Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்ப் பிரச்சினைத் தீர்வுக்கு ஜனாதிபதிக்கு உதவும் வகையில் தமிழ் அபிப்பிராய உருவாக்கம் தொடங்கியுள்ளதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ப் பிரச்சினைத் தீர்வுக்கு ஜனாதிபதிக்கு உதவும் வகையில் தமிழ் அபிப்பிராய உருவாக்கம் தொடங்கியுள்ளதா? -(பீஷ்மர்)

[29 - April - 2007]

ஜனாதிபதி அவர்களுக்கு நிச்சயமாக இரண்டு முகங்கள் உண்டு. ஒன்று, அவர் சிங்களத்துவத்தின் ஏகோபித்த முன்வைப்பு என்பதாகும். இன்றும் தான் ஜே.வி.பி., ஹெல உறுமயவின் எதிர்க்கப்பட முடியாத ஜனாதிபதியாவார். அதாவது சிங்களத்துவ நிலை பாடுகளுக்கு அடிப்படையில் அவர் முரண்படமாட்டார் என்பதற்கு சார்பான அபிப்பிராயமுண்டு.

மற்றைய முகம், அவர் தமிழர்களின் பிரச்சினையையும் உணர்ந்தவர் என்ற நிலைப்பாடாகும். அமைச்சரவை நிலையில் ஒரேயொரு வட, கிழக்கு தமிழ் அமைச்சர் தான் இருந்தாலும் அவர் விடுதலைப் புலிகளை சாராத வட, கிழக்கு கட்சிகளின் ஆதரவைப் பெற்றுள்ளவர்.

இந்த அடிப்படையிலும் குறிப்பாக சர்வதேச நிர்ப்பந்தங்கள் காரணமாகவும் அவர் பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வுக்கு வர வேண்டும் என்கின்றதொரு எதிர்பார்ப்பு உள்ளது. தான் அதற்காகவே பாடுபடுவதாகவும் அதனைச் செய்யப் போவதாகவும் தென்ஆசியா உட்பட சர்வதேசிய நாடுகளுக்கு ஒரு நிச்சயமான எதிர்பார்ப்பை வழங்கியுள்ளார். ஆனால், இதிலொரு ஜீவாதாரமான சிக்கலுள்ளது. `பேச்சுவார்த்தைகளினூடாகத் தீர்வு' என்ற நிலைப்பாடு அண்மையில் அடிபட்டுப் போய்விட்டது. யுத்தத்தின் மூலம் விடுதலைப் புலிகளை தோற்கடிக்கும் முயற்சியில் அவர் தமது அங்கீகாரத்தை வழங்கியுள்ளார்.

பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கான புனித யுத்தமொன்றை நடத்த வேண்டும் என்பது சிங்கள மக்களின் ஏறத்தாழ ஆணையாகவே கொள்ளப்படுகின்றது.

இதில் மேலுமொரு விடயம் என்னவென்றால் இராணுவத்தின் திறமை காரணமாகவும் அவர்களின் திறமை காரணமாகவும் விடுதலைப் புலிகள் பின்வாங்க தொடங்கி விட்டனர் எனும் அபிப்பிராயம் சாதாரண சிங்கள வாசகர்/கேட்போரிடையே அடிப்படையான (மதி) நம்பிக்கையாகியுள்ளது.

கிழக்கில் பிரச்சினை தீர்ந்து விட்டதாகவும் இனி வடக்கு தான் மிச்சம் என்ற நிலைப்பாட்டை சிங்கள ஊடகங்கள் முதல் அரசாங்க அறிக்கைகள் வரை எடுத்துப் பேசுகின்றன. `வெபர்' மைதான சம்பவம் புறநடையாகவே கொள்ளப்படுகின்றது. சிங்கள மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியின் படி இப்பொழுது 3 அலகுகள் உள்ளன. 1. திருமலை வட, கிழக்கு நிர்வாகத்துக்குள் வராத ஒரு தனியலகாகும்.

2. தென் கிழக்குப் பகுதி அம்பாறையென்ற பெயரில் அதற்குரிய சகல உள்ளார்த்தத்துடனும் அமைந்துள்ளது. (மந்திரி சபையில் இடம்பெறாத பிரதான முஸ்லிம் அரசியல் சக்திகள் இல்லையெனலாம்)

3. தமிழர் பெரும்பான்மையாகவுள்ள மட்டக்களப்பு மாவட்டம் இங்கு விடுதலைப் புலிகள் இயக்கம் நிலை குலைக்கப்பட்டு கருணா தலைமையில் முற்றிலும் மட்டக்களப்புக்கானதொரு தமிழ் அலகு பற்றிய எதிர்பார்ப்புகள் உள்ளன.

சிங்களத்துவ அபிப்பிராயத்துக்கு மனம் நிறைந்த திருப்தி பிரச்சினை மீதியாகவுள்ளது. வடக்கில் மாத்திரமே, அங்கும் வவுனியாவை மையமாக வைத்து சில முக்கிய நகர்வுகளை மேற்கொள்ளலாம்.

