் சிங்கள மக்கள் மத்தியில் இனவாதப் பரப்புரைகளுக்கு வலுச் சேர்ப்பது இரண்டாவது அத்தீர்ப்புகளை வைத்துக்கொண்டு அரசாங்கம் தனது பேரினவாதத் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல். இவ்விடயத்தில் ஜே.வி.பி., ஹெல உறுமய போன்ற சக்திகளும் மகிந்த சிந்தனை அரசாங்கமும் ஒருவருக்கொருவர் மிக நெருங்கிய நேச சக்திகளாக இருந்து வருவதையும் காணமுடிகின்றது. அந்த வகையில் ஜே.வி.பி., ஹெல உறுமய மற்றும் தீவிர இனவாத சக்திகளும் பேரினவாத நடைமுறையாளர்களான அரசாங்கமும் யுத்தநிறுத்த ஒப்பந்தத்திற்கு எதிரான உயர்நீதிமன்றத் தீர்ப்பை ஆவலுடன் எதிர்பார்த்து நிற்கின்றன.

அதேவேளை, இலங்கையில் இடம்பெற்றுவரும் தொடர்ச்சியான கொலைகள், ஆட்கடத்தல்கள், கப்பம் பெறுதல் விசாரணை இன்றி தடுத்து வைத்தல்கள், அகதிகளாகி அல்லல்படுதல் போன்றன மனித உரிமை மீறல்களாக அதிகரித்துக் காணப்படுகின்றன. இவற்றுக்கு பொறுப்பும் பதிலும் கூறவேண்டிய மக்கள் ஆணை பெற்றதாகக் கூறிக் கொள்ளும் அரசாங்கமும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும் உரியவாறு நடந்து கொள்வதாக இல்லை. அதனால், இலங்கையின் மனித உரிமை மீறல் பிரச்சினையானது சர்வதேச சமூகத்தின் மத்தியில் காணப்படும் மனித உரிமை அமைப்புகளின் தீவிர கவனத்திற்கு உள்ளாகிவிட்டன. அவ்வப்போது இம் மனித உரிமை அமைப்புகள் வெளியிடும் கருத்துக்கள் இலங்கை அரசாங்கத்தை வெகுவாக சங்கடப்படுத்தவும் பாதிக்கப்படவும் செய்துள்ளன. ஏற்கனவே, ஐ.நா. வின் கீழான மனித உரிமை அமைப்பின் மாநாட்டில் இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல் பற்றிய தீர்மானம் ஒன்று நிறைவேறுவது இறுதி நேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது. இலங்கையின் மனித உரிமைகளுக்குப் பொறுப்பான அமைச்சர் அம்மாநாட்டில் கலந்துகொண்டு சிலவற்றை ஏற்றுக்கொள்வதாகக் கூறியதுடன் அரசாங்கம் இவ்விடயத்தில் ஆவன செய்யும் என்ற வாக்குறுதியைக் கொடுத்து நிலைமையை அங்கு சமாளித்துக் கொண்டனர்.

ஆனால், இப்போது பிரச்சினை வேறொரு கோணத்திலிருந்து வெளிவந்துள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கை மனித உரிமை மீறல்களை உலகின் கவனத்திற்கு கொண்டுவரும் புதிய உத்தி ஒன்றினை முன் வைத்துள்ளது. இப்பொழுது ஒன்பதாவது உலகக் கிண்ணத்திற்கான கிரிக்கெட் போட்டி மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்று வருகின்றது. இலங்கை அணியானது உலகக் கிரிக்கெட் ரசிகர்களிடம் அதிக கவனத்தையும் பெற்று நிற்கின்றது. இதன்மூலம் இலங்கையின் பெயர் உலக ரீதியாக பிரபல்யம் பெற்றும் வருகின்றது. இந்நிலையிலேயே சர்வதேச மன்னிப்புச் சபை "இலங்கை விதிகளுக்கு அமைய விளையாடவும்" என்ற வரிகளை கிரிக்கெட் மென் பந்தின் மீது தனது இலச்சினையுடன் பதித்து விநியோகித்து வருகின்றது.

