Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிக்கரகுவா புரட்சியின் 40 ஆண்டுகள்: சான்டினிஸ்டாகளின் கதை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நிக்கரகுவா புரட்சியின் 40 ஆண்டுகள்: சான்டினிஸ்டாகளின் கதை

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 ஜூலை 18 வியாழக்கிழமை, மு.ப. 07:17Comments - 0

சில கதைகள் சொல்லப்படாமல், தூசி மறைத்துக் கிடக்கின்றன. வரலாற்றின் விந்தையும் அதுவே. சில கதைகள் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகின்றன. சில கதைகள் சொல்லப்படுவதற்காகக் காத்துக் கிடக்கின்றன. சில கதைகள் சொல்லப்படாமல் மறைக்கப்படுகின்றன. இன்றும் சில கதைகள் சொல்லப்பட இயலாமல் அந்தரிக்கின்றன. இவ்வாறு கதைகள் எங்கும் நிறைந்திருக்கின்றன.   

அவ்வாறு சொல்லப்படுவதற்காய் காத்திருக்கும் கதைகளைச் சொல்வதற்கான காலமும் களமும் முக்கியமானவை. களமும் காலமும் பொருந்திவரும் போது சொல்லப்படும் கதைகள் பெறுமதிமிக்கனவாகின்றன. இன்று சொல்லப்போகும் கதையும் காலமும் களமும் பொருந்திவந்த கதைதான்.   

இன்றைக்குச் சரியாக 40 ஆண்டுகளுக்கு முன்னர், மத்திய அமெரிக்காவின் சின்னஞ்சிறிய நாடுகளில் ஒன்றான நிக்கரகுவாவில் நீண்டகாலப் புரட்சியின் விளைவால், சர்வாதிகார ஆட்சி ஒழிக்கப்பட்டது.   

கியூபப் புரட்சிக்குப் பிறகு, இலத்தீன் அமெரிக்காவில் (மத்திய அமெரிக்கா, தென்னமெரிக்கா இரண்டும் இணைந்த) இன்னொரு புரட்சிக்குச் சாத்தியமே இல்லை எனச் சொல்லப்பட்ட நிலையில், இந்தப் புரட்சி சாத்தியமானது. தனக்கெனத் தனித்தன்மைகளைக் கொண்ட இப்புரட்சி நினைவுகூரப்பட வேண்டியது.  

image_57cf179533.jpg 

மத்திய அமெரிக்காவின் மிகப் பெரிய நாடாக நிக்கரகுவா, வடக்கே ஹெண்டூரஸ்ஸையும் தெற்கே கோஸ்டரீகாவையும் மேற்கே பசுபிக் கடலையும் கிழக்கே கரீபியக் கடலையும் எல்லைகளாகக் கொண்டது. ஆறு மில்லியன் மக்கள் தொகையையுடைய நாடு; முதலில் ஸ்பானியர்களின் கொலனியாதிக்கத்துக்கு உட்பட்டது.   

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவின் நேரடியான கட்டுப்பாட்டுக்குள் வந்த நிக்கரகுவா, 1979இல் புரட்சியினூடாகச் சர்வாதிகாரி துரத்தப்படும் வரை, அமெரிக்காவின் கைப்பாவை அரசாகவே இருந்தது.   

சான்டினிஸ்டாப் புரட்சியின் கதை  

மிக நீண்ட காலமாக நிக்கரகுவா, ஒரு பரம்பரை ஆட்சியில் சிக்கித் தவித்தது. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கம் தொட்டு, பல இலத்தீன் அமெரிக்க நாடுகளைக் குடும்ப ஆட்சிகள் தலைமுறை தலைமுறையாக ஆண்டன. அதைப்போலவே, நிக்கரகுவாவில் ‘சமோசா’ பரம்பரையின் ஆட்சி, 1936 முதல் இருந்தது.   

தனியார் சொத்துடைமைக்கும் தனிச் சொத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து, சந்தைப் பொருளாதாரத்தையும் பரந்துபட்ட வணிக நோக்கிலான விவசாய முறையையும் அடிப்படையாக இந்த ஆட்சி கொண்டிருந்தது. அதிகாரம் படைத்த ஒரு சிறு குழு, நாட்டின் பெரும்பான்மையான பொருளாதார வளங்களைக் கட்டுப்படுத்தி, அதன் பலன்களை அனுபவிப்பதற்கு ஏற்ற வகையில், நிக்கரகுவாவில் கொள்கைகள் அமைந்திருந்தன.   

