Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை நிலைவரங்களை மீண்டும் நெருங்கி வந்து அவதானிக்க ஆரம்பித்திருக்கும் சர்வதேச சமூகம்

Featured Replies

இலங்கை நிலைவரங்களை மீண்டும் நெருங்கி வந்து அவதானிக்க ஆரம்பித்திருக்கும் சர்வதேச சமூகம்

இலங்கையின் அரசியல் ஆடுகளம் இவ்வாரத்தில் அதிக பரபரப்பையும் கடும் விவாதங்களையும் உலக நாடுகளின் அவதானிப்பையும் கொண்டதாகக் காணப்பட்டது. ஆளும் தரப்பினரும் எதிர்க்கட்சிகளும் ஆடிவரும் அரசியல் கள ஆட்டங்களை மக்கள் ஆர்வமற்ற வெறும் பார்வையாளர்களாக மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆளும் தரப்பினர் எடுக்கும் முடிவுகளும் விடாப்பிடியான செயற்பாடுகளும் தாங்கள் பலமான நிலையில் இருந்து வருவதாகவே எண்ணிக்கொண்டிருக்கின்றனர்.

ஆனால், நாடு எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளும் மக்கள் கொண்டிருக்கும் கவலைகளும் ஆளும் தரப்பினர் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு எதிர்மாறானவைகளாகவே இருந்து வருகின்றன. அவை இரண்டு அடிப்படைகளில் இருந்து எழுபவைகளாக உள்ளன. ஒன்று தேசிய இனுப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வின்றி உக்கிரப்படுத்தப்பட்டு வரும் யுத்தம். இரண்டாவது, மோசமடைந்துள்ள பொருளாதார நெருக்கடிகளின் விளைவான பாரிய சுமை. இவை இரண்டிலும் தீர்வோ மாற்றங்களோ முன்னெடுக்கப்படாத வரை நாட்டினதும் மக்களினதும் நிலை மென்மேலும் மோசமடைந்து செல்லக்கூடிய அபாயங்களே அதிகரித்த வண்ணம் உள்ளன.

இத்தகைய நிலையில் சர்வதேச சமூகம் என்றழைக்கப்படும் நாடுகள் இலங்கையின் இன்றைய நெருக்கடிச் சூழலை மீண்டும் கிட்டவந்து உற்று அவதானிக்க ஆரம்பித்துள்ளன.

பேச்சுவார்த்தைக்கு அனுசரணையும் ஆதரவும் கொடுத்து வந்த இணைத் தலைமை நாடுகள் கடந்த ஒன்றரை வருடங்களாகத் தமது அக்கறைகளை அடக்கி வாசித்தே வந்தன. அதன் அர்த்தம் இருதரப்பையும் கொஞ்சம் நீளக் கயிற்றில் விட்டுப்பிடிக்க வேண்டும் என்ற உள்ளார்ந்த நிலைப்பாடேயாகும். சர்வதேச சமூக நாடுகளின் இத்தகைய நிலைப்பாடு இலங்கையில் சாந்தியும் சமாதானமும் நிலவ வேண்டும் என்பதற்காக அல்ல. அதேபோன்று தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை அடிப்படையில் சுயாட்சி கிடைக்க வேண்டும் என்ற அக்கறையினாலும் அல்ல. நமது நாட்டை தத்தமது பொருளாதார அரசியல் பிடிகளுக்குள் வைத்திருப்பதுடன், உலக மேலாதிக்க மூலோபாயத்தில் இலங்கையில் தமக்குரிய இடத்தை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவேயாகும்.

இவ்வாறு சர்வதேச சமூக நாடுகள் கையாண்டுவந்த விட்டுப் பிடிக்கும் போக்கு இப்போது மாற்றம் கண்டுள்ளதையே அவற்றின் அண்மைக்கால சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன. கடந்த ஒன்றரை வருட காலத்தில் மகிந்த சிந்தனை வழிகாட்டலில் யுத்தம் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது. அத்துடன், மனிதப் படுகொலைகளும் ஆட்கடத்தல்களும், கப்பம் பெறுதலும், கைதுகள், தடுத்து வைத்தல்கள் உட்பட அரசியல் அச்சுறுத்தல்களும் அதிகரித்து வந்துள்ளன. இவற்றின் பிரதிபலிப்பாகவே மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுகள் சர்வதேச அரங்கில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கின.

இந்நிலையிலேயே பிரித்தானியப் பாராளுமன்றத்தில் எல்லாக் கட்சியினரையும் உள்ளடக்கிய ஒரு சர்வகட்சி பாராளுமன்றக் குழு இலங்கை விவகாரங்களைக் கவனித்துக் கையாள ஆலோசனைகளை வழங்கும் விதத்தில் அமைக்கப்பட்டது. மேற்படி குழுவின் பிரதிநிதிகள் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டு நிலைமைகளைக் கண்டறியவும் அங்கு தீர்மானிக்கப்பட்டது. ஏற்கனவே, சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்புகள் இலங்கையின் மனித உரிமைமீறல்கள் பற்றிக் கடுமையான விமர்சனங்களையும் அபிப்பிராயங்களையும் வெளியிட்டிருந்தன. அக்குற்றச்சாட்டுகளுக்கு எதிர்ப்பும் மறுப்பும் தெரிவித்து வந்த அரசாங்கம் அப்படி ஏதாவது இடம்பெற்றிருந்தால் தாங்கள் அதுபற்றிக் கவனமும் நடவடிக்கைகளும் எடுப்பதாகக் கூறி சர்வதேச அதிருப்தியை தணிக்க முயன்றது.

