Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

திருக்குறள் பொது நூலா?

Featured Replies

  • தொடங்கியவர்

(அ) 'உடலே உயிர்' என்பர் அல்லர்

(1) உடலே உயிரென்பவர் உடலே ஆன்மா என்றும், உடலின் வேறாய் ஆன்மா இல்லை என்றுங் கூறுவர். நம் பொய்யில் புலவர்,

அவிசொரிந் தாயிரம் வேண்டலின் ஒன்றன்

உயிர்செகுத் துண்ணாமை நன்று. 259

என்றும்,

குடம்பை தனித்து ஒழியப் புள்பறந் தற்றே

உடம்பொடு உயிரிடை நட்பு. 338

என்றும் கூறுமாற்றால் தேகத்தின் வேறாய் உயிருண்டென்பதை அவர் உடன்படுகின்றார்

Edited by ArumugaNavalar

  • Replies 130
  • Views 25k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

(2) உடலே உயிர் என்பவர்கள் தாயையும் தந்தையையுமே தெய்வமாகக் கொள்வர்

நாயனார் ஆதிசத்தியோடு கூடிய பகவனாகிய சிவபரம்பொருளைத் தெய்வமாகக் கொண்டு வாழ்த்துக் கூறினார். ஆகலின் நாயனார் உடலே உயிர் என்பவரல்லர். ஆதியாகிய தாயையும் பகவனாகிய தந்தையையும் கூறி வழிபட்டார் எனச் சிலர் கூறுவர். உலக முதலாவான் ஆதிபகவனென உவமையுடன் கூறியதனால், ஆதிபகவனென்ற சொற்கள் தாய் தந்தையை உணாத்தின் உவமையுடன் ஒருவாற்றானும் பொருந்தாது.

சீர்கொளிறை யொன்றுண்டத் தெய்வநீ யென்றொப்பாற்

சோர்விலடை யாற்றெளிந்தோம் சோமேசா

என்ற முதுமொழி அகர முதல எழுத்தெல்லாம் என்ற ஒப்பினாலும், ஆதி யென்ற அடையினாலும் உலக முதற்பொருள் சிவபரம் பொருளேயென முதல் திருக்குறள் உணர்த்துகின்றது என கூறுகின்றது. 'பகவன்' என்ற சொல் மாயோன் முதலியோரையும் குறிக்குமாகலின், அவர்பாற் செல்லாது, சகத்துக்கு நிமித்த காரணனாகிய பதிப்பொருளை யுணர்த்தும் பொருட்டு, ஆதியென்ற அடை கொடுக்கப்பட்டது. அதனை மேலும் மேலும் வலியுறுத்தவே, "வாலறிவு" "வேண்டுதல் வேண்டாமை யின்மை" "தனக் குவமை யின்மை" "அறவாழி யந்தணனாந் தன்மை" "எண்குணமுடைமை" முதலிய தெய்வ குணங்களை விதந்தெடுத்து வகுத்துந் தொகுத்தும் ஓதப்பட்டது. ஆதலால், அவர் கூற்றுப் போலியென்றுணர்க.

  • தொடங்கியவர்

(ஆ) 'பொறிகளே உயிர்' என்பவர் அல்லர்

பொறிகளே ஆன்மா என்போர், மெய், வாய், கண், மூக்குச், செவியென்னும் ஐந்து பொறிகளை சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் எனும் ஐம்புலன்களை நுகர்தலால் அவ்வைம் பொறிகளே ஆன்மா என்பர். நம் பொய்யில் புலவர்,

உரனென்னுந் தோட்டியான் ஓரைந்துங் காப்பான்

வரனென்னும் வைப்பிற்கோர் 24

என்றும்,

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விகம் புளார்கோமான்

இந்திரனே சாலுங் கரி 25

என்றும்,

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு 27

என்றும் கூறுமாற்றால் ஐம்பொறிகளுக்கு வேறாக உயிருண்டென்பதை உடம்படுதலால், அவர் 'பொறிகளே' உயிர் என்பவர் அல்லர்.

