Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அப்பா புகைக்கிறார் - எஸ். ராமகிருஷ்ணன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அப்பா புகைக்கிறார்

 - எஸ். ராமகிருஷ்ணன்


தனது அலுவலகத்திலிருந்து ருக்மணி வெளியே வந்தாள். மணி ஆறு இருபது ஆகியிருந்தது. சாலையில் செல்லும் வாகனங்களின் மீது வெயில் பட்டு தெறித்துக் கொண்டிருந்தது. கோடைகாலம் என்பதால் மாலையிலும் வெயில் அடங்கவில்லை.  மின்சார ரயிலைப்பிடிப்பதற்காக செல்லும் வழியில் கடைக்கு போய் ஒரு சிகரெட் வாங்கலாமா என்று ருக்மணிக்கு தோணியது. 

இப்படி சில தினங்கள் தோன்றுவதுண்டு. சில வேளைகளில் அவள் சிகரெட் வாங்குவதை பலரும் கவனிப்பார்களே என்று தன்னை அடக்கி கொண்டுபோயிருக்கிறாள். சில வேளைகளில் யாரையும் பற்றிய கவலையின்றி கடைக்கு போய் சிகரெட் வாங்கியிருக்கிறாள்.


அவளது அலுவலகத்திலிருந்து உடன் வரும் ஆண்களில் சிலர் பெட்டிக்கடைக்களில் நின்று புகைப்பதை கண்டிருக்கிறாள். அவர்கள் முன்னால் தானும் போய் சிகரெட் கேட்பது அவர்களை திகைப்படைய செய்யக்கூடும். ஆனால் அது அவளுடைய நோக்கமில்லை. 

அவளுக்கு சிகரெட் ஒன்று வேண்டும். அது புகைப்பதற்காக அல்ல. அவள் ஒரு போதும் சிகரெட் புகைத்ததுமில்லை. ஆனால் அவளுக்கு  சிகரெட்டின் மணம் தெரியும், சிகரெட்டை  நசுங்காமல் எப்படி கையில் பிடித்துக்கொள்ள வேண்டும் என்று தெரியும். சிகரெட் புகையின் வளையங்கள் காற்றில் எப்படி கரைந்து போகும் என்பதைக் கூட அறிந்திருக்கிறாள். 

பேக்கரியை ஒட்டியிருந்த பெட்டிக்கடையினுள் அவள் நுழைந்தவுடன் கடைக்காரன் அவள் கேட்காமலே ஷாம்பு வேண்டுமா என்று கேட்டான். மாலையில் யார் ஷாம்பு வாங்க போகிறார்கள் என்று அவளாக நினைத்துக் கொண்டு இல்லை என்றாள். உடனே அவன் விக்ஸ் மிட்டாய், ரீபில், சேப்டி பின் வேண்டுமா என்று கேட்டான். 

அந்தக்கடையில் பெண்கள் வாங்கக்கூடிய பொருட்கள் என்று இந்த நான்கு மட்டும் தான் இருக்கிறது என்று முடிவு செய்திருப்பான் போலும். அவள் கண்ணாடி பாட்டில்களுக்கு பின்னால் வரிசை வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த சிகரெட் பெட்டிகளை பார்த்து கொண்டேயிருந்தாள்

யாரோ ஒரு ஆள் அவளைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்து பான்பராக் வாங்கி வாயில் போட்டுக்கொண்டு மீதி சில்லறையை அள்ளிக் கொண்டு போனான். சில நிமிச யோசனைக்கு பிறகு ருக்மணி ஐந்து ரூபாய் காசை அவன் முன்னால் நீட்டியபடியே ஒரு சிகரெட் கொடு என்றாள். கடைக்காரனின் முகம் மாறியதை அவள் காணமுடிந்தது. அவன் ஏளனம் செய்வது போன்ற குரலில் என்ன சிகரெட் என்று கேட்டான்.

கடைக்கு ஒரு நாளைக்கு நூறு ஆண்கள் சிகரெட் வாங்க வருகிறார்கள். அவர்களில் ஒருவரிடம் கூட இந்த ஏளனத்தை அவன் காட்டியிருக்க மாட்டான் என்று ஆத்திரமாக வந்தது. அவள் பில்டர் சிகரெட் என்று சொன்னாள். கடைக்காரன் முகத்தை கோணலாக வைத்துக் கொண்டு அதான் என்ன சிகரெட்டுனு கேட்கிறேன் என்றான். 

வில்ஸ்பில்டர் என்று சொன்னாள். 

கடைக்காரன் சிகரெட் பெட்டியை உருவி அதிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்து தந்துவிட்டு சில்லறையை கண்ணாடி பாட்டில் மீது வைத்தான். 
அவள் சிகரெட்டை கையில் எடுத்து பார்த்த போது கடைக்காரன் அவனை முறைத்து பார்த்தபடியே இருப்பது தெரிந்தது. அவள் வேண்டும் என்றே இரண்டுவிரல்களுக்கும் நடுவில் சிகரெட்டை பிடித்துக் கொண்டு நின்று கொண்டேயிருந்தாள். கடைக்காரன் அவளை கேலி செய்வது போன்று தீப்பெட்டியை எடுத்து முன்னால் நீட்டினான். அவள் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு கடையிலிருந்து வெளியேறி நடந்தாள்.

