Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழுக்கு உள்ள உரிமையை பயன்படுத்த தயக்கம் கூடாது!

Featured Replies

tamil.jpg?itok=Ctrh4QqA

நுவரெலியா மாவட்டத்தில் முதன்மை மொழி தமிழ்

இலங்கையின் அரசியலமைப்பின்படி தமிழ்மொழி பெற்றுள்ள  அந்தஸ்துகள் எவை என்பதும், நமது தாய்மொழியான தமிழைப் பயன்படுத்தும்  சட்டபூர்வ உரிமை எந்த அளவில் உள்ளது என்பது பற்றியும் தெளிவாகத்  தெரிந்து கொள்ள வேண்டும்.

அரசியலமைப்பு என்பது ஒரு நாட்டின் நிர்வாகத்தை  வழிநடத்தும் விதிமுறைகளடங்கிய பெறுமதி வாய்ந்த சட்டநூலாகும். அதிலுள்ள  விதிகளை அப்படியே கடைப்பிடித்து செயற்படுத்த வேண்டுமேயன்றி அதனை மீறிச்  செயற்படுவதோ, புறக்கணிப்பதோ சட்டப்படி குற்றமாகக் கருதப்பட வேண்டும். 

அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள மொழியுரிமை தமிழைப் பொறுத்தவரை  தொடர்ந்தும் மீறப்பட்டே வருகின்றது. தட்டிக் கேட்போர் எவருமற்ற நிலையே  காணப்படுகின்றது. 

இலங்கையின் அரசியலமைப்பின்படி நாடு முழுவதற்குமான தேசிய  மொழியாகவும், நிர்வாக மொழியாகவும் சிங்கள மொழியும், தமிழ் மொழியும்  ஏற்கப்பட்டுள்ளன. அதேவேளை வடக்கு, கிழக்கு மாகாணங்களின் முதன்மை நிர்வாக  மொழியாகத் தமிழும் ஏனைய ஏழு மாகாணங்களின் முதன்மை நிர்வாக மொழியாகச்  சிங்களமும் இருக்குமென்றும் கூறப்பட்டுள்ளது.

ஆங்கிலம் இணைப்பு மொழியாக ஏற்கப்பட்டுள்ளது. இருப்பினும், நாட்டின் எப்பகுதியிலும் ஒரு குடிமகன்  தனக்கு விரும்பிய ஏதாவது ஒரு மொழியில் தனது அரசுடான தொடர்புகளையும்  அன்றாடக் கடமைகளையும் ஆற்றிக் கொள்ள முடியுமென்ற உரிமையும்  வழங்கப்பட்டிருக்கின்றது.அதேவேளை இரு மொழிகளையும் முதன்மை மொழியாகக் கொண்ட  மாகாணங்களில் மாற்று மொழியான சிங்களம் அல்லது தமிழை தாய்மொழியாகக்  கொண்டவர்கள் வாழும் பிரதேச செயலகப் பிரிவுகளை இரு மொழிப் பிரதேச செயலகப்  பிரிவுகளாக, அதாவது இருமொழிகளையும் அன்றாடம் அரச அலுவலகங்களில்  பயன்படுத்தும் உரிமையுடையவையாகப் பிரகடனப்படுத்தவும் சட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அதன்படி நுவரெலியா மாவட்டத்திலுள்ள ஐந்து பிரதேச சபைகளான அம்பகமுவ,  ஹங்குரங்கெத்த, வலப்பனை, கொத்மலை, நுவரெலியா ஆகியவை இரு மொழிப் பிரதேச  செயலகப் பிரிவுகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அதன் மூலம் முழு  நுவரெலியா மாவட்டமும் தமிழ்மொழிக்கும் நிர்வாகவுரிமையுள்ளதாக  அரசியலமைப்பின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட தமிழ்  மக்கள் தமது அன்றாடக் கடமைகளையும், அரசாங்கத்துடனான தொடர்புகளையும் எவ்வித  தயக்கமோ, தடையோ இன்றி திருப்திகரமாக தமிழ்மொழி மூலம்  நிறைவேற்றிக் கொள்ளும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. 

மத்திய அரசாங்க அலுவலகங்கள், மாகாண சபையின் அலுவலகங்கள்,  மாநகர, நகர, பிரதேச சபை அலுவலகங்கள் யாவற்றிலும் நுவரெலியா மாவட்ட தமிழ்  மக்கள் தமிழ் மொழி மூலம் தமது கடமைகளை ஆற்றிக் கொள்ள முடியும்.  சட்டப்படி கிடைக்கப் பெற்றுள்ள மொழியுரிமையை நுவரெலியா மாவட்ட தமிழ் மக்கள்  பயன்படுத்த ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளனவா என்றால் இல்லையென்பதே பதிலாகக்  கிடைக்கின்றது. 

