Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக தௌஹீத் ஜமாஅத் அமைப்புடன் எவ்வாறான உறவுகளும் கிடையாது - சிலோன் தௌஹீத் ஜமாஅத்தின் பொதுச்செயலாளர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக தௌஹீத் ஜமாஅத் அமைப்புடன் எவ்வாறான உறவுகளும் கிடையாது - சிலோன் தௌஹீத் ஜமாஅத்தின் பொதுச்செயலாளர்

தமிழக தௌஹீத் ஜமாஅத் அமைப்புடன் எத்தகைய உறவுகளும் கிடையாது. நாங்கள் ஸ்ரீலங்கா தௌஹீத் அமைப்பிலிருந்து வெளியேறுவதற்கு தமிழக தௌஹீத் ஜமாஅத் அமைப்பும் காரணமாகின்றதென சிலோன் தௌஹீத் ஜமாஅத்தின் பொதுச்செயலாளர் அப்துர் ராஸிக் தெரிவித்துள்ளார்.

ceylon-thowheed-jamaath-general-secretar

கடந்தகால விவகாரங்களையடுத்து தமது நிலைப்பாடுகள் தொடர்பில் வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியே செவ்வியிலேயே சிலோன் தௌஹீத் ஜமாஅத்தின் பொதுச்செயலாளர் அப்துர் ராஸிக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் வழங்கிய செவ்வியின் முழுவடிவம் வருமாறு,

கேள்வி:- ஸ்ரீலாங்கா தௌஹீத் ஜமாஅத்திலிருந்து சிலோன் தௌஹீத் ஜமாஅத்தாக பிரிவதற்கான காரணம் என்ன?

பதில்:- 2018-09-23அன்று முதல் இயங்க ஆரம்பித்துள்ளோம். நிருவாக, மார்க்க ரீதியான விடயங்களை திருத்தவேண்டுமென்று அந்த அமைப்பிலிருந்து நாம் பல தடவைகள் சுட்டிக் காட்டியபோதும் அதனை உள்வாங்கி நடைமுறைப்படுத்த முடியாத நிலையில் நாம் வெளியேறினோம்.

கேள்வி:- உங்களுடைய அமைப்பிற்கு எத்தனை கிளை அலுவலங்கள் மற்றும் உறுப்பினர்கள் இருக்கின்றார்கள்?

பதில்:- தனியாக நாங்கள் இயங்க ஆரம்பித்து ஆறுமாதங்களாகின்ற நிலையில் நாடளவிய ரீதியில் 71கிளைகளைக் கொண்ட கட்டமைப்பாக வளர்ந்து வருகின்றோம்.

கேள்வி:- உங்களுடைய அமைப்பு இலங்கை சட்டங்களுக்கு உட்பட்டதாக பதிவு செய்யப்பட்டள்ளதா?

பதில்:- இலங்கை அரசியலமைப்பின் 14 ஆவது சரத்தின் பிரகாரம் பிரஜைகள் அமைப்பு ரீதியாக செயற்படுவதற்கான முன்னேற்பாடு வழங்கப்பட்டுள்ளது. சிவில் அல்லது சேவை நோக்க அமைப்பாக நாம் பதிவு செய்து கொள்வதென்றால் ஒருவருடத்திற்கான செயற்பாட்டு, கணக்கு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. அடுத்த ஆறுமாத காலத்தில் நாம் அனைத்து ஆவணங்களையும் சமர்பித்து பதிவுசெய்வதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

கேள்வி:- புலனாய்வு கட்டமைப்புக்களுக்கும் உங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?

பதில்:- நாங்கள் புலனாய்வு கட்டமைப்பிடமிருந்து ஊதியம் பெற்று செயற்பட்டதாகவே குற்றம் சாட்டப்படுகின்றது. ஆனால் அதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. இவ்வாறு பொய்யான குற்றச்சாட்டுக்களை வைத்தமைக்காக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்துகொண்டு வருகின்றோம். மேலும் ஒரு வாதத்துக்காக புலனாய்வு அமைப்புடன் செயற்படுவதாக கொண்டாலும் நாட்டின் நலனின் அக்கறை கொண்ட பிரஜைகள் என்று தான் பொருள் கொள்ளப்படுமே தவிர தேசவிரோத குற்றமாகது. சேவை அமைப்பொன்று செயற்படுகின்றபோது அவற்றுடன் பாதுகாப்புத்தரப்புக்கள் எத்தகைய உறவுகளை கொண்டிருக்கின்றவே அதுபோன்றுதான் எம்மிடனும் உறவுகளைக் கொண்டிருந்தார்கள். அதற்கு அப்பால் வேறு எதுவும் இல்லை.