கையில் ஒரு சிகரெட்டோடு நடந்து செல்லும் தன்னை பலரும் வேடிக்கை பார்க்கிறார்கள் என்பது அவளுக்கு தெரிந்தேயிருந்தது. அதைப்பற்றிய கவலையின்றி அவள் சிகரெட்டை கையில் பிடித்தபடியே ரயில் வருவதற்காக காத்திருந்தாள். அவளை கடந்து செல்லும் முகங்கள் சிகரெட்டினை கண்டு அதிர்ந்து போயின. அவள் சிகரெட்டை முகர்ந்து பார்த்தாள். அதே வாசனை. இன்னும் அப்படியே இருந்தது.

கடைக்கு போய் சிகரெட் வாங்குவது ருக்மணியின் பதினாலாவது வயது வரை அன்றாட வேலையாக இருந்தது. அவர்கள் வீடு இருந்த தெருவில் உள்ள எல்லா கடைகளிலும் அவள் சிகரெட் வாங்கியிருக்கிறாள்.

ருக்மணியின் அப்பா சிகரெட் பிடிக்க கூடியவர். அப்பா சிகரெட் புகைக்கிறார் என்ற சொற்கள் அவளை பொறுத்தவரை மறக்கமுடியாத ஒரு வடு. அந்த சொல்லைக் கேட்ட மாத்திரத்தில் தலையிலிருந்து கால் வரை குபுகுபுவென ரத்தம் உச்சம் கொள்வதை அவள் பலமுறை உணர்ந்திருக்கிறாள்.

எதற்காக தன்னை அப்பா கடைகடையாக போய் சிகரெட் வாங்க சொன்னார் என்று அவளுக்கு புரிந்ததேயில்லை. அந்த நாட்களில் தான் பெண்ணாக தானே இருந்தோம். பத்து வயதில் தவறாக இல்லாதசெயல் இருபது வயதில் ஏன் தவறாக கொள்ளப்படுகிறது. அப்போது தன்னை எவரும் ஒருமுறை கூட இப்படி வேடிக்கை பார்க்கவோ அல்லது கேலி செய்வதோ நடந்தது இல்லையே. அது ஏன் காரணம் சிகரெட் பிடிக்கின்றவர்கள் ஆண்கள். அது அவர்களுக்கு மட்டுமேயான ஆடுகளம். 

ருக்மணியின் அப்பா புள்ளியியல் துறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவர் அலுவலகத்தில் ஒருவரோடு கூட சண்டையே போட்டதில்லை. மிக அமைதியான ஊழியர் என்று சொல்லிக் கொண்டார்கள். வீட்டிலிருந்தே சாப்பாட்டை கொண்டு போய்விடுவார். தினமும் காலை மாலை இரண்டு நேரமும் கோவிலுக்கு போக கூடியவர். விடுமுறை நாட்களில் கூட அலுவலகம் சென்று வேலை செய்யக்கூடியவர்.

ஆனால் இதுஎல்லாம் வெளி உலகிற்கு. வீட்டில் அப்பா எப்போதும் கத்திக் கொண்டும் அம்மாவோடு சண்டை போட்டபடியும் தானிருந்தார். அம்மாவின் மீதான கசப்புணர்வு அவருக்குள் பீறிட்டுக் கொண்டேயிருந்தது. அவளை அடிக்காத நாட்களே இல்லை.  பத்து தடவைக்கும் மேலாக அம்மாவிற்கு மண்டை உடைந்து தையல் போட்டிருக்கிறார்கள். அத்தனையும் மறந்துவிட்டு தான் அம்மா அவருக்காக ஒடியோடி சாப்பாடு செய்து தருகிறாள்.  சில வேளைகளில் அம்மாவும் தன் மனதில் இருந்த அத்தனை கோபத்தையும் ஒன்று திரட்டி வசையிட்ட போதும் அவர்களுக்குள் இருந்த கசப்புணர்வு குறையவேயில்லை. 

அதற்காக தான் அப்பா புகைபிடிக்க துவங்கினாரோ என்னவோ, அம்மாவோடு சண்டையிட்ட பிறகு அப்பா ஆவேசத்துடன் சிகரெட் பிடிக்க ஆரம்பிப்பார். தொடர்ச்சியாக ஏழு எட்டு சிகரெட்களை கூட பிடித்திருக்கிறார். சிகரெட் பிடிக்கும் போது அவர் முகம் இறுக்கமடைந்து போயிருக்கும். பதற்றமும் எரிச்சலுமாகவே அவர் புகைபிடிப்பார். ஏதோவொன்றை அடக்கி ஆள்வது போன்ற ஆவேசம் அவருக்கு இருக்கும்.