இப்படியானதொரு சூழலில் தமிழர் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு என்ற அர்ச்சனை சுலோகத்தின் கருத்து சிக்கலுக்குள்ளாகின்றது.

ஜே.வி.பி., ஹெல உறுமயவைப் பொறுத்த வரையில் முரண்நிலை எதுவுமில்லாத வகையில் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் வெல்லப்பட வேண்டும். வெல்லப்படலாம் என்கின்றார்கள். இதன் சாதாரண நிலை கருத்து விடுதலைப் புலிகளை தோற்கடித்து விட்டால், எல்லாம் சரி என்பதாகும். ஆனால், இவர்களுக்கு பின்பலமாக `எக்சத் பிக்கு பெரமுன' போன்ற சக்திகள் நாட்டின் இறைமையொருமை என்ற விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்கிறார்கள். அவர்களுடைய கருத்துப்படி இந்த மந்திரத்துக்குள்ளேயே அரசியல் தீர்வுக்கான திறவு கோலும் உள்ளது.

அதாவது சமஷ்டி கூட நாட்டின் பிரிவினை தான். உண்மையில் அவர்கள் தென்னிலங்கையில் சாதாரண எடுத்துரைப்பாகவுள்ள `பலயபெதா தீம' (அதிகாரப் பகிர்வு) கூட இப்பொழுது பேசப்படுவதில்லை.

உண்மையில், அவர்கள் இராணுவ வெற்றியையே முதன்மைப்படுத்தி நிற்கிறார்கள். இராணுவ வீரர்களின் தியாகத்தை அவர்கள் பயங்கரவாதத்துக்கு எதிராக செய்கின்ற சேவைகளை பாராட்டாத சந்தர்ப்பங்களேயில்லை.

கிரிக்கெட் கொமன்டறியை நிறைவு செய்யும் போது கூட அது சொல்லப்படுகின்றது.

ஆனால், இவையெல்லாம் ஜனாதிபதிக்கு சில அசௌகரியங்களையும் ஏற்படுத்துகின்றன. அதில் பிரதானமானது, தமிழ்ப் பிரச்சினைக்கான தீர்வு ஆலோசனையாக எதனைக் கூறுவது என்பதாகும்.

இந்த நிர்ப்பந்தம் இன்னொரு வடிவிலே கையை முறுக்க தொடங்கியுள்ளது. சுதந்திரக் கட்சி உத்தியோக பூர்வமாக தமிழர் பிரச்சனைக்கான தீர்வு ஆலோசனையை முன்வைக்க வேண்டியுள்ளது. இந்த தீர்வு ஆலோசனை தான் ஏதோவொரு வகையில் ஜனாதிபதியின் ஆலோசனையாகவும் அமையும். அமைய வேண்டும்.

இந்த நிலைமையை யு.என்.பி.மேலும் சிக்கலாக்குகின்றது. ரணில் விக்கிரமசிங்கவின் கணக்குப்படி தான் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான நாள் அதிதூரத்திலில்லையென்று வந்து விட்டது. பிரிந்து போன யூ.என்.பி.க்காரர்களின் (தற்போதைய அமைச்சர்கள் பலரில்) அரசியல் நம்பகத் தன்மை வெகுவாக விழுந்து விட்டது. ரணில் யூ.என்.பி. படிப்படியாக ராஜபக்ஷவை தாக்கத் தொடங்கி விட்டதெனலாம்.

இந்தவேளை பார்த்து பட்டகாலிலே தான் படும் என்பது போல மங்கள சமரவீர, ஸ்ரீபதி சூரியாராச்சி பேசப்படக் கூடாதவைகள் பற்றி கூறத் தொடங்கி விட்டார்கள். புலிகளுக்கு 150 கோடி ரூபா கொடுத்ததாக வெளிவந்துள்ள கதை சிங்கள மக்களை மாத்திரமல்ல, தமிழ் மக்களையும் அதிர வைத்துள்ளது. ஸ்ரீபதி சூரியாராச்சியை நடத்துவது போன்று மங்கள சமரவீரவை நடத்த முடியாது. மங்கள சமரவீர மாத்தறை மைந்தன். அவருமொரு றோகண வீரன். இந்தச் சூழலில் தமிழ் மக்களின் அரசியற் பிரச்சனைக்கான தீர்வு என்று எதனை ஜனாதிபதி அறிவிப்பது. அப்படி அறிவிக்கப்படுவது சர்வதேச கண்களில் குறைந்த பட்சம் நியாயப்பாட்டையாவது கொண்டிருக்க வேண்டும்.