ஆனால், ஜே.வி.பி. - ஹெல உறுமய போன்ற தீவிர பேரினவாத சக்திகள் இங்கு மனித உரிமை மீறல்கள் என்பது இடம்பெறவே இல்லை என்றும் மேற்கு நாடுகள் திட்டமிட்டு பிரசாரம் செய்து இலங்கையின் நற்பெயருக்கு அபகீர்த்தி ஏற்படுத்துவதாகக் குற்றஞ்சுமத்தின. அத்துடன், இங்கு மனித உரிமை மீறல் என்ற குற்றஞ் சுமத்தல் புலிகளுக்கு ஆதரவான பிரசாரம் என்றும் குற்றஞ்சாட்டிக் கொண்டன.

அந்த வகையில் தான் இப்போது பிரித்தானிய பாராளுமன்ற முடிவுக்கு எதிராகவும் இவர்கள் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். பிரித்தானியாவைத் திட்டித்தீர்த்து வருவதுடன் எப்போதோ கேட்டுப் பெற்றிருக்க வேண்டிய நஷ்டஈட்டைப் பற்றி இப்போது தான் ஞானம் பிறந்தது போன்று கேட்டு நிற்கிறார்கள். இவர்களது எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் அடிப்படையில் பேரினவாத நிலைப்பாடு கொண்டதேயன்றி நேர்மையான ஏகாதிபத்திய எதிர்ப்பு கொண்டதல்ல.

இந்நாட்டில் இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லை என்றாலும் இது ஒரு பௌத்த சிங்கள நாடு மட்டுமே என்ற நிலைப்பாட்டின் ஊடாகவே இவர்களது எதிர்ப்பு அல்லது ஆதரவு நடவடிக்கைகள் அமைந்துள்ளன. பிரித்தானியப் பாராளுமன்றத் தீர்மானம் இலங்கையின் இறைமையைப் பாதிக்கின்றது என்று கூறும் இவர்கள் கடந்த 05.03.2007 இல் இலங்கை அரசு அமெரிக்காவுடன் செய்து கொண்ட "பெற்றுக் கொள்ளுதலும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளலும்" என்ற இராணுவ அடிப்படையிலான ஒப்பந்தம் எந்த வகை இறைமை மீறல் என்று இவர்கள் கூறுவார்களா? ஏன் அந்த ஒப்பந்தத்தை எதிர்த்து ஜே.வி.பி. வீதியில் இறங்கவில்லை. புலிகளை அழிக்க யார் இலங்கைக்குள் படைபட்டாளத்துடன் வந்தாலும் அவர்களை இரட்சகர்களாக ஏற்றுக் கொள்வதில் இந்த இறைமை என்ற விடயம் தடையாக இருக்காது. அதேவேளை, இலங்கையின் இனப்பிரச்சினை பற்றியும் அதன் தீர்வு பற்றியும் யாராலும் பேச முற்பட்டால் மட்டுமே ஐயோ குய்யோ நமது இறைமை பறிபோகின்றது என்பார்கள்.

இத்தகையோரின் கூக்குரலின் மத்தியிலேயே கடந்த எட்டாம் திகதி அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான உதவி இராசாங்கச் செயலாளர் ரிச்சட் பௌச்சர் மூன்று நாள் அரசு முறைப் பயணத்தை இலங்கைக்கு மேற்கொண்டிருந்தார். முதலில் யாழ்ப்பாணம் சென்று அங்குள்ள நிலைமைகளைக் கண்டும் கேட்டும் அறிந்த அவர் கொழும்பில் ஜனாதிபதி எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பல தரப்பினரையும் சந்தித்தார்.

அதன் போது மனித உரிமை மீறல் சம்பவங்களைப் பற்றியும் மக்களது அச்சம் பயப்பீதி பற்றியும் அரசாங்கத் தரப்பிற்கு சற்று கடும் தொனியில் அழுத்தம் தரும் விதத்தில் அமெரிக்க உதவிச் செயலாளர் எடுத்துக் கூறியதாகவும் செய்திகள் வெளியாகின. இவ்விடத்திலே ஒரு முக்கிய கேள்வி எழுகின்றது. மனித உரிமை மீறல்கள் பற்றி யார் யாருக்கு எடுத்துக் கூறுவது? `பானை சட்டியைப் பார்த்து நீ கறுப்பு' என்று கூறியது போன்றது தான் மேற்கூறிய சம்பவம். இவ்வாறு கூறுவதன் மூலம் இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களையும் அவற்றின் உச்சநிலையையும் எவரும் மறைக்கவோ அல்லது மழுப்பவோ முடியாது. அல்லது மோசமாக மீறப்பட்டு வரும் மனித உரிமை மீறல்களையும் ஜனநாயக மறுப்புகளை யாரும் நியாயப்படுத்தி நிற்கவும் வேண்டியதில்லை.