அப்பா பலவருசமாக புகைபிடித்துக் கொண்டுதானிருந்தார். ஆனால் ஒருநாளும் அவர் கடையில் போய் அவருக்காக சிகரெட் வாங்கிக் கொண்டதேயில்லை. காலையில் ஒரு முறையும் மாலையில் இருமுறையும் ருக்மணி தான் கடைக்கு போய் அவருக்காக சிகரெட் வாங்கி வருவாள். சிகரெட் வாங்க கொடுத்த காசில் மீதமிருந்த சில்லறைகளை கூட  அவர் கவனமாக கேட்டு வாங்கிக் கொண்டு விடுவார். அவர் வழக்கமாக பிடிக்கும் சிகரெட் இல்லையென்றால் எங்கேயாவது போய் தேடி வாங்கி வரவேண்டும் இல்லாவிட்டால் அவளுக்கும் அடிவிழும்.

ஒவ்வொரு நாளும் கடைக்கு போய் சிகரெட் வாங்கும் போது அதை ருக்மணி முகர்ந்து பார்ப்பாள். புகையிலையின் மணமது. சிகரெட் பெட்டிகள் இல்லாமல் போன நாட்களில் நாலைந்துசிகரெட்டுகளை ஒன்றாக கையில் பொத்தி கொண்டுவருவாள். அப்போது சிகரெட்டுகள் நழுவி விழந்துவிடுமோ என்று பயமாக இருக்கும்.  சிகரெட் உதிர்ந்து போயிருந்தால் அதற்கும் வசவு விழும். 

இரவில் எத்தனை மணி ஆனாலும் அவளை கடைக்கு அனுப்பி சிகரெட் வாங்கிவர செய்வார் அப்பா. இருள் படிந்த தெருவில் பயமும் நடுக்கமாக கண்ணை மூடிக் கொண்டு ஒடிப்போய் பலமுறை வாங்கி வந்திருக்கிறாள்.
அப்பா சிகரெட் புகையை வீடு முழுவதும் நிரப்ப வேண்டும் என்று விரும்புகின்றவரை போல இந்தபக்கமும் அந்தப்பக்கமும் தலையை திருப்பி கொண்டு புகைவிடுவார். 

யார்மீதுள்ள கோபத்தையோ தணித்துக் கொள்வதற்கா புகைபிடிக்கிறார் என்பது போலவே அவரது முகபாவம் இருக்கும். சிகரெட்டின் சாம்பலை தட்டுவதற்காக அவர் கையில் கிடைக்கும் சில்வர் டம்ளர், தட்டு, பவுடர் டப்பாமூடி என எதையும் எடுத்துக் கொள்வார். 

ஒருமுறை அவர் அம்மாவின் உள்ளங்கையை நீட்ட சொல்லி அதில் கூட சிகரெட் சாம்பலை தட்டியிருக்கிறார். காரணம் இந்த வீட்டில் உள்ள எல்லாமும் தான் வாங்கி வந்தவை தானே இதில் எதில் சிகரெட்டின் சாம்பலை தட்டினால் என்ன குறைந்துவிடப்போகிறது என்ற எண்ணமே. 

அது போலவே சிகரெட்டை அணைத்து வீட்டிற்குள்ளாகவே தூக்கி எறிவார். அவர் புகைக்கும் இடத்தின் அருகில் தான் ஜன்னல் இருந்தது. ஆனால் ஒரு போதும் அவர் ஜன்னலுக்கு வெளியே சிகரெட்டை எறிந்ததேயில்லை. 
அம்மா கவனமாக அவர் வீசி எறிந்த சிகரெட் துண்டை பொறுக்கி எடுத்து வெளியே போடுவாள். அப்பா சிகரெட் பிடிப்பதற்காக வைத்துள்ள தீப்பெட்டியை அவர்கள் அடுப்பு மூட்ட ஒரு போதும் உபயோகிக்க கூடாது. அது அவர் உறங்கும்போது கூட தலையணியின் அருகாமையிலே இருக்கும். 

நள்ளிரவில் கூட எழுந்து பாயில் உட்கார்ந்து கொண்டு அப்பா புகைத்துக் கொண்டிருப்பார். அந்த வாடை நாசியில் ஏறி யாராவது செருமினால் கூட அவருக்கு ஆத்திரம் அதிகமாகி விடும். வேண்டும் என்றே முகத்தின் அருகாமையில் ஊதுவார்.

அவர்கள் மீது அவருக்கு உள்ள உரிமையை நிலை நிறுத்துவதற்கு இருந்த ஒரே அடையாளமாக சிகரெட் இருந்தது. 