  • தொடங்கியவர்

(இ) 'மூச்சே உயிர்' என்பவர் அல்லர்

மூச்சே உயிர் என்போர். மூச்சு உடம்பில் நின்று இயங்குங்கால் உடம்பில், உணர்ச்சியிருந்தும், பிரித்த போது உணர்ச்சியில்லாமலும் இருக்கக் காண்பதனால் மூச்சே உயிர் என்பர். நம் செந்நாப்போதார் தமது தெய்வ நூலில்

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்

விழுமம் துடைத்தவர் நட்பு. 107

என்றும்,

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்

கண்ணிறை நீர்கொண் டனள். 1315

என்றுங் கூறி, மறு பிறப்புக்கள் உண்டென்று நிறுவுவர்; அதனால், எடுத்த பிறப்பின்பாற்பட்ட ஐம்பூதங்களிலொன்றாகிய காற்றின் கூறான மூச்சை உயிரெனக் கொள்ளும் 'மூச்சான்மவாதி' அல்லர்.

  • தொடங்கியவர்

(2) 'பெளத்தர்' அல்லர்

பெளத்தர், ஞானத்தின் வேறாய்க் கடவுளின் றென்றும், ஞானமே ஆன்மாவென்றுங் கூறுவர்; அவர்கள் பதமுத்திகளுண்டெனக் கொள்வதில்லை. திருவள்ளுவ தேவர்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு. 1

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார். 3

என்னுந் திருக்குறள்களால் ஞானத்தின் வேறாய்க் கடவுளுண்டென்றும்

Thiruvalluvar.jpg

  • தொடங்கியவர்

அறிதோறு அறியாமை கண்டற்றாற் காமஞ்

செறிதோறுஞ் சேயிழை மாட்டு. 1110

என்னுந் திருக்குறளால் ஞானத்தின் வேறாய் ஆன்மா வுண்டென்றும்,

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்

தாமரைக் கண்ணான் உலகு. 1103

என்னுந் திருக்குறளால் பதமுத்தித் தானங்களாகிய மேலுலகங்களுண்டென்றும் கூறுவதனால், திருவள்ளுவ தேவர் 'பெளத்தர்' அல்லர்.

Edited by ArumugaNavalar

  • தொடங்கியவர்

(அ) 'மாத்தியமிகர் (சூனியவாதி)' அல்லர்

மாத்தியமிகர் உலகத்துப் பொருள்கள் அகப்பொருள் புறப்பொருள் என இருதிறப்படுமென்றும், அவ்விரு திறப்பொருள்களும் உள்ளவும், இல்லவும், உள்ளவுமில்லவும், இரண்டு மல்லவுமாகிய நான்குமில்லை யாகலான் சூனியமென்றும், மயக்கத்தால் உள்ளனபோல் தோன்றுகின்றன வென்றுங் கூறுவர். நாயனார் தமது வாயுறை வாழ்த்தில்,

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு. 1

என்ற முதற்றிருக்குறளாலேயே உலகு உண்டென்றும், அதற்கு ஒரு முதல் உண்டென்றும் உடம்படுகின்றதனால் சூனியவாதியாகிய 'மாத்தியமிகர்' அல்லர்.

Edited by ArumugaNavalar

  • தொடங்கியவர்

(ஆ) 'யோகாசாரர் (விஞ்ஞானவாதி)' அல்லர்

யோகாசாரர், அகப்பொருளாகிய ஞானம் உண்டென்றும், புறப்பொருள்கள் சூனியமென்றுங் கூறுவர். பொய்யில் புலவர்,

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

பொருளல்லது இல்லை பொருள். 751

என்றும்,

அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து

தீதின்றி வந்த பொருள். 754

என்றும்,

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு. 1

என்றும் வருந் திருக்குறள்களால் புறப்பொருள்களுண்டெனக் கொள்வதனாலே, புறப்பொருள்களெல்லாம் சூனியம் என்கின்ற விஞ்ஞானவாதியாகிய 'யோகாசாரர்' அல்லர்.