கேள்வி:- தடைசெய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பு பற்றிய உங்களின் பார்வை என்ன? இந்த அமைப்பு உருவாக்கம் சம்பந்தமாக உங்களுடன் விடயங்கள் ஏதும் பகிரப்பட்டதா?

பதில்:- இல்லை. 2012 இலிருந்து அந்த அமைப்பு உருவாக்கப்பட்டபோது வித்தியாசமான செயற்பாடுகளை நாங்கள் கண்டிருக்கவில்லை. ஆனால் 2016 இற்குப் பின்னர் அந்த அமைப்பினை உருவாக்கிய சஹ்ரான் காசீம் கடுமையான கருத்துக்களை தனது முகநூல் ஊடாக வெளிப்படுத்த ஆரம்பித்தார். அதன்போது ஜிகாத் சிந்தனைகளை அவர் பிரதானப்படுத்தியிருந்தார். மார்க்க ரீதியாகவும் சட்டரீதியாகவும் சிக்கலை ஏற்படுத்தவல்ல கருத்துக்களை அவதானித்திருந்த நாம் பாதுகாப்பு தரப்பினைச் சேர்ந்த அதிகாரி ஒருவருக்கு அதுபற்றி கவனத்தில் கொள்ளுமாறு கூறி காணொளியை தனிப்பட்ட முறையில் அனுப்பி வைத்திருந்தோம்.

கேள்வி:- நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் குண்டுத்தாக்குதல் நடத்திய முஹமட் ஹஸ்துன் முன்னறியப்பட்டவரா?

பதில்:- நான் கொழும்பைச் சேர்ந்தவன். முஹமட் ஹஸ்துன் கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்தவர். ஓட்டமாவடியில் எமது கிளையொன்று உள்ளது. அங்கு கூட அவர் வந்ததில்லை. அவர் எமது உறுப்பினர் கிடையாது.

கேள்வி:- அப்படியாயின் அவருடனான தொடர்பு எவ்வாறு ஏற்பட்டது?

பதில்:- 2015-08-04 அன்று ஸ்ரீலங்கா தௌஹீத் அமைப்பின் தலைமையகத்திற்கு அந்த இளைஞனும் ஒரு யுவதியும் வந்தார்கள். அப்போது நான் அந்த அமைப்பின் செயலாளராக இருந்தேன்.

அங்கு வந்த அந்த இளைஞன் குறித்த யுவதி இஸ்லாம் மதத்தினை தழுவ உள்ளதோடு பின்னர் தங்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்குமாறு கோரினார். அன்று தான் நானும் அவர்களை முதற்தடவையாக சந்தித்திருந்தேன். அதன் பின்னர் அந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு விபரத்தினைக்கோரி அவர்களை கொழும்புக்கு வரவளைத்திருந்தோம்.

ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் தலைமையகத்திலேயே அவருடைய குடும்ப உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். அப்போது மனித உரிமை அலுவலக அதிகாரியொருவரும் இருந்தார்.

பேச்சுவார்த்தை நடைபெற்றபோது, புலஸ்தினியின் தயார் இந்து மதத்திலேயே இருக்கவேண்டும் தன்னுடனே வரவேண்டும் என்று ஆதங்கத்துடன் கண்ணீர்விட்டுக் கூறவும் புலஸ்தினி மறுத்ததோடு இஸ்லாத்தை தழுவப்போகின்றேன் என்று உறுதியாக நிற்கவும் எமக்கு தர்மசங்கடமாகிவிட்டது.