ஒருநாள் அம்மா அவர் சட்டை பையில் வைத்திருந்த சிகரெட்டை துணி துவைக்கும் போது கவனமாக  எடுத்து வைக்க மறந்து துவைத்துவிட்டாள் என்பதற்காக அவளது வலது கையில் சூடு போட்டார் அப்பா. அன்றிரவு அம்மா வீட்டிற்கு உறங்குவதற்கு வரவேயில்லை. அருகாமையில் உள்ள வரலட்சுமி வீட்டில் போய் படுத்துக் கொண்டாள். 

அவளை வீட்டிற்கு கூட்டி வரும்படியாக அப்பா ருக்மணியை அனுப்பி வைத்தார். ருக்மணிக்கு ஆத்திரமாக வந்தது. அவள் வரலட்சுமியின் வீட்டு வாசலில் போய் நின்றபடியே வாம்மா வீட்டுக்கு வாம்மா வீட்டுக்கு என்று கூப்பிட்டுக் கொண்டேஇருந்தாள். ஆனால் அம்மாவின் காதில் அந்தக்குரல் விழவேயில்லை. தானும் அங்கேயே படுத்துக் கொள்ள வேண்டியது தான் என்பது போல அவளும் சுருண்டு படுத்துக் கொண்டாள்.

சில நிமிசங்களில் வரலட்சுமி வீட்டு வாசலில் அப்பாவின் குரல் கேட்டது. அவர் ஆவேசத்துடன் கத்திக் கொண்டு நின்றிருந்தார். அவரது ஆபாசமான பேச்சை தாள முடியாமல் வரலட்சுமியக்கா அம்மாவை வீட்டிற்கு போகும்படியாக அனுப்பி வைத்தாள். ருக்மணி பயத்துடன் கூடவே நடந்து வந்தாள். அப்பா தன் கையில் இருந்த பத்து ரூபாயை தந்து சிகரெட் வாங்கிக் கொண்டுவரும்படியாக சொல்லிவிட்டு அம்மாவை வீட்டிற்கு இழுத்துக் கொண்டு சென்றார்

ருக்மணி இருட்டில் அப்பாவை திட்டியபடியே நடந்து போனாள். 

இருட்டிற்குள்ளாக ஒரு ரிக்ஷாகாரன் அமர்ந்து பீடி புகைத்து கொண்டிருந்தான். பகலும் இரவும் எண்ணிக்கையற்ற ஆண்கள் சிகரெட் பிடித்துக் கொண்டேயிருக்கிறார்கள். உலகம் முழுவதும் அந்த புகை பெண்களை நோக்கியே திரும்புகிறது என்று நினைத்தபடியே அவள் நடந்தாள். கடைகள் யாவும் சாத்தியிருந்தன. எங்கே போய் சிகரெட் வாங்குவது என்று தெரியவில்லை. 

அவள் மீன்மார்க்கெட் வரை நடந்து போய் பார்த்தாள். அநேகமாக கடைகள் யாவும் மூடப்பட்டிருந்தன. சிகரெட் இல்லாமல் வீட்டிற்கு போனால் அப்பா தன்னை அடிக்க கூடும் என்ற பயமாக இருந்தது. அவள் சினிமா தியேட்டர் முன்பாக சிகரெட் கடையிருக்க கூடும் என்று நடந்தாள். இரண்டாவது காட்சி துவங்குவதற்காக பாடல் கேட்டுக் கொண்டிருந்தது. 

ருக்மணி சிகரெட் வாங்கிக் கொண்டு திரும்பும் போது சைக்கிளில் வந்த ஒருவன் பாதி புகைத்த சிகரெட்டை அப்படியே தூக்கி எறிந்துவிட்டு தியேட்டர் உள்ளே செல்வது தெரிந்தது. ஒடிப்போய் அந்த சிகரெட்டை எடுத்து பார்த்தாள். பாதி சிகரெட் புகைந்து கொண்டிருந்தது. சுற்றிலும் யாராவது தன்னை கவனிக்கிறார்களா என்று பார்த்துவிட்டு அந்த சிகரெட்டை அவள் ஒரு முறை இழுத்து பார்த்தாள். நெஞ்சினுள் அந்த புகை சென்றதும் புறை ஏறிக் கொண்டு இருமல் வந்தது. சிகரெட்டை வீசி எறிந்துவிட்டு இருமினாள். 

அடங்கவேயில்லை. அடிவயிறு பிடித்துக் கொண்டுவிடும் போலிருந்தது. பயத்துடன் கண்ணீர் முட்ட தன்னுடைய தலையில் தானே தட்டிக் கொண்டாள். வீட்டிற்கு வந்து சேர்ந்த போது  அப்பா வாசலில் ஈஸி சேரை போட்டு உட்கார்ந்திருந்தார். 