இதில் குறிப்பாக, நிலச் சொந்தக்காரர்களாக ஒரு சிலரே இருந்தார்கள். அவர்கள் கோப்பி, பருத்தி, சீனி, புகையிலை போன்றவற்றை உற்பத்தி செய்யும் பாரிய பண்ணைகளை நடத்தி வந்தார்கள். கால்நடைகளும் பெரிய பண்ணைகளில் வளர்க்கப்பட்டன. இவை அனைத்தும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதைப் பிரதான நோக்கமாகக் கொண்டிருந்தன.   

வெளியிலிருந்து பார்க்கும்போது, நிக்கரகுவா ஒரு வெற்றிகரமான சந்தைப் பொருளாதார மாதிரியைக் கொண்டிருப்பதாகவும் இதன் பலன்களை மக்கள் அனுபவிக்கிறார்கள் போன்றதுமான ஒரு தோற்றம் ஏற்படுத்தப்பட்டது. இதையே, 1960களிலும் 1970களிலும் பத்திரிகைகளும் ஆய்வாளர்களும் எழுதினார்கள். ஆனால் நிக்கரகுவாவின் கதையோ வேறு.   

இங்கு பெரும்பான்மையான மக்களுக்கு நிலம் சொந்தமாக இருக்கவில்லை. கிராமப்புறங்களில் 90 சதவீதத்துக்கும்  மேற்பட்டவர்கள் நிலமற்றவர்கள்; நிலமின்மையும் வாழ்வாதாரங்களுக்கான வழியின்மையும் மோசமான வறுமைக்கு வழிவகுத்தன.   

இவை 1950களின் இறுதிப் பகுதியிலும் 1960களின் தொடக்ககாலத்திலும் ‘சமோசா’ குடும்ப ஆட்சிக்கெதிரான சிந்தனைகளுக்கு வித்திட்டிருந்தன. 1959இல் கியூப்பப் புரட்சியின் வெற்றி, நிக்கரகுவாவின் பல்கலைக்கழகங்களில் பயின்று கொண்டிருந்த இளைஞர்களுக்கு மிகப்பெரிய உத்வேகத்தைக் கொடுத்தது. 

1961ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி, ‘சான்டினிஸ்டா தேசிய விடுதலை முன்னணி’ (FSLN) உருவாக்கப்பட்டது. 18 ஆண்டுகளின் பின்னர், 1979ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் திகதி, சர்வாதிகாரி ‘சமோசா’ நாட்டைவிட்டு ஓட, FSLN ஆட்சியைப் பிடித்தது. இந்தப் புரட்சியானது 42 ஆண்டுகால ‘சமோச’ குடும்பத்தின் சர்வாதிகார ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது.   

20ஆம் நூற்றாண்டின் தொடக்கில், நிக்கரகுவா மீதான அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்ப்பியக்கத்தைக் கட்டியெழுப்பித் தலைமை தாங்கியவர் ஓகஸ்டோ சான்டினோ. அவர், நிக்கரகுவா இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது நினைவாகவே, ‘சான்டினிஸ்டா’ என்ற பெயர், புரட்சியாளர்களால் தமது அமைப்புக்குச் சூட்டப்பட்டது.   

நிலச்சீர்திருத்தத்தின் பயன்கள்   

சமோசாவின் ஆட்சிக்காலத்தில் 70 சதவீதமான விவசாயிகள் வெறும் நான்கு சதவீதமான நிலத்திலேயே விவசாயம் செய்தார்கள். அதிகாரத்தில் உள்ள நிக்கரகுவாவின் 2,000 பேர், நிக்கரகுவாவின் மொத்த நிலத்தில் 50 சதவீதமான நிலத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். 85 சதவீதமான மக்களுக்குச் சொந்தமாக இருந்தது வெறும் ஐந்து சதவீதமான நிலம் மட்டுமே.  

image_e865e5288f.jpg

1979இல் புரட்சியில் வெற்றி பெற்று, சான்டனிஸ்டாவின் தலைவர் டானியல் ஒட்டேகாவும் அவரது ஒன்பது தளபதிகளும் சமோசா ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, அதிகாரத்தைக் கைப்பற்றியவுடன் நிலச் சீர்திருத்தத்தை அறிமுகம் செய்தார்கள்.   