  • தொடங்கியவர்

(இ) 'செளத்திராந்திகர்' அல்லர்

செளந்திராந்திகர் புறப்பொருள்கள் வழியளவையானறியப்படுமென்பர். மேலும், சாதிபேதம், உயிர்கள், அடிசேர் முத்தி முதலியன இவர்களுக்கு உடம்பாடில்லை. நம் செந்நாப் போதார்,

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு. 1

என்பதனாலும்,

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்

ஒண்டொடி கண்ணே யுள. 1101

என்பதனாலும் வாயிற் காட்சியையும்,

யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து

ஓஒ உளரே அவர். 1204

என்பதனால் மானதக் காட்சியையும்,

உள்ளினுந் தீராப் பெருமகிழ் செய்தலால்

கள்ளினுங் காமம் இனிது 1201

என்பதனால் தன்வேதனைக் காட்சியையும் உடம்பட்டு இவ்வளவைகளினாலே புறப்பொருள்கள் காணப்படுகின்றனவென்றும்,

  • தொடங்கியவர்

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது

இன்னுயிர் நீக்கும் வினை. 321

என்றும்,

உயிருடம்பின் நீக்கியார் என்ப செயிருடம்பின்

செல்லாத்தீ வாழ்க்கை யவர். 330

என்றுங் கூறுவதால் உயிருண்டென்றும்,

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். 134

என்று கூறுவதால் சாதி உண்டென்றும்

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார். 10

எனக் கூறுவதால் அடிசேர் முத்தி யுண்டென்றுங் கொள்கின்றார். ஆகையால் செந்நாப்போதார் 'செளத்திராந்திகர்' அல்லர்.

  • தொடங்கியவர்

ஈ) 'வைபாடிகர்' அல்லர்

வைபாடிகர் மஞ்சளும் சுண்ணாம்புங் கூடினவிடத்து ஒரு சிவப்பு நிறந் தோன்றுமாப்போல, காணப்பட்ட பொருள்களும் பொறிகளின் புலன்களாகிய அறிவும் கூடினபோது உலகப் பொருள்கள் பொருந்தித் தோன்றுவது ஞானக் காட்சியென்றும், அதைத் தெளிந்தவர்க்குப் புத்தர் வீடு தருவரென்றுங் கூறுவர், திருவள்ளுவர்.

உரனென்னுந் தோட்டியான் ஓரைந்துங் காப்பான்

வரனென்னும் வைப்பிற்கோர் வித்து 24

என்றும்,

Edited by ArumugaNavalar

  • தொடங்கியவர்

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

இந்திரனே சாலுங் கரி. 28

என்றும் கூறுவதால் ஐம்பொறிகளையடக்கிப் புறப்பொருள்களை யுணராதிருப்பது ஞான காரணமென்றும்.

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

பிறவாழி நீந்தல் அரிது. 8

என்று கூறுவதால் இறைவனடி சேர்தலே முத்தியின்ப மென்றும் உடம்படுகின்றார்.

ஆகையால் திருவள்ளுவ தேவர் 'வைபாடிகர்' அல்லர்.

  • தொடங்கியவர்

(3) 'ஆசீவகர்' அல்லர் (ஆசீவகம் - சமணம்)

'ஆசீவகர்' நிலவணு நீரணு தீயணு வளியணு ஆகிய நான்கணுக்களின் கூட்டுறவால், சீவ அணு வினைக்கீடான உடலை யெடுக்குமென்றும் இவ்வணுக்களுக்கு வேறாய்க் கடவுள் இல்லையென்றுங் கூறுவர். நம் பெரு நாவலர் தமது 'உத்தர வேதத்'தில்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு. 1

என்று கூறுவதனால் உலகுக்குக் கருத்தாவாகிய ஆதிபகவனுண் டென்றும்,

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி

தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது. 377

என்று கூறுவதனால் கன்ம பலன்களைச் சீவர்களுக்குக் கடவுளே கொடுப்பனென்றும் உடம்படுகின்றார்.