அவள் சிகரெட்டை அவரிடம் தந்துவிட்டு உள்ளே போய் அம்மா அருகில் படுத்துக் கொண்டாள். சிகரெட்டின் சுவை நாக்கில் அப்படியே இருந்தது. அம்மா அந்த மணத்தை உணர்ந்திருக்க கூடும். அவள் பக்கம் திரும்பி முகர்ந்து பார்த்தாள். பிறகு ஆவேசம் ஆனவள் போல சிகரெட் பிடிச்சயாடி. சிகரெட் பிடிச்சயா என்று மாறிமாறி முகத்தில் அறைய துவங்கினாள். ருக்மணி என்னை மன்னிச்சிரும்மா என்னை மன்னிச்சிரும்மா என்று கத்தினாள். ஆனால் அடி நிற்கவேயில்லை. 

அப்பா அதை கவனித்தபடியே சாய்ந்து புகைபிடித்துக் கொண்டிருந்தார். அம்மா கை ஒயும்வரை அடித்துவிட்டு அவளை கட்டிக் கொண்டு அழுதாள். பிறகு இவரும் ஒன்றாக படுத்துக் கொண்டார்கள். அதன்பிறகு சிகரெட் வாங்க போகும்போது அந்த வாசனை தன் மீது படிந்து விடக்கூடாது என்று கையை தனியே நீட்டியபடியே போவாள் ருக்மணி.

அவளை போலவே சிகரெட் வாங்க வரும் சிறுவர்கள் சிறுமிகள் நிறைய இருந்தார்கள். எதற்காக ஆண்கள் மட்டுமே சிகரெட் பிடிக்கிறார்கள் என்று அம்மாவிடம் கேட்டாள். அவரு சம்பாதிக்கிறாரு சிகரெட் பிடிக்கிறாரு அதனாலே என்ன என்று சொன்னாள் அம்மா.

ஆறாம்வகுப்பு படிக்கும் போது ஒரு முறை ருக்மணியின் பள்ளிக்கு அப்பாவை அழைத்து வரும்படியாக சொல்லியிருந்தார்கள். அவர்கள் வகுப்பிலிருந்து இரண்டு மாணவிகள் தேர்வுசெய்யப்பட்டு டெல்லியில் நடைபெறும் கலச்சார விழாவில் கலந்து கொள்ள செய்யப்பட்ட ஏற்பாடு அது. அப்பாவை வீட்டிலிருந்து அழைத்துக் கொண்டு போகும்வழியே தயங்கி தயங்கி ருக்மணி சொன்னாள்.

ஸ்கூல்ல வந்து நீங்க சிகரெட் பிடிக்க கூடாதுப்பா

அப்பா அதை கவனித்தது போலவே தெரியவில்லை. பிரேயர் முடிந்தபிறகு பிரின்ஸ்பலை  சந்திக்கும்படியாக சொல்லிய வகுப்பு ஆசிரியை  அப்பாவை வெளியே காத்திருக்க சொன்னாள். 

அப்பா அதற்குள் புகைக்க துவங்கியிருந்தார். அவ்வளவு மாணவிகளுக்கு நடுவில் நின்றபடியே ருக்மணி கண்ணை மூடி  பிரார்த்தனை செய்ய துவங்கியிருந்த போதும் காற்றில் சிகரெட் புகை கரைந்து வந்து கொண்டேயிருந்தது. பிரேயர் முடியும்வரை யாரும் எதுவும் சொல்லவேயில்லை. அப்பாவாக அதற்குள் பிரின்ஸ்பல் அறையை கண்டுபிடித்து உள்ளே சென்றிருந்தார். பிரின்ஸ்பல் அறைக்குள் நின்றபடியும் அவர் புகைத்துக் கொண்டுதானிருந்தார். 

பிரின்ஸ்பல் தன் அறையில் புகை பிடிக்க அனுமதியில்லை என்று கடுமையான குரலில் சொன்ன போது அது தன்னுடைய தனிப்பட்ட விஷயம். அதில் தலையிட பள்ளிக்கு அருகதையில்லை என்று சொல்லியபடியே இன்னொரு சிகரெட்டை எடுத்து புகைக்க துவங்கினார்.

இதற்குள் வகுப்பு ஆசிரியை ருக்மணியை அழைத்துக் கொண்டு வந்திருந்தாள். அப்பா நிதானமாக புகை பிடித்துக் கொண்டு தன்மகளை வெளியே அனுப்ப தனக்கு இஷ்டமில்லை பொம்பளை பிள்ளையை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும் என்றார். அந்த அறையில் புகை நிரம்பிக் கொண்டிருந்தது. வகுப்பு ஆசிரியையும் பிரின்ஸ்பலும் தனியே பேசிக் கொண்டிருந்தார்கள்.

 சில நிமிசங்களில் ருக்மணியை அழைத்து அப்பாவை  வெளியே அழைத்து செல்லும்படியாக சொன்னார்கள். அவள் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வந்த போதும் அவர் புகைத்துக் கொண்டே வந்தார். பள்ளியின் வாசலை தாண்டுவதற்குள் நிச்சயம் தன்னை டெல்லிக்கு அனுப்பமாட்டார்கள் என்று ருக்மணிக்கு தெரிந்துவிட்டிருந்தது. 