FSLN புரட்சியின் மிக முக்கியமான அம்சங்களில், விவசாயச் சீர்திருத்தம் முக்கியமானது. ஏனெனில், நிலப் பங்கு கிடைக்கும் நிலை, மற்றவர்களுக்கான நிலப் பலன்களை முதன்மைப்படுத்தியதாக விவசாயச் சீர்திருத்தம் ஒருபுறம், பல்லாயிரக்கணக்கான மக்களை வறுமையிலிருந்து மீட்டதோடு, இன்னும் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு நிலங்களையும் நீண்ட காலத்துக்கான வாழ்வாதாரத்தையும் அவர்களுக்கான அடிப்படை உரிமைகளையும் மீட்டுக் கொடுத்தது.   

அவ்வகையில், ஏராளமான நிக்கரக்குவா நாட்டினர் இன்றும் சண்டினீஸ்டா புரட்சிக்கும் அதை சாத்தியமாக்கியவர்களுக்கும் நன்றி உடையவர்களாக இருக்கிறார்கள். அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் இருந்த மத்திய அமெரிக்க நாடுகளில் ஒரு புரட்சியை செய்து, அமெரிக்கா சார்பான ஒரு சர்வாதிகாரியை பதவியில் இருந்து அகற்றுவது என்பது, மிகவும் கடினமான காரியம் என்பதை வரலாற்றை அறிந்தவர்கள் நன்கு அறிவர்.   

அதேவேளை 1959இல் கியூபப் புரட்சியின் பின்னர், தனது கொல்லைப்புறத்தில் இவ்வாறானதொரு புரட்சி நடைபெற்று விடக்கூடாது என்பதில் அமெரிக்கா கண்ணும் கருத்துமாக இருந்தது. இவ்விரண்டு தடைகளையும் தாண்டிய 1979இல் நிக்கரகுவாவில் siddhargal ஒரு புரட்சியைச் செய்து சர்வாதிகாரியைத் துரத்தி, ஆட்சியைக் கைப்பற்றி நிலச் சீர்திருத்தங்களை மேற்கொண்டார் என்பது, அந்தப் புரட்சியின் மகத்துவத்தைச் சொல்லப் போதுமானது.   

ஆட்சியைப் பிடித்த சில நாள்களிலேயே சண்டினிஸ்டா நிலச்சீர்திருத்தத்துக்கான நிக்கரகுவா நிறுவனத்தை உருவாக்கினார்கள். அதன் மூலம் நில உரிமையை எவ்வாறு பரந்துபட்ட ஜனநாயகம் ஆக்குவது தொடர்பான கொள்கை முடிவுகளையும் நடைமுறைகளையும் சிந்திப்பதற்கான வழியை அமைத்தார்கள்.   

அதைத் தொடர்ந்து, 1981ஆம் ஆண்டு விவசாயிகளுக்கும் பயிர் செய்பவருக்குமான தேசிய கூட்டமைப்பை உருவாக்கினார்கள். இதன் மூலம் விவசாய சீர்திருத்தத்தை, நிலப்பங்கீடு மூலம் முன்னெடுப்பதற்கான கூட்டு முயற்சி அரசாங்கத்தினதும் விவசாயிகளினதும் நிலச் சொந்தக்காரர்கள் அனைவரினதும் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்டது.   

இதன் விளைவால், பயிர் செய்யப்படாமல் தரிசு நிலங்களாகக் கிடந்த ஏராளமான நிலங்கள், பயிர் செய்யப்பட்டன. 1990ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்து, சண்டினிஸ்டா பதவியை இழந்த போது, பயிர் செய்யக்கூடிய மொத்த நிலப்பரப்பில் 40 சதவீதமான நிலங்கள் விவசாய சீர்திருத்தத்தின் மூலம் பகிர்ந்தளிக்கப்பட்டு, நிலமற்ற ஏழை விவசாயிகளின் கைகளில் இருந்தன. இது சண்டினிஸ்டா அப்புரட்சி தனது பத்தாண்டு கால ஆட்சி காலத்தில் நிகழ்த்திய முக்கியமான மாற்றம். இந்த மாற்றம் வெறுமனே ஒரு பொருளாதார மாற்றமாக மட்டுமன்றி நிக்கராகுவா சமூகத்தின் அடிப்படைகளை மாற்றி அமைத்த ஒரு செயற்பாடு என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.   