ஆகையால் நம் தேவர், 'ஆசீவகர்' அல்லர்.

  • தொடங்கியவர்

(அ) 'நிகண்டவாதி' அல்லர்

கண்டம் - உடை. நிகண்டம் - உடையின்மை. நிகண்டவாதிகளுக்கு உடையில்லை. இவர்கள் முக்குணங்கள் கெடுவதே முத்தியென்பர். நம் தேவர்.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு. 788

என்ற திருக்குறளால் உடை உண்டென்றும்,

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார். 10

என்ற திருக்குறளால் இறைவனடி சேரும் முத்தி யுண்டென்றுங் கூறுகின்றனர்.

ஆகையால் தேவர் 'நிகண்டவாதி' அல்லர்.

  • தொடங்கியவர்

4) 'தார்க்கிகர்' அல்லர்

'தார்க்கிகர்' நுண்ணணுக் (பரமாணு) காரண வாதங் கூறுவர், நாயனார்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு. 1

என்ற திருக்குறளால் உலகுக்குப் பகவன் காரணம் என்று கூறுகின்றார்.

ஆகையால் நாயனார், 'தார்க்கிகர்' அல்லர்.

  • தொடங்கியவர்

(அ) 'வைசேடிகர்' அல்லர்

வைசேடிகர் - திரவியம், குணம், தொழில், சாதி, விசேடம், சமவாயம், இன்மை எனும் எழுவகைப் பொருள்களின் சிறப்பியல்பு பொது வியல்பு வேற்றியல்புகளை யுணர்தலால், உடம்பு முதலியவற்றின் வேறாகிய ஆன்மாவினியல்பு விளங்கும்; விளங்கவே உடம்பு முதலியவற்றை நானென்று எண்ணிய பொய்யுணர்வு கழியும். அது கழியவே முயற்சியின்மையின் நல்வினை தீவினைகளில்லையாய்ப் பிறவி ஒழியும். அங்ஙனம் ஒழியவே வரக் கடவனவாகிய துன்பங்களின்மையின் உடம்பு முகந்து கொண்ட வினைப்பயன், நுகர்ச்சியாற் ககிவுழி, இறுதித் துன்பங்கெட்டு மனத்தோடு கூடுதற் கேதுவின்மையின் அறிவின்றிப் (பாடாணம்) கல்போற் கிடப்பதே முத்தியென்பர். நம் மாதானுபங்கியார் தமது பொதுமறையில்.

தாம்வீழ்வார் மென்றோன் துயிலின் இனிதுகொல்

தாமரைக் கண்ணான் உலகு. 1103

என்ற திருக்குறளில் பதமுத்தியையும்.

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார். 3

என்ற திருக்குறளில் முடிந்த முத்தியையுங் கூறுவதால் மாதானு பங்கியார் 'வைசேடிகர்' அல்லர்.

  • தொடங்கியவர்

(ஆ) 'நையாயிகர்' அல்லர்

'நையாயிகர்' முத்தியில் ஆனந்த முண்டென்று கூறினாலும் இறைவனடி சேரும் முத்தியை உடம்படார். நாயனார்,

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவனடி சேரா தார். 10

என்ற திருக்குறளால் அடிசேர் முத்தியை உடம்படுதலால் அவர் 'நையாயிகர்' அல்லர்.

  • தொடங்கியவர்

(5) 'மீமாஞ்சகர்' அல்லர்

மீமாஞ்சகர் வேதத்தின் ஞான காண்டத்தை யிகழ்ந்து கரும காண்டத்தையே கொள்வர். ஆன்மாக்கள் பலவாய், நிலையாய், பரவலாய் (வியாபகமாய்), தொன்மையே (அநாதியே) காமம் சினம் முதலிய (காமக்குரோதாதிகளாகிய) பாசத்தை யுடையவைகளாய், வினைக்கீடாகப் பிறந்திறந்து, வினைகளைச் செய்து வினைப் பயன்களை நுகர்ந்து வரும். இவ்வான்மாக்களுக்கு வேறாய்க் கடவுள் (பரமான்மா) ஒருவன் உண்டென்பதும், உலகம் தோன்றியழியு மென்பதும் பொய்; உலகம் என்றும் இவ்வாறே நிலைபெறும் என்பர். நம் நான்முகனார்.