அப்பாவின் மீது ஆத்திரமாக வந்தது. அப்பா அவர்களது ஆத்திரம் கோபம் வசை எதைப்பற்றியும் ஒரு போதும் கருத்தில் கொண்டதேயில்லை. சிகரெட் பிடிப்பதை தவிர வேறு ஒரு கெட்டபழக்கமும் உங்க அப்பாவுக்கு கிடையாது. சம்பாதிக்கிற பணத்தை ஒழுங்கா வீட்டில் கொண்டுவந்து கொடுத்துவிடுகிறார். ஆபீஸ் விட்டா நேராக வீட்டிற்கு வந்துவிடுகிறார் என்று அம்மாவே பல நாட்கள் அவரை பாராட்டியும் இருக்கிறார்

ஆனால் அவளுக்கு அப்பாவை பிடிக்காமலே ஆகிப்போனது. அவள் மனதில் எப்போதும் அப்பா புகைக்கிறார் என்ற படிமம் உறைந்து போயிருந்தது. அதனால் தானோ என்னவோ சிகரெட் பிடிக்கின்றவர்களை கண்டாலே அவளுக்கு ஆத்திரமாக வரத்துவங்கியது.

அவள் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நாட்களில் அப்பா புகைப்பது மிக அதிகமாகி போயிருந்தது. அதற்கு காரணம் ஒய்வில்லாத சண்டை. ஒவ்வொரு நாளும் அவள் பள்ளியிலிருந்து வீடு திரும்பும் போதும் பயமாக இருக்கும் காரணம் அப்பா அம்மாவை திட்டிக் கொண்டிருப்பாள். அல்லது அடித்துக் கொண்டிருப்பார். அதன் சில நிமிசங்களில் அவள் சிகரெட் வாங்க போக வேண்டியதிருக்கும். பேசாமல் பள்ளிக்கூடம் விட்டு திரும்பி வரும்போதே கடையில் நாலைந்து சிகரெட்டுகள் வாங்கிக் கொண்டு வந்துவிடலாமா என்று கூட யோசித்துக் கொண்டிருப்பாள்

அப்படியொரு நாள் வீடு திரும்பும் போது வீட்டில் நிறைய ஆட்கள் திரண்டிருந்தார்கள். அம்மா சுவர் ஒரமாக சாய்ந்து கிடந்தாள். அவள் உடல் தலை கலைந்து கிடந்தது. சேலை கிழிந்து தொங்கிக் கொண்டிருந்தது. அவளை சுற்றிலும் உட்கார்ந்திருந்த பெண்கள் புலம்பிக் கொண்டிருந்தார்கள். அப்பா சலனமில்லாமல் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். அவரிடம் அருகாமை வீட்டு ஆண்களில் சிலர் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

வீட்டிற்குள் ருக்மணி வருவதைக்கண்டதும் அங்கிருந்த பெண்களில் ஒருத்தி உரத்த குரலில் அழுதபடியே இப்படியொரு பொம்பளை பிள்ளையை தனியா தவிக்க விட்டுட்டு சாகப்போறதுக்கு உனக்கு எப்படி மனசு வந்தது என்று அம்மாவை உலுக்கினாள். 

அம்மா அவள் பக்கம் திரும்பவேயில்லை. அம்மா தற்கொலை செய்வதற்கு முயன்றிருக்கிறாள். பக்கத்துவீட்டு பெண்கள் பார்த்து காப்பாற்றியிருக்கிறார்கள். இல்லாவிட்டால் இந்த நேரம் செத்துப்போயிருப்பாள் என்று சொல்லிக் கொண்டார்கள். 

அதை கேட்டவுடன் ருக்மணிக்கு கால்கள் நடுங்க துவங்கியது. அவள் அம்மாவின் அருகில்போய் உட்கார்ந்து கொண்டாள்.  அம்மாவின் கையை எடுத்து தன்னோடு சேர்த்து வைத்துக் கொள்ள முயன்ற போது அவள் தள்ளிவிட்டபடியே போ.. போயி உங்கப்பாவுக்கு சிகரெட் வாங்கிட்டு வந்து குடு என்றாள். ருக்மணிக்கு பேசாமல் தான் செத்துப்போய்விடலாம் என்பது போலிருந்தது.

அவள் யூனிபார்மை கூட கழட்டாமல் அப்படியே உட்கார்ந்திருந்தாள். அன்றிரவு எட்டரை மணி வரை அவர்கள் வீட்டில் நிறைய ஆட்கள் இருந்தார்கள். பிறகு அப்பா அவளிடம் பசிக்கிறதா என்று கேட்டார். அவள் இல்லை என்று பொய் சொன்னாள். அப்பா தன் சட்டை பையிலிருந்து ஐம்பது ரூபாயை எடுத்து தந்து அவளுக்கு தேவையான இட்லியும் அவருக்கு சிகரெட்டும் வாங்கிக் கொண்டு வரும்படியாக சொன்னார். 