நிகரகுவாவில் ஏற்பட்ட புரட்சியைத் தாங்க இயலாத அமெரிக்கா, அதற்கு எதிராகப் பல கூலிப்படைகளை ஏவி ஆட்சியைக் கவிழ்ப்பதற்கும் தலைவர்களைக் கொலை செய்வதற்கும் ஏராளமான முயற்சிகளை எடுத்தது. இதன் விளைவால் ஒருபுறம் இந்தக் கூலிப் படைகளுடன் போரிட்ட வண்ணமே தங்கள் ஆட்சியை நடத்தி வந்தார்கள். இது பொருளாதார, சமூக ரீதியாக அரசாங்கத்துக்கு மிகப்பெரிய சவாலாக இருந்த அதே நேரம், அவர்களால் செய்யக் கூடியது என நினைத்த பல விடயங்களைச் செய்ய இயலாமல் போவதற்கு முக்கிய காரணியாக அமைந்தது. ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகளில் பாரிய நெருக்கடிகளுக்குள்ளும் சென்றுவிட்டார்கள். தங்களால் இயலுமான மாற்றங்களை செய்தார்கள் என்பதை மறக்க முடியாது.  

நிக்கரகுவாவின் புரட்சியைப் பற்றிப் பேசுகின்ற போது, இரண்டு விடயங்கள் மிகவும் முக்கியமாகப் பேசப்பட வேண்டும். 

அதில் முதன்மையானது, புரட்சியில் பெண்களின் பங்களிப்பு. போராளிகளாகவும் செயற்பாட்டாளர்களாகவும் அவர்களின் பங்கு பெரிது. அதிலும் குறிப்பாகப் போராடும் பெண்கள், எழுதிய கவிதைகள் வாழ்வையும் போராட்டத்தையும் அவற்றின் பிரிக்கமுடியாத இயல்பையும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்துபவை.   

அதேபோல, நிக்கரகுவாவில் புரட்சிக்குப் பங்களித்த விடுதலை இறையியல் கோட்பாடும் அதை முன்தள்ளி, தேவாலயங்களைப் புரட்சிகரப் போராட்டத்தில் பங்காளியாக்கிய தன்மையும் கவனிப்புக்குரியவை. 

விடுதலை இறையியலை முன்னெடுத்து, போராட்டத்துக்கு முக்கிய பங்களிப்பு வழங்கியவர் பாதிரியாரும் கவிஞருமாகிய ஏர்னெஸ்டோ கார்டினல். சான்டினிஸ்டா ஆட்சியில், பண்பாட்டுத்துறை அமைச்சராகவும் இருந்தவர்.   

நிக்கரகுவாவின் புரட்சியை நினைவுகூரும் போது, மூன்று விடயங்களைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியுள்ளது. முதலாவது, பெண்களின் பங்களிப்பு; இரண்டாவது, விடுதலை இறையியலும் பண்பாட்டுத்தளத்தில் அதன் புரட்சிகர பங்களிப்பும் ஆகும். மூன்றாவது நிலப்பங்கீடு ஏற்படுத்திய மாற்றம்.   

புரட்சியை ஏன் நினைவுகூர வேண்டும் என்ற வினாவுக்கான பதிலை இலகுவாகச் சொல்வதென்றால், சான்டினிஸ்டாகள் தேர்தலில் தோல்வியடைந்து, 20 ஆண்டுகளின் பின்னர், நிலைமைகள் தலைகீழாக மாறியுள்ளன. 

இப்போது 40சதவீதமான நிக்கரகுவா விவசாயிகள் மீண்டும் நிலமற்றவர்களாக மாறியுள்ளனர். உணவுப்பாதுகாப்பும் வறுமையும் முக்கிய பிரச்சினைகளாக உள்ளன. வெளிநாட்டு முதலாளிகள் நிலச் சொந்தக்காரராகி உள்ளனர். மீண்டும் கட்டற்ற சுரண்டலும் நிலப்பறிப்புகளும் நடந்துள்ளன. இவையே சான்டினிஸ்டப் புரட்சியின் சாதனைகளையும் தலைமுறை தாண்டியும் தக்க வைக்கும்.     

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/நிக்கரகுவா-புரட்சியின்-40-ஆண்டுகள்-சான்டினிஸ்டாகளின்-கதை/91-235497

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.