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து

வேண்டும் பனுவல் துணிவு. 21

உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்

வரனென்னும் வைப்பிற்கோர் வித்து. 24

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

இந்திரனே சாலுங் கரி. 25

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் இலன். 341

வேண்டினஉண் டாகத் துறக்க துறந்தபின்

ஈண்டியற் பால பல. 342

அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்

வேண்டிய வெல்லாம் ஒருங்கு 343

  • தொடங்கியவர்

இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை

மயலாகும் மற்றும் பெயர்த்து 344

என்னுந் திருக்குறள்களில் ஞான காரணமாகிய துறவு, ஐம்பொறியடக்கல் முதலியவைகளைக் கூறுதலானும்,

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு. 350

என்னுந் திருக்குறளில் ஆன்மாக்களுக்கு வேறாய் முதல்வனுண்டென்றும்,

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு. 1

என்னுந் திருக்குறளில் உலகுக்கு முதல்வராய் அதனை ஆக்கி நிறுத்தி அழித்து வருபவராய் ஒரு கடவுளுண்டென்றும் கூறுதலானும் திருவள்ளுவ நாயனார் 'மீமாஞ்சகர்' அல்லர்.

  • தொடங்கியவர்

(அ) 'பட்டர்' அல்லர்

பட்டர் கன்மமானது தானே பயன்கொடுக்குமென்று கூறுவர். தேவர்,

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடிதொகுத்தார்க்கு துய்த்தல் அரிது. 377

என்ற திருக்குறளில் கன்மபலனைக் கொடுப்பவன் கடவுளென்று கூறுவதால் அவர் 'பட்டர்' அல்லர்

.(ஆ) 'பிரபாகரர்' அல்லர்

பிரபாகரர் கன்மநாசத்தில் 'அபூர்வம்' என ஒன்று தோன்றி நின்று பயன் கொடுக்குமென்றும், 'பாடாணம்' போற் கிடப்பதே முத்தியென்றுங் கூறுவர். நம் முதற் பாவலர்,

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடிதொகுத்தார்க்கு துய்த்தல் அரிது. 377

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். 3

என்னுந் திருக்குறள்களில் கன்ம பலனைக் கொடுப்பவன் முதல்வனென்றும், முதல்வன் திருவடியைச் சார்ந்தின்புற்று எக்காலும் வாழ்வதே முத்தியென்றும் கூறுதலால், அவர் 'பிரபாகரர்' அல்லர்.

Edited by ArumugaNavalar

  • தொடங்கியவர்

(6) 'ஏகான்மவாதி' அல்லர்

ஏகான்மவாதியர் உண்மை அறிவின்ப வடிவமான கடவுள் (சச்சிதானந்த ரூபமான பரப்பிரமம்) ஒன்றே உள்ளது. அதற்கு வேறான உயிர்கள், உலகம், உலகத்துப் பொருள்கள் எல்லாம் கானல்நீர் போற் காணப்படுவனவேயன்றி உண்மையில் இல்லையென்பர்; வேதத்தின் கருமகாண்டத்தை இவர்கள் இகழ்வர்.

நாயனார் முதல் திருக்குறளில் உலகும், உலக முதற் பொருளும் உண்டெனக் கொள்வதனாலும்,

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து

இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. 22

என்ற திருக்குறளில் பல உயிர்கள் உண்டெனக் கொள்வதனாலும்,

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர்செகுத் துண்ணாமை நன்று. 259என்ற திருக்குறளில் வேள்வி முதலிய (யாகாதி) கருமங்களுண்டெனக் கொள்வதனாலும் 'ஏகான்மவாதி' அல்லர்.