அவள் எழுந்து பணத்தை கையில் வாங்கிக் கொண்டாள். வாசல்படியை விட்டு இறங்கும் போது அப்பா அழைப்பது போலிருந்தது. அவள் திரும்பி பார்த்த போது அப்பா செருப்பை மாட்டிக் கொண்டு அவளை நிறுத்திவிட்டு தானே கடைக்கு போய்வருவதாக சொன்னார். அவளால் நம்ப முடியவில்லை. தானும் கூடவரவா என்று கேட்டாள். அப்பா வேண்டாம் என்றபடியே கிழே இறங்கி நடக்க துவங்கினார்

இரவு பதினோறு மணி வரை அப்பா வீடு திரும்பி வரவேயில்லை. அம்மா அவளை தேடிப்பார்த்து வரும்படியாக சொன்னாள். ருக்மணி ஒவ்வொரு கடையாக போய் எங்கப்பா சிகரெட் வாங்க வந்தாரா என்று கேட்டுக் கொண்டேயிருந்தாள். அப்பா எங்கேயும் வரவில்லை. இந்த இரவில் எங்கே போயிருக்க கூடும். வீட்டிற்கு வந்து அம்மாவிடம் சொன்னபோது அவள் அவிழ்ந்து கிடந்த கூந்தலை சொருகிக்கொண்டு அவளையும் இழுத்துக் கொண்டு சினிமா தியேட்டர் வரை சென்று பார்த்தாள். ஆனால் அங்கேயும் அப்பா இல்லை.

 நள்ளிரவில் அம்மா தெருவில் நின்றபடியே சப்தமாக  அழுதாள். மாலையில் அவள் வீட்டில் திரண்டிருந்தவர்கள் எவரும் ஆறுதல்படுத்த வரவில்லை. அவளும் அம்மாவும் மட்டும் அழுதார்கள்

அடுத்த நாள் அம்மாவும் அவளும் அப்பாவின் அலுவலகத்திற்கு தேடிப்போய் பார்த்தார்கள். அப்பா அங்கேயும் வரவில்லை. அப்பாவிற்கு தெரிந்த ஒவ்வொருவர் வீடாக போய் அவர்கள் விசாரித்தார்கள். அப்பா எங்கேயும் வரவேயில்லை. அம்மாவின் கோபம் அவள் மீது திரும்பியது.

ஒரு சிகரெட் வாங்கிட்டு வந்து குடுக்கிறதுல உனக்குஎன்னடி கௌரவம் குறைஞ்சி போச்சி. உங்கப்பா அதுனாலே தானே அன்னைக்கு கோவிச்சிகிட்டு போயிட்டார் என்று அவளை திட்டத்துவங்கினாள்.

அப்பா காணமல்போய் இன்றைக்கு பதினேழு வருடங்கள் ஆகின்றது. ஆனால் அப்பா ஏன் அவளை கடைசியாக சிகரெட்வாங்க அனுமதிக்கவில்லை என்று அவளால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. 

அப்பா என்னவாகியிருப்பார். எங்காவது சாலை விபத்தில் அடிபட்டு இறந்து போயிருப்பாரா? அல்லது ஏதாவது ஒரு ஊரில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்மு தன்னை போலவே வேறு ஒரு சிறுமிக்கு தகப்பனாகி அவளையும் சிகரெட் வாங்க வைத்துக் கொண்டிருப்பாரா? இல்லை பிச்சைகாரர்களில் ஒருவரை போல அலைந்து திரிவாரா? என்று பலநாட்கள் யோசித்திருக்கிறாள்

சாலைகளில் பேருந்து நிறுத்தங்களில் புகைபிடிக்கும் ஆண்கள் அவளது அப்பாவை நினைவுபடுத்திக் கொண்டேயிருந்தார்கள். அப்பா ஏன் அவ்வளவு மூர்க்கமாக புகைபிடித்தார். அவருக்கு ஏதாவது வேதனை இருந்திருக்குமா. என்ன வேதனை அது. 

அப்பா காணாமல் போன சில வருசங்களில் அம்மா தானே உடல் நலிந்து போனாள். அவளை மாமா வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு ஹாஸ்டலில் தங்கி படிக்க துவங்கினாள் ருக்மணி. இப்போது வேலை கிடைத்து சம்பாதிக்க துவங்கிய பிறகும் அவளுக்கு ஹாஸ்டல் அறை மட்டுமே ஆறுதல் தருவதாக இருந்தது.

ஆனால் சிகரெட்டின் புகையும் மணமும் அவளுக்குள் அப்பாவின் பிம்பத்தை நாளுக்கு நாள் வலுப்படுத்திக் கொண்டேயிருந்தது. சில வேளைகளில் அதிலிருந்து மீள்வதற்காக அவள் சிகரெட்டை வாங்கிகொண்டு வந்து அறையில் இருந்த மேஜையில் போட்டு வைக்க துவங்கினாள். என்றைக்காவது அப்பா திரும்பி வந்தால் அவருக்கு இந்த சிகரெட்டுகளை புகைக்க தரலாம் இல்லையா?