பிரித்தானியப் பாராளுமன்றத் தீர்மானமும் அதனைத் தொடர்ந்து அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளரின் இலங்கைப் பயணமும் இலங்கை மீதான சர்வதேச சமூக நாடுகளின் அடுத்த கட்ட நகர்வுக்கு கட்டியம் கூறி நிற்கின்றன. ஏற்கனவே பிரித்தானியா இலங்கைக்கு வழங்க முன்வந்த உதவி நிதித் தொகையில் அரைப்பங்கினை இடைநிறுத்திக் கொண்டது. அதனைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக நிதி முடக்கம்செய்ய முன்வரலாம் என்றும் பேசிக் கொள்ளப்படுகின்றது.

இதேவேளை, மற்றொரு அம்சத்தையும் கவனத்தில் கொள்ளல் வேண்டும். சர்வதேச சமூகம் எனப்பட்ட நாடுகளின் தற்போதைய நகர்வும் அழுத்தங்களும் புலிகள் இயக்கத்தின் வான்வழித் தாக்குதல்களுக்கு பின்னரான சூழலிலேயே இடம்பெற்று வருகின்றன. ஒரு மாத காலத்தினுள் மூன்று தடவைகள் இடம்பெற்றுள்ள மேற்படி புலிகளின் வான்வெளித் தாக்குதல்கள் கடுமையான எதிர்விளைவுகளைத் தோற்றுவித்துள்ளன. அவை அரசியலில் மட்டுமன்றி பொருளாதார முனைகளிலான தாக்கங்களையும் ஏற்படுத்தியுள்ளன. இத்தகைய நிலையில் சர்வதேச சமூக நாடுகள் என்பவை தமது நிலைப்பாட்டை எவ்வாறு தகவமைத்து இலங்கை இனப் பிரச்சினை விவகாரத்தை முன் நகர்த்தப் போகின்றன என்ற எதிர்பார்ப்பு அரசியல் நோக்கர்களிடம் காணப்படுகின்றது.

பேச்சுவார்த்தை மேசைக்கு இரு தரப்பையும் கொண்டு செல்லக் கூடிய அழுத்தங்களையும் நிர்ப்பந்தங்களையும் மேற்படி நாடுகள் குறிப்பிட்ட கால எல்லைக்குள் முன்னெடுக்குமா அல்லது இன்றும் காலம் கனியவில்லை எனப்பார்த்து மேலும் விட்டுப்பிடிக்கும் இடைவெளியைக் கொண்டிருக்குமா?

இவ்வாறு சர்வதேச சமூக நாடுகளின் அணுகுமுறை முன்னெடுக்கப்படும் அதேவேளை, இந்தியா மேற்படி நகர்வுகளை உற்று அவதானித்து வருவதையும் தமது காய் நகர்த்தலுக்கான அடிப்படைகளைத் தயார்படுத்துவதிலும் உள்ளார்ந்த ரீதியில் ஈடுபட்டு வருகின்றது. அங்கு இடம்பெற்று வருவதாகக் கூறப்படும் சம்பவங்களும் பிரசாரங்களும் ஏதோ ஒரு வகை நகர்வுக்கான முன்னோட்டம் என்பதாகவே கொள்ளல் வேண்டும்.

எவ்வாறாயினும் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை யுத்தமாக்கப்பட்டு மோசமான மனித உரிமை மீறல்களாகவும் ஜனநாயக மறுப்புகளாகவும் பொருளாதார நெருக்கடிகளாகவும் நீடித்து நிற்கும் ஒரு பேரவல நிலையே இன்று காணப்படுகின்றது. இவற்றுக்கு நியாயமான தீர்வு காணப்பட வேண்டிய ஆற்றலும் துணிவும் தூர நோக்கும் இலங்கையின் ஆண்டனுபவித்த இன்றும் சுகபோகம் சுவைத்து வரும் எந்தவொரு தரப்பினரிடமும் இல்லை. எனவே தான் தத்தமது நலன்களுக்குப் பங்கமில்லாத அவரவர் இருப்பை உறுதி செய்யக் கூடியவாறு சர்வதேச சமூக நாடுகளும் அதற்கு வெளியே உள்ள இந்தியாவும் நடந்து கொள்ளவேண்டும் என்றே விரும்புகின்றனர். ஆனால், இத்தகையோரின் விருப்பங்களுக்கு நேர் மாறாகவே உரிமைகள் மறுக்கப்பட்டு மனித உரிமை மீறல்களுக்கு ஆளாக்கப்பட்டு அச்சம், பீதி, துயரம் என்பனவற்றுடன் வாழ்ந்து வரும் தமிழ் மக்களின் அபிலாஷைகள் காணப்படுகின்றன என்பதே இன்றைய யதார்த்தமாக உள்ளது.

http://www.thinakural.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.