இம்மாவட்டத்தில் தமிழ்த் தொழிலாளர்கள் மட்டுமே பணிபுரியும்  தோட்ட அலுவலகங்களில் கூட தமிழில் தேவைகளை நிறைவேற்றவோ சேவைகளைப்  பெற்றுக் கொள்ளவோ முடியாத நிலை நிலவுவது தெரியவந்துள்ளது. அரச அலுவலகங்களைப்  போன்றே பல தோட்ட அலுவலகங்களிலும் தமிழ் மொழியில் போதிய புலமை பெற்றவர்கள்  பணியில் ஈடுபடுத்தப்படாமலுள்ளமையே இதற்கான காரணமாகும்.  

நுவரெலியா மாவட்டத்தின் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களில்  ஐவர் தமிழர். அதில் ஒருவர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர். மற்றொருவர்  அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர். உள்ளூராட்சி சபைகளிலும் கணிசமான அளவில்  தமிழர்கள் பிரதிநிதிகளாகவுள்ளதுடன் பலவற்றில் அவற்றின் தலைவர்களாகவும்  செயற்படுகின்றனர். கலைக்கப்பட்ட மாகாண சபையிலும் கணிசமான தமிழர்கள்  பிரதிநிதிகளாகவிருந்தனர். 

அரசியலமைப்பின் 16ஆவது திருத்தத்தின் 20ஆம் உறுப்புரையில்  பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அல்லது மாகாண சபையின் உறுப்பினரொருவர் அல்லது  உள்ளூராட்சி சபையின் உறுப்பினரொருவர் எந்தவொரு தேசியமொழியிலும் தனது  கடமைகளைப் புரியவும், பணிகளை நிறைவேற்றவும் உரிமையுடையவர் என்று தெளிவாகக்  குறிப்பிடப்பட்டுள்ளது. 

இவ்வாறு கூறப்பட்டுள்ள நிலையில், தமிழ் மக்களின் வாக்குகளால்  தெரிவு செய்யப்பட்டு தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகத் தம்மை  வெளிக்காட்டிக் கொள்வோரில் எத்தனை பேர் தமிழ் மொழிக்கு சட்ட ரீதியாக  வழங்கப்பட்டுள்ள நிர்வாக மொழியுரிமையைப் பயன்படுத்துகின்றார்கள்? சில தமிழ்  மக்கள் பிரதிநிதிகளுக்கு மொழி பயன்பாடு தொடர்பில் தமக்குள்ள உரிமைகள் எவை  என்பது பற்றியோ மாவட்டத்தின் தமிழ் மக்களுக்குள்ள மொழியுரிமை பற்றிய  புரிந்துணர்வோ இல்லாமையும் தெரியவருகின்றது. 

மக்களின் வாழ்வுரிமைகளில் மொழியுரிமையும் முக்கியத்துவம்  பெறுகின்றது. மக்களுக்கு வழிகாட்டிகளாகச் செயற்பட வேண்டிய மக்கள்  பிரதிநிதிகள் தமிழ்மொழி பயன்பாடு தொடர்பில் தாமும் வழிகாட்டிகளாகச்  செயற்படுவதுடன் பொதுமக்களையும் தமிழ்மொழியை அன்றாடத் தேவைகளுக்காகப்  பயன்படுத்த வழிகாட்ட வேண்டும். தேர்தல் காலங்களில் தமிழர்களையும். தமிழ்மொழியையும் பற்றிப் பேசுவோர் மக்களின் உயிர் மூச்சு மொழி என்பதை நினைவில் கொண்டு  நுவரெலியா மாவட்டத்தில் தமிழ்மொழியை நிர்வாக மொழியாக நடைமுறைப்படுத்த  தேவையானவற்றைச் செய்ய வேண்டும். 

நுவரெலியா மாவட்டமானது மொத்த மக்கள் தொகையில்  அரைப்பங்கிற்கும் அதிகமான தமிழ் மக்களைக் கொண்டது. அவ்வாறிருந்தும் கூட  இம்மாவட்டத்தைப் பொறுத்தவரை முதன்மை மொழியாக இருக்க வேண்டிய தமிழ்மொழி  பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்ட நிலைக்கு ஆளாகியுள்ளது. அரசு  சார்பு திணைக்களங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்கள். சபைகளில் கடமை புரியும்  உயர் அதிகாரிகள் உட்பட சகல பணியாளர்களுக்கும் நுவரெலியா மாவட்டத்தில்  கடைப்பிடிக்க வேண்டிய அரச கரும மொழிக்கொள்கை பற்றிய தெளிவான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். 

அத்துடன் நுவரெலியா மாவட்ட தமிழ் மக்களும் தமக்குரிய மொழியுரிமை பற்றித் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். 

த. மனோகரன்...
(ஓய்வுபெற்ற கைத்தொழில்
நீதிமன்றப் பதிவாளர்

http://www.thinakaran.lk/2019/10/11/கட்டுரைகள்/41903/தமிழுக்கு-உள்ள-உரிமையை-பயன்படுத்த-தயக்கம்-கூடாது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.