இச் செயலானது உண்மையில் இலங்கையின் கிரிக்கெட் அணியை நோக்கியது அல்ல என்பது ரசிகர்களுக்கு மட்டுமன்றி சாதாரணமான சகலருக்கும் தெரிந்த விடயம். இலங்கை அணியானது எச்சந்தர்ப்பத்திலும் கிரிக்கெட் விதிகளை மீறிய ஒரு அணி அல்ல. அத்துடன், உலகத் தரம் கொண்ட அணியுமாகும். ஆனால், கிரிக்கெட் மூலமாக சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கை அரசாங்கத்திற்கே தனது வலுவான செய்தியை தெரிவித்திருக்கிறது. அதுவே இலங்கை அரசாங்கத்திற்கும் பெரும் தலையிடியையும் ஜே.வி.பி., ஹெல உறுமய போன்ற தீவிர இனவாதிகளுக்கு கடும் சினத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றன.

இச்சூழலிலேயே சர்வதேச மன்னிப்புச் சபையின் இரு பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்து நேரில் எல்லாத் தரப்பினருடனும் கலந்துபேச முன்வந்து விசா அனுமதி கேட்டபோது அது மறுக்கப்பட்டிருக்கிறது. இதனால் சர்ச்சை மேலும் அதிகரித்து வருகின்றது. சர்வதேச மன்னிப்புச் சபையானது சர்வதேச கவனத்தை ஈர்த்து நிற்கும் ஒரு மனித உரிமைகள் வற்புறுத்தல் அமைப்பாகும். அதன் உள்நோக்கம் பின் புலம் போன்றனவற்றுக்கு அப்பால் மீறப்படும் மனித உரிமைகளைப் பற்றி உலகின் கவனத்திற்கு கொண்டு வருவதில் குற்றஞ்சுமத்துவதில் ஒவ்வொரு நாடுகளையும் அமைப்புகளையும் அது விட்டு வைக்கவில்லை. அதனால், சர்வதேச மன்னிப்புச் சபை காலத்திற்கு காலம் கண்டனங்களையும், வசைச் சொற்களையும், கேட்டு வந்துள்ளது. "கம்யூனிஸ்டுகளின் கைக்கூலி அமைப்பு" என ஏகாதிபத்திய சக்திகளால் திட்டுவாங்கிய ஒரு அமைப்பாகவும் இருந்து வந்துள்ளது. இப்போது இலங்கையின் பேரினவாத சக்திகள் புலிகளின் சார்பு அமைப்பு என முத்திரை குத்த முற்பட்டுள்ளனர். ஆனால், மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் புலிகள் உட்பட சகல தரப்பினரையும் குற்றஞ்சாட்டியுள்ளதுடன், ஒரு அரசாங்கத்திற்குரிய பொறுப்பு என்ற வகையில் அதன் மீதான குற்றச்சாட்டை அழுத்திக் கூறியுள்ளது.

ஆனால், அரசாங்கம் இங்கு மனித உரிமைகள் மீறப்படவில்லை என்ற நிலைப்பாட்டில் இருந்து வருகின்றது. ஜே.வி.பி. மனித உரிமைகள் பற்றிப் பேசும் எவரும் தேசத் துரோகிகளும் இறைமையை விற்பவர்களும் என்றே கூறிவருகின்றது. நாட்டிற்குள் ஊடுருவ மேற்குலக சக்திகள் மனித உரிமைகள் பற்றிக் கூவுகின்றன என்று ஜே.வி.பி. மிக இலகுவாகவே விடயத்தைப் பார்க்கின்றது. அதன் தர்க்கம் நியாயமானதாக இருப்பின் அவ்வாறான அந்நிய சக்திகள் இங்கு ஊடுருவிக் கொள்வதற்கான அடிப்படைக் காரணியாக அமைந்துள்ள இனப்பிரச்சினைக்கு ஜே.வி.பி. அல்லது அரசாங்கம் சிறு துரும்பைக் கூட அசைக்கவில்லை. அல்லது முன்வைக்கவில்லை. உள் உடைவும் உள் முரண்பாடும் அற்ற நாட்டிற்குள் தான் அந்நிய சக்திகளால் ஊடுருவ முடியாது என்பதை ஜே.வி.பி. அறியாமல் உள்ளது விந்தையானதேயாகும்.

அரசாங்கம் மனித உரிமை மீறல்களை பற்றிவரும் குற்றச்சாட்டுகளுக்கும் முன்மொழிதல்களுக்கும் உரியவாறு செவிசாய்த்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க முன்வரல் வேண்டும். அத்துடன், மனித உரிமை மீறல்களுக்கு காரிய காரணமாக அமைந்துள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும். இதுவே மனித உரிமை பற்றி எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கம் முகம்கொடுக்கவுள்ள ஒரே வழிமுறையாகும்.

தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.