அன்றைக்கும் அவள் ரயிலில் சிகரெட்டை கையில் வைத்தபடியே வந்ததை பலரும் வேடிக்கை பார்த்தார்கள். ஒவ்வொரு நாளும் இத்தனை ஆயிரம் பேர் பயணம் செய்யும் ரயிலில் ஒரு பெண் கூட சிகரெட் புகைத்து அவள் பார்த்ததேயில்லை. ஏன் புகைக்க கூடாது என்று ஏதாவது சத்தியம் செய்திருக்கிறார்களா அல்லது தடை செய்யப்பட்டிருக்கிறதா? 

பொது இடங்களில் நின்றபடியே மூத்திரம் பெய்யும் ஆண்கள், பொது இடங்களில் எச்சில் துப்பும் ஆண்கள், சாலையோர கடைகளில் நின்றபடியே பஜ்ஜி தின்னும் ஆண்கள், பான்பராக் போடும் ஆண்கள், டாஸ்மார்க் கடைகளில் கூட்டம் கூட்டமாக மது அருந்தும் ஆண்கள், வாந்தியெடுத்து குப்பையில் விழுந்து கிடந்து உறங்கும் ஆண்கள், பிக்பாக்கெட் அடிக்கும் ஆண்கள், பொதுவெளியில் பெண்களை உரசி பாலின்பம் காணும் ஆண்கள் என அவள் காணும் உலகம் முழுவதும் ஆண்கள் விகாரம் வழிந்து கொண்டிருந்தது. அத்தனை ஆண்களும் புகைக்கிறார்கள். அந்த புகைகள் அடுத்த இருக்கையில் உள்ள பெண்கள் மீது, உடன்வசிக்கும் மனைவி மீது, காதலிக்கும் பெண்ணின் உதட்டிற்குள்,  அருகில் உறங்கும் குழந்தைகளின் சுவாச கோளங்களில் சென்று நிரம்புகிறது.

ஆண்கள் புகைக்கிறார்கள். அது வெறும் செயல் அல்ல, அது அவளை போன்ற துயரின் வடுமறையாத சிறுவர் சிறுமிகளை உருவாக்கும் வன்முறை. தன்னை ஆண் என்று காட்டிக் கொள்ள வைக்கும் சாதனம். சிகரெட்டை தூக்கி எறிவதை போல, எவ்விதமான எதிர்ப்பும்இன்றி அணைத்து நசுக்குவதை போல தங்களையும் நடத்த முடியும் என்ற எச்சரிக்கை. 

ருக்மணி இப்படியான ஏதேதோ யோசனைகளுடன் அறைக்கு திரும்பி மேஜை டிராயரை திறந்து உள்ளே சிகரெட்டை போட்டாள். நாற்பது ஐம்பது சிகரெட்டுகளுக்கும் மேலாக இருந்தது. அதை பார்த்த போது அப்பா ஏன் கடைசியாக தன்னை சிகரெட் வாங்கிவர சொல்லவில்லை என்ற கேள்வி அவளுக்குள்  இன்றும் தீராமல் இருந்து கொண்டேயிருந்தது. 

அப்பா காணாமல்  போனது முதல் அவர் முகம் அவள் நினைவிலிருந்து அழிந்து போக துவங்கியிருந்தது. இப்போது அவரது நினைவாக  மிச்சமிருப்பது சிகரெட் மட்டுமே. தன் கடந்த காலத்தின் நினைவாக மிஞ்சியிருப்பது அந்த சிகரெட்டுகள் மட்டுமே தானே என்று தோணியது.

பின்னிரவில் அவள் படுக்கையில் கிடந்தபடியே முகட்டைவெறித்து பார்த்துக் கொண்டிருந்தபோது அறையெங்கும் சிகரெட் புகை நிரம்பியிருப்பது போல தோன்றியது. அந்த மணத்தை அவள் நாசி உணர்ந்து கொண்டிருந்தது. திகைத்து போய் விழித்து  பார்த்தாள். அறையில் அவளை தவிர யாருமேயில்லை. 

அத்தனை வருசங்களுக்கு அப்பாலும் அப்பாவின் சிகரெட் புகை அவளுக்குள் கரையாமல் புகைந்து கொண்டேயிருக்கிறது என்பது வருத்தம் தருவதாக இருந்தது. என்ன செய்வது என்று புரியாமல் அவள் கொஞ்ச நேரம் அழுது கொண்டிருந்தாள். பிறகு தனக்கு தானே பேசிக் கொள்ள துவங்கினாள். அப்போது சட்டென அவளும் தன்னுடைய அம்மா போலவே நடந்து கொள்வதாக தோணியது. அதை தான் அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

 

**

https://www.sramakrishnan.com/?p=507

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிகரெட்டால்  ஒரு குடும்பமே பிரிந்து விட்டது.....!   😩

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.