1996 இல் பிறந்த புஸ்தினி மேஜராக இருக்கின்றார். தயாரும் விடுவதாக இல்லை. அந்த சூழலில் தான் சட்டரீதியாக முடிவொன்றை எடுக்கலாம் என்று கருதி மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தினை நாடினோம். அப்போது புலஸ்தினி மேஜராக இருப்பதால் அவருக்கு முடிவெடுக்கும் சுதந்திரம் உள்ளது என்று பொலிஸ் அறிவுரை வழங்குகின்றது. பின்னர் ஆகக்குறைந்தது ஐந்து நாட்களாகவது தன்னுடன் அனுப்பி வைக்குமாறு தயார் பொலிஸாரிடத்தில் கோரவும் அதற்கும் அனுமதி கிடைக்கின்றது.

கேள்வி:- புலஸ்தினி தயாருடன் சென்றபோது ஹஸ்துன் என்ன செய்தார்? அவர் தேசிய தௌஹீத் அமைப்பில் அங்கத்துவத்தினை கொண்டிருந்தமை பற்றி நீங்கள் அறிவீர்களா?

பதில்:- இந்தப்பேச்சுக்கள் நடைபெற்ற தருணத்தில் ஹஸ்துன் ஒதுங்கியே இருந்ததை நாம் அவதானித்தோம். அவருடைய குடும்பத்திலும் எவரும் வந்திருக்கவில்லை. ஆனால் அவர் தேசிய தௌஹீத் அமைப்பில் இருந்தாரா இல்லையா என்பது பற்றி எமக்கு தெரியாது. ஒருவேளை அவர் அந்த அமைப்பில் இருந்திருந்தால் இங்குவராது காத்தான்குடிக்கல்லவா சென்றிருக்க வேண்டும்.

கேள்வி:- புலஸ்தினிக்கும் ஹஸ்துனுக்குமான திருமணம் எவ்வாறு நடைபெற்றது?

பதில்:- தாயருடன் சென்ற புலஸ்தினி மீண்டும் வரவே இல்லை. ஆனால் அவர் 2015-08- 04அன்று தான் இஸ்லாமிய மதத்தினை தழுவுதாகவும் தனது பெயரை ஷாரா யஸ்மின் என மாற்றிக்கொள்வதாகவும் அறிவித்துள்ளார். அதற்கான எழுத்துமூல ஆவணம் எம்மிடத்தில் உள்ளது. பின்னர் 2015-09-25 அன்று தலைமையத்திற்கு இருவரும் வந்தார்கள். தன்னைத் தயார் அழைத்துச் சென்றதால் தனது விருப்பபடி இஸ்லாமிய மதத்தினை பின்பற்ற முடியவில்லை என்றும் தனது வகுப்புத்தோழனான ஹஸ்துனை திருமணம் முடித்து வைக்குமாறும் கோரியதோடு அதற்கு எழுத்துமூலமான கடிதத்தினையும் எமக்கு வழங்கினார். ஹஸ்துனும் புலஸ்தினியை திருமண் முடிக்க சம்மதிப்பதாக எழுத்துமூலமான உறுதியையும் வழங்கினார். அச்சந்தர்ப்பத்தில் கூட ஷாராவின் எதிர்காலத்தினைக் கருத்திற்கொண்டு அவர்களுக்கு திருமணம் முடித்து வைக்கும் தீர்மானத்தினை நாம் எடுத்ததோடு அதுபற்றிய அறிவிப்பினை அவருடைய தயாருக்கும் விடுத்தேன்.

கேள்வி:- இருவருக்கும் இடையிலான திருமணத்துடன் அவர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டதா?

பதில்:- திருமணம் நிறைவடைந்தபின்னர் அவர்கள் தற்காலிகமாக தங்குவதற்கு இடமொன்றைக் கோரினார்கள். அப்போது கொழும்பை அண்மித்த பகுதியொன்றில் அதற்கான ஏற்பாட்டைச் செய்துகொடுத்தோம். அதன்பின்னர் தமது மேற்படிப்புக்காக மருதமுனைக்குச் செல்வதாக கூறியதோடு எமக்கு நன்றிகளையும் கூறினார்கள். அதனை தடுக்கும் உரிமை எமக்கு இல்லையே.

கேள்வி:- அதன்பின்னர் அவர்கள் பற்றி ஏதும் அறிந்திருந்தீர்களா?