இந்தப் பின்புலத்திலே தான் தமிழர் பிரச்சினை பற்றிய தமிழர் நிலைப்பட்ட இரண்டு முக்கிய நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன. ஒன்று, புளொட், ஈ.பி.டி.பி., ஆனந்த சங்கரி ரி.யூ.எல்.எப்.பின் இணைவு உத்தியோக பூர்வமான இணைவோ என்பது தெரியாது. ஆனால், ஒரு ஒழுங்கு சேர்வை ஏற்பட்டுள்ளது. இரண்டாவது இந்த ஒருங்கு சேர்வையினூடே வட, கிழக்குக்கான அரசியற் தீர்வின் தன்மை பற்றி ஒரு நிலைப்பாடு படிப்படியாக மேற்கிளம்புகின்றது. அதன்படிக்கு வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டு இந்திய மாநில ஆட்சிகளில் உள்ளதைப் போன்ற பிரதேச சுயாதீனம் இருந்தாற் போதும் என்பதாகும். ஒரேயெறியில் மாங்காய்கள் மாத்திரமல்ல தடிகளும் இலைகளும் கூட கீழே விழக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

பெயரளவிலாவது வடக்கு, கிழக்கு என்ற சுலோகத்தை விடக் கூடாது என்பது சந்தானக் கட்சிகளுக்கு சொல்லப்படுகின்ற அதேவேளையில் டில்லியையும் சென்னையும் ஒரே நேரத்தில் மௌனிக்கச் செய்வதற்கான ஒரே உத்தியும் இதற்குள் உள்ளது.

இதிலுள்ள சுவாரஸ்யம் என்னவென்றால் விடுதலைப் புலிகளோடு அணுகுமுறை கருத்து நிலை வேறுபாடு கொண்டுள்ள கலாநிதி தேவநேசன் நேசையா போன்றவர்கள் இந்த இந்திய மாதிரியும் வேண்டாமென்று மிக வலுவாக வற்புறுத்தியுள்ளார்.

இந்திய மாநிலங்களுக்கு எந்தளவுக்கு பிரதேச சுயாட்சியென்பதிலும் பார்க்க முக்கியமான விடயம் என்னவென்றால் புதுடில்லி அரசாங்கத்துக்கு விருப்பமில்லாத எந்த மாநில அரசாங்கத்தையும் கலைத்து விடுவதற்கான அதிகாரம் இந்திய ஜனாதிபதிக்குண்டு.

இந்திய பிரதமரின் சிபார்சுக்கேற்ப அவர் அதனைச் செய்வார். இந்த ஒரு காரணத்துக்காகவே இந்திய ஆட்சியாப்பு ஒரு `பாதி நிலைச் சமஷ்டி'யே என்று கூறுகின்றார்கள்.

இவையெல்லாம் ஒரு புறமிருக்கட்டும், ஆனால், இந்தக் குரல்கள் ஜனாதிபதிக்கு ஆபத்சகாய உதவியாக வருகின்றது.

ஜனாதிபதி பயங்கரவாதத்துக்கும் பிரிவினைவாதத்துக்கும் எதிராக போராடுவோம். ஆனால், எமது தமிழ் அன்பர்கள் கேட்கும் குறைந்த பட்ச கோரிக்கையையாவது வழங்க வேண்டாமா என்று ஜனாதிபதி எடுத்துரைப்பதற்கான ஒரு சூழல் எடுத்துரைக்கப்படுகின்றது.

அதாவது இந்திய மாநில அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் தீர்வு பற்றி சிந்திக்கலாமென்று சிங்கள மக்களுக்கு சொல்லாமல் சொல்லப்படுகின்றது. உண்மையில் ஜனாதிபதியின் நண்பர்கள் ஜனாதிபதியை கைவிட்டு விடவில்லை.

வட, கிழக்கின் நிலைமை இதுவாக மலையகத்து சம்பவமொன்று தமிழரின் அரசியல் நிலை பற்றிய யதார்த்தத்தை சூட்டுக்கோல் கையில் பட்டது போல் காட்டுகின்றது. மலையக ஆசிரியர் நியமனங்களுக்கான விழாவன்று ஜனாதிபதி நாட்டில் இல்லாத நிலைமையில் அலரிமாளிகையில் நடந்தவற்றை கண்டு மனம் குமுறிய ஆறுமுகம் தொண்டமான் நாங்களென்ன தும்புக் கட்டைகளா என்று கேட்டதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.

தும்புக் கட்டை பற்றிய ஒரு அடிப்படையான பாரிய உண்மை என்னவென்றால் அது தானாக இயங்காது.

அதற்கு மேல் அது மறைத்து வைக்கப்பட வேண்டும். ஏனென்றால் தும்புக்கட்டையை சகுனத் தடையாகவும் கொள்ளும் ஒரு மனோபாவம் நம்மிடமுண்டு.

`ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரோ' என்பதொரு தமிழ் இலக்கிய வரி. வடக்கென்ன கிழக்கென்ன மலையகமென்ன நாம் எல்லோருமே தமிழர்கள் தான்!

தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.