  • தொடங்கியவர்

(அ) 'மாயாவாதி' அல்லர்

மாயாவாதிகள் 'அத்தியாசவாதம்' கூறுவர்; கடவுளுக்கு வேறாக உயிர்கள் இல்லையென்பர். உலகம் உயிர் இறை ஆராய்ச்சியில் (ஜெகஜீவ பரத்துவ விசாரத்தில்) தோன்றும் வேதாந்த ஞானத்தால் கடவுளுருவம் (பிரமரூபம்) யானென அறிவதே முத்தியென்பர். நம் தேவர்,

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு. 1

என்பது முதலிய திருக்குறள்களால் உள்ளதே செயலாதல் (சற்காரிய வாதங்) கூறுகின்றார்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாந் தலை 322

என்பது முதலிய திருக்குறள்களால் கடவுளுக்கு (பரமான்மாவுக்கு) வேறாக உயிர்களே (சீவான்மாக்கள்) உண்டென்கின்றார்;

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவனடி சேரா தார். 10

என்ற திருக்குறளால் இறைவனடி சேர்கின்ற முத்தியைக் கூறுகின்றார்.

ஆகையால் தேவர் 'மாயாவாதி' அல்லர்.

  • தொடங்கியவர்

(அ) 'நிரீச்சுரசாங்கியர்' அல்லர்

'நிரீச்சுரசாங்கியர்' முக்குணங்களும் அடங்குவதே முத்தியென்பர். செந்நாப்போதார்,

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

பிறவாழி நீந்தல் அரிது. 8

என்பது முதலிய திருக்குறள்களால் இறைவனடியைச் சேர்வதே முத்தி யென்கின்றார்.

ஆகையால் அவர் 'நிரீச்சுரசாங்கியர்' அல்லர்.

  • தொடங்கியவர்

(ஆ) 'பாற்கரியவாதி' அல்லர்

'பாற்கரியவாதிகள்' உண்மையறிவின்ப வடிவமான கடவுளே (சச்சிதானந்த ரூபமான பிரமமே). அறியாமைப் பொருளும் (சடமும்), அறிவுப் பொருளுமாய் (சித்துமாகிய) உலகங்களாய்த் திரிந்தது (பரிணமித்தது), அங்ஙனம் திரிந்து வேறுபட்டு (பரிணமித்து விகாரப்பட்டு) அறியாமையினாற் கட்டப்பட்டது (பந்தமாயிற்று); அருளுருவத்தில் (பரமார்த்தத்தில்) ஒரு பொருளே உள்ளது. வேதாந்த ஞானத்தால் கடவுள் (பரப்பிரமம்) விளங்கும். அதில் ஈடுபடும் இலயித்தலாகிய உயிர் கெடுகின்ற முத்தியே முத்தியென்பர். முதற் பாவலர்,

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகியற்றி யான். 1062

என்ற திருக்குறளால் முதல்வன் தானே உலகாகாமல் உலகை இயற்றினானென்றும்,

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார். 3

என்ற திருக்குறளால் முதல்வனடியைச் சேர்ந்து நீடுவாழ்வதே 'முத்தி' என்றுங் கூறுகின்றார்.

ஆகையால் நாயனார் 'பாற்கரியவாதி' அல்லர்.

  • தொடங்கியவர்

(இ) 'கிரீடாப்பிரமவாதி' அல்லர்.

கிரீடாப்பிரமவாதிகள், 'பிரமமே நான்' என்றும், நான் ஒருபடித்தன்றிப் பல்வேறு வகைப்பட்ட திரிபுப் (விகாரப்) பொருள்களோடு கூடிப் பலவாற்றான் விளையாடுகின்றேன் என்றும், அங்ஙனம் விளையாடுகின்றேன் என அறிவதே 'முத்தி' என்றுங் கூறுவர்.

திருவள்ளுவ தேவர் கடவுளுக்கு வேறாய் உலகும், உயிர்களும் உண்டெனக் கூறுவதாலும், அடிசேர் முத்தியை உடம்படலானும், 'கிரீடாப் பிரமவாதி' அல்லர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.