பதில்:- இருவருக்கும் இடையில் சர்ச்சைகள் நீடிக்கவும் புலஸ்தினி தன்னுடைய சித்தியை நாடி ஹஸ்துனை பிரிந்து செல்கின்றார். அவ்வாறு பிரிந்து செல்லும்போது கல்முனை பொலிஸ் நிலையத்தில் 2015-12-31அன்று முறைப்பாடு பதிவு செய்துவிட்டு விவாகரத்துக்கான கோரிக்கையும் செய்துள்ளார். இந்த விடயம் பற்றி அவர் எமக்கு எழுத்துமூலமான கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். அதில் ஹஸ்துன் மற்றும் அவரது அண்ணன் முன்னிலையில் விவாகரத்து கோரியது உட்பட இஸ்லாம் சமயத்திலிருந்து விலகி தனது சொந்த இந்து சமயத்தினையே பின்பற்றவுள்ளதாகவும் பெயர் மாற்றத்தினையும் நீக்கிக்கொள்வதாகவும் எங்களது அமைப்புடனான சகல விடயங்களையும் துண்டித்துக்கொள்வதாகவும் விலகிக்கொள்வதாகும் குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதத்துடன் அவருடனான அனைத்து உறவுகளும் இல்லாது போய்விட்டன.

கேள்வி:- புலஸ்தினி பிரிந்து சென்றபின்னர் ஹஸ்துன் உங்களை தொடர்பு கொள்வில்லையா?

பதில்:- இல்லை

கேள்வி:- ஆனால் புலஸ்தினியை காணவில்லை என்று அவர் உங்களை தொடர்பு கொண்டுள்ளதாக கூறுகின்றாரே?

பதில்:- ஆம், 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக அவருடைய அம்மா தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு தனது மகளை காணவில்லை என்று கூறினார்.

இரண்டு மாத்திற்கு முன்னர் தன்னுடன் தொடர்பில் இருந்ததாகவும் குருநாகல் நாரம்மில பகுதியில் வீடுவாங்குவதற்கு 15இலட்சம் ரூபா பணம் கேட்டார். அதனை தயார் செய்த பின்னர் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் கூறினார்.

அப்போது தயாரின் கண்ணீர் கோரிக்கையை கருத்திற்கொண்டு எமது கிளை சகோதரர்கள் மற்றும் பாதுகாப்புதுறையின் சிலருக்கும் இந்த பெண்ணின் விபரத்தினை வழங்கி தயார் தேடும் விடயத்தினைக் கூறியிருந்தோம். தற்போது தயார் ஆதங்கத்தில் என்மீது குற்றம் சாட்டுகின்றார். ஆனால் அவருக்கு மனிதாபிமானமாக நாம் உதவியிருக்கின்றோம் என்பதை அவர் நன்கு அறிவார்.

கேள்வி:- தமிழக தௌஹீத் ஜமாஅத் அமைப்புடன் எவ்வாறான உறவுகள் இருக்கின்றன?

பதில்:- எத்தகைய உறவுகளும் கிடையாது. நாங்கள் ஸ்ரீலங்கா தௌஹீத் அமைப்பிலிருந்து வெளியேறுவதற்கு தமிழக தௌஹீத் ஜமாஅத் அமைப்பும் காரணமாகின்றது.

கேள்வி:- ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் உருவாக்கத்திற்கு காரணமானவர்களுடன் முரண்பட காரணம் என்ன?

பதில்:- பி.ஜெய்னுல் ஆப்தீன் என்ற மார்க்க அறிஞரின் ஏகத்துவ கருத்துக்களை பரப்புவதற்காகவே இலங்கையில் தௌஹீத் ஜமாஅத்தினை உருவாக்கினோம். அவர்களுடன் மார்க்க ரீதியான உறவுகளை கொண்டிருந்தோம். இப்படியிருக்கையில் பி.ஜெ வெளியேற்றப்பட்டு அதன்பின்னர் வந்த அறிஞர்கள் குளறுபடியாக கருத்துக்களை முன்வைத்தமையால் அவர்களுடனான உறவுகளை துண்டிக்குமாறு கோரினோம். அதிலும் முரண்பாடு எழுந்தது. அதுவும் நாம் வெளியே ஒரு காரணமாக அமைந்தது.

நேர்காணல் - ஆர்.ராம்

 

http://www.virakesari.lk/article/55769

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.